Mar 2, 2011

பொருளாதார மேற்பார்வை- பகுதி 2

பொருளாதார நிறுவனங்கள் வட்டி மற்றும் பணத்தை பதுக்கிவைத்தல்

வட்டியும் வட்டி சார்ந்த தொழில்களும் மேற்கத்திய பொருளாதாரத்தின் ஆதாரமாகும். தேவைக்கதிகமான பணத்தினை பதுக்கி அல்லது சேமித்து வைப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில் வட்டி அளிப்பதனால், அது பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் எனக் கருதுகின்றனர். ஆனால் இஸ்லாத்தில் அது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

“அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்” (2:275)
“இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!”(9:34)

எனவே செல்வம் படைத்தோர் அதனை தேக்கி வைக்காமல் வேறு ஏதேனும் தொழிலில் முதலீடு செய்தே ஆகவேண்டும். அல்லது பிறருக்கு அதன் ஒரு பகுதியை தர்மமாக வழங்கியே ஆகவேண்டும்.

அத்தகைய முதலீடுகளை செய்யும்போது தனி நபர் மட்டுமோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட்டாகச் சேர்ந்தோ தொழில் தொடங்கலாம். தனிநபர் மட்டும் முதலீடு செய்கையில் அதன் லாபநஷ்டம் அவரை மட்டுமே சாரும். ஒன்றுக்கு மேற்பட்டோர் கூட்டாகச் சேர்ந்து தொழில் தொடங்குகையில், அழைப்பினை முன்வைத்தல், அதனை ஏற்றுக் கொள்ளுதல் என இருவரும் சம்மதிப்பது, ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக கொள்ளப்படுகிறது. அவ்வொப்பந்தத்தின் மூலம் இருவரும் முதலாளியாகிவிடுவதால் லாபநஷ்டமானது இருவரையும் சாரும்.

உதாரணமாக இருவரும் செல்வத்தை முதலீடு செய்தால் அதன் லாபநஷ்;டம் தத்தம் முதலீட்டு விகிதத்தில் அமையும். ஒருவர் மூலதனத்தையும் மற்றவர் உழைப்பையும் முதலீடு செய்யும் கூட்டுத்தொழிலில் நஷ்டம் அனைத்தும் பணத்தை முதலீடு செய்பவரைச் சாரும். அதேசமயம் உழைப்பை முதலீட்டாகச் செய்தவர் ஊதியத்தை இழக்க நேரிடும். இருவரும் உழைப்பையே மூலதனமாக்கி கூட்டுத் தொழில் செய்தால் அவரவர் உழைப்பிற்குத் தகுந்தவாறு லாபநஷ்டம் பிரிக்கப்படவேண்டும்.

இத்தகைய அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு பல்வேறு விதமான தொழில் ஒப்பந்தம் செய்ய இயலும். ஆனால் லாபமானது இருவரும் ஒப்புக்கொண்டபடியே பிரிக்கப்படவேண்டும். இஸ்லாத்தின் இத்தகைய பொருளாதார அமைப்பில், தொடர்ந்த முதலீடுகளால் வேலைவாய்ப்புகள் பெருகும். அனைவருக்கும் வசதி ஏற்படும்.

அரசின் பங்கு

இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் அரசின் பங்கு மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவருக்கும் உணவு உடை உறைவிடம் கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவை கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும். அடிப்படைத் தேவைகள் போக வசதியான வாழ்கையினை அடையும் வழிமுறைகளை வகுப்பதும் அரசின் கடமையேயாகும். பொதுச் சொத்துக்களை திரம்பட நிர்வகிப்பதன் மூலமும் ஏனைய வழிகளிலும் வருவாய் ஈட்டுவதன் மூலமும், இத்தகைய அடிப்படைத் தேவைகளையும் பிற தேவைகளையும் அரசு நிறைவேற்றுகிறது.

இஸ்லாமிய அரசின் வருவாய்

இஸ்லாமிய அரசு பல்வேறு வழிகளில் பொருளீட்டி அதை மக்களிடையே பகிர்ந்து அளிக்கிறது.


ஃபயீ : போரோ படையெடுப்போ இன்றி எதிரிகளிடமிருந்து கைப்பற்றியது.
கனாயிம்: படையெடுப்பினால் கிடைக்கப்பெற்றவை.


கராஜ்(நிலவரி): இது இறைமறுப்பாளர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களின் மீது விதிக்கப்படும் வரி.


ஜிஸ்யா: முஸ்லிம் அல்லாதவர்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் மீது விதிக்கப்படும் வரி.

இவை தவிர இயற்கை வளங்களினால் பெறப்பட்ட செல்வம், அபராதத் தொகை, ஏனைய வரிவிதிப்புகள் என பல்வேறு வழிகளில் இஸ்லாமிய அரசு வருவாய் ஈட்டுகிறது.

அதிகப்படியான வசதிகளுக்கு வழிகோலுதல்

மக்களின் அடிப்படைத் தேவைகள் போக ஏனைய வசதிகளை அனுபவிக்கவும், அத்தகைய வசதிகள் கிடைக்கப்பெறச் செய்யவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வது இஸ்லாமிய அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்து, அவற்றினை வாங்கும் சக்தியை மக்களிடையே அதிகரிகச்செய்வது எந்த ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றாகும். எனவே அத்தகைய அதிகப்படியான வசதிகளுக்கான சேவைகளையும், பொருட்களையும் பெருக்குவதும் அரசின் கடமையாகிறது. இத்தகைய குறிக்கோள்களை எந்த அளவு சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்பது அந்த அரசின் பொருளாதார சட்டதிட்டங்களைப் பொறுத்தே அமையும். அந்த சட்டதிட்டங்களே நாட்டின் பொருளாதார அமைப்பாகும். அந்த பொருளாதார அமைப்பு எந்த மார்க்கத்தை சார்ந்துள்ளது என்பது மட்டுமல்லாமல் வேறுசில காரணிகளும் பொருளாதார அமைப்பின் வெற்றிக்கு அடிப்படையாய் அமைகின்றன. அவையானவன.

1. அரசு மற்றும் அதன் பொருளாதார அமைப்பின் ஸ்திரத் தன்மை மற்றும் அதன் மீதுள்ள நம்பிக்கை.

2. மக்களின் இயல்பான வாழ்க்கை அமைப்புமுறைக்கு ஒத்துப்போகும் தன்மை. அதாவது உழைப்பிற்கேற்ற ஊதியம் எனும் அடிப்படையில் நடைமுறைப்படுத்தல்

3. சரியான வகையில் மக்களிடையே பகிர்ந்தளித்தல்.

இன்றைய காலகட்டத்தில் கேபிடலிசம் எனும் மூலதனக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த பொருளாதார அமைப்பையே நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் பொழுது அது அனைத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றி சமுதாயத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த பொருளாதார அமைப்பாக அமையும்.


ஸ்திரத் தன்மை

எந்த ஒரு பொருளாதார நடவடிக்கையும் லாபநஷ்ட அடிப்படையிலேயே நடைபெறுகிறது. அதாவது பொருளை முதலீடு செய்வோர் தமது முதலீட்டை, அதாவது செல்வத்தையோ, பொருளையோ இழக்க நேரலாம் என்று தெரிந்தே முதலீடு செய்கிறார். ஆனால் செயற்கையாகவே இத்தகைய பாதுகாப்பற்ற ஸ்திரமற்ற ஒரு பொருளாதார நிலை உள்ளதாக ஒரு பொய்த்தோற்றத்தை ஏற்படுத்துவது அந்நாட்டின் பொருளாதார நடவடிக்கையை வெகுவாக பாதிப்படையச் செய்யும். அத்தகைய சில நிகழ்வுகளாவன.

1. ஏற்ற இறக்கம்

பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்ற இறக்கம் கேபிடலிசத்தின் முக்கிய நிகழ்வாகும். அதாவது சிலகாலம் சிலவகை வணிகம் சிறப்பாக இருக்கும், ஆனால் சில காலத்தில் அது வீழ்ந்து வெகுவாக பாதிக்கப்பட்டதாக ஆகும். இதற்கான காரணங்களை பல்வேறு பொருளாதார வல்லுனர்களும் பல்வேறு விதமாகக் கூறினாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் அந்த பொருளாதார அமைப்பே என விளங்கப்படுகிறது.

2. பணவீக்கம்

பணத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருப்பது கேபிடலிச பொருளாதார அமைப்பின் முக்கிய அம்சமாக அமைகிறது.

3. பணச்சந்தை வீழ்ச்சி

திடீர் திடீர் என மாறும் வெளிநாட்டு பணமாற்ற விகிதமும், பங்குச்சந்தை வீழ்ச்சியும், பணச்சந்தை வீழ்ச்சியின் அறிகுறியாகும். இதற்கும் அந்த பொருளாதார அமைப்பே அடிப்படையாகும். எனவே இவை அனைத்தும் கேபிடலிச பொருளாhர அமைப்பின் கேடுகளாகும். அவற்றிற்கு காரணமாக கருதப்படுபவை

செயற்கைப் பணம்: அதாவது பணத்தை தமது தேவைக்கேற்ப அச்சடித்துக்கொள்ளுதல். அரசாங்கத்தின் இத்தகைய செயலை தடுக்க எவ்வித வழியுமில்லை. எனவே இத்தகைய காகிதப்பணம் உண்மையில் எந்தவித மதிப்பையும் கொடுக்காது. இதுவே பணவீக்கத்திற்கு முக்கியக் காரணமாகிறது.
மேலும் வங்கிகளில், இல்லாத பணத்தை, தத்தம் கணக்குகளில் இருப்பதாகக் காட்டி, அதன் மூலம் கடன் வழங்குவதும் ஒரு பொய்ப்பணப் பிரயோகமாகும். இதுவும் செயற்கைப்பணத்தின் உருவாக்கத்தின் காரணியாகும்.
இவற்றையெல்லாம் உற்று நோக்கும் பொழுது இஸ்லாமிய பொருளாதார அமைப்பிற்கும் கேபிடலிச பொருளாதார அமைப்பிற்குமுள்ள அடிப்படை வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியும். அந்த கேபிடலிச பொருளாதார அமைப்பு மக்களின் அடிப்படைத்தேவையை பூர்த்தி செய்யாமல் மக்களின் வெறுப்பை சம்பாதித்து தோல்வியை எதிர்நோக்கியுள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மேற்கத்திய கைப்பாவை அரசுகள் மூலம் கேபிடலிச பொருளாதார நடைமுறைகள் இஸ்லாமிய நிலங்களில் கட்டாயமாக திணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் மீதுள்ள வெறுப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே இஸ்லாமிய பொருளாதார அமைப்பினைப் பற்றிய அறிவு மக்களிடையே பெருகி அதுவே, உண்மையான, பிரச்சனைகளைத் தீருக்கும் வழி என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

(மு ற் று ம்)

No comments:

Post a Comment