Apr 12, 2011

இஸ்லாத்தின் அரசியற்கோணம் எவ்வாறு இருக்கவேண்டும்? பகுதி 01

இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியற் சிந்தனை அண்மைக்காலமாக முஸ்லிம் உலகில் மீளெழுச்சி பெற்று வருகின்றது. ஆதிகளவிலான முஸ்லிம்கள் இஸ்லாம் என்பது வெறுமனவே வழிபாடுகளினதும், மதச்சடங்குகளினதும் தொகுப்பு மட்டுமல்ல என்றுணர்ந்து உலகில் இடம்பெறுகின்ற அதிமுக்கியமான நிகழ்வுகளையும், மாற்றங்களையும் இஸ்லாத்தின் தளத்திலிருந்து உன்னிப்பாக அவதானிக்கத் தளைப்பட்டுள்ளார்கள். உலகின் நிகழ்வுகளையெல்லாம் முஸ்லிம்கள் மேற்குலகின் முதலாளித்துவ கோணத்திலிருந்து நீண்டகாலமாக பார்த்து வந்த பாரம்பரியம் தற்போது அதிவேகமாக மங்கி வருகின்றது. மேற்கின் சில அரசியல் தலைவர்கள் இயம்புகின்ற ‘முஸ்லிம் உள்ளத்திற்கும், சிந்தனைக்கும் எதிரான போர்’இ மறுதலையாகச் செயற்பட்டு முஸ்லிம்கள் தமது விவகாரங்களை இஸ்லாமிய சிந்தனையிலிருந்து நோக்குகின்ற போக்கே அதிகரித்துவருகின்றது. எனினும் தொடர்ந்தும் முஸ்லிம்கள் பிழையான, வலிமையற்ற தளத்திலிருந்து தங்களது சிந்தனையை உருவாக்கிவர வேண்டும் என்ற மேற்குலகின் முயற்சி தொடர்ந்து இடம்பெற்று வருவதை நாம் அவதானத்திற்கொள்ள வேண்டும்.

எனவே உருவாகி வரும் இந்த இஸ்லாமிய அரசிற்சிந்தனை மீளெழுச்சியை மேலும் புடம்போட இன்று முஸ்லிம்கள் இஸ்லாமும் அரசியலும் என்ற விடயத்தை மிக உன்னிப்பாக பகுப்பாய்வு செய்து விளங்கிக் கொள்ள வேண்டும். உலகில் இடம்பெறுகின்ற விவகாரங்கள் அனைத்தையும் பற்றி இஸ்லாத்திற்கென்றே பிரத்தியேகமான ஒரு கோணம் இருக்கின்றது, அதனடிப்படையிலேயே முஸ்லிம்கள் அவற்றை நோக்க வேண்டும். மாறாக அக்கோணமல்லாத வகையில் முஸ்லிம்கள் அவற்றை நோக்கினால் அவ்வரசியல் நிலைப்பாடு வலுவிழந்ததாகவும், செயற்திறனற்றதாகவுமே அமையும், அவர்கள் உலக நிகழ்வுகளையும் அதன் யதார்த்தங்களையும் சரியாகப்புரிந்து கொண்டாலும் கூட.

அரசியல்வாதிகளை வார்த்தெடுத்தல்

ஒரு செயற்றிறன்மிக்க அரசியல்வாதி தனது அரசியல் எத்தகையது என்பது குறித்து தௌளத்தெளிந்த நிலையிலிருக்க வேண்டும். அதாவது அவரைச் சூழ இடம்பெறுகின்ற நிகழ்ச்சிகளையும், நிகழ்வுகளையும் உற்றுநோக்குகின்ற ஒரு திட்டவட்டமான கோணத்தை அவர் உருப்பெறச்செய்ய வேண்டும். அவ்வாறான ஒரு கோணம் அவரிடம் இல்லாதிருந்தால் அவரைச்சூழ இடம்பெறுகின்ற நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் குறித்து தெளிவற்ற, முரண்பட்ட, தடுமாற்றமான ஒரு நிலைப்பாட்டிலேயே அவர் காணப்படுவார். அத்தகையதொரு அரசியல்வாதி தனது இலக்கை அடையமுடியாத செயற்றிறனற்றவராகவும், குழப்பகரமான, முரண்பாடான ஒரு அரசியலையே மேற்கொள்வார்.

காபிர் மேற்குலகின் அரசியல்வாதிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு உலகின் நிகழ்ச்சிகளையும், நிகழ்வுகளையும் நோக்குவதற்கான திட்டவட்டமான ஒரு கோணமிருக்கின்றது. அவர்கள் உலகின் அனைத்து நிகழ்வுகளையும் முதலாளித்துவ கோட்பாட்டின் அடிப்படையிலும், அதன் எண்ணக்கருக்களான சடவாதம், ஜனநாயகம், சுதந்திரம், சுயலாபம் போன்றவற்றின் அடிப்படையிலுமே நோக்குகிறார்கள். அவர்கள் அரசியலில் ஈடுபடும்போது தமது வெளிவிவகாரக்கொள்கை தமது நாட்டின் தேசியநலனின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் எனப் புரிந்துகொள்கிறார்கள். அதேபோல ஏனைய நாடுகளை எவ்வாறு நோக்க வேண்டும், அந்நாடுகளுடன் உறவினை மேற்கொள்ளும்போது எத்தகைய அறுவடைகளைப்பெற வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அதேபோலவே தமது உள்விவகாரக்கொள்கையில் மக்களின் விவகாரங்களை பராமரிக்கும் விடயத்தில் அரசின் கடப்பாட்டையும், சமகாலத்தில் மக்களின் உரிமைகள் எவை என்பதையும் அவர்கள் புரிந்திருக்கிறார்கள். இவ்வாறாக அவர்கள் தமது சித்தாந்தத்தை தெளிவாக உணர்ந்து உள்வாங்கிக் கொண்டு அதன் அடிப்படையிலமைந்த கட்டமைப்பைக்கொண்டே உலகை நோக்குகிறார்கள்.

தமது அரசியல் வாழ்விலே தமது நாட்டின் அரசியற் பாரப்பரியத்திலே கலந்து அனுபவங்களைப்பெற்றுக்கொண்டு தமக்குத் தேவையான அரசியல் எண்ணக்கருக்களை அவர்கள் அபிவிருத்தி செய்து கொள்கிறார்கள். அவர்கள் தமது நலன்களுக்காக அதிர்ச்சியூட்டக்கூடிய அநியாயங்களில் ஈடுபட்டால்கூட அவற்றை எவ்வாறு மூடி மறைப்பது, அவற்றிற்கு எவ்வாறு முகமூடி அணிவது, அவற்றை நியாயப்படுத்த அல்லது யதார்த்த நிலையிலிருந்து கவனத்தை திருப்ப சதி செய்வது என்பதிலெல்லாம் அவர்கள் கைதேர்ந்தவர்களாகின்றார்கள். அவர்கள் ஒரு விடயத்தை சரி அல்லது பிழை என்ற அளவிடையை விடுத்து அது தமது நலனை பூர்த்தி செய்கிறதா என்பதை அடிப்படையாகக்கொண்டு எவ்வாறு அணுகுவது என்பதை கற்றுக்கொள்கிறார்கள். தம்மைச் சூழ இடம்பெறும் நிகழ்ச்சிகளில் தமக்கு சாதகமாகவும், அதேநேரத்தில் பிறருக்கு பாதகமாகவும் எவ்வாறு ஒரு நிகழ்ச்சியை தேர்வு செய்வது என்பதில் தேர்ச்சி பெறுகிறார்கள். தாம் அந்தரங்கமாக ஒரு விடயம் குறித்து சிந்திப்பது அல்லது உணர்வது எதுவாக இருந்தாலும் சமூகத்திற்குள் வருகின்றபொழுது தமக்கு ஒரு வெளிரங்கமான முகத்தை எந்நிலையிலும் பேணி வருவது எப்படி என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமது அரசியலில் காட்டின் சட்டங்களைப்போல் ஒருவர் ஒருநாள் நண்பராகவும், மறுநாளே அவர் பிரதான எதிரியாகவும் நடத்தப்படுவது எப்படி என்பதையும் அவர்கள் விளங்கி வைத்திருக்கிறார்கள். இவ்வாறு மேற்குலக அரசியல்வாதிகள் உலக நிகழ்வுகளையெல்லாம் தமக்கேயுரிய ஒரு அரசியற்கோணத்தில் பார்ப்பதற்கும், அதற்கொப்ப எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது தமக்கும், தமது நாட்டுக்கும் பலனளிக்கக்கூடியது என்பதையும் திட்டவட்டமாக அறிந்திருக்கிறார்கள்.

இஸ்லாம் மேற்குலக அரசியல்வாதிகள் கொண்டிருக்கும், அல்லது கைக்கொள்ளும் பெரும்பாலான பண்புகளையும், நடத்தைகளையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் அதற்காக அவர்கள் கொண்டுள்ள அரசியல் அடிப்படையகளையும் அதன் கோணத்தையும் முற்றாகக் மறுத்துரைக்கிறது. இஸ்லாம் தனக்கே உரித்தான பெறுமானங்களையும், அடிப்படைகளையும் கொண்டு தனது அரசியல்வாதிகளை உருவாக்க நினைக்கிறது. உதாரணமாக சுயநலத்தை இஸ்லாம் போற்றி வளர்க்காமல் பொதுநலத்தை அது பரிந்துரைக்கிறது. தமது ஒரு நிகழ்ச்சிநிரலை புகுத்துவதற்காக அசிங்கமான யுக்திகளை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, இஸ்லாம் வாய்மையையும், வெளிப்படைத்தன்மையையும் கோரி நிற்கிறது. தன்னலனே பிறருடைய நலனிலும் மேம்பட்டது என மேற்குலகு கருதும்போது, இஸ்லாமோ தான் விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் எனக்கட்டளை பிரப்பிக்கிறது.

எனினும் முஸ்லிம்களைப் பொருத்தவரையில் இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சிக்காலத்திலிருந்தே அவர்களது அரசியல்வாதிகளிடத்தில் தூய இஸ்லாமிய அரசியற் சிந்தனைப்போக்கு ஏறத்தாழ முற்றாகவே மறைந்திருந்தது. காலனித்துவ எதிரிகள் முஸ்லிம்களின் அரசியற் சிந்தனையிலும், அரசியற் கோணத்திலும் நஞ்சூட்டுவதில் வெற்றிபெற்றிருந்தனர். அவர்கள் அதிகளவான அந்நியச்சிந்தனைகளை முஸ்லிம்களுக்குள் காட்டுத்தீயைப்போல் பரவச்செய்திருந்தனர் - உதாரணமாக தேசியவாதம் போன்ற அந்நியச்சிந்தனைகளால் அரபு முஸ்லிம்கள் துருக்கிய முஸ்லிம்களிலிருந்து தாம் வேறுபட்டவர்கள் எனச் சிந்திக்கத் தளைப்பட்டனர். 1924ம் ஆண்டில் கிலாபத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதுடன் முஸ்லிம் தேசங்களின் அரசியலில் சோசலிசமும், முதலாளித்துவமுமே ஆதிக்கம் செலுத்தியது. இஸ்லாமிய சட்டங்களுக்கு பகரமான சட்டங்களுடன் அரசியந்திரத்திற்குள் செயற்பட்ட அரசியல் இயக்கங்களும், அரசியல்வாதிகளும் செயற்றிறனற்றுப்போய் வெறும் கருவிகள் என்ற நிலையை அடைந்தனர். இஸ்லாம் இல்லாத நிலையில் அவர்களது அரசியல் கோணம் வலுவிழந்ததாகவும், வெறுமனவே தமது பதவியைத்தக்க வைத்துக்கொள்ளும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிப்போயிருப்பததையும் இன்றுவரைக்கும் நாம் அவதானிக்கலாம்.


முஸ்தபா கமாலிலிருந்து பர்வேஷ் முஷர்ரவ் வரைக்கும் கடந்த பல தசாப்த்தங்களாக முஸ்லிம் உலகின் ஆட்சித்தலைவர்களாக இருந்த அனைத்து தலைவர்களும் இஸ்லாமிய அரசியலிலிருந்து மிகத்தொலைவில் நின்றதுடன் தமது நாட்டு மக்களின் நலன்களைவிட காலனி முதலாளிகளான மேற்குலகின் நலனுக்கே முன்னுரிமை வழங்கி ஆட்சி செய்தனர். கமால் அப்துல் நாஸர் அரபு தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தனது நாட்டை நிலைப்படுத்த முயற்சித்தது மாதிரி தமது நாட்டை கட்டியெழுப்ப முயற்சி செய்த பலரும் பிழையான அரசியல் அடிப்படையிலேயே அதனை மேற்கொள்ள முயன்றனர்.

மேற்குலகால் அல்லது மேற்குலக எண்ணக்கருக்களால் உருவாக்கப்பட்ட நிலையில் இந்த நாடுகளின் ஆட்சிக் கட்டமைப்பும், அரசியல் முறைமையும் இருப்பதால் அரசாங்கங்களிலுள்ளவர்களாலோ அல்லது இக்கட்டமைப்பிற்குள் செயற்படும் அரசியற் கட்சிகளாலோ முஸ்லிம்களுக்கு எத்தகைய நன்மையையும் ஏற்படுத்த முடியாது. எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அரசியற்கோணத்தை பிழையான அடிப்படையிலும், வலுவற்றதாகவும் வைத்திருக்கும் நிலைப்பாட்டை மேற்குலகு வரவேற்பதுடன் அந்த பலகீனத்தை பயன்படுத்தி முஸ்லிம் உலகை சூரையாடும் கைங்கரியத்தை சாதித்து வருகின்றது.

முஸ்லிம் உலகின் இந்த அவல நிலையே முஸ்லிம்களில் சிலரை இஸ்லாத்தை ஒரு முழுமையான சித்தாந்தமாகவும், பரிபூரணமான ஒரு வாழ்க்கைத் திட்டமாகவும் ஆழமாக விளங்கிக்கொள்ளத் தூண்டியதுடன், முஸ்லிம்களுக்கு மத்தியில் துல்லியமான ஒரு இஸ்லாமிய அரசியற் கட்டமைப்பு தொடர்ந்து நிலைகொண்டு முஸ்லிம் உம்மத்தின் வீழ்ச்சியை தலைகீழாக மாற்ற முயற்சிக்த் தூண்டியது.

இத்தகையதொரு இஸ்லாமிய கலாசாரத்தை ஆழ்ந்து கற்பது, முஸ்லிம் உலகிலும், அதற்கு வெளியிலும் தொலைவான, பரந்ததொரு விடயமாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் இஸ்லாமிய அரசு அல்லது கிலாபா மீள் நிர்மாணிக்கபடாத நிலையில் உண்மையான அரசியல் அனுபவம் இல்லாதிருப்பதே இதற்கு காரணமாகும். முஸ்லிம்களைப்பொருத்தவரையில் அரசியல் என்பது இஸ்லாம் அதிகாரத்தில் இல்லாத போது தற்போதுள்ள அரசினை கண்காணித்து அதனை பொறுப்புடையதாக்குவது அல்லது இஸ்லாம் ஆட்சி செலுத்தும்போது நடைமுறையில் அதன் உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களில் முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களை முறையாகப் பராமரிப்பது ஆகும். எனவே இஸ்லாமிய அரசு இல்லாத நிலையில் முஸ்லிம்களுக்குள்ள முழுமுதல் அரசியல் செயற்பாடு அந்த இஸ்லாமிய அரசினை ஏற்படுத்த முயல்வதேயாகும். இந்த செயற்பாட்டை விடுத்து இன்று முஸ்லிம் உலகில் நிலவும் அரச இயந்திரம் அல்லது அரசியற் கட்டைப்பினூடாக மேற்கொள்ளப்படும் அரசியற் செயற்பாடுகளோ அல்லது அனுதினம் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடைமுறைத்தீர்வுகளை காண்பதை அடிப்படையாகக் கொண்ட அரசியற் செயற்பாடுகளோ அதிமுக்கிய அரசியற் செயற்பாடான கிலாபா அரசை ஏற்படுத்தும் முயற்சிக்கு துந்தகம் விளைவிப்பதாய் அமையும்.

Sources....warmcall.blogpot.com

பகுதி 02 தொடர்ந்து வரும்…

No comments:

Post a Comment