Mar 26, 2016

வாசிங்டனின் பார்வையில் மத்திய கிழக்கு

 

ஈரான் - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர் பாகம் – 4

தனது பிராந்தியம் தொடர்பாக ஈரான் கொண்டுள்ள இலட்சியத்தை எவ்வாறு கையாள்வது என்ற விடயம், அமெரிக்காவுக்கு ஒரு பிரதான சவாலாகவே இருந்து வந்திருக்கிறது. அந்தச் சவாலை எதிர்கொள்வதுற்கு அமெரிக்கா, ஈரானை கட்டுப்படுத்தல், அதனுடன் இணங்கி ஈடுபாடு காட்டுதல், யுத்த சமிஞ்ஞையை வெளிப்படுத்தும் விதமாக மிரட்டுதல் போன்ற கொள்கைகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தது. ஒரே பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிராந்தியத்தை மேலாதிக்கம் செய்தல் என்ற ஒரே இலட்சியம் இருப்பதே அமெரிக்கா ஈரான் தொடர்பாக தொடர்ந்து சந்திக்கும் பிரதான சவால். பல சந்தர்ப்பங்களில் ஈரானின் இந்த இலட்சியத்தையே பயன்படுத்தி பிராந்தியத்தில் தனது இலக்குகளை அமெரிக்கா அடைந்திருக்கிறது. எனினும் அமெரிக்க அரசியல் மட்டங்களில் ஈரானை முழுமையாக நம்ப முடியாது என்ற ஒரு ஆழமான சந்தேகக்கண் தொடர்ந்து இருந்து வருவதால் இரு நாடுகளுக்குமிடையே உறவை சுமூகப்படுத்துவது எப்போதும் முழுமையாக வெற்றியளிப்பதில்லை. எனினும் நிலைமை இன்று மாறியிருக்கிறது. ஈராக்கிலும், பின் ஆப்கானிலும் ஆழிச்சகதிக்குள் மாட்டிக்கொண்ட அமெரிக்காவை சிரியாவின் களநிலை முற்றாகப்புதைத்து விடமுன் ஈரானின் வாசஸ்தளத்தை அமெரிக்கா நேரடியாகத் தட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. முஸ்லிம் உம்மத்தின் தளராத போராட்டங்களினால் இராணுவ ரீதியாக முழுப்பிராந்தியத்திலும் அவமானத்தை சந்தித்த அமெரிக்கா தனது நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள அல்லது தனது மேலாதிக்கக்கனவை அடைகாக்க ஈரானுடன் கைகோர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. நவ-பழமைவாத (Neo-Conservative Administration) நிர்வாகத்தினால் ஏற்படக்கூடிய அரச மாற்றம் பற்றிய அச்சம் பொதுவான விடயங்களில் ஈரானுடன் இணங்கிச்செல்லல் என்ற ஒரு நிலைப்பாட்டை அமெரிக்க நிர்வாகம் அவசர அவசரமாக எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. எனினும் ஈரானின் மீது ஆளுமை செலுத்த அவர்களுடன் ஈடுபாடுகாட்டுவதா அல்லது அவர்களின் பிராந்தியக்கனவை களைக்கும் விதமாக இரும்புக்கரங்கொண்டு நசுக்குவதா என்ற விடயம் இன்றும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் இருக்கின்ற பிரதான சிந்தனைக்குழப்பங்களில் ஒன்றுதான் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இன்றுவரை அமெரிக்கா, மத்திய கிழக்கிலே தனது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பிராந்தியத்திலுள்ள பல்வேறுபட்ட சக்திகளை ஒருவர் தோண்டிய குழிக்குள் மற்றவரை தள்ளிவிடுவதன் ஊடாக பலச்சமநிலையை பேணி அடைந்து வருகின்றது. பிராந்தியத்தில் இஸ்ரேலின் வியாபிப்பை கட்டுப்படுத்த ஈரானையும், ஈரானின் ஆதிக்கக் கனவை கட்டுப்படுத்த இஸ்ரேலையும் அது கையாள்கிறது. இவர்கள் இருவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சவூதியை பயன்படுத்த, அது ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் எதிராக இயங்கும் ஆயுதக்குழுக்களை போசித்து வளர்த்து ஆயுதங்களை விநியோகித்து தனது கைமாறைச் செய்து வருகின்றது. இதனூடாக நேரடி அமெரிக்க இராணுவத்தலையீடு தவிர்க்கப்படுகிறது. ஈரானின் அணுப்பரிசோதனை நிலைகளை அழிக்க இராணுவத்தாக்குல் நடத்தவேண்டும் என்ற அழுத்தத்தை இஸ்ரேல் அமெரிக்காவிடம் பலமுறை செய்திருந்தாலும் அதனால் இஸ்ரேல் பலம்பெற்று தான் பிராந்தியத்தில் பேணிவரும் பலச்சமநிலை குழம்பிவிடலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் அமெரிக்கா அதனை தொடர்ந்து எதிர்த்து வருவது இதற்கொரு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஈரான் தன்னைச் சூழ அமைந்திருக்கும் ஷியாக்களின் பரம்பல் அதிகமாகவுள்ள பிராந்தியங்களை அல்லது தேசங்களை பலப்படுத்தி நிலத்தொடர்புள்ள ஒரு பிறை வடிவிலான அகன்ற ஷியா கூட்டிணைவொன்றை உருவாக்கக் கனவு காண்கிறது. ஷியா கிரஸண்ட் என அறியப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தையும் அமெரிக்கா தனக்குச் சாதகமாகக் கருதுகிறது. ஏனெனில் ஈரானின் இந்த நிகழ்ச்சித்திட்டம் முஸ்லிம் உலகை பௌதீக ரீதியாக கூறுபோடுவதுடன், இதனால் தீவிரமடையக்கூடிய ஷியா-சுன்னி குழுவாத மனோநிலை உம்மத்தை மேலும் பிளவுபடுத்தி பலகீனப்படுத்தும். எனவே பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேணலாம் என அது கருதுகிறது. எனினும் அதற்கான கெட்டபெயர் தனக்கு வரப்போவதில்லை. மாறாக ஷியா கிரஸண்ட் திட்டத்தை நடைமுறையில் அமூல்படுத்தும் ஈரானுக்கும், ஷியாக்களுக்குமே அதனால் கெட்டபெயர் வரப்போகிறது என்ற கபடத்தனத்தில் அதற்கு ஆதரவு கொடுத்து வருகிறது.

பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கு ஈரானின் இலட்சியக்கனவை ஒரு அபாயக்குறியாக காட்டி மத்திய கிழக்கில் தனது இராணுவப்பிரசன்னத்தை நியாயப்படுத்திய அமெரிக்கா, இன்று அரபுப்புரட்சிகளில் சிக்கிய மத்திய கிழக்கில் தனது இலக்கு நோக்கிய ஒரு அரசியல் வியூகத்தை நிர்மாணிப்பதில் தடுமாற்றத்தை சந்திக்கிறது.
 

No comments:

Post a Comment