Oct 1, 2013

கென்யாவின் வெஸ்ட் கேட் தாக்குதலிலிருந்து பெறவேண்டிய பாடம்

அண்மையில் கென்யாவின்  தலைநகரான நைரோபியிலுள்ள வெஸ்ட் கேட் வர்த்தக வளாகத்தில் நடத்தப்பட்ட கொடூர   தாக்குதலைக்  கண்டு   உலகமே அதிர்ந்தது. இத்தகைய பயங்கரவாத  தாக்குதலை  அதிர்ச்சியுடனும் வேதனையுடனும்  உற்று நோக்குகின்ற இவ்வேளையில்  சில முக்கிய பிரச்சனைகளை முன்னிலைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
முதலாவதாக, இந்த தாக்குதல் கென்யாவுடைய பாதுகாப்பு சீரழிந்த நிலையில் உள்ளதையே எடுத்துக் காட்டுகிறது. இந்த தாக்குதலுக்கு முன்னர் மண்டியர்,புங்கோமா,கரிஸ்ஸா  போன்ற பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் சர்வசாதாரனமாக கொல்லப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.கென்யாவுடைய பெருநகரத்து மக்கள்,குண்டர்களால் தொந்தரவு செய்யப்படுவது  அன்றாட  நிகழ்வாக ஆகிவிட்டது.மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டிய விஷயத்தில் பாதுகாப்புத்துறை தவறிவிட்டதற்கு  இது ஒரு சான்றாகும்.  தன் நாட்டின் பாதுகாப்பிற்காகவே கென்யா அதன் படையை சோமாலியாவில் நடைப்பெற்ற  “Linda Nchi operation”க்காக அனுப்பி வைத்தது என்றால் இப்போது இதுபோன்ற தாக்குதல் ஏன் நடைபெற்றது என்று மக்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியல் ஆய்வாளர்களின்  ஆய்வின்படி இந்த முடிவு மேற்கத்திய நாடுகளின் அரசியல் நெருக்கடியின் காரணமாகவே எடுக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். குறிப்பாக இங்கிலாந்து  மற்றும் அமெரிக்கா கட்டளையிட்டதன் பேரில் எடுக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையின் குறிக்கோளானது,  தங்களுடைய ஏஜெண்டை சோமாலியாவில் ஆட்சியில் அமரவைக்கவும்  அதன் வளங்களை கொள்ளை அடிக்கவுமே ஆகும்.
இரண்டாவதாக, முன்னணி ஊடகங்கள் தங்களின் கோரமுகத்தை பறைசாற்றின. ஆரம்ப கட்டத்தில் இது குண்டர்களினால் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதாகவே ஊடகங்கள்  தெரிவித்தன. ஆனால், பல மணி நேரங்கள் கழித்து, அல் ஜஸீரா இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப்  பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்தவுடன், இது தீவிரவாத தாக்குதலாக மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டது.  மேற்கத்தியர்களின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருப்பதும், அதைக் கொண்டு, அவை இஸ்லாத்தை இழிவுபடுத்த நினைப்பதையும், முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் மத்தியில்  பகைமையை ஏற்படுத்த முயல்வதையும் இது தெள்ளத்தெளிவாக காட்டுகின்றது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில் இதைக் கொண்டு அவர்கள் நினைத்தால் மதக்கலவரங்களை ஏற்படுத்தி ஓரு நாட்டை எளிதில் சீர்குலைத்துவிடலாம். முஸ்லிம் அல்லாதவர்கள் செய்யும் இது போன்ற படுகொலைகளை ஒருபோதும் தீவிரவாத செயல்களாக அழைக்கப்படுவதில்லை; எந்த ஒரு மதத்தையும் இணைத்தும்  சொல்லப்படுவதில்லை. ஆனால் சில முஸ்லிம்கள் அவ்வாறு செயல்பட்டால் அதையும் இஸ்லாத்தையும் இணைத்து பேசுவதுமில்லாமல் தீவிரவாத செயலாக உடனடியாக அறிவிக்கப்படுகிறது.  பரகோய் நகரில்  ஜூலை  2012 -இல் தொடுக்கப்பட்ட தாக்குதலில் 42 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆனால்  எந்த ஒரு பத்திரிகையும் அதனை தீவிரவாத தாக்குதலாக அறிவிக்கவில்லை.  அனைத்து வகையான தீவிரவாத செயல்களும் இஸ்லாத்திற்கு எதிரான ஒன்றே ஆகும் என்பது எல்லோரும் அறிந்த விசயமாகும்.ஆனால் மேற்கத்திய நாடுகள் “தீவிரவாதம்” என்னும் வார்த்தைக்கு தனிப்பட்ட அர்தத்தை வைத்துள்ளது. முதலாளித்துவத்திற்கு எதிராக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களை தீவிரவாதிகள் என்பதாக சித்தரிக்கின்றனர்.உதாரணமாக  பிரிட்டனின் காலனியாக்கத்திற்கு எதிராக போராடிய கென்யாவின் மாவ் மாவ் போராளிகளை பிரிட்டன் தீவிரவாதிகள் என்றே அழைத்தது. இஸ்லாம் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சித்தாந்தம் என்பதை இவர்கள் அறிந்துவைத்துள்ளனர். எனவேதான் முதலாளித்துவம் செய்து வரும் அநீதிகளுக்கும் ஊழல்களுக்கும் எதிராக முஸ்லிம்கள் ஏதாவது பேசினால் கூட தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.
மூன்றாவதாக, பல்லாயிரக்கணக்கான  ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் ஆகியோர்களை இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் , யெமன் போன்ற  நாடுகளில் கொன்று குவித்த இரத்தக்கறைகளை  தங்கள் கைகளில் சுமந்துகொண்டே  இவர்கள், வெஸ்ட் கேட்  தாக்குதல் சம்பவத்தில் மரணித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக வருத்தம் தெரிவித்தனர். இது போன்ற  முதலை கண்ணீர் வடிக்கின்ற மேற்கத்திய தலைவர்களின் செயல், மனித உயிர்களின்பால்  அவர்கள் கொண்டுள்ள பொய்யான அக்கறையை காட்டுகிறது . இதே தலைவர்கள் தான் முஸ்லிம் நாடுகளின்  ஆட்சியாளர்களாகிய தங்களுடைய ஏஜெண்டுகளுக்கு, அனைத்து வகையான அத்துமீறல்களுக்கும் படுகொலைகளுக்கும் ஆதரவும்  ஊக்குவிப்பும் அளித்து வருகின்றனர்.  மேலும் கொடுங்கோலன் பஸர்  அல் அசாதிற்கு   பொதுமக்களின் மீது இரசாயண ஆயுதம் பயன்படுத்தவும் அனுமதி அளித்து வருகின்றனர். கென்ய மக்கள் ஒரு புறம் இரத்த தானத்திற்காகவும் காயமடைந்தவர்களின் உதவிக்காகவும் பல இடங்களில் ஒன்று கூடும் வேளையில், இதே தலைவர்கள் கென்யாவில் இருக்கும் தங்கள் நாட்டு பிரஜைகளை மக்கள் அதிகமாக  கூடுகின்ற இடங்களை  தவிர்க்குமாறும், பாதுகாப்பு காரணத்திற்காக முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தி வருவது அவர்களின் வெளிவேஷத்தையே காட்டுகிறது. இத்தோடு  நில்லாமல் பயண ஆலோசனையாக யாரும் எதிர்வரும் காலங்களில்  கென்யா செல்ல வேண்டாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் கென்யாவின் வளங்களை கொள்ளையடித்து சுரண்டிவரும் தங்கள் நாட்டைச்சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்களின் நிறுவனங்களை மூடும்படியோ அல்லது அதைப்போன்ற வேறு எந்த ஆலோசனையையோ இவர்கள் வெளியிடவில்லை.
முடிவாக, தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என்கின்ற போர்வையில் மேற்கத்திய நாடுகள் கென்யாவிற்குள் புக  முயல்வது அதன் வளங்களை கொள்ளையடிப்பத்ற்காகவே ஆகும். முதலாளித்துவம் உலக அமைதியையும் பாதுகாப்பையும் தருவதில் தவறிவிட்டது. மனிதர்களை  மதம்,இனம்,கோத்திரம் ஆகியவைகளை கொண்டு பிரித்து வைத்திருக்கும் இந்த சித்தாந்தம் உலகில் இப்போது நாம் பார்த்துவருவதைப்போல் ஒரு போதும் அமைதியை நிலைநாட்டாது, நிலைநாட்டவும் விடாது. “war on terror”என்ற தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்பது மீண்டும் இஸ்லாம் எழுச்சி பெற்று  தலைமைத்துவ சித்தாந்தமாக மேலோங்கி, உலகையும் மனித வாழ்வின் அனைத்து விவகாரங்களையும் வழிநடத்தி மனிதனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைவதை தடுத்து நிறுத்துவத்ற்காகவே ஆகும். தொடர்ந்து 13 நூற்றாண்டுகளாக  இஸ்லாம் உலகில் ஆட்சியதிகாரம் செய்து உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் பரப்புவதிலும், சமுதாயங்களை மதம்,இனம்,கோத்திரம் மற்றும் அந்தஸ்து ஆகிய வேறுபாடின்றி ஒருமித்த சமுதாயமாக ஒன்றினைப்பதில் வெற்றி கண்டது. இதைப்போன்றே மீண்டும்  வர இருக்கின்ற இஸ்லாமிய அரசு மீண்டும் அதைப்போன்று உலகில் செழிப்பையும் அமைதியையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment