Mar 22, 2014

சவுதி அரேபிய அரசை மிரட்டும் இரண்டு மந்திரங்கள் - “இஸ்லாமிக் கிலாபா” & “இஸ்லாமிக் எமிரேட்ஸ்”


சவுதி அரேபியாவின் நீதிமன்றம் 28 பேருக்கு சிறைத்தண்டனையை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தமை, மாட்சிமைமிகு ஆட்சியாளர்களிற்கு எதிரான கருத்துக்களை பரப்பியமையும், அவர்களிற்கு எதிராக செயற்பட்டமையும், பயங்கரவாத அமைப்புக்களிற்கு ஆயுத உதவி, நிதி உதவி என்பவற்றை வழங்கியமை, சிரியா ஈராக் ஆப்கானிஸ்தான் லிபியா போன்ற நாடுகளிற் போராளிகளை அனுப்பியமை போன்ற பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது.

அன்றைய ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க ஆயுதங்களை உஸாமா பின் லாதின் போன்ற பல செல்வாக்குமிக்க சவுதியர்கள் ஜித்தா கடற்தளம் ஊடாக ஆப்கானிஸ்தானுள்ளும், பாகிஸ்தானுள்ளும் விநியோகம் செய்த போது அதனை அனுமதித்த சவுதிய அரசு தான் அதே செயற்பாட்டினை மேற்கொண்ட இந்த நபர்கள் மீது தண்டனைகளை விதித்துள்ளது.

சிரியாவில் பஸர் அல்-அஸாத்தின் அரசிற்கு எதிராக போராடுவதற்கு F.S.A.-யின் போர்வலு போதாது என்ற C.I.A.-யின் ரிப்போட்டிற்கு அமைய பல இஸ்லாமிய குழுக்களை ஜிஹாத் என்ற பெயரில் கட்டாருடனும் அமெரிக்காவுடனும் சேர்ந்து ஹோம்ஸில் தரையிறங்கியதும் இதே சவுதி அரேபிய அரசே. அவர்களிற்கான ஆயுதம், நிதி, போராளிகள் போன்றவர்களை வழங்கியது. மார்க்க அடிப்படைவாத முத்தவாக்கல் சிரிய ஜிஹாத்திற்கு ஆள்திரட்டி அனுப்பிய போது அதனை அனுமதித்த சவுதி அரசு இப்போது யாரெல்லாம் சிரியாவிற்கும், ஈராக்கிற்கும், யெமனிற்கும், லிபியாவிற்கும் அங்குள்ள முஜாஹித்களிற்கு உதவ பகிரங்கமாக செயற்பட்டார்களோ அவர்களையெல்லாம் இப்போது பிடித்து சிறையில் தள்ளியுள்ளது.

சிரியாவில் ஆப்கானிஸ்தான் போன்று மண் விடுதலை என்ற இலக்கில் இருந்து மாறி “இஸ்லாமிய கிலாபா”, “இஸ்லாமிய எமிரேட்ஸ்” என்ற இரு சிந்தனைகளின் பாதையில் போராட்டம் வழி நடாத்தப்பட்ட போது விழித்துக்கொண்டது அரேபியாவின் மன்னராட்சி மட்டுமல்ல, மேற்கின் ஜனநாயகம், ஸியோனிஸம், பிறீமேஷ்ன் என பல தாகூத்திய சக்திகளும் கூட. தங்கள் மன்னராட்சியின் ஆயுள் இதனால் பாதிக்கப்படும் என்று உணர்ந்தவுடன் இந்த கைதுகளும் தண்டனைகளும் நிகழ்ந்துள்ளன.

13 பேர் கொண்ட குழு ஒன்றை சவுதி அரசு கைது செய்த போது அதில் 08 சவுதி அரேபியர்கள், 02 ஜோர்தானியர்கள், 02 சிரியர்கள், 01 எகிப்தியர் அடங்கியிருந்தனர். இவர்களிற்கு 03 முதல் 14 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அல்-காயிதாவின் அனுதாபிகள் எனும் ஸிம்பதைசர்ஸ், அவர்களின் முகாம்களிற்கு நிதி வழங்கியவர்கள் என பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது.

இவற்றை விட “மனி லோன்டரிங்” செயற்பாடுகளில் ஈடுபட்ட சவுதியர்கள் பலரையும், உலகின் ஏனைய பிரதேசங்களில் நடக்கும் இஸ்லாமிய போராட்டங்களிற்கு சவுதி அரேபியாவில் நிதி திரட்டி அதனை சட்டவிரோதமான முறையில் அந்தந்த இடங்களிற்கு அனுப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சவுதி அரேபியர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சவுதி அரேபியன் பிரஸ் ஏஜென்ஸி உறுதி செய்துள்ளது.

சில வாரங்களிற்கு முன்பு தான் சவுதி அரேபியா பயங்கரவாத இயக்கங்கள் என்ற பெயரில் சில அமைப்புக்களை தடைசெய்து கறுப்பு பட்டியலில் சேர்த்தது. குறிப்பாக அல்-காயிதா, இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம், ஹிஸ்புல்லாஹ், யெமனிய அல்-ஹுதி அமைப்பு போன்றவையும், சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாகாணத்தில் செயற்படும் ஹிஸ்புல்லாஹ் சார்பு சவுதி ஷியாக்கள், அது போலவே அல்-காயிதாவின் குடையின் கீழ் இயங்கும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுமாகும்.

இப்போது சவுதி அரேபிய அரசு தனது சிம்மாசனத்தை பாதுகாக்கும் பொருட்டு வேட்டையை ஆரம்பித்துள்ளது. ஆனால் சாதாரண சவுதியர்கள் இது பற்றி உணராமல் வழக்கம் போல் வாழ்கின்றனர். புட்போல் மெட்சுகளும், சொப்பிங் மோல்களும் இருந்தால் போதுமே. அது தானே உலகம் அவர்களிற்கு.




http://khaibarthalam.blogspot.ae/2014/03/28.html

No comments:

Post a Comment