Oct 22, 2013

சமரசம் என்ற நச்சு விதை

முந்தைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கிடையே சமரசம்(Compromise) என்ற பிரயோகம் நடைமுறையில் இருக்கவில்லை. மேற்குலகிலிருந்தும் முதலாளித்துவ சித்தாந்தத்திலிருந்தும் உருவாகிய  “சமரசம் – وسطية” என்ற ஆபத்தான சிந்தனை காலனித்துவவாதிகளால் முஸ்லிம்களிடம் திட்டமிட்டு திணிக்கப்பட்டது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதகுருமார்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மத்தியில் நிலவிவந்த கருத்து முரண்பாடுகளை   போக்கும் விதமாக சமரச பேரத்தின் அடிப்படையில் உருவானதே வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிக்கும் மதச்சார்பின்மை(Secularism) கோட்பாடாகும். இந்த மதச்சார்பின்மை கோட்பாட்டை அகீதாவாக கொண்ட  முதலாளித்துவ  சித்தாந்தம்  இன்று முஸ்லிம் உலகையும்  ஆதிக்கம் செலுத்தி வருவதால் சமரச சிந்தனை சில முஸ்லிம்களை யும் ஆட்டிப்படைக்கிறது.
கிறிஸ்தவ தேவாலய மதகுருமார்களின்  உறுதுணையோடு மக்களை அடக்கியாண்ட அரசர்களுக்கும், “அறிவியல் ஆரய்ச்சியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் ” என்ற மற்றொரு தரப்பினருக்குமிடையே நடைபெற்றுவந்த போராட்டங்களை தீர்க்க உருவான  தீர்வே இந்த ‘சமரசம் – وسطية’ என்ற எண்ணக்கருவாகும்.தேவாலய தரப்பானது கிறிஸ்தவம் வாழ்வின் எல்லா சிக்கல்களையும் தீர்க்கக்கூடியது என வாதிட்டது. அதே நேரம் சிந்தனையாளர்கள் என்று அறியப்பட்ட தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ளாததோடு, எல்லாவகையான பிற்போக்கு வாதங்களுக்கும், அடக்கு முறைகளுக்கும் கிறிஸ்தவமே காரணம் என்று  கூறிவந்தனர்.மனிதனுடைய சுய அறிவுத்திறன் மனிதகுலத்தை சிறந்த முறையில்  ஒழுங்குபடுத்துவதற்கும், அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்கவும் சக்திமிக்கது என்ற புதிய கருத்தை அவர்கள் கூறலானார்கள்.
நீண்டகால  மோதலுக்குப் பின்னர், மேற்கண்ட இரு சாராரும் தமது சிந்தனைகளை விட்டுக்கொடுக்க முன்வந்து சமரச கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு காண முயற்சித்தனர். இந்த சமரச முயற்சியின்போது மதமானது மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள  தொடர்பாக மட்டும் வரையறை செய்யப்பட்டது. அதாவது அந்த மதத்திற்கு அல்லது அதனது சட்டங்களுக்கு இந்த உலக வாழ்வின் விவகாரங்களில் எந்தவிதமான ஆதிக்கமும் இனிமேல் இருக்கலாகாது என்பதே இங்கு முக்கிய நிபந்தனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதன்காரணமாக வாழ்வியலிலிருந்து மதம் பிரிக்கப்பட்டு மதச்சார்பின்மை(secularism) என்ற சிந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்தகைய   சமரசத்தின் மூலம்  மனிதன் தனது சுய அறிவைக் கொண்டே சட்டதிட்டங்களை வகுக்க வேண்டும் என்ற  சிந்தனை மேலோங்க ஆரம்பித்தது.வாழ்வின் அனைத்து விவகாரங்களிலிருந்தும் மதத்தை  பிரிக்கும் மதச்சார்பின்மை கொள்கையை, முதலாளித்துவ சித்தாந்தத்தின்  அடிப்படை அகீதாவாக மேற்குலகு  ஏற்றுக்கொண்டது. அத்துடன் நின்றுவிடாமல் ஏனைய நாடுகளை காலனித்துவம் செய்வதன் ஊடாக முதலாளித்துவ கொள்கையை உலகில் வளர்ப்பதற்கு மேற்குலகு தயாரானது.
எனவே யாரெல்லாம் மேற்குலகின் முதலாளித்துவ கொள்கையை ஏற்றுக்கொண்டார்களோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களிடம் அனைத்து மட்டங்களிலும் ‘சமரசம்’ என்ற எண்ணக்கருவின் தாக்கம் காணப்படுகின்றது. அது அரசியல், சட்டம், சமூகவியல் என அனைத்து மட்டத்திலும் ஊடுருவியுள்ளது.ஃபாலஸ்தீன விவகாரம் இதற்கோர் நல்ல உதாரணமாகும். ஃபாலஸ்தீனம் முஸ்லிம்களின் நிலமாகும். ஆனால் பாலஸ்தீனை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த யூதர்களோ தமக்கு கடவுள் வாக்குறுதியளித்த புனித பூமியாக அதனை நோக்குகின்றனர். எனவே அந்த நிலமும் அதிலுள்ள அனைத்தும் தம்முடையது என அவர்கள் வாதாடுகிறார்கள்.மேற்குலக முதலாளித்துவ நாடுகள், 1947ம் ஆண்டில், முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையே ஃபாலஸ்தீனை பிரித்து வழங்குதல் என்ற  தீர்வை முன்வைத்தனர். இது இரு நாடுகளை ஃபாலஸ்தீனத்தில் உருவாக்கும் ஒரு சமரச தீர்வாகும். இதே போன்ற தீர்வு திட்டங்களை காஷ்மீர், போஸ்னியா, சைப்ரஸ் போன்ற பிராந்தியங்களுக்கான தீர்வாகவும் அநேகமான முதலாளித்துவ நாடுகள் முன்வைத்தன.
எனவே முதலாளித்துவ நாடுகளின் அரசியலானது மோசடிகளையும், வஞ்சகத்தையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. அவர்கள் சத்தியத்தை முழுமையாக அடைவதை இலக்காக கொள்வதில்லை. மாறாக அவர்கள் தமக்கு எது சாதகமானது என கருதுகிறார்களோ அதனை அடைவதையே முழு நோக்காக கொண்டுள்ளனர். பொதுவாக அனைத்து குழுவினர்களும் தங்களின் முழுமையான இலட்சியத்தை முதலாளித்துவ கட்டமைப்பின் மூலம் அடையமுடிவதில்லை. எனவே இத்தரப்புகள் சமரச பேரத்தின் மூலம்  உருவாகின்ற பொதுவான ஒரு தீர்வினையே ஏற்றுக்கொள்ள முன்வருகின்றனர்.எந்த தீர்வில் லாபம் இருக்கிறதோ  அல்லது எந்த தீர்வை சரியானதாக அவர்களின் மனோ இச்சை எற்றுகொள்கிறதோ, அவ்வாறான தீர்வை ஒப்புக்கொள்ள முன்வருகின்றனர்.
இத்தகைய சமரச தீர்வு என்பது சூழ்நிலைகள்  மற்றும்  தீர்வில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினரிடையே யார் பலமானவர் போன்ற காரணிகளை கருத்திற்கொண்டே எட்டப்படுகின்றது. இதன்மூலம்  பலமுள்ளவன்  தான் விரும்பியதை அடைவதோடு, பலவீனன் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாததையும் ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறான். இங்கு  பிரச்சினை என்னவென்றால் முஸ்லிம்களில் சிலர் ‘சமரசம்’ என்ற இத்தகைய ஆபத்தான கொள்கையையும், அதன் தவறுகளையும், பிழையான போக்கையும் விளங்காமல் அதை இஸ்லாத்தின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கு தலைப்பட்டுள்ளனர்.அவர்கள் இஸ்லாமும் இத்தகைய இயல்புகளின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் யதார்த்தவாதியாக இருங்கள் என்றும் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுக்கின்றனர். இஸ்லாத்தை நிலைநாட்டவே நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறிக்கொண்டே இத்தைகைய நச்சுக்கொள்கையை திணிக்க முற்படுகின்றனர்.
இத்தைகையவர்கள், இஸ்லாம் என்பது ஆன்மீகத்துக்கும், சடவாதத்திற்கும்(materialism) இடையிலும்; தனிப்பட்ட வாழ்க்கைக்கும், கூட்டுவாழ்வுக்கும் இடையிலும், யதார்த்த வாதத்ததிற்கும், இலட்சிய வாதத்திற்கும் இடையிலும், படிப்படியான மாற்றத்திற்கும், சடுதியான மாற்றத்திற்கும் இடையிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வியாக்கியானம் செய்கின்றனர்.எல்லாவற்றுக்கும் இரு தீவிர நிலைகளும், ஒரு நடுத்தர நிலையும் காணப்படுகிறது; நடுத்தரமான  நிலை எப்போதும் பாதுகாப்பான பாதை எனவும் கூறி இஸ்லாத்தில் இத்தகைய அடிப்படையை நிறுவுவதற்கு இந்த நவீன முஸ்லிம்கள் முயல்கின்றனர். இஸ்லாத்தில் காணப்படுகின்ற நடுத்தர பாதையும், ‘சமரசம்’ என்ற அணுகுமுறையும் ஒத்த இயல்பை கொண்டுள்ளதால், இஸ்லாமும் சமரசமும் ஒன்றோடொன்று முரண்பட்ட ஒன்றல்ல என்பதாகவும் தவறாக விளக்கமளிக்கிறார்கள். எனவே இஸ்லாம், நம்பிக்கைக்கும், வணக்க வழிபாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும், நற்பண்புகளுக்கும் மத்தியில் நடுநிலையான பாதையை வகுத்து தந்துள்ளது என்பதாக இவர்கள் அதிகமதிகம் பறைசாற்றுகிறார்கள். எனவே இவர்கள் தமது சொந்த அறிவைக்கொண்டு அல்லது தாம் யதார்த்தம் என கருதுவதைக்கொண்டு இஸ்லாத்தின் சட்டங்களை விளங்கிக்கொண்ட பின்புதான் ஷரீஅத்  என்ன சொல்கிறது என்று வினவுகின்றனர். தாம் ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்கு பொருத்தமாக ஏதேனும் மார்க்கச்சட்டங்கள் இருக்கின்றனவா அல்லது அந்த சட்டங்களை தமது கருத்துக்கேற்ப வளைக்கமுடியுமா எனவும் இவர்கள் ஆராய்கின்றனர்.
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا
இதே போன்று நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்         (அல்பகரா:143)”
என்ற வசனத்திற்கு கீழ்கண்டவாறு விளக்கமளிக்கின்றனர்.
முஸ்லிம் உம்மத்துடைய நடுநிலை என்பது, அதன் வழிமுறைகளிலும் செயலாக்க முறைமைகளிலும்(Systems) மிதமானபோக்கை பேணுவதாகும். இது கிறிஸ்தவர்கள் மார்க்கத்தில் காட்டிய பொடுபோக்குத் தன்மைக்கும், யூதர்கள் மார்க்கத்தில் காட்டிய தீவிரத்தன்மைக்கும் இடையில் ஒரு கோட்டை வரைவதற்கு ஒத்ததாகும் என்பதாகவும் நடுநிலையான சமூகம் என்பதற்கு விளக்கமளிக்கின்றனர்.
மேற்கண்ட அல்குர்ஆன் வசனத்தில் வருகின்ற ‘வஸத் وسط – ’ என்ற பதத்திற்கு ‘நீதி’ என்று விளக்கமளித்தாலும் கூட நீதி என்பதற்கு இரு முரண்பட்ட எல்லைகளுக்கு இடையில் காணப்படும் நடுநிலைமையே நீதி என்று கருதப்படவேண்டும் என்பதாக தவறான  விளக்கத்தை அளிக்கின்றனர். இதன்மூலம் நீதி அல்லது நடுநிலைமை என்பது முரண்பாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்ற சமரசக்கோட்பாட்டின் விளக்கத்தை தமது விளக்கமாக முன்வைக்கின்றனர்.
தஃப்ஸீர் அறிஞர்களின் விளக்கத்தின்படி இந்த வசனம்   இஸ்லாமிய சமுதாயமானது நீதி செலுத்துகின்ற சமுதாயம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது.  இஸ்லாத்தின் பார்வையில் நீதி செலுத்துவது என்பது சத்தியத்தை அல்லது இஸ்லாத்தை நிலைநிறுத்துவதாகும்.இந்த இஸ்லாமிய உம்மத்தானது இஸ்லாத்தை நிலைநாட்டுவதன் மூலம் மற்றைய சமுதாயங்களுகக்கிடையில் சத்தியத்திற்கு சான்று பகரும். இந்த வசனமானது  முஸ்லிம் உம்மத்திற்கு  கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு பண்பை சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்திருந்தாலும், முஸ்லிம் உம்மா  இஸ்லாத்தின் செய்தியை  மற்றைய சமுதாயங்களுக்கு எத்திவைக்கவேண்டும் என்றும் கட்டளையிடுகின்றது.. “அல்லாஹ்வின் தூதர் உங்கள் மீது சாட்சியாக இருக்கட்டும்” என அல்குர்ஆன் கூறுவதிலிருந்து எப்படி நபி صلى الله عليه وسلمஅவர்கள் இஸ்லாமிய உம்மத்திற்கு சத்தியத்தில் சான்று பகர்பவர்களாக அமைந்தார்களோ, அதேபோன்று இஸ்லாமிய உம்மத்தானது மற்றைய சமுதாயங்களுக்கு சான்று பகர்கின்ற உம்மத்தாக விளங்கவேண்டும் என்பதையும் அல்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதனையே நபி صلى الله عليه وسلمஅவர்கள் தனது இறுதிப்பேருரையில் “இங்கு வந்திருப்போர், வராதவர்களுக்கு எத்திவைப்பீர்களாக” என்று வலியுறுத்தினார்கள்.
இஸ்லாத்தைப்  பொறுத்தவரை நடுநிலைப்பாதை அல்லது சமரச தீர்வு என்ற கோட்பாடு கிடையாது. மனிதனைப் படைத்த அல்லாஹ் سبحانه وتعالىஅவனைப் பற்றி தீர்க்கமாக அறிந்தவன். அவன் மட்டுமே மனித வாழ்வின் விவகாரங்களை சரியாக வரையறை செய்யக்கூடியவன். இவ்விடயத்தினை வேறுயாரும் செய்யமுடியாது. மனிதகுலம் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் நடுநிலைப்பாதை அல்லது சமரச தீர்வு என்ற கொள்கை கிடையாது.மாறாக இஸ்லாத்தில் அல்லாஹ் سبحانه وتعالىவழங்கியிருக்கின்ற சட்டதிட்டங்கள், ஏவல் விலக்கல்கள் மட்டுமே காணப்படுகின்றது.
இவ்வரையறைகளைப்பற்றி அல்லாஹ் سبحانه وتعالىகூறுகிறான்:-
وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
 “இவை அல்லாஹ்வின்(சட்ட) வரம்புகளாகும்.அறிந்து கொள்ளும் சமூகத்தாருக்கு இவற்றை அவன் தெளிவு செய்கிறான்”.                                                                   (அல் பகரா: 230)
.மேலும் அல்லாஹ் سبحانه وتعالىகூறுகிறான்:-
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ
இன்னும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து அல்லாஹ் ஏற்படுத்திய) வரம்புகளை மீறிவிடுகிறாரோ அவரை அவன் நரகத்தில் புகுத்தி விடுவான். அதில் அவர்கள் நிரந்தரமாக(தங்கி) இருப்பார்கள்”.                                                                                          (அந்நிஸா:14)
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلمஅவர்களை  சிறிய தந்தையின் ஊடாக குறைஷித்தலைவர்கள் இஸ்லாத்திற்கு பகரமாக பணத்தையும், பதவியையும், அதிகாரத்தையும் காட்டி சமரசம் செய்யும்படி கோரியபோது இந்த நடுநிலைப்பாதை, சமரசத்தீர்வு என்பவை அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلمஅவர்களின் ஆளுமையான வார்த்தைகளில் எவ்வாறு அடிபட்டு போனது என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்.நபி صلى الله عليه وسلمஅவர்கள் அபுதாலிபின் வேண்டுகோளுக்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்.
 يَا عَمِّ وَاللَّهِ لَوْ وَضَعُوا الشَّمْسَ فِي يَمِينِي، وَالْقَمَرَ فِي يَسَارِي عَلَى أَنْ أَتْرُكَ هَذَا الْأَمْرَ حَتَّى يُظْهِرَهُ اللَّهُ، أَوْ أَهْلِكَ فِيهِ مَا تَرَكْتُهُ
என்னுடைய சிறிய தந்தையே ! அல்லாஹ்வின் மீது ஆணையாக ! எனது வலக்கரத்தில் சூரியனையும் இடக்கரத்தில் சந்திரனையும் வைத்து இந்த விஷயத்தை நான் விட்டுவிட வேண்டுமென்று அவர்கள் கூறினாலும், அல்லாஹ் எனக்கு  வெற்றியளிக்கும்வரை அல்லது இதன்பொருட்டு நான் கொல்லப்படும்வரை அதைவிட்டு நான் விலகமாட்டேன்.                (தபரீ)”
நபி صلى الله عليه وسلمஅவர்களிடம் பனீ ஆமிர் பின் ஸஃஸஆ கோத்திரத்தார், தமது உதவியை (நுஸ்ரா) உங்களுக்கு வழங்குகிறோம்; ஆனால் உங்களின் மரணத்திற்கு பின்னர் எங்களுக்கு தலைமைத்துவம் வழங்கப்படவேண்டும் என்று  வினவியபோது  அல்லாஹ்வின் தூதர்  صلى الله عليه وسلمஅவர்கள் “அதிகாரம் அல்லாஹ்வுக்குரியது; அவன் எவருக்கு அதை நாடுகின்றானோ அவருக்கு அதையளிப்பான்” என்று கூறி அவர்களின் உதவியைப்பெற மறுத்த விடயத்தில் சமரசத்தின் ஒரு பகுதியேனும் பொதிந்துள்ளது என்பதாக  எவராலும் கூறமுடியுமா?
ஆகவே மத்தியபாதை, சமரசம் போன்றவை  இஸ்லாத்திற்கு வெகுதூரமான ஓரு கோட்பாடாகும்.மேற்கத்திய நாடுகளும் அவர்களிடம் மண்டியிட்டு வாழும் முஸ்லிம்களில் சிலரும் நவீனத்துவம், விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை என்ற பெயரில் இஸ்லாத்தின் எல்லைக்குள் இந்த குஃப்ர் சிந்தனையை கொண்டுவர எத்தனிக்கின்றனர். இதனூடாக நேர்மையான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் தெளிவான வரையறைகளை பேணி வாழ்வதிலிருந்து வழிமாறி  செல்வதற்கு இவர்கள் எத்தனிக்கின்றனர் என்பதனை முஸ்லிம் உம்மா  அவதானத்துடன் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment