Apr 13, 2013

நிகழ்கால சூழ்நிலைக்கு இலங்கை முஸ்லீம் எவ்வாறு முகம் கொடுப்பது?

தற்போது இலங்கையில் நிகழும் முஸ்லீம்களுக்கெதிரான மதப் பேரின வாதத்தின் சூடான நெருக்கடிகள் பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் நிகழ்கால சூழ்நிலைக்கு இலங்கை முஸ்லீம் எவ்வாறு முகம் கொடுப்பது? என்ற வினாவைச் சுற்றி விடயம் வரும்போது, தவக்குலுக்கும் நடத்தைக்கும் இடையிலான நியாயமான சுன்னாஹ்வின் முன்னால் சிறுபான்மை என்ற அச்சத்தை ஒரு ஆபத்தான கிளைமோர் வெடிகுண்டாக்கி பொருத்தி விட்டு 'தாண்டினால் வெடிக்கும்!' என கடுமையாக எச்சரிக்கை விடுக்கின்றனர்.அவர்கள் தமது கருத்துக்கு சான்றாக எடுக்கும் உதாரணங்களில் ஒன்று,

அப்துல் முத்தலிப்பின் ஆட்டு மந்தைகளை கஹ்பாவை இடிக்க வந்த ஆப்ரஹாவின் யானைப்படை கைப்பற்றியபோது, அதை மீட்க வந்த அப்துல் முத்தலிப் தன்னுடைய ஆட்டுமந்தையை தனக்கு கொடுத்து விடுமாறு கீழ்ப்படிந்த நிலையில் கோரிக்கை விடுக்க, ஏளனத்தோடு ஆப்ரஹா "கஹ்பாவையே இடிக்க வந்துள்ளோம் ! அதைப் பற்றி பேசாமல் உன்னுடைய ஆட்டு மந்தையை பற்றி பேசுகிறாயே?" என்ற வினாவுக்கு அப்துல் முத்தலிப் சொன்ன பதிலான "ஆட்டு மந்தை என்னுடையது கஹ்பா அல்லாஹ்வுடையது அதை அவன் பார்த்துக் கொள்வான் " என்ற பதில் ஒரு சிறந்த நடத்தையாக இலங்கையின் நிகழ்கால சூழ்நிலைக்கு தீர்வாக பேசுகிறார்கள்; தவக்குல் தொழுகை ,நோன்பு , அஹ்லாக் போன்றவற்றை மட்டுமே முஸ்லீம் உம்மாஹ் கைக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கிறார்கள்.

ஜாஹிலிய காலத்தில் நடந்த அப்துல் முத்தலிப் -ஆப்ரஹா சந்திப்பு சம்பவம் எப்படி எமக்கு சுன்னாஹ்வாக முடியும்? நிகழ்காலத்தையும் சுன்னாஹ்வையும் ஒப்பிட்டு ஒரு முஸ்லிமின் வாழ்வியலை எவ்வாறு தீர்மானிப்பது என்ற அடிப்படையில் இன்றைய முஸ்லீம் உம்மாவின் நிலை 'ஆப்ரஹாவின்' காலத்துக்கு பின்தள்ளிப் போய் விட்டது!. சுன்னாஹ்வை வாழ்வியல் ஆக்குவது ஒரு நுணுக்கமான அரசியல்; அதை சரியாக செய்யாவிட்டால் இஸ்லாம் ‘மார்க்கம்’ என்ற நிலையில் இருந்து 'மதம் ' என்ற குறுகிய வாதத்துக்குள் முடக்கப்பட்டு விடும் .

உண்மையில் எமக்கு நடந்துள்ளது என்ன ?

ஏற்கனவே மதச்சார்பின்மை என்ற வாழ்வியலின் கீழ் ஒரு மதமாகவே தான் இஸ்லாம் நோக்க வைக்கப்பட்டுள்ளது . முதலாளித்துவத்தின் சமரசமே உலகின்அரசியலாக்கப்பட்டுள்ளது . ஜனநாயகத்தின் பெரும்பான்மையின் கீழ் சலுகை அடிப்படையில் சிறுபான்மை வாழ்வே விதியாக சித்தரிக்கப்பட்டுள்ளது . இவை எல்லாவற்றோடும் சேர்ந்து 'வஹ்ன் ' எனப்படும் ‘உலகத்தை நேசித்து மரணத்தை வெறுக்கும் மனப் பாங்கின் கீழ் வாழு, வாழ விடு 'எனும் நடத்தையின் கீழ், சத்திய இஸ்லாத்தை அதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதுதான் சிறுபான்மை வாழ்வுக்கு இவர்கள் தரும் தீர்வா?

No comments:

Post a Comment