Mar 25, 2014

சமூகமாற்றம் குறித்த ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பார்வை....?

தனிமனிதர்கள் மாறினால் சமூகம் மாறிவிடும் எனும் கருத்து இன்று பரவலாக உணரப்படும் ஒரு சிந்தனையாகும். இது அடிப்படையில் முதலாளித்துவச் சிந்தனையின் “சமூகம்” தொடர்பான அடிப்படை எண்ணக்கருவாகும். ஏனெனில் இவர்கள் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்ட வாழ்வொழுங்கை (life System) முன்வைக்கும் சிந்தனைப் போக்குடையவர்கள்.

உண்மையில் இஸ்லாம் தனிமனிதனுக்குள் காணப்படும் உணர்வுகள் (சந்ததியை பெருக்கும் உணர்வு (Procreational Instinct) சொத்துச் சேர்க்கும் உணர்வு (Accumulating wealth) ஆத்மீக உள்ளுணர்வு (religious instinct) மற்றும் பாதுகாப்பு உணர்வு (Protection) ) போன்ற உணர்வுகளையும் அதனை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய சிந்தனைகளையும் தனிமனிதனுக்குள் “குர்ஆன் சுன்னா அடிப்படையில்” ஒழுங்குபடுத்தும் வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் “ஒரு வாழ்க்கைச் சித்தாந்தம்” என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் உணரவேண்டும்.

இவ்வாறு சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு முஸ்லிமின் உணர்வையும், சிந்தனையையும் இஸ்லாமிய வரையறைக்குள் வைத்துக்கொண்டு வாழ்வில் இஸ்லாத்தை கடைப்பிடித்து ஒழுகிட அதற்கான வாழ்வொழுங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு மனிதனது வாழ்வொழுங்கை (அரசியல், சமூகவியல், பொருளியல் மற்றும் கல்வி முறைமைகள் (Systems)) நடைமுறைப்படுத்த அவசியம் அரசு இருக்கவேண்டும். ஏனெனில் இதனை நடைமுறைப்படுத்த அவசியம் அதிகாரம் தேவை.

ஒரு நாட்டினது அரசு குப்ரிய சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்டு அச்சிந்தனையை அடிப்படையாக கொண்ட அரசியல், பொருளியல், சமூகவியல் மற்றும் கல்விஒழுங்கை நடைமுறைப்படுத்தும் வேளையில் ஒரு முஸ்லிம் தனது தனிப்பட்ட வாழ்வை குர்ஆன் சுன்னாவின்படி முடிந்தளவு ஒழுங்குபடுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் இஸ்லாமிய சரீஆவை அவனால் அமுல்படுத்த முடியாது என்பது ஒரு பொதுவான உண்மை.

இந்நிலையில் அவனது வாழ்வில் ஹறாம் ஹலாலை பின்பற்றி வாழ்வது ஒரு சவாலாக மாறிவிடும். அவன் வாழும் சமூகம் அவ்வரசினால் அச்சுறுத்தப்படும் நிலைக்குத் தல்லப்படுவான். இதனை இன்று நாம் இலங்கை போன்ற சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாட்டில் உணர ஆரம்பித்துவிட்டோம். இப்போது விட்டுக்கொடுப்பை நோக்கி முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

“தாடியும் தொப்பியும், ஜூப்பாவும்” முஸ்லிம் சமூகத்துக்குள் வளர்ந்து வருவது அச்சுறுத்தலாக உணரப்படுகிறது. முஸ்லிம்களுக்கு என “தனியான வங்கிமுறைகளும், ஹலால் முறைகளும்” அச்சுறுத்தலாக உணரப்பட்டு முஸ்லிம் சமூகம் இலங்கைச் சமூகத்தில் இருந்து பிரிந்துவிடும் அபாயமாக இன்று உணரப்படுகிறது. பெண்கள் மத்தியில் “அபாயா மற்றும் நிகாப் கலாச்சாரம்” அதிகரிக்கும் போது அதுவும் பாரிய அச்சுறுத்தலாக உணரப்பட்டு அதற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனும் போக்கு இன்று இலங்கையில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இது பொதுவான ஒரு அம்சமாக இன்று உலகில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

முஸ்லிம்கள் இவ்வாறு ஒரு அரசினது “அரசியல், பொருளியல் மற்றும் சமூகவியல் ஒழுங்கிற்கு” மாற்றமான “இஸ்லாமிய ஒழுங்கை நோக்கி” நகரும்போது இவ்வாறு ஏற்படுகிறது. அத்துடன் முஸ்லிம்களை “தீவிரவாதிகளாகவும் அவர்களது சரீஆ அடிப்படையிலான வாழ்வொழுங்கு கொச்சைப்படுத்தப்படும் நிலையை நோக்கியும் கோசங்களும், அழைப்புக்களும் குப்ரிய சமூகத்தினுள் விதைக்கப்பட ஆரம்பித்து விட்டது. அவ்வாறாயின் இதனை நாம் எவ்வாறு எதிர்கொண்டு பாதுகாக்க முடியும்?

இதற்கு இஸ்லாம் உலகில் ஒரு முன்மாதிரியான தலைமைத்துவத்தை கொண்டு உலகில் ஒரு சக்தியாக நிலைபெற்றிருக்க வேண்டும். அது நபி வழியிலான ஒரே இஸ்லாமியத் தலைமையாக இருக்கவேண்டும். இன்று அதனை நாம் இழந்துள்ள நிலையில் அதன் மீள் உருவாக்கத்திற்கு உழைக்க பாடுபட கடமைப்பட்டுள்ளோம். அதுவே இஸ்லாத்தை முழுமையாக, வாழ்வின் அனைத்துத்துறைகளிலும் எடுத்து நடக்க வழிவகைகளை ஏற்படுத்தித்தரும் என்பதனை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் இலங்கையில் “இஸ்லாத்தை ஒரு மாற்றீட்டு வாழ்க்கை முறையாக, வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்கு படுத்தும் வாழ்கைச் சித்தாந்தமாக” தஃவாச்செய்து பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்துவோம். இதுவே நபி (ஸல்) மக்காவில் சிறுபான்மையாக வாழ்ந்த போது அவர்கள் செய்த மிக உண்ணதமான தஃவாவாகும்.

மேலும், முஸ்லிம் உம்மத்தில் ஒரே இஸ்லாமியத் தலைமையாக இருக்கவேண்டும், அதுவே முஸ்லிம்களது கண்ணியம் மற்றும் பாதுகாப்பு என்பது குறித்த “ஹதீதுகளையும்” “இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும்” நாம் அவசியம் கருத்திற்கொண்டு ஆக்கபல தஃவா முன்னெடுப்புக்களை மேற்கொள்வோம்!

அபூ ஹூரைரா (றழி) இடம் இருந்து அஃராஜ் அறிவிக்கிறார்கள்.
“நிச்சயமாக இமாம் என்பவர் கேடயமாவார். அவருக்கு பின்நின்று மக்கள் போர்புரிகிறார்கள். இன்னும் அவரைக்கொண்டே மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.” (முஸ்லிம்)

மேலும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்)அவர்கள் தனது அல் மவ்சூஆ அல் அக்தியா என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்!
'இமாம் (கலீபா) நியமிக்கப்படாவிட்டால் மக்களுடைய விவகாரங்களில் பித்னா ஏற்பட்டுவிடும்.'

மேலும், இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
'நிச்சயமாக கிலாபா என்பது மார்க்கத்தின் தூண்களில் ஒரு தூணாகும் அதைக்கொண்டுதான் முஸ்லிம்களின் ஆற்றல் உறுதிபெறும்'

மேலும், இப்னு தைமியா தனது அஸ்ஸியாஸா அஷ் ஷர்இய்யா எனும் நூலில் இவ்வாறு கூறுகிறார்கள்.
'மக்களின் விவகாரங்களில் பொறுப்பேற்கும் ஒரு தலைமைத்துவம் அமைவது கடமைகளில் மிகவும் தலையாய கடமையாகும். இல்லாவிடில் தீன் என்பது நிலைநாட்டப்பட முடியாத ஒன்றாகிவிடும்

No comments:

Post a Comment