Showing posts with label காலித் பின் வலீத் (ரலி). Show all posts
Showing posts with label காலித் பின் வலீத் (ரலி). Show all posts

Sep 4, 2015

காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் இறுதி நிலை

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 13 (இறுதி பகுதி)

இறுதி நிலை


எதிரிகளின் நெஞ்சங்களில் அச்சத்தை விதைத்த அந்த வீரத்தின் விளை நிலத்தில் மரணத்தின் விதைகள் வளர்ந்து விருட்சமாக வளர ஆரம்பித்தன. பலவீனங்கள் அவரது நெஞ்சத்தை நோயுற முயன்று தோற்றுப் போனதால், பலவீனம் மரணமாக மாறியது. வேங்கை போல நடந்த அவரது கால்கள் இப்பொழுது படுக்கையில் நிலைகுலைந்து கிடந்தன. மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. மரணப்படுக்கையில் கிடந்த அந்த மாவீரர், தனது எண்ணங்கள் நிறைவேறாத நிலைகுறித்து, குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தார்.

நான் எத்தனை போர்களில் கலந்து கொண்டிருப்பேன். எத்தனை வாட்களையும், அம்புகளையும் எனது உடல் சந்தித்தது. அப்பொழுதெல்லாம் உயிர்தியாகியாக மாறி, சுவனத்துத் தோட்டங்களிலும், இறைவனுடைய அர்ஷிலும் பச்சைப் பறவையாகப் பறந்து திரியத் துடித்தேனே..!

எனது உடலில் தான் எத்தனை எத்தனை தழும்புகள்..! இதில் ஒன்றாவது என்னை உயிர்த்தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே..!

எனது ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே..! என்று குமுறிய அவரது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

அவரது கவலைகள் அவரைக் கரைசேர்க்கவில்லை. உயிர்த்தியாகி என்ற அந்தஸ்தை அடையும் பாக்கியம் அவருக்குக் கிடைக்காமலேயே மரணத்தை அவர் தழுவிக் கொண்டார். உடலை விட்டு உயிர், இறைவனின் பால் சென்று விட்டது.

அவர் மரணமடைந்த பொழுது, ஆட்சிப் பொறுப்பில் உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள். காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் மரணத்தைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள் கண்கள் கலங்கினார்கள். மதீனா நகரமே சோகத்தில் மூழ்கியது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், இறுதியாக விட்டுச் சென்றவைகள் அவரது ஆயுதமும், அவரது குதிரையும் தான் என்பதைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள், உண்மையில் அவர் மிக உயர்ந்த மனிதர் தான் என்று புகழாரம் சூட்டினார்கள்.

உமர் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை தளபதிப் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்கள். எப்பொழுது உமர் (ரழி) அவர்களின் அந்த உத்தரவு கிடைத்ததோ, அப்பொழுதே தனது பதவியைக் காலி செய்து விட்டு, எந்த முணுமுணுப்பும் காட்டாமல் அடுத்தவருக்கு வழி விட்டதோடு, சாதாரணப் படைவீரராகவே தனது இறுதிக் காலம் வரை செயலாற்றி வந்தார். உன்னதமான நோக்கங்களுக்குச் சொந்தக்காரரான அவர், இஸ்லாமும், அதன் கொள்கைகளும் இந்தப் பூமியில் நிலைபெற வேண்டும், இறைவனது சத்திய வார்த்தைகள் இந்தப் பூமிப் பந்தை ஆள வேண்டும், அதற்காக உடலாலும், பொருளாலும், உயிராலும் சேவை செய்வது ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட அந்த உத்தமர், அதற்காக தளபதிப் பொறுப்பில் இருந்து தான் செயல்பட முடியும் என்றில்லாமல், சாதாரணப் படைவீரனாகவும் இருந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். அவரது இந்த உத்தமமான, நேர்மையான, தூய்மையான எண்ணங்கள் இன்றைக்கும் நமக்கொரு வரலாற்றுப் படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது.

தனது இஸ்லாமிய வாழ்வை மிகப் பெரும் படைத்தளபதியாக ஆரம்பித்து, சாதராண படைவீரராக முடித்துக் கொண்டார். இஸ்லாத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து போர்களில் கலந்து கொண்டதன் காரணமாக, அவரது உடலின் ஒவ்வொரு பாகமும் விழுப்புண்களாகல் சூழப்பட்டிருந்தது, இன்னும் ஒவ்வொரு பாகமும் வலியால் ரணமாகி, வேதனையைத் தந்து கொண்டிருந்தன.

என்றைக்கு அவர் மரணமடைந்தாரோ அன்றைய தினம் தான் அவரது முதல் ஓய்வு நாளாகப் பரிணமித்தது. சுவனச் சோலைகளில் தஞ்சம் புகுந்த அந்தத் தினம் தான் அவர் ஓய்வு எடுக்கும் முதல் தினமாகவும் இருந்தது.

அவரது மரண ஊர்வலம் அவரது வீட்டிலிருந்து தொடங்குகின்றது. அவரது உடல் அவரது இல்லத்திலிருந்து வெளிக் கொண்டு வரப்பட்ட பொழுது, கண்ணீருடன் தனது மகனை அனுப்பி வைத்த அவரது தாயார்,

மகனே..! நீ வாழ்ந்த காலங்களில் சிங்கத்தை விட வீரமாக வாழ்ந்தாய். அதே போல நதியை விட பிறர் மீது கருணையைப் பொழிந்து வாழ்ந்தாய் என்று புகழாரம் சூட்டிய அவரது தாய், இன்னும் மகனே..! எவ்வாறு சிங்கம் தனது குட்டிகளை அரவணைத்துப் பாதுகாக்குமோ அது போல இந்த இஸ்லாமிய உம்மத்தைப் பாதுகாத்து வளர்த்து வந்தாய்.

யா அல்லாஹ்...! எனது மகனை உன்னிடம் அடைக்கலமாகத் தந்து விட்டேன், அவன் மீது கருணை புரிந்தருள்வாயாக..! என்று பிரார்த்தித்தார்கள்.

ஆம்..! அந்தத் தாயின் பிரார்த்தனைகளின் பிரதிபலனை நிச்சயமாக அவர் மறுமை நாளிலே கண்டு கொள்வார். கண்களில் குளிர்ச்சியைப் பெற்றுக் கொள்வார். அவன் எப்பொழுதும் என்னை சந்தோஷமாகவே வைத்திருந்தான், எனவே, யா அல்லாஹ்..! மறுமை நாளிலே அவனுக்கு நீ சந்தோஷத்தை அளிப்பாயாக என்றும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாயார் தனது மகனின் மறுமைக்காகப் பிரார்தித்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாயாரது பிரார்த்தனைகளின் வரிகளைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள்,

அவரது தாயார் கூறிய அனைத்தும் உண்மையே..! அவர் கூறிய அனைத்திற்கு உரித்தானவரே..! என்று புகழாரம் சூட்டினார்கள்.

இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்களது உடல் மண்ணறைக்குள் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தளபதியை இழந்த தோழர்களின் இதயங்கள் சோகத்தால் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தாலும், இறைவனின் முடிவை ஆமோதித்தவர்களாக அமைதி காத்தார்கள், முழுச் சூழ்நிலையும் நிசப்தமாக இருந்தது. காற்றில் அசையக் கூடிய இலையின் ஓசையும், காலடியில் படக் கூடிய சறுகுகளின் ஓசையும் கூட அந்த வேளையில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

அமைதி..! அமைதி...! பூரண அமைதி...!

வெற்றியைத் தவிர வேறெதனையும் பெற்றுத் தராத அந்தத் தளபதியின் உடல் மண்ணிற்குள் வைக்கப்பட்டதும், குமுறிக் கொண்டிருந்த எரிமலைகள் இப்பொழுது உதடுகளின் ஓரத்தில் வந்து நின்று வெடிக்கக் காத்திருந்தன. கண்கள் பனிக் குடத்தை சுமந்து கொண்டிருந்தன.

சற்று தூரத்தில் இன்னொரு தோழரும் நடந்து கொண்டிருக்கும் அடக்க நிகழச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆம்..! அந்தத் தோழரும் ஒரு இணை பிரியாத தோழர்தான். ஒவ்வொரு போரிலும் தனது தலைவனை முதுகில் சுமந்து கொண்டு, தனது தலைவன் இடும் கட்டளைகளுக்கு மாறு செய்யாமல், எதிரிகளை ஊடறுத்துச் சென்று தலைவனின் பணியை எளிதாக்கியவரும் இந்தத் தோழர் தான்.

ஆம்..! அந்தத் தோழர் யாருமல்ல..! காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கலந்து கொண்ட அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்ட அவரது குதிரையான அஸ்கர் தான் அந்தத் தோழர்.

இனி தனது தலைவனை என்றுமே நாம் பார்க்கப் போவதில்லை என்று அறிந்த அஸ்கரின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் திரண்டு, முத்துக்கள் திவளைகளாக அதனது கண்ணத்தை நனைத்துக் கொண்டு காற்றாற்று வெள்ளமாக உருண்டோடிக் கொண்டிருந்தது.

அமைதியைக் கிழித்துப் போட்டது அஸ்கரின் கண்ணீர், எரிமலையாய் வெடித்துச் சிதறின தோழர்களின் இதயச் சிரைகள்..!

அஸ்கரின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரைக் கண்ட தோழர்களது இதய எரிமலை வெடித்துச் சிதறின, உதடுகள் துடித்தன.., கண்கள் கண்ணீரைச் சொறிய ஆரம்பித்தன. இருளைக் கிழித்த ஒளியைப் போல அமைதியும் அங்கே அழிந்தே போனது, எங்கும் தோழர்களின் விம்மிய ஓசை..!

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 21 ல் மரணமடைந்தார்கள். அவர்களின் உடல் ஹம்மாஸ் - ல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர், படைத்தவனைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டார்.


                                                   பகுதி - 12


முற்றும்.

உமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12



இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களின் பெயர்களில் இதுவும் ஒன்று. இறைவனின் வாள் (சைபுல்லாஹ்) என்ற பெயர் பெற்ற காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் வீர வாளையும், சாகசங்களையும் எதிர்க்க முடியாமல் சக்திமிக்க ரோம சாம்ராஜ்ஜியமும், பாரசிக ஏகாதிபத்தியமும் தலைகுப்புற வழிந்தன. கி.பி 7 நுற்றாண்டில் அவரது பெயரைக் கேட்டு நடுங்காத உலக அரசுகள் இல்லை என்ற சொல்லலாம்.


காலித் பின் வலீத்(ரழி) அவர்கள் தலைமை ஏற்று சென்ற எல்லா போர்களிலும் வெற்றி வாகை சூடினார். அப்படிப்பட்ட மாவிரர் காலித் பின் வலீத்(ரழி) அவர்களை, ஒரு போர்களத்தில் ஒரே ஒரு உத்தரவு முலம் தளபதி பதவியிலிருந்து உமர்((ரழி) அவர்கள் நிக்கிவிட்டார்கள்.

சிரியா நாட்டிலே ரோமானிய பெரும் படைகளை எதிரித்துப் போராடிக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகளின் தளபதியாகிய காலித் பின் வலீத்(ரழி) அவர்களுக்கு போர்க்கள முகாமில் உமர்((ரழி) அவர்களின் கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில்,

"தளபதி காலித் அவர்களுக்கு உமர் பின் கத்தாப் எழுதிக் கொள்வது. இந்த உத்தரவு முலம் காலித் அவர்கள் தளபதி பதவியிலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக அபூ உதைபா அவர்கள் நியமிக்கபடுகிறார். உடனடியாக காலித் அவர்கள் பொறுப்புகள் அனைத்தையும், அபூ உதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதினாவுக்குத் திருப்ப வேண்டும்."

படைவீரர்களிடம் இந்த கடிதம் பகிரங்கமாகப் படிக்கப்பட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இஸ்லாத்திரிக்க வாழ்நாளையே அரிப்பணித்தவர். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்து தளபதிப்  பதவி விகித்து வருபர். போர்க்களத்திலே இணையற்ற  செல்வாக்கும் , நன்மதிப்பும் பெற்றிருப்பார் காலித் பின் வலீத்(ரழி) அவர்கள்.

அப்படிப்பட்ட மாவிரர் காரணமின்றி விலக்கப்படுவதை ஏற்றுக் கொள்வாறா? கலிபாவின் உத்தரவை அவர் ஏற்க மறுத்து புரட்சிக் கோடி உயர்த்தினால் என்னவாகும்? இஸ்லாமிய குடியரசே கலகலத்துவிடுமே!! முஸ்லிம் படை விரர்களிடம் கவலை பற்றிக்கொண்டது.

ஆனால் இதில் எதுவுமே நடக்கவில்லை. ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை காலித் பின் வலீத்(ரழி) அவர்கள். உடனடியாக பொறுப்புகள் அனைத்தையும் அபூ உதைபா அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மதினாவுக்கு புறப்பட்டார்.

மதீனா வந்தடைத்த தளபதி காலித் பின் வலீத்(ரழி) அவர்கள், அவரது நீண்டநாள் நண்பரும், கலிபாவான  உமர்((ரழி) அவார்களை காணச் சென்றரர். இரு நண்பர்களும் கட்டித் தழுவி கொண்டு, குடும்ப நலன்களைப் பரிமாறிக் கொண்டனர். கடைசியாக காலித் பின் வலீத்(ரழி) அவர்கள், நண்பரே !! தளபதி பதவியிலிருந்து நான் ஏன் விலக்கப்பட்டேன் என்பதை அறியலாமா?" என்று கேட்டார்.

அதற்கு உமர்((ரழி) அவர்கள், "உங்களது வீரமும், வெற்றியும் பொதுமக்களின் கண்ணை மறைப்பதைக் கண்டேன். இறைவனது புகழ்பாட வேண்டிய மக்களின் நாவுகள் உங்கள் புகல்பாடுவதைக் கேட்டேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனால் பதவி நீக்கிவிடக் கூடிய சாதாரண மனிதர்தான் காலித் என்பதை பொதுமக்களுக்கு உடனடியாக உணர்த்தாவிடடால் நிலைமை மிஞ்சி விடுமென அஞ்சினேன். ஆகவே விளக்கினேன். இதன் முலம் பொதுமக்களையும், உங்களையும், என்னையும் கூடத்தான் புகழ் என்ற போதையிலிருந்து காப்பாற்றிவிட்டதாக நம்புகிறேன்.

நீங்களும் நானும் இறந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள். இஸ்லாத்தின் பொறுமையோ என்றும் நிலைத்து நிற்க வேண்டியது என்பது நமது இலட்சியம். அந்தப் பெருமை காலித் இல்லாவிட்டாலும், உமர் இல்லாவிட்டாலும் நின்று நிலைக்கும் என்பதை நாம் நிருப்பித்தாக வேண்டும்.
உங்களை விலக்கியது முலம் அதை ஓரளவு நிருபித்துவிட்டதாக நம்புகிறேன் என்று கூறினார்கள்.

உமர்((ரழி) அவர்களின் பதிலை கேட்டு மாவிரர் காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தவழ்ந்தது.

                                                           பகுதி - 11 / பகுதி - 13

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

சுவாரஸ்யமான சம்பவங்கள்

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11


இன்னுமொரு சம்பவம்..!

இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்தி வைத்திருந்த சகோதரத்துவமும், இன்னும் தியாகமும் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டது. வரலாற்றிலும் இந்த சம்பவம் நிலைத்து விட்டது. இன்றைக்கும் என்றைக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்து விட்டது.

போர் நடந்து கொண்டிருக்கின்றது. மூன்று முஸ்லிம் வீரர்கள் கடுமையான காயம் பட்டு, உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தாகம் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கின்றது. இதனைப் பார்த்த ஒருவர், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக அருகில் சென்றால், அவர் தனக்கு அருகில் தாகத்தோடு போராடிக் கொண்டிருப்பவருக்கு முதலில் தண்ணீர் கொடுக்கும்படி கூறுகிறார். அவரிடம் தண்ணீர் கொடுக்கச் சென்றால், தன்னை அடுத்து தாகத்தால் வாடிக் கொண்டிருக்கக் கூடியவருக்கு முதலில் தண்ணீர் கொடுத்து வரும்படிக் கூறுகிறார். இவ்வாறாக, தனக்குத் தேவையிருந்தும் தன்னுடைய சகோதரனின் தேவைக்கு முக்கியவத்தும் அளித்தார்கள். மீண்டும் மூன்றாமவருக்கு அருகில் சென்று தண்ணீர் கொடுக்கச் சென்ற பொழுது, அவர் முதல் நபருக்குத் தண்ணீர் கொடுத்து வருமாறு கேட்டுக் கொள்ள, இவ்வாறாக தண்ணீரை யாருக்கும் கொடுக்க இயலாமல் சுற்றிச் சுற்றி வந்த பொழுது, இறுதியில் தண்ணீர் குடிக்காமலேயே மூவரும் மரணமடைந்து விட்ட காட்சி அங்கே நடந்தது. இன்றளவும் அந்தக் காட்சி வரலாறாக ஏடுகளில் பதிவாகி, வரக் கூடிய சந்ததியினருக்கு நற்பாடமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம்..!


இந்த யர்முக் போரில் இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ரோமப் படைக்கு தலைமை தாங்கி வந்திருந்த தளபதிகளுள் ஒருவரான ஜர்ஜாஹ் என்பவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சந்தித்து,

காலித் பின் வலீத் அவர்களே..! நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி, உண்மையான பதிலை நீங்கள் கூற வேண்டும்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.., கேளுங்கள்..! நிச்சயமாகப் பதிலளிக்கின்றேன்.

உங்களது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து பிரத்யேகமாக வாளொன்றைப் பெற்று உங்களிடம் கொடுத்துள்ளார்களோ..! ஏனெனில், உங்களைச் சந்திக்கும் எதிரிகள் எல்லோரும் தோற்று ஓடுகின்றார்களே..! அதனால் தான் கேட்கின்றேன் என்றார், ஜர்ஜாஹ்.

இல்லை..! இல்லை..! வானத்திலிருந்து பிரத்யேகமாக எந்த வாளும் வரவில்லை.. இது காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பதிலாக இருந்தது.

பின் ஏன் உங்களை ஸைபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என்றழைக்கின்றார்கள்?

அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்ட இறைத்தூதரை அனுப்பி வைத்தான். சிலர் அவர் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள், அவர் மீது அன்பு கொண்டார்கள். இதயங்களில் ஏற்றுக் கொண்ட அந்த கொள்கையை உயிரை விடவும் நேசித்தார்கள். தூதருக்குக் கட்டுப்பட்டார்கள். பலர் அவரை எதிர்த்தார்கள், அவர் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்து உதாசினம் செய்தார்கள்.

முன்பொரு காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றியவர்களையும் குறிப்பாக இஸ்லாத்தின் கொடிய விரோதியாக இருந்தவன் தான் நான். அல்லாஹ் எனது இதயத்தில் இஸ்லாத்தின் வெளிச்சத்தை ஏற்றி வைத்தான், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சத்தியத்தை ஏற்றுக் கொணடேன், இஸ்லாமிய அணியில் நானும் ஒருவனானேன். ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை பார்த்துக் கூறினார்கள் :

காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! நீங்கள் அல்லாஹ்வின் வாள்..! உங்களது வாள் வலிமையானது எதிரிகளின் வல்லமையை அழித்தொழிக்கும்.

எனவே தான், அன்றிலிருந்து எனது பெயருக்கு முன் ஸைபுல்லாஹ் என்ற பட்டம் இணைந்து கொண்டது. நாங்கள் ஓரிறைக் கொள்கையை மக்கள் முன் வைக்கின்றோம். இறைவன் ஒருவனே..! வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சான்று பகருமாறு மக்களை அழைக்கின்றோம் என்று கூறினார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

இந்தக் கொள்கையை நான் ஏற்றுக் கொண்டால் நீங்கள் பெற்றிருக்கக் கூடிய இதே நற்பேறுகளை நானும் அடைந்து கொள்ள முடியுமா? இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! குறிப்பாக உங்களைப் போன்றே நானும் ஆக முடியுமா? என்று கேட்டார் என்ற அந்த ரோமப் படைத்தளபதி.

ஏன் முடியாது. நிச்சயமாக முடியும். இன்னும் என்னை விட நீங்கள் உயர் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றார்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் விளக்கத்தினால் கவரப்பட்ட ஜர்ஜாஹ் என்ற அந்த ரோமப் படைத்தளபதி,

காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றேன். எனக்கு சத்திய சான்றைக் கற்றுத் தாருங்கள். வணங்கத்தக்க இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றேன், அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் ஆலோசனைப்படி, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வந்த ஜர்ஜாஹ் அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திருக்கரங்களினால் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு ரக்அத் தொழுகைகளையும் தொழுது, நேர்வழி காட்டிய இறைவனுக்கு நன்றிக் கடன் செலுத்திக் கொண்டார்.

தான் படை நடத்தி வந்த ரோமப்படைக்கு முடிவுரை எழுதி விட்டு, இஸ்லாமிய அணியில் இணைந்து முகவுரை எழுதத் தயாராகி விட்டார் அந்தத் தளபதி. ரோமப்படைக்குத் தளபதியாக வந்தவர், இப்பொழுது இஸ்லாமிய அணியில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சாதாரணப் படைவீரராகப் பணியாற்ற ஆரம்பித்த அவர், இஸ்லாத்தின் மேன்மைக்காகவும் இன்னும் தானும் உயிர்த்தியாகியாக மாறி அந்த சுவனத் தென்றலைச் சுவாசிக்கப் புறப்பட்டு விட்டார்.

என்னே.. அவரது தியாகம்...! அவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதற்கும் அவர் உயிர் தியாகியாக மாற்றம் பெறுவதற்கும் இடைப்பட்ட காலப் பகுதியாக இந்த இரண்டு ரக்அத் தொழுகைக்கான நேரம் மட்டுமே தடையாக இருந்தது. சற்று முன் இறைநிராகரிப்பாளர்களின் அணியில் இருந்தவர், அடுத்த நிமிடம் இறைநம்பிக்கையாளராக மாற்றம் பெற்று, சில நிமிடங்களிலேயே உயிர்த்தியாகிகளின் பட்டியலில் சேர்ந்து விட்ட அவர், மிகப் பெரும் அதிர்ஷ்டசாலி தான்.

                                                   பகுதி - 10 / பகுதி - 12

 (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10


காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் :

என்னருமை உயிர் தியாகிகளே..!

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்..! மிகவும் நினைவு கூறத் தக்க நாள்..! இந்த நாளில் நமது இறைநம்பிக்கை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது, அதற்கான பயிற்சி நம் முன் காத்திருக்கின்றது. எனவே, இன்றைய இந்த தினத்தில் நமது முரட்டுத்தனம், பாரம்பரியப் பெருமைகள், தனிப்பட்ட நபரின் சுயநலத்திற்காக பாடுபடுதல் அல்லது பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது போன்ற இஸ்லாத்திற்கு விரோதமான அனைத்தையும் தூக்கி எறிந்து விடுங்கள்.

என்னருமை  உயிர் தியாகிகளே..!

அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போரிடுங்கள். இன்றைக்கு நம்முடைய படைக்கு மிகப் பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நன்னம்பிக்கையாளர்களும், இன்னும் நம்பத்தகுந்தவர்களாகவும், அதனை விட நீங்களும் நானும் அவர்களது உத்தரவிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் தகுதிபடைத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இன்றைய தினம் நீங்கள் என்னுடைய பொறுப்பின் கீழ், என்னுடைய உத்தரவுக்குக் கீழ்படிந்து நடக்கக் கூடிய படைவீரர்களாக, என்னுடைய தலைமையின் கீழ் திரண்டிருக்கின்றீர்கள். இஸ்லாத்தின் பெருமையை நிலைநாட்டவும், இஸ்லாம் வெற்றி பெற்றிடவும் இப்பொழுது நாம் உயிர்த்தியாகம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போர்க்களத்தில் நுழைய இருக்கின்றோம். நமக்கு உதவவும், நம்மைப் பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்..!

என்ற உரையை நிகழ்த்தி முடித்ததும், இரண்டு படைகளும் மோதுவதற்குத் தயாராக யர்முக் ஆற்றின் கரையில் சந்தித்துக் கொண்டன.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பார்த்த ரோமப் படைத்தளபதி மஹன் கொக்கரிக்க ஆரம்பித்தான்.

வறுமையும், ஏழ்மையும், உடுத்த உடை கூட இல்லாத நிலைமையும் தான் உங்களை இங்கு வரத் தூண்டி இருக்கும் என்று நினைக்கின்றேன். நீங்கள் விரும்பினால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பத்து தினார்களையும் இன்னும் விலையுயர்ந்த உடைகளையும், நல்ல உணவுகளையும் தருகின்றேன். பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி செய்து விட்டுச் செல்லுங்கள். இன்னும் அடுத்த வருடமும் கூட உங்களுக்கு இது போன்றே தரத் தயாராக இருக்கின்றேன். நீங்கள் இங்கு வந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை, நானே உங்களிடத்திற்கு அனுப்பி வைக்கின்றேன் என்று ஏளனமாகக் கூறினான்.

ரோமப் படைத்தளபதி மஹனின் இந்த ஏளனம் மற்றும் திமிர்ப் பேச்சை செவிமடுத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..!

மஹன்....?! கவனமாகக் கேட்டுக் கொள். நாங்கள் வந்த நோக்கத்தை நீ தவறாக எடை போட்டு விட்டாய்..! நாங்கள் எதிரியின் இரத்தத்தைக் குடித்து தாக சாந்தி அடைந்த கொள்ளத் துடிப்பவர்கள். அதிலும் ரோமர்கள் இரத்தங்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்பதையும் கேள்விப்பட்டோம், அதனைச் சுவைத்துப் பார்க்கவே இங்கு வந்தோம் என்று உரத்துக் கூறினார்.

இதனைக் கூறிக் கொண்டே தனது குதிரையைக் காற்றில் பறக்க விட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அல்லாஹு அக்பர் என உரத்து முழங்கி இஸ்லாத்தின் கொடியை உயர்த்திப் பிடித்தார், அத்துடன் எதிரியைத் தாக்க ஆரம்பிக்குமாறு முஸ்லிம்களுக்கு உத்தரவும் பறந்தது. ஏற்கனவே, வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்திருந்த முஸ்லிம்கள், உத்தரவு கிடைத்ததும் தான் தாமதம், தங்களது நோக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தார்கள்..!

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து உரக்க முழங்க ஆரம்பித்தார்.

எனது தோழர்களே..! சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா..! அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்கக் காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா..! வெற்றியும், நற்பேறுகளும் காத்திருக்கின்றன..! ம்...! முன்னேறுங்கள்..! என்று தனது தோழர்களுக்கு ஊக்க மருந்து கொடுக்க ஆரம்பித்தார்.

சுவனத்துச் சோலைகளின் அழகையும், வனப்பையும் திருமறைக் குர்ஆன் வசனங்களின் மூலம் ஏற்கனவே மனக் கண்களால் தரிசித்து வைத்திருந்த முஸ்லிம்கள், அதனை நித்தியமாக அடைந்து கொள்வதற்கு இப்பொழுது முழு முயற்சியை மேற்கொண்டார்கள். அதற்கு உத்வேகமளித்தது தளபதி காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உணர்ச்சி மிக்க உரை.

வீரத்தின் விளை நிலங்கள் இப்பொழுது கூலிக்கு மாறடிக்கும் கூட்டத்தினரை பதம் பார்க்க ஆரம்பித்தார்கள். எங்கும் குழப்பமும், மரண ஓலங்களும் ஒலித்திட என்ன செய்வதென்றே தெரியாது ரோமப் படைகள் விழி பிதுங்க ஆரம்பித்தன. உணர்ச்சி மிக்க உரையை நிகழ்த்தி விட்டு, தானும் அந்த உயரிய அந்தஸ்தை அடைய வேண்டுமே என்ற நோக்கத்தை மனதில் தேக்கி வைத்திருந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், தனது நோக்கத்தை செயலில் அடைந்து காட்ட அவரும் வலது பக்கமாக இருந்து எதிரிகளை ஊடறுத்துக் கொண்டு எதிரிகளின் மையப் பகுதிக்கே சென்று விட்டார். அத்துடன் மின்னலென வீசப்பட்ட அவரது வாள் வீச்சு, எதிரிகளின் தோல்விக்கு முடிவுரை எழுத ஆரம்பித்தது.

முதல் நாள் போரில் ரோமர்கள் தங்களது கூலிப் பட்டாளத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரம் வீரர்களை  இழந்திருந்தார்கள்.

யர்முக் போர்க்களத்தின் முக்கியக் காட்சிகள் சில..!


வீர மரணம் அடைந்து அந்த சுவனத்துத் தென்றலை முகர்ந்து பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பு யர்முக் போர்க்களத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிம் வீரரிடத்திலும் காணப்பட்டது. அவர்களது அந்த ஆசையை ஏற்கனவே காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் வீர உரை கிளறி விட்டிருந்தது.

ஒரு வீரர் அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரழி) அவர்களிடத்தில் வருகின்றார்..!

அபூ உபைதா அவர்களே..! இன்று நடக்கக் கூடிய போரில் நான் வீர மரணமடைய வேண்டும் என்ற ஆசை என்னை மேலிடுகின்றது. அவ்வாறு நான் வீர மரணமடைந்து விட்டால், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நான் என்ன கூற வேண்டும் என்பதைக் கூறுங்களேன் என்று வினவி நின்றார்.

கண்ணியமிக்க, புகழுக்குரியோனாகிய அல்லாஹ்..! இந்தப் போர்ப் புலிகளுக்கு, வீரத்தியாகிகளுக்கு வாக்களித்ததை நிறைவேற்றி விட்டான் என்று கூறுங்கள் என்று பதில் கூறினார் அபூ உபைதா (ரழி) அவர்கள்.

அபூ உபைதா (ரழி) அவர்களின் இந்தப் பதிலைக் கேட்ட, இக்ரிமா என்ற அந்தத் தோழர், அபூ உபைதா (ரழி) அவர்களே..! நான் இஸ்லாத்தினை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன் இறைநிராகரிப்பாளர்களின் கூடாரத்தில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகக் கலந்து கொண்ட போர்களில் கூட நான் புறமுதுகிட்டு ஓடாதவன். இன்றைக்கு சுவனம் என்னை அழைக்கும் பொழுது நான் திரும்பியா ஓடி விடுவேன்..! இல்லை இல்லை..! என்று கூறியவாறே..! எனது தோழர்களே..! என்னைப் பின்பற்றி வாருங்கள் என்று கூவியவாறே..! தனது தோழர்களை அழைத்துக் கொண்டு எதிரிகளை ஊடறுத்துக் கொண்டு வாளைச் சுழற்றிக் கொண்டே சென்றார். சற்று நேரத்திற்கெல்லாம் எதிரியின் வாள் இக்ரிமா (ரழி) அவர்களைப் பதம் பார்க்க, சுவனத்தின் சுகந்தத்தை.., அவர் அடைய நினைத்த அந்த குளிர்ச்சியான சோலைகளுக்குள் நுழைந்து விட்டார்.

போர் உக்கிரமமான முறையில் நடந்து கொண்டிருந்தது. இரவும் தொடர்ந்து நீடித்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எதிரியின் முகாமிற்குள்ளேயே நுழைந்து, ரோமப் படைத்தளபதியின் கூடாரத்திற்குள் நுழைந்து விட்டார். இப்பொழுது எதிரிகள் உயிர் தப்பினால் போதுமென்று ஓட ஆரம்பித்திருந்தனர். இரவு நடந்த போரில் எதிரிகளை விரட்டி விரட்டி, அவர்களது தலைகளை முஸ்லிம்கள் கொய்தனர். முஸ்லிம்களில் பலருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.



                                                      பகுதி - 09 / பகுதி - 11


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

தாதுல் சலாஸில் போர் - அலீஸ் போர் - கைரா போர்

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 09

தாதுல் சலாஸில் போர்


இஸ்லாமியப் படைகள் ஈராக்கில் நடத்திய போர்களில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கலந்து கொண்ட முதல் போர் இந்த சலாஸில் போர் தான். இந்தப் போர் வரலாற்றில் ஹஃபீர் போர் என்றும் மாற்றுப் பெயருடன் அழைக்கப்படுகின்றது. ஹஃபீர் என்ற இந்த இடம் பெர்சிய வளைகுடாவின் அருகே அமைந்துள்ளது. மேலும் மதீனாவுக்கும் பஸராவுக்கும் இடையே உள்ள வழித்தடத்திலும் இந்நகரம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஹர்மெஸ் ஈரான் ஆட்சியாளர்களிடமிருந்து அதிக ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் பெற்றுக் கொண்டிருந்தான். ஹர்மஸ் மிகவும் அகங்காரமும், ஆணவமும் கொண்ட மன்னனும், இன்னும் அவன் தலையில் சூடியிருக்கக் கூடிய மணிமுடியில் தங்க இலைகளால் செய்யப்பட்டதும், இன்னும் வைரம், வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டதுமாக இருந்ததுடன், அதன் மதிப்பு அன்றைய திர்ஹத்தில் ஒரு லட்சம் மதிப்புடையதாகவும் இருந்தது. இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் யானையைப் பயன்படுத்தினார்கள். அல்லாஹ்வின் மிகப் பெரிய படைப்பாகிய அந்த மிருகத்தை அந்தப் பகுதி மக்கள் அதுவரை யாரும் கண்டதில்லை என்பதால், மிகப் பெரிய விலங்கைப் பார்த்தவுடன் அவர்கள் திகிலடைந்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன் ஈராக் பகுதிக்குள் நுழைந்த போது, எட்டாயிரம் முஸ்லிம்களுடன் ஜாலு என்ற இடத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த மத்னா பின் ஹாரிதா (ரழி) அவர்கள், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். இருபடைகளுக்கும் தளபதிப் பொறுப்பேற்ற காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், மொத்த படைகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தார்கள்.

ஒரு படைப்பிரிவுக்கு மத்னா பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், இன்னுமொரு பிரிவுக்கு அதீ பின் ஹாதிம் (ரழி) அவர்களையும்  இன்னும் மூன்றாவது பிரிவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்களே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இந்த அனைத்துப் பிரிவுகளும் எதிரிகளை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்தன.

ஆனால் ஹர்முஸ் தனது படைகளை இருபிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தளபதிகளாக அரச குடும்பத்தவர்களையே நியமித்தான். அந்த அணிகள் வலது அணி மற்றும் இடது அணி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இன்னும் ஆண்கள் அனைவரும் போரிலிருந்து புறமுதுகிட்டு ஓடாதபடி, அனைவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டனர். எனவே தான் இந்தப் போர் சலாஸில் போர் என்றழைக்கப்படுகின்றது. அரபியில் சலாஸில் என்றால் சங்கிலி என்ற அர்த்தமாகும்.

இப்பொழுது போர் ஆரம்பமாகியது. அந்தக் கால வழக்கப்படி முதலில் தனி மனிதர்கள் மோதிக் கொண்டதன் பின் தான் உக்கிரமான போர் ஆரம்பமாகும். அந்த அடிப்படையில் முதல் இரண்டு வீரர்கள் மோதிக் கொண்டார்கள். இப்பொழுது அங்கு ஒரு சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹர்முஸ் மன்னனைச் சந்திக்கும் முறை வரும் பொழுது, ஹர்முஸ் ன் படைவீரர்கள் விரைந்து செயல்பட்டு, காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கிட வேண்டும் என்பது தான் அந்த சதித் திட்டம். அதன்படி இப்பொழுது ஹர்முஸ் மன்னனும், காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் மோதும் கட்டம் வந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹர்முஸ் மன்னனை நோக்கி நகரத் தொடங்கியதும், ஈராக்கிய வீரர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கும் எண்ணத்துடன் முன்னேறினர். காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கும் நோக்கத்துடன் ஹர்முஸ் ன் ஆட்கள் முன்னேறுவதைக் கண்ட காகா பின் அம்ர் (ரழி) அவர்கள் விரைந்து செயல்பட்டு, அவர்களைத் தடுத்துத் தாக்கியதுடன், அந்த இடத்திலேயே ஹர்முஸ் ன் படைவீரர்கள் பலரைக் கொன்று குவித்தார். இந்த சூழ்நிலை மாற்றத்தில் சற்று நிதானமிழந்த ஹர்முஸ் ஐ க் காலித் பின் வலீத் (ரழி) தன் வாளால் செயலிழக்கச் செய்தார்கள். நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டே அவனை அனுப்பி வைத்தார்கள்.

போர் கடுமையாக நடந்தது, தலைவனை இழந்த ஹர்முஸ் - ன் வீரர்கள் தலைதெறிக்க பின்வாங்கி ஓடினார்கள். இன்னும் ஆயிரக்காண வீரர்களையும் இழந்தார்கள். எஞ்சியிருந்த படைகளை யூப்ரடிஸ் நதிக்கரை வரையிலும் விரட்டிக் கொண்டு போய் விட்டு வந்தார்கள் முஸ்லிம் வீரர்கள்.




அலீஸ் போர்


அலீஸ், இந்த நகரம் யூப்ரடிஸ் நதிக் கரையின் ஓரத்தில் ஹைரா மற்றம் அப்லாஹ் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்த ஊராகும். அரபுக் குலத்தவர்கள் சிலர் இந்த நதிக்கரையில் குடியமர்ந்து கொண்டு, ஈராக் மன்னனுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் செய்வதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களிடம் பல முறை தோற்றதின் காரணமாக அவர்களின் மனதில் வெறுப்பு எனும் நெருப்பு கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும் சிறிதும் தாமதிக்காமல் தாக்குதலைத் தொடுத்தார்கள். அவர்களில் மிகப் பிரபலமான வீரரெனப் போற்றப்பட்ட மாலிக் பின் கைஸ், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாக்குதலின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் மரணத்தைத் தழுவினான். மாலிக் பின் கைஸ் - ன் மரணத்தைக் கண் முன் கண்ட அவனது படைகள், தலைதெறிக்க புறமுதுகு காட்டி ஓட ஆரம்பித்தார்கள். இன்னும் அவர்கள் சாப்பிடுவதற்காக தயாரித்து வைத்திருந்த ரொட்டியைக் கூட சாப்பிடுவதற்கு நேரம் கொடுக்கவில்லை காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த அனைத்தையும் விட்டு விட்டு ஓட்டமெடுக்க ஆரம்பித்தார்கள். இந்தப் போரில் தான் முதன் முதலாக முஸ்லிம்கள், கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டியைப் பார்த்தார்கள். இந்தப் போரில் எதிரிகளின் தரப்பில் 70 ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டனர்.

 
கைரா போர்


கைரா என்பது அப்போதைய ஈராக்கின் தலைநகராக விளங்கியது. இந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த அரபுக் குலங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது முஸ்லிம்களின் திட்டமாக இருந்தது. எனவே, திட்டம் வகுப்பதில் தீரரான காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கைராவைக் கைப்பற்ற முடிவு செய்தார்கள். மேலும் இந்த நகரம் யூப்ரடிஸ் கதிக் கரையின் அருகே இருந்த காரணத்தினால், பயணத்திற்கு கடல் மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். முஸ்லிம் போர் வீரர்கள் கைராவை நோக்கி வருவதை அறிந்த கைராவின் கவர்னர் தனது மகனது தலைமையின் கீழ் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகப் படையை அனுப்பி வைத்தார். இன்னும் கைராவை நெருங்குவதற்கு முன்பாகவே முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்றும் கைராவின் கவர்கர் விரும்பினார். ஆனால், நேருக்கு நேர் நடந்த மோதலில் கைராவின் கவர்னரது மகனின் தலையைத் துண்டித்து விட்டார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். இந்தப் போரின் போது கைராவின் கவர்னருக்கு மிகவும் கைசேதமான நேரமாக இருந்தது, அதாவது அவரது மகன் போரில் கொல்லப்பட்டான், அவரது கூட்டு நாடாக இருந்த ஈரானின் மன்னரும் அப்போது இறந்திருந்தார். பயத்தினால் சூழப்பட்ட அவன் தானும், தனது மக்களுமாக கோட்டையைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்து கொண்டான். கைராவில் அமைந்துள்ள இந்தக் கோட்டை மிகவும் உறுதியானதும், பாதுகாப்பானதும் கூட. ஆபத்தான சமயங்களில் தற்காப்புக்கு உபயோகப்படுத்துவதற்காக இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் இந்தக் கோட்டையை ஒரு நாள் இரவு,  ஒரு நாள் பகல் என முற்றுகையிட்டார்கள். சில முஸ்லிம் வீரர்கள் அந்தக் கோட்டைப் பாதுகாப்பையும் சமாளித்து உள்ளே சென்று விட்டார்கள். பின் அந்தக் கைரா மக்கள் முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 


அந்த சமாதான ஒப்பந்தத்தின் சரத்துக்கள் பின்வருமாறு எழுதப்பட்டன :

வருடம் ஒன்றிற்கு பாதுகாப்பு வரியாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் திர்ஹம்களை வரியாகச் செலுத்துவது 

முஸ்லிம்களுக்காக ஈரானில் இருந்து உளவு பார்ப்பது 

இதற்குப் பிரதிபலனாக அவர்களது வணக்கத்தளத்தையோ அல்லது அவர்களது உடமைகளுக்கோ எந்த சேதத்தையும் முஸ்லிம்கள் ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உத்தராவதம். 

தொடர்ந்து போரிட்டு வந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லிம்களுக்கு ஓய்வு அளிக்கக் கூடிய இடமாக கைராவைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அங்கேயே ஒரு வருடம் தங்கியிருந்தார்கள். இன்னும் மிகப் பரந்;த பிரதேசமாகிய ஈராக்கையும், அதன் சுற்றுப் புறங்களில் உள்ள பகுதிகளை ஒருங்கிணைப்பதற்காக, மிகவும் தேர்ச்சி பெற்ற படைத் தளபதிகளான தரார் பின் அஸ்வர் (ரழி), காகா பின் அம்ர் (ரழி) மற்றும் மதனா பின் ஹாரிதா (ரழி) ஆகியவர்களை அனுப்பி வைத்தார்கள். இதன் காரணமாக இஸ்லாத்தின் கொடி மிகப் பரந்த நிலப்பகுதிகளிலும் ஒளி வீச ஆரம்பித்தது.

அபுபக்கர் (ரழி) அவர்கள் மிகப் பிரபலமான தளபதிகளான அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரழி), யஸீத் பின் அபூசுஃப்யான் (ரழி), ஆமிர் முஆவியா பின் அபூசுஃப்யான் (ரழி), அம்ர் பின் அல் ஆஸ் (ரழி) ஆகியோர்களின் தலைமையில் ரோமப் பகுதிகளுக்கு ஒரு படையை அனுப்பி வைத்தார். இந்தப் படையின் சிரியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடல்லாமல், சென்ற பகுதிகளிலெல்லாம் இஸ்லாத்தின் வெற்றிக் கொடியை நாட்டி வைத்தது. இப்பொழுது ரோமப் படைகளுடன் மோதுவது என்ற அபுபக்கர் (ரழி) அவர்களுடைய முடிவுடன் இந்த வெற்றிகளைக் கணக்கிடும் பொழுது, இப்பொழுது சந்திக்கவிருக்கின்ற சூழல் மிகவும் பாரதூரமானதாக இருந்தது. எனவே, முஸ்லிம்களின் அனைத்துப் பிரிவும் இப்பொழுது ஒன்று சேர்ந்து யர்முக் ஆற்றங்கரையில் குழுமினர்.

முஸ்லிம்களின் இந்தப் படை நகர்த்தலைக் கேள்விப்பட்ட ரோமப் பேரரசன் ஸீஸர் தனது மந்திரிப் பிரதானிகளிடம், நிலைமையின் விபரீதத்தை இட்டு கலந்தோசனை செய்த பொழுது, இப்பொழுது நாம் முஸ்லிம்களிடம் மோத வேண்டாம் என்ற கருத்தை மன்னர் மந்திரிப் பிரதானிகளிடம் தெரிவித்தான். ஆனால் மந்திரிகளோ, மன்னரின் கருத்தை ஏற்காமல்..,

முஸ்லிம்களுக்கு நாம் ஒரு பாடத்தைக் கற்பித்துக் கொடுக்க வேண்டும், இன்னும் அந்தப் பாடத்தை அவர்களின் சந்ததிகள் கூட மறக்கக் கூடாது என்று உருமினர். இறுதியாக, மந்திரிகளின் ஆலோசனை தான் வெற்றி பெற்றது. முஸ்லிம்களின் மீது படையெடுத்துச் செல்வது என்று முடிவாகியது.

முஸ்லிம்களைக் களம் காண 4 லட்சம் ரோமப் படைவீரர்கள் தயார் செய்யப்பட்டனர். ஆனால் முஸ்லிம்களின் தரப்பிலோ ஒட்டு மொத்தமாக 46 ஆயிரம் படை வீரர்கள் தான் இருந்தனர். இன்னும் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலப்படாமல், பல்வேறு தளபதிகளின் கீழ் யர்முக் ஆற்றின் வௌ;வேறு பகுதிகளில் தனித்தனியாகப் பிரிந்திருந்தனர்.

இந்த நிலையில் யர்முக் ஆற்றின் கரைக்கு தனது படையினருடன் வந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், நிலைமையின் பாதகத்தை உணர்ந்து, அனைத்துத் தளபதிகளையும் அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினார். இதனடிப்படையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளபதியின் கீழ் போர் செய்வது என்றும், இதன் மூலம் ஒவ்வொரு தளபதிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அந்த ஆலோசனையை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். முதல் நாள் போருக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமை தாங்குவது என்றும் ஒருமனதாக முடிவாகியது.

எப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றாற்களோ, அப்பொழுது வீரர்களின் வீரத்தையும், உயிர் தியாக வேட்கையையும் உசிப்பி விடுவதற்கானதொரு வீர உரையை அவர்களுக்கு மத்தியில் ஆற்றினார். இந்த உரையின் தாக்கம் ஒவ்வொரு வீரரின் நாடி நரம்புகளிலும் பரவி, இப்பொழுது அவர்களது தாகமெல்லாம் எதிரிகளைச் சந்திப்பதிலும், அதில் வீர மரணமடைந்து அந்த முடிவறாத சுவர்க்கத்தை அனந்தரங் கொள்வதிலும் நிலைத்திருந்தது. மற்ற உலக பந்தங்களெல்லாம் அவர்களிடம் விடை பெற்று நின்றது.


                                                            பகுதி - 8 / பகுதி - 10



(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Sep 3, 2015

தாத்து ஜன்தல்

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 08
 
தாத்து ஜன்தல்

தாத்து ஜன்தல் என்ற குலத்தினர் வசிக்கும் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக 500 பேர் கொண்ட படைப் பிரிவை காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்தக் குலத் தலைவர் அகீதர் பின் அப்துல் மாலிக் என்பவரை உயிருடன் பிடித்து இங்கு கொண்டு வாருங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் சென்ற படையானது மிக வேகமாகப் பயணித்து, தாத்து ஜன்தலை இரவிலேயே அடைந்து விட்டார்கள். இன்னும் அந்த இடத்தை அடைந்ததும், தனது தோழர்களை மெதுவாகப் பேசிக் கொள்ளும்படியும், இன்னும் குதிரைகளை மெதுவாக நடக்க விட்டு சலசலப்பு இல்லாமல் நகரத்திற்குள் நுழையும்படியும் கட்டளையிட்டார்கள்.

இப்பொழுது, முழுச் சூழ்நிலையும் மிகவும் அமைதியாக இருந்தது. அகீதர் பின் அப்துல் மாலிக் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு, மதுபானத்தையும் அருந்திக் கொண்டிருந்தான். காட்டில் இருந்து ஊருக்குள் வந்ததொரு வெள்ளை நிற மிருகம் ஒன்று, கோட்டையின் கதவை தனது தலையால் முட்டிக் கொண்டிருந்தது. கதவு தட்டப்படும் ஓசையைச் செவி மடுத்த அவனது மனைவி, நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உங்களது வேட்டைப் பிராணி இப்பொழுது உங்களது கதவுக்கருகில் வந்து விட்டது, இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள், அவசரம் என்றாள். மது அருந்திக் கொண்டிருந்த அவன், மதுக்கிண்ணத்தை தரையில் வைத்து விட்டு, அம்பை எடுத்து வில்லில் பூட்டிக் கொண்டு, தனது சகோதரன் ஹஸனையும் இன்னும் தனது பணியாட்களையும் துணைக்கழைத்தான். தனது குதிரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, தனது வேட்டைப் பிராணியைத் தேடிப் புறப்பட்டான். அவன் ஓரடி எடுத்து வைப்பதற்குள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் அவர்களது தோழர்களும் அவனை முற்றுகையிட்டு விட்டார்கள். அவனோ தனது இரையைத் தேடி வெளியே வந்தான், ஆனால் விதியோ இங்கே அவனை இரையாக்கி வைத்து விட்டது. அவனது சகோதரன் ஹஸன் முஸ்லிம்களை எதிர்த்து சற்று எதிர்ப்புக் காண்பித்தான், அவனால் அவனது எதிர்ப்பு பயனளிக்கவில்லை, கொல்லப்பட்டு விட்டான். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாத அகீதர் கைது செய்யப்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்காமல், ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியைக் கட்டும்படி உத்தரவிட்டு, அவனை விடுதலை செய்ததோடு அவனது பிரதேசத்தை அவனுக்கே விட்டுக் கொடுத்தார்கள்.

தாத்துஜன்தல் தலைவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட பொழுது, அவன் விலையுயர்ந்த ஆடைகளையும், அதில் விலையுயர்ந்த தங்கத்தால் நெய்யப்பட்ட கயிற்றை தலையில் அணிந்திருந்தான். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, இது என்ன பெருமையும், அகங்காரமும் என்று வியந்து போனார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்ன ஆச்சரியமாய் இருக்கின்றதா?

சுவனத்தில் சஅத் பின் முஆத்  அவர்களின் கைக்குட்டையானது, இதனை விட மிகச் சிறந்தது, விலை உயர்ந்தது என்று கூறினார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மிகச் சிறந்த, வெற்றி வீரர் மற்றும் தளபதியாக மட்டும் அவர் பரிணமிக்கவில்லை. இன்னும் அவர் மிகச் சிறந்த இஸ்லாமிய அழைப்பாளரும் கூட. இவரது அழைப்பின் மூலமாக பலர் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சிகளும் நடந்தேறி உள்ளன. ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு, 400 படைவீரர்களுடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நஜ்ரான் என்ற பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப் பகுதியில் வாழக் கூடிய பனூ ஹாரிஸ் குலத்தவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், அங்கிருந்து கொண்டு அவர்களுக்கு இஸ்லாத்தையும், குர்ஆனையும், சுன்னாவையும் கற்றுக் கொடுங்கள். அவர்கள் மறுத்தால் அவர்கள் மீது போர்ப்பிரகடனம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

நஜ்ரான் பிரதேசத்தை அடைந்தவுடன், அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து இஸ்லாத்தின் மேன்மைகளைப் பற்றியும், அதன் கொள்கைகளையும் பற்றியும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மிகவும் மென்மையான முறையில் அந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இன்னும் உறுதியான குரலில் கூறினார், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அது தான் உங்களைப் பாதுகாக்கும், அதுவன்றி இந்த உலகத்திலும் மறுமையிலும் உங்களைப் பாதுகாக்கக் கூடிய சக்தி எதுவுமில்லை. இன்னும் இழிவிலிருந்தும், அவமானத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார். நீங்கள் எனது உரையை செவிமடுத்தால் அது உங்களுக்கு சுபிட்சத்தைக் கொண்டு வரும், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் உறுதியான குரலில்.., இல்லையெனில், இந்தப் பகுதியே குப்பைக் கிடங்காக மாற்றப்படும். இதனைக் கேட்ட நஜ்ரான் மக்கள், இனி நம்முடைய எதிர்காலம் என்பது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது என்று முடிவெடுத்தவர்களாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும், இடைவிடாது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகள் மூலமாக மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டும், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராக கிளந்தெழுவோர்களுக்கு எதிராகப் போர் புரிந்து கொண்டும், இஸ்லாமியப் பணிக்காகத் தன்னை அற்பணித்த வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அந்த கால கட்டங்களில் எந்த தொய்வோ அல்லது நயவஞ்சக எண்ணங்களோ, பலவீனங்களோ அவரிடம் ஏற்பட்டது கிடையாது. அவர் என்றைக்கு இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படியும், அவர்களின் தலைமைக்குக் கீழ்ப்படிந்தும் போர்களில் கலந்து கொண்டார். இன்னும் போர்களில் முன்னணிப் படைத்தளபதியாக இவரை நியமித்ததன் மூலம், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தளவு நன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள் என்பது நமக்குப் புலனாகின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை தழுவிய பொழுது, இவரைப் போன்ற வீரத்தியாகிகளின் கைகளில் இஸ்லாத்தை ஒப்படைத்து விட்டுப் போவது குறித்து, மிகவும் சந்தோஷமடைந்தார்கள். இந்த உலகத்தில் பல நாடுகள் தங்களுக்கு கீழ் பணியாற்றக் கூடிய படைவீரர்களுக்குக் கொடுக்கக் கூடிய பதக்கங்கள், பட்டங்கள், கேடயங்கள் ஆகிய அனைத்தையும் விடவும், இறைவனது திருப்தியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது திருப்தியும் எவ்வளவு மேன்மையானது..! அந்தத் திருப்தியைத் தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாகப் பெற்றுக் கொண்டார்கள்.

அகில உலமெல்லாம் அருள் செய்யப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது முழு வாழ்க்கையையும் இஸ்லாமியப் பணிக்காக அற்பணித்தவர்களாக தனது 63 வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். அவர்களது பிரிவு நபித்தோழர்களை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது, வானமே இடிந்து தலையில் வீழ்ந்து விட்டது போல நபித்தோழர்கள் உணர்ந்தார்கள்.

உமர் (ரழி) அவர்களோ..., இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை, அதனை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என பிடிவாதம் பிடித்தார்கள். இன்னும் எவராவது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்;டார்கள் என்று சொன்னீர்கள் என்றால், எனது வாளுக்கு இறையாக நேரிடும் என்று, தனது வாளை உருவிக் கொண்டு எதிர்ப்படுபவர்களை அச்சமூட்டிக் கொண்டிருந்தார். இந்த இக்கட்டான நிலையில், அபுபக்கர் (ரழி) அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு உரையை நிகழ்த்தி, அந்த அமளி துமளிகளை அடக்கிப் போட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்ட சிலர், இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். இவர்கள் இஸ்லாம் விதிக்கக் கூடிய வரம்புகளையும் சட்ட திட்டங்களையும் பேண முடியாது, பலவீனமானவர்களாக இருந்த காரணத்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். உண்மையிலேயே இவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை, இறைவனையும், இறைத் தூதர் (ஸல்) அவர்களையும் நேசிக்கவில்லை. அவர்களிடம் இயற்கையிலேயே அசுத்தங்களும், கடப எண்ணங்களும் மிச்சமிருந்தன. அவர்களிடம் இஸ்லாமியப் போதனைகளின் தாக்கம் இருக்கவில்லை மாறாக, இணைவைக்கும் கொடிய பழக்கம் குடிகொண்டிருந்தது. இதுவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்தது. இன்னும் சிலர் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று மறுத்தனர்.

இன்னும் அஸ்வத் அன்ஸி, முஸைலமா கத்தாப், பின்பு தலீஹா மற்றும் சஜ்ஜா ஆகிய குலத்தலைவர்கள், குழப்பக்காரர்களாக இவர்கள் தங்களை இறைத்தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். உண்மை முஸ்லிம்கள் இதனால் கலவரமடைந்தார்கள், கலங்கினார்கள். ஒரு பக்கம் தங்களது வழிகாட்டியும், தலைவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்களை இழந்து துக்கத்தில், அவர்களை அடுத்து யாரை தங்களது தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது, யாரை கலீஃபாவாக ஆட்சித் தலைவராக நியமிப்பது என்ற கவலையில் இருந்தார்கள். இந்த பிரச்னைகளுக்கிடையில், இஸ்லாத்தினை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் போலித் தூதர்களது பிரகடனங்கள் ஆகிய அனைத்தும், முஸ்லிம்களைக் கவலையில் ஆழ்த்தியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அபுபக்கர் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றார்கள், அவர்கள் பொறுப்பேற்றபின்பு, நிலைகுலையாது உறுதியான திடமான பல நடவடிக்கைகள் எடுத்தார்கள், தீமைகள் பலவற்றைக் களைந்ததோடு, குழப்பக்காரர்களையும் ஒழித்தார்கள்.

குழப்பக்காரர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த அபுபக்கர் (ரழி) அவர்கள், தலீஹா பின் கவாலித் மற்றும் மாலிக் பின் நவீரா என்ற போலித் இறைத்தூதர்களை எதிர்த்து காலித் பின் வலீத் (ரழி) அவர்களை படையுடன் அனுப்பி வைத்தார்கள். இன்னும் முஸைலமா பின் கத்தாப் - க்கு எதிராக இக்ரிமா (ரழி) அவர்களையும், அஸ்வத் அன்ஸி - க்கு எதிராக முஹாஜிர் பின் அபீ உமைய்யா (ரழி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

இன்னும் திஹாமா பகுதியை வெற்றி கொள்வதற்காக சுவைத் பின் மக்ரான் (ரழி) அவர்களையும், இன்னும் கததா வை வெற்றி கொள்வதற்காக அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட படைத்தளபதிகளில் தலீஹா பின் கவாலித் என்பவனை, காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன் முதலாக வெற்றி கொண்டார்கள். கவாலித் என்பவன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்டவுடனேயே தன்னைத் தானே இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டான். இவனது இடத்தை அடைந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவனைக் கொன்றதோடு, இவனது ஆதரவாளர்களையும் வெற்றி கொண்டார். இதனை அடுத்து, மாலிக் பின் நவீரா என்பவனை வெற்றி கொள்வதற்காகப் புறப்பட்டார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

அஸத், கதஃபான், தாய், ஆபஸ் மற்றும் பனூ தீபான் போன்ற குலத்தவர்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையினால், இவர்கள் அனைவரும் அவர்களது கோத்திரத்தைச் சேர்ந்த மாலிக் பின் நவீராவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்டதோடு, அவனை ஆதரிக்கவும், பின்பற்றவும் செய்தனர். எனவே, ஒருங்கிணைந்த இந்த கோத்திரத்தவர்களை வெற்றி கொள்வதென்பது சாதாரண விஷயமல்ல, ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அதனைச் செய்து காட்டினார்கள். அவரது இராணுவப் பயிற்சி, அனுபவம், வீரம், தந்திரங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்று திரட்டிப் போரடி வெற்றி பெற்றார். எதிரியைப் பூண்டோடு அழித்தார். போர் தொடங்குவதற்கு முன்பாக அதீ பனி ஹாதிம் அவர்கள், தாய் குலத்தவர்களுடன் பேசி தாய் குலத்தவர்களை போரிலிருந்து விலகி இருக்கச் செய்ததோடு, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தார்.

இந்தப் போருக்குப் பின்னர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாமிய தலைமையகமான மதீனாவிற்குச் சென்றார். பின்னர் அபுபக்கர் (ரழி) அவர்களது ஆணைப்படி, அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் கொண்டதொரு படையை, நானும் ஒரு இறைத்தூதர் தான் என வாதாடிக் கொண்டிருந்த முஸைலமா பின் கத்தாப்பை சந்திக்க காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் அனுப்பி வைத்தார்கள். இதற்கு முன்பாக சர்ஜீல் பின் ஹஸனா (ரழி) மற்றும் இக்ரிமா (ரழி) ஆகியோர்களின் தலைமையில் சென்ற படையை முஸைலமா வெற்றி கொண்டிருந்தான். முஸ்லிம்களை வெற்றி கொண்டபின், காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் மீண்டும் ஒரு படை வருகின்றது என்ற கேள்விப்பட்ட முஸைலமா மீண்டும் 40 ஆயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டினான்.  இரண்டு படைகளும் மிகவும் உக்கிரமாக போரிட்டன. இரண்டு படைகளும் கடுமையாகப் போரிட்டதில் முஸைலமாவின் படைகள் முஸ்லிம்களுக்கு ஒரு இன்ஞ் நிலத்தைக் கூட விட்டுத் தராத அளவுக்கு போரிட்டனர்.

நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அதனை மதிப்பீடு செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம்களின் படைகளை அவரவர் குலத்தின் அடிப்படையில் பிரித்தெடுத்தார்கள். ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தலைவரை நியமித்தார்கள். பின் அவர்களிடம் பந்தயம் கட்டி, யார் உங்களில் முன்னேறுகின்றார்கள் என்பதை நான் பார்த்துக் கொண்டிருப்பேன், எங்கே பார்க்கலாம் யார் எதிரிகளை ஊடறுத்து முன்னேறிச் செல்கின்றார்கள் என்பதை.., என்று உசுப்பேற்றி அவர்களது வீரத்தைத் தட்டி விட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களது திட்டம்.., நன்கு வேலை செய்ய ஆரம்பித்தது. ஒவ்வொரு குலத்தவர்களும் தங்களது குலப் பெருமையைக் காட்டிட இது தான் சந்தர்ப்பம் என்று தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து போரிட்டார்கள்.

முஸ்லிம்களின் வேகத்தை எதிர்க்கத் திராணியற்ற முஸைலமா படைகளின் எதிர்ப்பு வலுவிழக்க ஆரம்பித்தது. அவர்கள் இப்பொழுது பின்வாங்கி ஓட ஆரம்பித்தார்கள். இறுதியில் தங்களது கோட்டைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார்கள். அந்தக் கோட்டையின் சுவர்கள் மிக உயரமாக இருந்தன. அதன் கதவுகள் மிகவும் உறுதியாக இருந்தன. எனவே, கோட்டை மீது ஏறிக் குதிக்கவோ அல்லது கதவை உடைத்துக் கொண்டு கோட்டைக்குள் செல்லவோ இயலாத நிலையில் முஸ்லிம்கள் கோட்டையை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.

நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பரா பின் மாலிக் (ரழி) அவர்கள் தனது தோழர்களை அழைத்து என்னை கோட்டையின் உள்ளே சென்று விழும்படியாகத் தூக்கி எறியும்படி கூறினார். இறைவழியில் உயிரைத் தியாகம் செய்ய வந்த அந்தத் தோழர்கள், தங்களது தோழரின் திட்டத்தைச் செயல்படுத்த முன் வந்தனர். வலுவான நபர்கள் இணைந்து பரா பின் மாலிக் (ரழி) அவர்களைக் கோட்டையின் உள்ளே இருந்த தோட்டத்திற்குள் தூக்கி எறிந்தனர். அச்சமற்ற நிலையில் உயரே வானிலிருந்து விழுந்த மனிதரைக் கண்ட முஸைலமா வின் ஆட்கள், அச்சத்தால் நடுங்கினர். மேலும், தங்களுக்கு எதிரான படைகள் இப்பொழுது நிலத்தை விட்டு விட்டு, வானிலிருந்து இறங்கி வருவதாக நினைத்து கதிகலங்கினர். இந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பரா பின் மாலிக் (ரழி) அவர்கள், எதிரிகளைச் சாய்த்த வண்ணமே, கோட்டையின் கதவுப் பகுதிக்கு வந்து, கதவைத் திறந்து விட்டார். கோட்டைக் கதவு திறக்கப்பட்டதும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகள் இப்பொழுது கோட்டைக்குள் நுழைய ஆரம்பித்தனர். சற்று நேரத்திற்குள் கோட்டை முஸ்லிம்களின் வசமாகியது. முஸைலமாவும் அவனது ஆட்களும் போரில் கொல்லப்பட்டார்கள். அந்தக் கோட்டைக்குள் இருந்த தோட்டம் இப்பொழுது தண்ணீருக்குப் பதிலாக இரத்தத்தால் குளித்துக் கொண்டிருந்தது. இதனால் இந்தப் பூங்காவுக்கு மரணப் பூங்கா என்ற பெயரும்  வந்தது. முஸைலமாவை வெற்றி கொண்டபின், கோட்டையின் வனப்பு மிகுந்த பகுதிகளில் இஸ்லாமியப் படைகள் சற்று ஓய்வெடுத்தனர்.

படைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது, அபுபக்கர் (ரழி) அவர்களிடமிருந்து வந்த ஆணை ஒன்று காலித் பின் வலீத் (ரழி) அவர்களை ஈரான் மற்றும் ஈராக் நோக்கிச் செல்ல வைத்தது. கலீஃபாவின் ஆணையைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், 12 ஆயிரம் வீரர்களுடன் ஈராக் நோக்கிப் பயணப்பட்டார்கள். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 12 ம் நாளன்று ஈராக்கின் பள்ளத்தாக்குப் பகுதியான அப்லா வைத் தாக்கும்படி உத்தரவு வந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும், அந்தப் பகுதியின் ஆட்சியாளராக ஹர்மஸ் க்கு ஒரு அழைப்பு மடல் ஒன்றை அனுப்பி வைத்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மடலில் கீழ்க்காணும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

ஓ ஹர்மஸ்! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்..! அல்லது இஸ்லாமிய ஆட்சியை ஏற்றுக் கொள்..! இன்னும் வரியையும் செலுத்தி விடு. இல்லையென்றால், நீ எவ்வாறு இந்த உலக வாழ்வை நேசிக்கின்றாயோ அதனை விட மரணத்தை நேசிக்கக் கூடிய கூட்டத்தை நீ சந்திப்பது என்பது  தவிர்க்க இயலததாகி விடும் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தைப் பார்த்த ஹர்மஸ் செய்த வேலை என்னவென்றால், உடனே ஈரானுடைய பேரரசனுக்கு தகவல் அனுப்பி, மிகப் பெரிய படை ஒன்றை தனக்கு உதவியாக அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தான். அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஈரான் மன்னர், ஒரு மிகப் பெரும் படையை அனுப்பி வைத்தார்.

ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் இப்பொழுது இருக்கக் கூடிய படைவீரர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரமே இருந்தது. இரண்டு படைகளும் மோதவிருக்கும் வேலையில், ஹர்மஸ் பெருமையின் காரணமாக, தன்னை முஸ்லிம்களால் என்ன செய்து விட முடியும் பார்க்கலாம் என்று மார் தட்டிக் கொண்டு நின்றான்.

அவனது பெருமையை அதிக நேரம் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் நீடிக்கவிடவில்லை. எடுத்த எடுப்பிலேயே அவன் மீது தனது வாளைப் பாய்ச்சி, இறுதி மூச்சை விடும்படி செய்தார். போர் இன்னும் ஆரம்பிக்கவில்லை, ஆனால் தனது படைத் தளபதியையே இழந்து நின்ற ஹர்மஸின் படைகள் அச்சத்தால் நடுங்க ஆரம்பித்தன. அவர்களது அச்சம் நியாயமாக்கப்பட்டது. அவர்கள் வேரறுந்த மரம் போலச் சாய்ந்தனர். முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். இன்னும் கனீமத் - போர்ப் பொருட்களாக ஏராளமானவற்றை முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டார்கள், இன்னும் ஹர்மஸ் அணிந்திருந்த விலை மதிக்க முடியாத பூ வேலைப் பாடுகளுடன் கூடிய தலைக் கவசத்தையும் முஸ்லிம்கள் போர்ப் பொருளாகப் பெற்றார்கள். ஒரு லட்சம் திர்ஹம் விலைமதிப்புள்ள அந்த தலைக் கவசததை அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்குப் பரிசாக வழங்கி கௌரவித்தார்கள். எப்பொழுது இந்தப் படைத்தளபதி ஈராக்கில் நுழைந்தாரோ, அப்பொழுதே வெற்றியும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

இன்னும் எல்லாப் போர்களிலும் அதாவது தாத்துஸ் ஸலாசில், வலீஜாப் போர், அலீஸ் போர், அம்கீஸிய்யா, ஹைரா, அன்பர், ஐனுல் தமர், ஹஸீர், ஃகனாஃபஸ், மஸீஃக், ஸமீல் மற்றும் ஃபரஸ் ஆகிய போர்களிலும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் போரிட்ட இஸ்லாமியப் படை வெற்றிகளைக் குவித்தது. ஈராக்கில் மட்டும் இரண்டு வருடங்கள் தங்கியிருந்து 15 போர்களில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். எதிரிகளை விட ஆள் பலத்திலும், ஆயுத பலத்திலும் குறைவாக இருந்த போதிலும், எதிரிகளைச் சந்தித்த அத்தனை போர்களிலும் முஸ்லிம்களே வெற்றி பெற்றனர். குறைந்த வளங்களோடு, குறைந்த கால அளவில் இந்தளவு வெற்றிகளை இன்றும் கூட எந்த படைத்தளபதியும் பெற்றதில்லை என்பதே வரலாறு.


                                                                 பகுதி - 7 / பகுதி - 09

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

 

தபூக் யுத்தம்

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07


தபூக் யுத்தம்

தபூக் என்ற இடம் மதீனாவிற்கு  வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ரி 9 ஆம் வருடம் கடுமையான கோடையின் பொழுது, மிகச் சிரரமமானதொரு சூழ்நிலையில் வெயிலின் கொடுமை ஒரு புறம், தொடர்ந்தாற் போல பல போர்கள், இன்னும் கரடுமுரடான பாதை ஆகிய அனைத்தையும் கடந்து, தபூக் என்ற இந்த இடத்திற்கு 30 ஆயிரம் முஸ்லிம் படைவீரர்களைக் கொண்ட படையுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருகின்றார்கள். இந்தப் பகுதியில் குடிப்பதற்குக் கூட அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காததொரு சூழ்நிலை. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் சிறிது கசிந்து கொண்டிருந்தது. ஒளுச் செய்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக அதிலிருந்து சிறிது தண்ணீரைத் பிடித்துக் கொண்டு வரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை வேண்டிக் கொள்கின்றார்கள். கசிந்து வந்து கொண்டிருந்த அந்தத் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் தோழர்கள். அதிலிருந்து தனது கை, கால்கள், முகத்தையும் கழுவிக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதித் தண்ணீரை, எங்கே தண்ணீர் கசிந்து கொண்டிருந்ததோ அதன் மீதே திருப்பி ஊற்றி விட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். எங்கே தண்ணீரை ஊற்றினார்களோ, அங்கிருந்தே இடி போன்ற சப்தத்துடன் தண்ணீர்ச் சுனை ஒன்று பொங்கிக் கொண்டு வந்தது.

அந்தக் கோடையின் வெப்பத்தால் எங்கே தங்களது தோல்கள் வெடித்து விடுமோ என்று இறைத்தோழர்கள் நினைக்கும் அளவுக்கு அப்பொழுது வெயிலின் கொடுமை இருந்தது. இந்த நேரத்தில் அங்கே தண்ணீர் ஊற்றுப் பொங்கி வந்தது, அவர்களது வேதனைகளையும் தீர்த்தது, இன்னும் அது அருட்கொடையாகவும் அமைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வந்திருந்த அனைத்து முஸ்லிம் படைவீரர்களும் அந்தத் தண்ணீரைப் பருகினார்கள், குளித்தார்கள். இன்னும் தங்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்தும் வைத்துக் கொண்டார்கள், இன்னும் அதனை விட இழந்த சக்தியை அதன் மூலம் மீட்டுக் கொண்டார்கள். இந்த அருட்கொடைக்காக அனைவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள், புகழ்ந்தார்கள். இப்பொழுது, முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீண்ட நாட்கள் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்று சொன்னால், இந்த இடத்தில் பச்சைப் பசேலென்று தோட்டங்களைக் காண்பீர்கள் என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு, வார்த்தைக்கு வார்த்தை உண்மையானது. அற்புதமாக வெளிவந்த அந்த நீரூற்றிலிருந்து வெளிக்கிளம்பிய நீரானது அந்தப் பகுதியையே பச்சைப் பசேலென்ற தோட்டமாக, உயிர்த் துடிப்புள்ள பூமியாக மாற்றியது. இன்றளவும் அந்தப் பூமி பசுமையாகவே காணப்படுகின்றது. காண்போர் கண்களை குளிர்வித்து வருகின்றது. இன்னும் அன்று வெளிக்கிளம்பிய அந்த நீரூற்று இன்றளவும் தொடர்ந்து தனது அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டு வருவதோடு, அந்தப் பகுதியானது இன்றளவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தளமாகத் திகழ்ந்து வருகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பகுதியை மக்கள் காண்பதோடு, இஸ்லாத்தின் மகத்துவத்தையும் கண்டு வருகின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கை நோக்கி படை நோக்கிப் படை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, சிரியாவில் இருந்து வந்து கொண்டிருந்த வணிகக் கூட்டம் மூலம், ரோமச் சக்கரவர்த்தி முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக மிகப் பெரும் படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு மதீனாவிற்குள் நுழைவதற்காக தயார்படுத்தி வருகின்றார் என்ற செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். இன்னும் அவர்களோடு பல அரபுக் குலத்தவர்களும் கை கோர்க்கக் காத்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சேர்ந்து முஸ்லிம்களை இந்தப் பூமிப் பந்திலிருந்து துடைத்தெறிவதற்குக் கங்கணம் கட்டி, தங்களது படைகளைத் திரட்டி வருவதாகவும் அறிந்தார்கள். இன்னும் ரோமச் சக்கரவர்த்தியின் படைகள் ஏற்கனவே மதீனாவை நோக்கிப் புறப்பட்டு விட்டதாகவும், அந்தப் படை இப்பொழுது சிரியாவின் எல்லைப் பகுதியாகிய பல்கா என்ற இடத்தை அடைந்திருப்பதாகவும் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ரோமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போர் புரிவதற்கு தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் தத்தம் செய்தவற்கு தாயராகும்படி தனது தோழர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.

பயணம் மிக தூரமானதாக இருப்பதின் காரணமாக, மிக நீண்ட தொலைவுக்கு ஏற்றாற் போல உணவு மற்றும் படைத் தளவாடங்களைத் தயாரிக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதோடு, எதிரிகள் நமது எல்லைக்குள் நுழைவதற்குள், நாம் அவர்களை முந்திக் கொண்டு அவர்களை எதிர்நோக்க வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அதற்கேற்றாற் போல உடனடி நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

30 ஆயிரம் படை வீரர்களில் 10 ஆயிரம் குதிரைப்படை வீரர்களும் அடங்குவர். ரோமப் படை முஸ்லிம்களின் பிரதேசங்களுக்குள் நுழைவதற்குள் முஸ்லிம்களின் படை அணி, தபூக் போய்ச் சேர்ந்து விட்டது. முன்னணிப் படைக்கு காலித் பின் வலித் (ரழி) அவர்களும், வலது புற அணிக்கு தல்ஹா பின் அபய்துல்லா (ரழி) அவர்களும், இடது புற அணிக்கு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் தலைமை தாங்கி படைகளை நடத்திச் சென்றார்கள்.

20 நாட்கள் ரோமப் படைகளை தபூக்கில் எதிர்பார்த்து முஸ்லிம்களின் படை காத்துக் கொண்டிருந்தது. ஆனால் முஸ்லிம்களை எதிர்கொள்ளத் துணிவற்ற ரோமப் படை களத்திற்கு வரவே இல்லை. முஸ்லிம்களின் படைத்தயாரிப்புகளைப் பற்றி ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட ரோமப் பேரரசன் சீஸர், இது போர் செய்வதற்குத் தகுந்த தருணமல்ல என்று போரைக் கைவிட்டு விட்டான்.

போர் கைவிடப்பட்ட நிலையில், இறைத்தூதர் (ஸல்) தபூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது தோழர்களை அனுப்பி, அங்குள்ள குலத்தவர்களுக்கு இஸ்லாத்தின் போதனை எடுத்து வைத்தார்கள். இஸ்லாத்தின் அழைப்பில் கவரப்பட்ட பல குலங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டன. இன்னும் பல கிறிஸ்தவத் தலைவர்கள் இஸ்லாத்தின் உன்னதத்தை அறிந்து கொண்டு, முஸ்லிம்களிடம் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள்.

இன்னும் முஸ்லிம்களின் வீரம் மற்றும் துணிவு கண்டு சிரியாவின் மன்னர் மிகவும் பிரமித்துப் போனார். முஸ்லிம்களைப் பற்றிய தாக்கம் அவரிடம் அதிகமாகியது.

                                                             பகுதி - 6 / பகுதி - 08

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)