Sep 3, 2015

அல் முஃதா போர்

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 04
 
அல் முஃதா போர்

இன்றைய சிரியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி அல் முஃதா. இந்த இடத்தில் நடந்த போர் தான் இஸ்லாமிய வரலாற்றில் முஃதா போர் என்றழைக்கப்படுகின்றது. இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன்முதலாக இந்த முஃதா போரில் சாதாரண படை வீரராகக் கலந்து கொண்டார்கள். இந்தப் போரில் கலந்து கொண்ட தளபதிகள் மூவர் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைந்து விட, நான்காவதாக தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் வந்தடைந்தது. அப்பொழுது, முஸ்லிம்களின் படையில் வெறும் 3000 படைவீரர்கள் தான் இருந்தனர், இன்னும் அவர்கள்  மிக நீண்ட காலம் போர் செய்து சற்று களைப்படைந்தும் இருந்தனர். ஆனால் எதிரிகளின் பக்கமோ 2 லட்சம் படைவீரர்களும், இன்னும் அவர்கள் முழு ஆயுத பலத்தோடும் போருக்கு வந்திருந்தனர். அவர்களின் கண்களில் போர் கனல் தெறித்துக் கொண்டிருந்தது. பின்வரும் சம்பவத்திற்குப் பின் போர் மும்மூரமாக ஆரம்பித்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நம்பிக்கையைப் பெற்றதொரு தோழர், ஹாரிஸ் பின் அம்ர் அஸ்தி (ரழி). இந்தத் தோழர் மூலமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடிதத்தை, பஸ்ராவின் மன்னர் ஹாரிஸ் பின் அமி ஷம்மார் கஸ்ஸானி என்பவருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் செல்லும் வழியில் முஃதா என்ற இடத்தில் அமைந்துள்ள சிறு நகரமான பல்கா என்ற இடத்தை இந்தத் தோழர் அடைந்தவுடன், அந்தப் பகுதியின் கவர்னராக இருந்த சர்ஜீல் பின் அம்ர் கஸ்ஸானி என்பவர், இவரின் வருகையை அறிந்து, அந்த நபித்தோழரை கைது செய்து, கொலையும் செய்து விட்;டார். இந்தத் துயரச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தவுடன், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதே காலகட்டத்தின் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது, ஒரு பதினைந்து நபர் கொண்ட முஸ்லிம்களின் குழு ஒன்று, சாத் அல் அத்லா என்ற பகுதியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, இந்தப் பதினைந்து பேர் கொண்ட குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதே கால கட்டத்தில் ரோமப் பேரரசன் மதீனாவைத் தாக்கப் போவதாகவும் அறிவித்திருந்தான்.

எனவே, மேற்கூறிய சம்பவங்கள் தான் இந்த முஃதா போர் நடைபெறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் தயார் செய்து, அந்தப் படைக்கு முதல் தளபதியாக ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், அவர் இறந்து விட்டால் பின் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களையும், இன்னும் அவரும் வீரமரணம் எய்து விட்டால், அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்களையும் தளபதிகளாக முறையே நியமித்துக் கொள்ளும்படி, முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கி முஃதா போருக்கு முஸ்லிம் வீரர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

இந்த மூன்று தளபதிகளும் மரணமடைந்து விட்டால், பின் படைவீரர்கள் தங்களுக்குள் கலந்தாலோசனை செய்து கொண்டு, தங்களுக்குள் ஒரு தளபதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுரையும் வழங்கி அனுப்பி வைத்தார்கள்.

ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, வெள்ளைக் கொடியைத் தனது கையில் ஏந்திய வண்ணம் போர் முகத்துக்கு தனது படையை அழைத்துச் சென்று, எந்த இடத்தில் ஹாரித் பின் அம்ர் அஸ்தி (ரழி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த இடத்திலேயே தனது படையை இறக்கி, கூடாரம் அடித்து நிலைப்படுத்தினார்கள். இன்னும் நிலைகுலையாத தன்மையையும், எதிரிகளை எதிர்க்கும் போது தங்களது பாதங்கள் உறுதியாக இருப்பதற்கும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

இன்னும் வயதானவர்களையும், இன்னும் குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். இன்னும் இந்த உலக வாழ்வை ஒதுக்கி விட்டு, இறைதியானத்தில் ஈடுபடக் கூடிய துறவிகள் மற்றும் சந்நியாசிகள் ஆகியோரையும் கொலை செய்வதைத் தடுத்தார்கள். இன்னும் நீங்கள் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையை மீறாதீர்கள், நீங்கள் ஏற்றுக் கொண்ட அமானிதங்களையும் முறித்து விடாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். எந்தக் கட்டடம் தரை மட்டமாக்கப்படுவதையோ இன்னும் மரங்களை வெட்டி நிலத்தில் சாய்க்ப்படுவதையோ படைவீரர்கள் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள். தங்களது தளபதியான இறைத்தூதர் (ஸல்) அவர்களது மேற்கண்ட அறிவுரையைச் செவி மடுத்த பின், உண்மையில் மிகவும் சிரமமாக கடிமானதொரு பணியை நிறைவேற்றுமுகமாக முஸ்லிம் படைவீரர்கள் போர்க்களம் நோக்கித் தங்களது பயணத்தைத் துவங்கினார்கள். கடுமையாக நிலப்பரப்புகளின் ஊடாகப் பயணித்த பின் இறுதியாக பால்கா என்ற அந்த குறிப்பிட்ட இடத்தை முஸ்லிம்கள் அடைந்தார்கள். அந்த இடத்தை அடைந்த பின்பு, அங்கு ஏற்கனவே இவர்களை எதிர்பார்த்து, ஹிர்கல் நாட்டு மன்னன் ஒரு படையை அனுப்பி வைத்திருப்பதை அறிந்து கொண்டார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பின் கனத்தை எடை போட்டுப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியத்தை நிலைநாட்டுவதற்கு, தங்களது உயிர், பொருள், ஆவி அத்தனையையும் அற்பணிக்குமுகமாக களத்தில் இறங்கினாhகள்.

தளபதிப் பொறுப்பை ஏற்றிருந்த ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள், தனக்குக் கீழ் உள்ள தோழர்களின் வீரத்தை ஊக்குவிக்குமுகமாக தான் வெகு விரைவாக எதிரிப்படைகளுக்குள் ஊடுறுவிச் சென்று முன்னேறிக் காட்டினார். ஒருவர் நான்கு நபரைச் சமாளித்து, அவர்களை உற்சாகப்படுத்திக் காட்டினார். எங்கும் அழிவும், மரண ஒலமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. எதிரிகளை ஊடறுத்துச் சென்ற ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் இப்பொழுது வீர மரணம் எய்தினார்கள். பின் ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். எதிரிகளை ஊடறுத்துச் செல்ல விரும்பிய ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களுக்கு, எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்த வாய்ப்பு எளிதாக இருக்கவில்லை. எனவே, தான் ஏறி வந்த குதிரையில் இருந்து இறங்கி, எதிரிகளின் தலைகளைக் கொய்ய ஆரம்பித்தார். ஆனால், எதிhகளில் ஒருவன் அவரது வலது புஜத்தில் கடுமையானதொரு தாக்குதலைத் தொடுத்ததன் காரணமாக, அவரது வலது கரம் துண்டிக்கப்பட்டுக் கீழே விழுந்தது. வலது கரத்தில் ஏந்தியிருந்த கொடியை இடது கரத்திற்கு ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் மாற்றிக் கொண்டார்கள். பின் அந்த எதிரி இடது கரத்தையும் வெட்டிச் சாய்த்தான். இருப்பினும் தான் ஏந்திய அந்தக் கொடியை தரையில் விழ அனுமதிக்காத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள், தனது கால்களைக் கொண்டு அந்தக் கொடியை ஏந்திக் கொண்டார். இறுதியாக எதிரிப்படை வீரன் கொடுத்த அடியை தாங்கவியலாத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் வீர மரணமடைந்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, மூன்றாவது தளபதிப் பொறுப்பை அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கீழே விழ இருந்த கொடியை கையில் ஏந்திப் பிடித்த அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள், தளபதிப் பொறுப்பின் கீழ் மிகச் சிறந்த வீரத்தை காட்டி எதிரிகளைக் கலங்கடித்தபின் அவரும் வீரமரணம் எய்தினார்.

 எண்ணிக்கையில் வந்த பலவீனம்

தங்களது படைத்தளபதிகளில் மூவரை ஒருவர் பின் ஒருவராக இழந்து விட்டிருந்த முஸ்லிம் படைவீரர்கள், இப்பொழுது மனதளவில் சற்று நிலைகுலைந்து போயிருந்தார்கள். இன்னும் எதிரிப் படைக்கும் முஸ்லிம் படைக்கும் இடையே இருந்த எண்ணிக்கை வித்தியாசமும் அவர்களது மனோ பலத்தை சற்று அசைத்துத் தான் பார்த்துக் கொண்டிருந்தது.  வெற்றி கிடைக்குமா? என்ற அச்சமும் நிலவியது. ரோமப் படையின் எண்ணிக்கையே அவர்களை இந்த எண்ணத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்தது.

இன்னும் முஸ்லிம்களின் கொடி கீழே விழக் கூடிய நிலையில், எதிரிகளின் கரங்களுக்குள் சிக்கக் கூடிய நிலையில் இருந்து தப்பித்துமிருந்தது. கீழே விழ இருந்த கொடியை தாவிப் பிடித்து கைகளில் ஏந்திக் கொண்ட தாபித் பின் அர்க்கம் (ரழி) அவர்கள், தான் ஏந்திய அந்தக் கொடியை, சற்றும் எதிர்பாராத நிலையில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கரங்களில் சேர்த்தார். அந்தக் கொடியை காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கைகளில் சேர்க்கும் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களே! தயவுசெய்து இந்தக் கொடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உங்களால் தான் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதனை செவ்வனே நிறைவேற்ற முடியும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

கைகளில் கொடியைப் பிடித்துக் கொண்டு, என்னருமைத் தோழரே! இது இக்கட்டான சூழ்நிலை என்பதை நானறிவேன், ஆனால் என்னை விட நீங்கள் தான் இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டவரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனுபவமிக்கவரும் கூட. எனவே நீங்கள் தான் தலைமைப் பொறுப்பிற்கு தகுதி வாய்ந்த நபர் என்று கனிந்த குரலில் கூறினார். இறைவன் மீது சத்தியாக..! உங்களது மன வலிமையும், உங்களது தியாகமும் அற்பணமும் ஏற்கனவே நிரூபணமானதொன்று. கீழே விழுந்த அந்தக் கொடியை தங்களது கைகளில் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற நோக்கமல்லாது வேறு நோக்கத்திற்காக நான் அதனை எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து இந்தக் கொடியைப் பெற்றுக் கொண்டு, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த இக்கட்டான சூழ்நிலையை, தங்களது அனுபவம் மற்றும் செயல்திறன், திட்டமிடும் ஆற்றல் மூலம் சமாளித்துக் காட்டுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

                                                    பகுதி - 03 / பகுதி - 05     

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment