Oct 8, 2013

பிறந்த நாட்கொண்டாட்டமும் முஸ்லிம்களும்!


உண்மையில் மேற்கினது கலாச்சாரமாகவும் அவர்களது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகவும் பிறந்த நாள் கொண்டாட்டம் உள்ளது. இது முஸ்லிம்களது கலாச்சாரமல்ல!

மேற்கினது காலநிலை மற்றும் சூழல் மனித வாழ்க்கைக்கு உகந்த ஒரு சூழல் இல்லை என்பதாலும் அது அவர்களது ஒரு வருட வாழ்வை கழிப்பதில் பாரிய சவால்களை கொண்டிருப்பதாலும் அச்சவால் நிறைந்த ஒரு வருட வாழ்வை கழித்து வாழ்வை வென்ற ஒரு ஆண்டு கொண்டாட்டமாகவே அதனை கொண்டாடும் கலாச்சாரத்தை மேற்கினது மக்கள் கொண்டுள்ளார்கள். 

அந்த வகையில் அது யூத நசாராக்களது வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒரு கலாச்சாரமாக வாழ்க்கை முறையாக மாறியுள்ளதால் அந்த முன்மாதிரியை பின்பற்றுவதில் எமக்கு தடையுள்ளது.

அதேவேளை ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் பிறந்த நாள் என்பது அவன் மௌத்தை நோக்கி ஒருவருடம் முன்நோக்கி நகர்ந்துவிட் உணர்வை பெற்ற நாளாகவும் அவன் தனது ஒருவருட வாழ்வினை மீட்டிப்பார்த்து முஸாஹபா செய்து அல்லாஹ்வுடைய நெருக்கத்தை எவ்வாறு பெறமுடியும் என்று சிந்தனை செய்யும் ஒரு நாளாகவே பார்க்கவேண்டும். இதுவே எமது வழிமுறையாகும்.

அதை விட்டுவிட்டு யூத நசாராக்களது வழிமுறையினைப் பின்பற்றி அந்நாளை வீண்விரயம் செய்வதனை நாம் தவிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்!

உண்மையில், யூத நசாராக்களுக்கு மாறு செய்யும் படியும் அவர்களது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை விட்டும் தவிர்ந்து வாழும் படியும் நாம் ஏவப்பட்டுள்ளதுடன் எமது நாளாந்த தொழுகையில் குறைந்தது 17 தடவை யூத நசாராக்களது வழியில் இருந்து விலகி முத்தகீன்களது வழியில் நடத்துமாறு வல்ல இறைவனிடம் பிரார்திக்கும் நாம் எவ்வாறு இந்த ஜாஹிலிய்யத்திற்கு பின்னால் செல்ல முடியும்.

இன்று முதலாளித்துவ நலன்களுக்காக ஊக்குவிக்கப்படும் பண்டிகைகளில் ஒரு பெரிய பண்டிகையாக விழாவாக பிறந்த தின கொண்டாட்டங்கள் அமைவதனையும் அதற்காக பெருந்தொகைப் பணம் வீண்விரயம் செய்யப்படுவதனையும் பல்வேறு அநாச்சாரங்கள் ஊக்குவிக்கப்படும் ஒரு தினமாக அது மாறியுள்ளதனை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எமது முன்னோர்களது வாழ்வில் பாடம் பெற்று அல்லஹ்வின் நெருக்கத்தையும் அன்பையும் பெறும் வகையில் எமது வாழ்வை ஒழுங்குபடுத்தி ஈருலகிலும் ஈடேற்றம் பெற்ற முஸ்லிமாக வாழ வல்ல நாயன் அனைத்து முஸ்லிம் உள்ளங்களுக்கும் சிந்தனைத் தெளிவை வழங்க வேண்டும் என பிரார்த்திப்போம். இந்த சிந்தனையை எமது சக நன்பர்கள் மத்தியில் பகிர்வோம்!


Mohideen Ahamed Lebbe

No comments:

Post a Comment