Jul 11, 2016

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-04




இஸ்லாமிய / முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள் எதுவும் எந்தவொரு முஸ்லிம் பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அச்சமடைவதில்லை என்றும்; உண்மையில் அவ்வாறான குழுக்களின் இருப்பை அவர்கள் விரும்புகின்றார்கள் என்றும்; இதற்குக்காரணம் இக்குழுக்களின் இருப்பைக் காரணமாகவைத்து அவர்களால் தங்களின் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகளை இலகுவாக அடைந்துகொள்ளமுடியும் என்பதுதான் என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த வாரம் Dr. ஜாகிர் நாயிக் மற்றும் அவரது Peace TV இரண்டையும் தடைசெய்யக் கோரி இந்தியாவில் எழுந்துள்ள கூக்குரல் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இன்று இந்தியாவின் சின்னவீடாகிப்போயுள்ள பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் ஒன்றிற்கும் Dr. ஜாகிர் நாயிக் அவர்களுக்கும் தொடர்பிருப்பதாக அவர்கள் பிதற்றுகின்றார்கள்.

Dr. ஜாகிர் நாயிக், பொதுவாக, மதங்களுக்கிடயான ஒற்றுமை வேற்றுமைகள் பற்றிப்பேசும் ஒரு அறிஞர். ஓரிரு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கெதிரான அமெரிக்க ஐரோப்பியப் பயங்கரவாதத்தைத் தோலுரித்துக்காட்டியும் உள்ளார். மேற்குலகினர் முஸ்லிம் பயங்கரவாத்தைச் சுட்டிக்காட்டுவதில் தம் வாழ்நாளைச் செலவழிப்பது தமது பயங்கரவாத்தைச் செயல்களிலிருந்து உலகின் கவனத்தைத் திருப்புவதற்கே என்பதையும் இவர் விளக்கியுள்ளார். இவரது இந்த அறிவியல் செயற்பாட்டை முடக்குவதற்காகவே இவரை அவர்கள் பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் ஒன்றோடு தொடர்புபடுத்துகின்றார்கள். இந்த வன்முறைச்சம்பவத்தொடு தொடர்புபட்ட ஒருவர் Dr. ஜாகிர் நாயிக்கின் சமூகவளைத்தலத்தில் இணைந்திருந்ததுதான் இதற்கு ஆதாரம் என்கின்றார்கள்.

(Dr. ஜாகிர் நாயிக் அவர்களை எதிர்த்துக்கொண்டு இஸ்லாமிய விரோதிகளோடு கைகோர்க்கவும் முஸ்லிம்களில் ஒருசாரார் புறப்பட்டுள்ளார்கள். இஸ்லாமிய சட்டக்கலை தொடர்பான விடயங்களில் இவரோடு உள்ளக முரண்பாடு கொண்டவர்களே இவர்கள்.)
*******
பயங்கரவாதம் பற்றிய சரியான புரிதலை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமெனில் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்” (Agent Provocateurs) மற்றும் “பொய்க்கொடித் தாக்குதல்” (False Flag Operations) என்றால்
என்னவென்று நாங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

“ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்”

அநீதிக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆட்படுகின்ற ஒரு சமூகம் நீதியையும் சுதந்திரத்தையும் பெறுவதற்கு முயற்சி செய்யும். பொதுவாக இந்த முயற்சிகள் அவசியமானவை; பாராட்டப்படவேண்டியவை; அனைவரும் பங்கெடுக்கவேண்டியவை. இருப்பினும் இம்முயற்சிகளிற் சில, சில சமையங்களில், புறநடையாக, உசிதமற்ற முயற்சிகளாக அமைவதும் உண்டு. இவ்வாறன உசிதமற்ற முயற்சிகளில் ஒன்றுதான் பயங்கரவாதமும்.

பயங்கரவாதிகள் எனப்படுவோரின் இலக்குகள் உன்னதமானதாக இருப்பினும் அவர்களின் வழி முறைகள் சாத்தியமற்றவையாக, ஆபத்தானவையாக, எமது உன்னதமான இலக்குகளை விட்டும் எம்மைத் தூரப்படுத்துபவையாக அமைந்து விடுகின்றன. எனவே இவ்வாறான உசிதமற்ற முயற்சிகள் அறிவுரைகளூடாக சீர் செய்யப்படவேண்டும். உசிதமற்ற முயற்சிகளைக் காட்டிக்கொடுப்புகள் மூலம் சீர்திருத்தம் செய்யலாம் என்பது சீர்திருத்தம் என்கின்ற இன்னுமொரு உயர் இலக்கிற்கான இன்னுமொரு பிழையான வழிமுறை; இன்னுமொரு உசிதமற்ற முயற்சி. காட்டிக்கொடுப்புகள் அநீதிக்கு ஆட்பட்ட சமூகத்தை மேலும் பலமிழக்கச் செய்யும்; அதற்கெதிரான அநீதிகளை இன்னும் அதிகரிக்கும்; அதிகரிக்கின்ற அந்த அநீதிகள் இன்னும் அதிகமான உசிதமற்ற வழிமுறையாளர்களின் பிறப்பிற்குக் காரணமாகும். இதனை ஒரு “விஷியஸ் சைக்கிள்” என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

அநீதிகளைக் கண்டு ஆத்திரப்படாதவன் ஒரு ஜடம். அவனால் எதுவித பிரயோசனமில்லை. ஆனால், அநீகளுக்கெதிரான நியாயமான அந்த ஆத்திரம் மாத்திரம் இருப்பது போதாது. ஆத்திரம் என்பது ஒரு உனர்ச்சி. வெறும் உணர்சிகளால் மாத்திரம் உந்தப்படும் செயல்கள் எதிர்பார்க்கப்படும் விளைவுகளைத் தரப்போவதில்லை.

ஆகவே ஆத்திரமும் சீரான சிந்தனையும் ஒன்றிணையவேண்டும். அவ்வாறு இரண்டும் ஒன்றாகக் கிடைக்கப்பெற்றவனே பிரயோசனமான ஒரு மனிதன். அவனால் மாத்திரமே தீர்வுகளுக்கான சரியான வழிமுறைகளைக் கண்டறிய முடியும். அத்துடன், தன்னிடமுள்ள ஆத்திரத்தையெல்லாம் ஒரு இயக்க சக்தியாக மாற்றி தீர்வுக்கான வழியில் பயணிக்க முடியும்.

அநீதிக்கு ஆட்பட்ட எந்தவொரு சமூகத்திலும் அதிக ஆத்திரமும் குறைவான, சீரற்ற சிந்தனைகளும் கொண்ட ஒரு சிலர் இருப்பது இயற்கையானதே. இதற்கு முஸ்லிம் சமூகம் விதிவிலக்கல்ல. 

“ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்”
எனப்படுவோர் இவ்வாறான அதிக ஆத்திரமும் சீரற்ற சிந்தனைகளும் கொண்ட இளைஞர்களைத் தேடி அலைவார்கள். அவர்களின் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றிப் பேசி அவர்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற ஆத்திரத்தை இன்னும் அதிகரிப்பார்கள். தங்களுக்கு அநீதி இழைக்கின்ற அல்லது அவ்வாறு கருதப்படுகின்ற தேசத்திற்கெதிராக அல்லது சமூகத்திற்கெதிராக வன்முறைகளில் ஈடுபடத் தூண்டப்படுவார்கள். அவ்வாறன வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்குத் தேவையான பயிற்சிகளையும் தளவாடங்களையும் வழங்குவார்கள். இவர்கள் “வெற்றிகரமாக” ஒரு வன்முறையைப் புரிந்துவிட்டால் மிக்க மகிழ்ச்சியுறுவார்கள். ஏற்கனவே வன்முறையைப் பிரயோகித்துக்கொண்டிருந்த அரசோ அல்லது சமூகமோ இந்த வன்முறையைச் சுட்டிக்காட்டித் தங்களை பாதிக்கப்படுவோராகக் காட்டும். இந்த வன்முறையைக் காரணம் காட்டி புதியதும் அதிகமானதுமான வன்முறையத் தங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடும்.

“பொய்க்கொடித் தாக்குதல்” என்பது அநீதிகள் இளைத்துக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தை அல்லது குழுவைப் பிரதிநிதித்துவம் செய்யும் முகவர்கள், குறிப்பாக புலனாய்வுப் பிரிவுகள், தாமாகவே நேரடியாக தாம் பிரதிநிதித்துவம் செய்யும் அரசுக்கு அல்லது சமூகத்திற்கு எதிரான ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்து, பின்னர் அந்தப் பழியை எதிரிச் சமூகத்தின் மீது சுமத்துவதைக் குறிக்கும். இவ்வாறான “பொய்க்கொடித் தாக்குதல்களின்” விளைவும் நான் மேலே விளக்கிய “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்களின்” செயற்பாடுகளை ஒத்ததாகவே இருக்கும்.

(சர்வதேச அளவில் நிகழ்த்தப்பட்ட “பொய்க்கொடித் தாக்குதல்கள்” மற்றும் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்களின்” செயற்பாடுகள் பற்றிய மேலதிக தகவல்களை நீங்கள் சுயதேடலில் பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.)

எனவேதான், முஸ்லிம் சமூகத்தைப் போன்ற ஒரு (underdog) சமூகத்திற்கெதிராகப் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இடம்பெற்ற பயங்கரவாதச் செயலில் “பொய்க்கொடித் தாக்குதல்கள்” மற்றும் “ஏஜன்ட் ப்ரோவகச்சோர்ஸ்” களின் வகிபாகம் என்னவென்றெல்லாம் நாங்கள் ஆராய முற்படவேண்டும். இதயசுத்தி இழந்து, எதிரிகளிடம் நற்பெயர் பெறவேண்டும் என்ற நோக்கில், வேண்டாதவனைக் காட்டிக்கொடுக்கவேண்டும் என்ற முனைப்புகளோடு சக முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமாகப் பயங்கரவாத முத்திரை குத்தப் புறப்படக்கூடாது.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

No comments:

Post a Comment