Jul 6, 2014

இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு - இஸ்லாமிய முறைமை பகுதி-2



அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வுடன் அவனது(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமின் நிலைக்கு இது நேர் மாறானது. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு ஒரு முஸ்லிம் இணங்கி நடப்பதன் நோக்கம் அவனுடைய(சுபு) உவப்பை பெறுவதற்கே தவிர அமைப்பின் உலக பயன்களை பெற்றுக் கொள்வதற்காக அல்ல. ஆகவே இயற்பொருட்களில் ஆன்மீக விஷயங்கள் இடம்பெற்றிருப்பதும் செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது மனிதனிடம் ஆன்மா இடம் பெற்றிருப்பதும் அவசியமாகும். அனைவருக்கும் தெளிவாக விளங்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆன்மீக விஷயம் (Spiritual Aspects) என்பதன் அர்த்தம் அனைத்துப் பொருட்களும் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அதாவது, படைப்பினங்கள் படைப்பாளனுடன் உள்ள உறவை உணர்வது என்பதுதான் ஆன்மா எனப்படும். ஆகவே ஆன்மா என்பது படைப்பாளனுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வது, அதாவது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வது. இதுதான் ஆன்மா (ரூஹ்), ஆன்மீகம் (ரூஹான்யா), ஆன்மீக விஷயங்கள் (நாஹியத் ரூஹ்யா) ஆகியவற்றைப் பற்றிய மிகச்சரியான சிந்தனையாகும். மற்ற சிந்தனைகள் தவறானவை. மனிதன் வாழ்வு பிரபஞ்சம் ஆகியவற்றைப் பொருத்த தீர்க்கமான மற்றும் பிரகாசமான (Spiritual Aspects) கண்ணோட்டம் இதுதான். இந்த சரியான கண்ணோட்டம் சரியான விளைவுகளை நோக்கியும் சரியான சிந்தனையின் பாலும் இட்டுச் சென்றுள்ளது.

சில மதங்கள் (Religion) பிரபஞ்சத்தில் புலன் உணர்வுக்கு உட்பட்டது (Mahsoos) புலன் உணர்வுக்கு மறைவானது (Mughayyah) ஆகிய இரண்டு அம்சங்கள் இருப்பதாக வாதிடுகின்றன. ஆன்மீக உயர்வு மற்றும் உடல்சார்ந்த விளைவு ஆகிய இரண்டையும் கொண்டவனாக மனிதன் இருக்கிறான் என்றும், மனித வாழ்வு இயற்பொருள் அம்சத்தையும் (Meterialistic) ஆன்மீக அம்சத்தையும் உடையதாக இருக்கிறது என்றும் கூறுகின்றன. புலன் உணர்வுக்கு உட்பட்டவைகள் புலன் உணர்வுக்கு மறைவானவைகளோடு முரண்படக்கூடியவை என்றும், ஆன்மீக உயர்தன்மை உடல்சார்ந்த விளைவுகளோடு இருக்க முடியாது என்றும், இயற்பொருட்கள் ஆன்மாவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த மதங்கள் கூறுகின்றன. அவை இரண்டின் தன்மையின் காரணமாக ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணிக் கொள்வதில் இம்மதங்கள் திருப்தியடைகின்றன. ஆகவே அவை இரண்டும் ஒன்று கலக்க முடியாதது என்றும், ஒன்றின் மிகுதி மற்றொன்டின் குறைவுக்கு வழிகோலும் என்றும் கூறுகின்றன. இதன் முடிவாக மறுமையை விழைபவர்கள் ஆன்மீக பரிமாணத்தை பெற்றிருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த கருத்தின் அடிப்படையில் கிருஸ்தவத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் உருவாகின. “சீஸருக்கு கொடுக்க வேண்டியதை சீஸருக்கு கொடு, தேவனுக்கு கொடுக்க வேண்டியதை தேவனுக்கு கொடு” என்பதாக கிருஸ்தவம் கூறுகிறது. இதன்படி ஆன்மீக அதிகார அமைப்பை கையில் வைத்துக் கொண்டிருந்த கிருஸ்தவ பாதிரிகளும், மதகுருமார்களும் ஆன்மீக விஷயங்களுக்கு முன்னுரிமை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வாழ்வியல் அதிகார அமைப்பை கையில் எடுத்துக் கொள்ள கடும் முயற்சி மேற்கொண்டார்கள். இதன் விளைவாக இவ்விரு சாரர்களுக்கும் இடையில் கடும் போராட்டம் உருவாகியது. இதன் உச்சகட்ட நிகழ்வாக கிருஸ்தவச் திருச்சபை ஆன்மீக அதிகாரத்தோடு மட்டும் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் தலையீடு செய்வதை விட்டும் தடுக்கப்பட்டது. மதம் புரோகிதத்தைச் சார்ந்தது என்றபடியால் அது வாழ்வியலிலிருந்து பிரிக்கப்பட்டது.

வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரித்து வைக்கும் இந்த கொள்கைதான் முதலாளித்துவ சித்தாந்தத்தின் அடிப்படை கோட்பாடாக இருக்கிறது. மேற்கத்திய நாகரீகத்திற்கும், அறிவார்ந்த தலைமைக்கும் இதுதான் அடித்தளமாக விளங்குகிறது. மேற்கத்திய காலனி ஆதிக்கவாதிகள் அழைப்பு விடுப்பதும் உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்வதும் இந்த கொள்கையைத்தான். அதன் கலாச்சாரத்தின் பிரதான தூணாக இந்த சிந்தனை விளங்குகிறது. இந்த கோட்பாட்டின் அடித்தளத்தில் நின்று கொண்டுதான் மேற்கத்தியர்கள் முஸ்லிம்கள் இஸ்லாத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். கிருஸ்தவத்துடன் ஒப்புநோக்கி இஸ்லாத்தை அவர்கள் கணக்கிடுகிறார்கள். இவை இரண்டையும் மதங்கள் என்று எண்ணுகிறார்கள். எனவே வாழ்வியலிலிருந்து மார்க்கத்தை பிரிக்க வேண்டும் என்ற இந்த கருத்தை எவர் கொண்டிருக்கின்றாரோ அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்கத்திய அறிவார்ந்த தலைமையினால் இயக்கப்படும் முகவர் (Agent) ஆவார். அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ மேற்கத்திய காலணி ஆதிக்கத்தின் முகவராகவே அவர் பணியாற்றுகின்றார்.

நமது புலனறிவு விளங்கிக் கொண்ட பொருட்களை இயற்பொருள் (Matter) என்றும், அவைகள் ஒரு படைப்பாளனால் படைக்கப்பட்டுள்ளன என்ற உண்மை அவைகளிடமுள்ள ஆன்மீக அம்சத்தை தீர்மானிக்கிறது என்றும் இஸ்லாம் கருதுகிறது. ஆன்மா என்பது அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை மனிதன் விளங்கிக் கொள்வதாகும். ஆகவே இயற்பொருளிலிருந்து அதன் ஆன்மீக அம்சம் எப்போதும் பிரியாதிருக்கின்றது. எனவே ஆன்மீக உயர்தன்மை என்ற ஒன்றோ அல்லது உடல்சார்ந்த விருப்பம் என்ற ஒன்றோ இங்கே இருப்பதில்லை. மாறாக, மனிதனுக்கு உடல்சார்ந்த தேவையும், உள்ளார்ந்த உணர்வுகளும் இருக்கின்றன. அவைகளை அவன் நிறைவு செய்ய வேண்டும். மனிதனிடம் இடம் பெற்றுள்ள உள்ளார்ந்த உணர்வுகளில், அடிபணியும் உள் உணர்வு (Reverence Instinct) ஒன்றாகும். இதன் அர்த்தம் அவனுக்கு ஒழுங்குபடுத்தும் (Organiser) ஒரு படைப்பாளன் தேவை என்பதாகும். இந்த உணர்வு அவனிடம் இயல்பாக இடம்பெற்றுள்ள உள்ளார்ந்த பலவீனத்தின் விளைவாகும். உள்ளார்ந்த உணர்வுகளை நிறைவு செய்து கொள்வதை இயற்பொருள் அம்சமாகவோ (Meterial Aspect) அல்லது ஆன்மீக அம்சமாகவோ (Spiritual Aspect) அழைக்க முடியாது. மாறாக, அதை நிறைவேற்றுதல் என்றே கருத வேண்டும். அல்லாஹ்(சுபு) அருளியுள்ள செயலாக்க அமைப்புக்கும் அவனோடு(சுபு) உள்ள உறவுக்கும் இணக்கமான முறையில் உடல் சார்ந்த தேவைகளையும் உள்ளார்ந்த உணர்வுகளையும் மனிதன் நிறைவு செய்து கொண்டால், இந்த நிறைவு செய்தல் ரூஹ்ஹினால் இயக்கப்படுகிறது என்று பொருள். அதே சமயத்தில் இந்த நிறைவு செய்தல் ஒரு செயலாக்க அமைப்பு இன்றியோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத ஒரு செயலாக்க அமைப்பின் அடிப்படையிலோ நிறைவு செய்யப்பட்டால் அது இயற்பொருள் (Meteialistic) அடிப்படையில் நிறைவு செய்யப்படதாக இருக்கும். அது மனிதனின் துன்பத்திற்கு வழி வகுத்துவிடும். இனவிருத்தி உள்ளார்ந்த உணர்வு (procreation instinct) ஒரு செயலாக்க அமைப்பின்றியோ அல்லது அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத ஒரு செயலாக்க அமைப்பின்படியோ நிறைவு செய்யப்பட்டால் அது மனிதனை துன்பத்திற்கு உள்ளாக்கிவிடும். இதற்கு மாறாக அல்லாஹ்(சுபு) அருளிய திருமணம் என்னும் செயலாக்க அமைப்பின்படி அதாவது இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவின்படி நிறைவு செய்யப்பட்டால் அது மன அமைதியை விளைவிக்கின்ற திருமணமாக இருக்கும். அடிபணியும் உள்ளார்ந்த உணர்வு ஒரு செயலாக்க அமைப்பு இன்றியோ அல்லது மனிதர்களையும் சிலைகளையும் வணங்கி வழிபடுவது போன்ற அல்லாஹ்(சுபு)விடமிருந்து அருளப்படாத செயலாக்க அமைப்பின்படியோ நிறைவு செய்யப்பட்டால் அது இணைவைத்தல் (ஷிர்க்) அல்லது நிராகரித்தலாகவே (குஃப்ர்) இருக்கும். இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவின்படி அது நிறைவு செய்யப்பட்டால் அது இபாதத் ஆகும். ஆகவே மனிதனுக்கு அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில் ஒவ்வொரு பொருட்களிலும் ஆன்மீக அம்சத்தை அவசியம் உணர வேண்டும். மேலும் அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக மேற்கொள்ள வேண்டும். வேறு வகையில் கூறினால் செயல்கள் யாவும் ஆன்மாவினால் இயக்கப்பட வேண்டும். ஆகவே செயல்பாடுகளில் இரண்டு பகுதி என்பது கிடையாது. உண்மையில் அது ஒன்றே ஒன்றுதான். அதுதான் செயல் (Action). ஒரு செயலை இயற்பொருள் அம்சத்தை மட்டும் உடையது என்றோ அல்லது ஆன்மாவினால் இயக்கப்பட்டது என்றோ விளக்குவது அந்த செயல்பாட்டைக் கொண்டு அல்ல, மாறாக இஸ்லாத்தின் விதிமுறைகளுக்கு (அஹ்காம் ஷரிஆ) ஏற்றபடி அது இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பொறுத்ததுதான். உதாரணமாக ஒரு முஸ்லிம் எதிரியை போர்க்களத்தில் கொல்லும்போது அது ஜிஹாத் என்று கருதப்படுகிறது. அந்தச் செயலுக்கு நற்கூலி உண்டு. ஏனெனில் அந்த செயல் இஸ்லாத்தின் அஹ்காம் ஷரிஆவினால் இயக்கப்பட்டது. அதே மனிதர் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றால் அவரது செயல் ஒரு கொலையாக கருதப்படும். அதற்காக அவர் தண்டிக்கப்படுவார். ஏனெனில் அது அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு எதிரானது. இரண்டு செயல்களும் கொல்லுதல் என்ற ஒன்றுதான். மேலும் அவை மனிதனிடமிருந்தே வெளிப்படுகின்றன. எனினும் ஆன்மாவினால் இயக்கப்படும்போது கொல்லுதல் வணக்கமாகிவிடுகிறது (Worship - Ibadah). அவ்வாறு நடைபெறாத போது அது கொலையாகி விடுகிறது. ஆகவே ஒரு முஸ்லிம் தன்னுடைய செயல்களை ஆன்மாவின்படி இயக்குவதற்கு கட்டளையிடப்பட்டுள்ளான். இயற்பொருளையும் ஆன்மாவையும் ஒன்று கலப்பது சாத்தியமானது மட்டும் அல்ல, மாறாக கடமையானதும்கூட. ஆன்மாவிலிருந்து இயற்பொருளை பிரிப்பதற்கு அனுமதியில்லை. வேறு வகையில் கூறுவதென்றால் மனிதனுக்கு அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள உறவை விளங்கிக் கொண்ட உணர்வின் அடிப்படையில்; அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகளின்படி செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் நிலையிலிருந்து எந்த செயலையும் பிரிப்பதற்கு அனுமதியில்லை. இதனடிப்படையில் இயற்பொருள் அம்சத்திலிருந்து ஆன்மீக அம்சத்தை பிரிப்பதை மறைமுகமாக குறிப்பிடும் அனைத்தையும் நீக்க வேண்டும். ஆகவே இஸ்லாத்தில் மதகுரு அல்லது மதப் புரோகிதர் என்பவர் கிடையாது. எந்தவிதமான புரோகித பணி செய்யும் ஆன்மீக அதிகார அமைப்பும் கிடையாது, மார்க்கத்திலிருந்து பிரிக்கப்பட்ட வாழ்வியல் விவகார அதிகார அமைப்பும் கிடையாது. மாறாக இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம். அதன் பிரிக்க முடியாத பகுதி இஸ்லாமிய அரசு ஆகும். தொழுகையைப் போன்ற அரசு என்பதும் அஹ்காம் ஷரிஆவின் ஒரு தொகுப்பு ஆகும். இஸ்லாத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும், இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு வழிமுறையாக அது இருக்கிறது. ஆகவே மார்க்கத்தை ஆன்மீக அச்சத்தோடு சுருக்கி, அதை அரசியலை விட்டும், ஆட்சியை விட்டும் பிரிக்கும் எந்த ஒன்றையும் கட்டாயம் அழித்துவிட வேண்டும். ஆகவே ஆன்மீக விவகாரங்களை மட்டும் பிரத்தியேகமாக கவனித்துக் கொள்ளும் அனைத்து அமைப்புகளையும் உடனே ஒழித்துவிட வேண்டும். இந்த வகையில் பள்ளிவாசல் திணைக்களங்கள் ஒழிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஷரிஆ நீதிமன்றங்களும் உரிமையியல் நீதிமன்றங்களும் ஒழிக்கப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையில் நீதித்துறை ஒன்றாக மாற வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தின் அதிகார அமைப்பு ஒன்றுதான். இஸ்லாம் என்பது அகீதாவும் அதன் செயலாக்க அமைப்பும் (System-Nidam) கொண்டது. அகீதா என்பது அல்லாஹ்(சுபு) மீதும், மலக்குகள் மீதும் வேதங்கள் மீதும், தூதர்கள் மீதும், நியாயத்தீர்ப்பு நாள் மீதும் நன்மை தீமை அல்லாஹ்(சுபு)விடமிருந்து வருகின்றன எனக்கூறும் அல்களாவல்கத்ர் மீதும் நம்பிக்கை கொள்வதாகும். பகுத்தறிவைக் கொண்டு அறிந்து கொள்ளும் விதத்தில் இஸ்லாம் அகீதாவை அறிவின் மீது கட்டமைத்து இருக்கிறது. இதில் அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence of God) முஹம்மது(ஸல்) அவர்களின் தூதுத்துவம் மற்றும் இறைமறை குர்ஆன் ஆகியவை அடங்குகின்றன. நியாயத்தீர்ப்பு நாள், மலக்குகள், சுவனம், நரகம் ஆகிய புலன் அறிவுக்கு அப்பாலுள்ள அகீதாவின் விஷயங்கள் சங்கைமிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸ் முத்தவாத்திர் ஆகிய திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட ஆதார மூலங்களின் அடிப்படையில் நம்பப்படுகின்றன. இவை இரண்டும் அறிவார்ந்த ஆதாரத்தின் மீது நிறுவப்பட்டவைகள். இஸ்லாம், அறிவை (சட்ட ரீதியான) பொறுப்புக்கு அடிப்படையாக ஆக்கியிருக்கிறது.

இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு (System - Nidam) அஹ்காம் ஷரிஆவாகும். அது மனிதர்களின் விவகாரங்களை ஒழுங்குபடுத்துகிறது. இஸ்லாமிய செயலாக்க அமைப்பு பொதுவான முறையிலும் பொதுவான அர்த்தங்களிலும் மனிதனின் அனைத்து விவகாரங்களையும் கையாண்டுள்ளது. இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தும்போது, இந்த பொது அர்த்தங்களிலிருந்து அதன் விரிவான சட்டங்களை ஒருவர் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே குர்ஆனும் சுன்னாவும் பொதுவான அர்த்தங்களைக் கொண்டது. மனிதன் என்ற அந்தஸ்த்தில் அது அவனது பிரச்சினைகளை கையாள்கிறது. இந்த பொது அர்த்தங்களிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் உருவாகும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை முஜ்தஹிதீன்கள் கொண்டு வருவார்கள்.

மனிதர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் இஸ்லாம் வேறுபாடு இல்லாத ஒரே அணுகுமுறையைக் கொண்டதாக இருக்கிறது. விளங்கிக் கொள்ளும்வரை பிரச்சினையை முழுமையாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து, சரியாக அதை விளங்கிக் கொண்டு பிறகு அதனோடு தொடர்புடைய ஷரிஆ ஆதாரங்களை ஆய்வு செய்து இறுதியில் அந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை கொண்டு வருவதற்காக முஜ்தஹீதுகளை இஸ்லாம் வரவேற்கிறது. இவ்வாறுதான் ஒரு முஜ்தஹீத் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதற்காக ஷரிஆ ஆதாரங்களிலிருந்து குக்கும் ஷரிஆவை முடிவு செய்கிறார். வேறு எந்த வழிமுறைகளும், இஸ்லாத்திற்கு பயன்படாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் மனிதன் எதிர்கொள்கின்ற எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை மனித வர்க்கத்தின் பிரச்சினையாகவே ஆய்வு செய்ய வேண்டும். பொருளாதாரம், சமூகம், அரசியல் அல்லது வேறு எந்த வகை பிரச்சினையாக இருந்தாலும் அதை தனிப்பட்ட துறைக்கு சார்புடையதாக ஆய்வு செய்யக்கூடாது. மாறாக, பிரச்சினைக்கு தொடர்புடைய அல்லாஹ்(சுபு)வின் குக்குமை அறிந்து கொள்ளும் பொருட்டு குக்கும் ஷரிஆ தேவைப்படும் மனித இனத்தின் ஒரு பிரச்சினையாகவே அதை ஆய்வு செய்ய வேண்டும்.

முற்றும்.

No comments:

Post a Comment