Jul 20, 2014

சுட்டு வீழ்த்தப்பட்ட MH17 - மலேசியன் எயார்லைன்ஸ் விமானமும் அதன் பின்னாள் உள்ள ஏகாதிபத்திய சதிகளும்...!!



கிழக்கு உக்ரேனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 துயரகரமாக வெடித்ததன் மீது ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளியன்று வெளியிட்டிருந்த கருத்துக்கள், அவை பதிலளித்திருந்ததையும் விட அதிகமாக கேள்விகளை எழுப்பியுள்ளன.

அந்த விமானம் சுடப்பட்டதற்கு ரஷ்யாவை-ஆதரிக்கும் கிழக்கு உக்ரேனிய பிரிவினைவாத சக்திகளையும், ரஷ்யாவையும் குற்றஞ்சாட்டியும், அந்த பிரிவினைவாதிகளை மேற்கத்திய-ஆதரவிலான கியேவ் ஆட்சியிடம் சரணடையுமாறு முறையிட்டும், அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் ஊடகங்களும் வெள்ளமென திறந்துவிட்டிருந்த மனதை-மரத்துப் போகச் செய்யும் அதே பிரச்சாரத்தையே ஒபாமாவும் தொடர்ந்தார். எவ்வாறிருந்த போதினும், இந்த பிரச்சார நடவடிக்கையில் உண்மையில் எந்தவொரு அடித்தளமும் இல்லை என்பதையும் மற்றும் வாஷிங்டனை அது ரஷ்யா உடன் ஒரு வெடிப்பார்ந்த மோதலுக்குள் இட்டுச் செல்கிறது என்பதையும் அவரது கருத்துக்களே அடிக்கோடிட்டுக் காட்டின.

ஒபாமா கூறினார்: “இதுவரை நமக்கு என்ன தெரியுமோ அது தான் நம் வசம் இருப்பது. அந்த விமானம் ரஷ்ய-ஆதரவிலான பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனுக்குள் இருக்கும் ஒரு பகுதியிலிருந்து,தரையிலிருந்து-வானில் செலுத்தப்பட்ட ஒரு ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதை ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

கிழக்கு உக்ரேனில் ஒரு விமானம் சுடப்படுவது இது முதல்முறை அல்ல என்பதும் நமக்கு தெரியும். கடந்த பல வாரங்களாக, ரஷ்யா-ஆதரவிலான பிரிவினைவாதிகள் ஒரு உக்ரேனிய போக்குவரத்து விமானத்தையும் மற்றும் ஒரு உக்ரேனிய ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள், மேலும் ஒரு உக்ரேனிய போர் விமானத்தைச் சுட்டி வீழ்த்தியதற்கும் அவர்கள் பொறுப்பேற்று இருந்தார்கள். அனைத்திற்கும் மேலாக, இந்த பிரிவினைவாதிகள் ரஷ்யாவிடம் இருந்து ஒரு சீரான ஒத்துழைப்பைப் பெற்று வருகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்," என்றார்.

ஒபாமாவின் கூற்றுக்களை மீண்டும் கவனமாக படியுங்கள். ரஷ்ய-ஆதரவுப் படைகள் MH17ஐ ஒரு ஏவுகணை கொண்டு தாக்கியது என்பதை நிரூபிக்கும் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் சிறிய விமானம்-தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டு உயரம் குறைந்து பறந்த உக்ரேனிய இராணுவ விமானங்களைச் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள், ஆனால் இது 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய ஜெட் விமானத்தை அழிக்க அவர்கள் நோக்கம் கொண்டிருந்தார்கள் என்பதையோ அல்லது அதற்கான தகைமை பெற்றிருந்தார்கள் என்பதையோ அர்த்தப்படுத்தாது.

இவ்வாறான ஒரு நடவடிக்கையை வாஷிங்டன் ஒரு பாரிய பிரச்சார ஆயுதமாக கைகளில் எடுக்குமென்பதை அவர்கள் நன்கறிவார்கள்.
எந்த பகுதியிலிருந்து ஏவுகணை செலுத்தப்பட்டதோ அந்த பகுதி பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற ஒபாமாவின் வாதத்தைப் பொறுத்த வரையில், அதற்காக அவர் எந்தவொரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை என்பதோடு, கிழக்கு உக்ரேனில் நிலவும் குழப்பமான நிலைமைகளின் கீழ் இது ஒன்றையும் அர்த்தப்படுத்துவதாக இல்லை.

கியேவிற்கு விரோதமான பிரிவினைவாதிகளின் இறுக்கமான பிடியில் இருக்கும் டொனெட்ஸ்க் நகரில், விமான நிலையமோ கியேவிற்கு விசுவாசமான படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, அங்கிருந்து தான் அவர்கள் வழக்கமாக அந்நகரின் மீது குண்டு வீசுகிறார்கள். டொனெட்ஸிற்கு அருகிலிருந்து ஒரு BUK ஏவுகணையால் MH17 அழிக்கப்பட்டது என்று கருதப்படுகின்ற நிலையில், உண்மையில், அதற்கு சற்று முன்னதாக கியேவ் ஆட்சி அப்பிராந்தியத்தில் அதன் விமான-எதிர்ப்பு பேட்டரிகளை (anti-aircraft batteries) கூடுதலாக பலப்படுத்தி இருந்தது.

குறிப்பிடத்தக்க விதத்தில், MH17ஐ யார் அல்லது எதற்காக சுட்டு வீழ்த்தினார்கள் என்பது குறித்து அவரது நிர்வாகத்திற்கு தெரியவில்லை என்பதை ஒபாமாவே ஒப்புக் கொண்டார். அவர் கூறுகையில், “தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையை யார் செலுத்தினார்களோ அவர்கள் என்ன நோக்கத்திற்காக செய்தார்கள் என்பதை அனுமானிப்பது இப்போதைக்கு மிகவும் முன்கூட்டிய அனுமானமாக இருக்குமென்று நான் கருதுகிறேன்... எந்த நபர் அல்லது நபர்களின் குழு, உங்களுக்குத் தெரியும், யார் அந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டார், எவ்வாறு அது நடந்தது என்பதை குறிப்பாக கண்டுபிடிப்பதைப் பொறுத்த வரையில்—அந்த விடயங்களை நாம் சேகரிப்பது தான், இந்த சம்பவத்தில் கூடுதல் தகவல்களாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்," என்றார்.

ஒபாமாவின் அறிக்கையை மீண்டும் கவனமாக படித்து பாருங்கள். அந்த சூழ்நிலைக்கேற்ற கருத்துக்களுக்கும், வார்த்தை பிரயோகங்களுக்கும் அப்பாற்பட்டு, அந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது குறித்து அவர் ஒன்றுமே கூறவில்லை. ஒபாமாவின் கருத்துக்கள் அவரது சொந்த ஐநா தூதரான சமந்தா பவாரின் கருத்துக்களோடு நேரடியாக முரண்படுகின்றன,அவர் வெறுமனே கூறுகையில், அந்த வெடிப்புக்கு ரஷ்யா தான் பொறுப்பு என்பதற்கு அங்கே "நம்பத்தகுந்த ஆதாரங்கள்" இருப்பதாக கூறியதோடு, “ரஷ்யாவால் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரமுடியும். இந்த யுத்தத்தை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வர வேண்டும்," என்றார்.

MH17 விபத்தைக் குறித்த ஒட்டுமொத்த செய்திகளின் மீதும் ஒரு கேள்விக் குறியை ஒபாமா வீசியிருந்தார்: “அத்தோடு அங்கே ஒருவேளை தவறான செய்திகள் இருக்குமோ என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எது உண்மையை அடிப்படையாக கொண்டது, எது வெறுமனே ஊகங்கள் என்பதை பிரித்துக் காட்டுவது மக்களுக்கு மிகவும் முக்கியமென்று நான் கருதுகிறேன்."

நிலைமைகளைக் குறித்து ஒபாமாவின் கணக்கிலிருந்து எழும் சித்திரம் குறிப்பிடத்தக்கதாகும். அவரே ஒப்புக் கொண்ட விதத்தில், MH17 விபத்திற்கு யார் பொறுப்பென்பது வெள்ளை மாளிகைக்கு தெரியாது என்ற நிலைமைகளின் கீழ் மற்றும் பலமான அரசியல் சக்திகளால் ஊடகங்களுக்கு தவறான செய்திகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று நம்பப்படுகின்ற நிலையில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ரஷ்யா உடனான ஒரு இராணுவ மோதலை நடத்த முயற்சித்து வருகிறார்கள்.
ஜேர்மன் அதிகாரிகளின் மீது உளவு பார்ப்பதற்கு முன்னால் சிஐஏ அவருக்கு தகவல் அளிக்க கருதவில்லை என்பது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில், ஒபாமா வெளிப்படையாக அவரது சொந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை கண்டறிய முயன்று வருகிறார்—இதற்கிடையில் ரஷ்யாவை பொறுப்பற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி வருகிறார்.

முறையாக கவனித்துப் பார்த்தால், MH17 ஒரு ஏவுகணையால் சுட்டு வீழ்த்துப்பட்டதற்கு சாத்தியமான எந்தவொரு விளக்கங்களும், மேற்கத்திய அதிகாரங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு நேரடி மோதலின் அபாயம் குறித்து மிக ஆழந்த கேள்விகளை எழுப்புகின்றன.
MH17ஐ சுட்டு வீழ்த்திய ஒரு BUK ஏவுகணை கியேவிற்கு விசுவாசமான படைகளால் கூட செலுத்தப்பட்டு இருக்கலாம், இருந்த போதினும் அதன் மீது அமெரிக்க ஊடகங்கள் பெரும் மவுனம் காத்து வருகின்றன. அத்தகைய ஒரு நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் உள்நோக்கம், அமெரிக்க ஊடக நடவடிக்கைகளிலேயே எடுத்துக்காட்டப்படுகிறது: அதாவது ரஷ்யாவை குற்றஞ்சாட்டுவது, உக்ரேனில் நேட்டோ தலையீட்டுக்கான பிரச்சாரத்தை அதிகப்படுத்துவது, மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அதிகளவிலான தடைகளைக் கொண்டு வர தயக்கம் காட்டி வருகின்ற வாஷிங்டனின் சில ஐரோப்பிய கூட்டாளிகளை அதன் தரப்பிற்குள் கொண்டு வர முயல்வது ஆகிய நடவடிக்கைகளிலேயே எடுத்துக்காட்டப்படுகின்றன.

கியேவ்-சார்பிலான படைகளே அந்த விமானத்தைச் சுட்டி வீழ்த்தி இருக்கலாம் என்பதன் மீதான மிக நிஜமான சாத்தியக்கூறுகளில், சிஐஏ நடைமுறைகளுக்கும், முன்னதாக பிளேக்வாட்டர் என்று அறியப்பட்ட அமெரிக்க நிறுவனத்தின் கூலிப்படைகள் மற்றும் ஐரோப்பிய உளவுப்படை முகமைகள் மற்றும் கியேவின் ஆயுதமேந்திய படைகளில் முன்னனியில் இருக்கும் பாசிச போராளிகள் குழுக்கள் ஆகியவற்றிற்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளும் கணக்கில் வருகின்றன. அது MH17இன் பயணிகள் மற்றும் விமானக்குழுவின் படுகொலையில் அமெரிக்க அரசின் பிரிவுகள் நேரடியாக உடந்தையாக இருந்து இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை உயர்த்துகிறது.

உலக கோப்பை மற்றும் பிரேசிலில் நடந்த ஒரு சர்வதேச உச்சி மாநாட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் விமானப் பாதையில், MH17 குறுகிய நேரத்திற்கு முன்னர்தான் கடந்திருந்தது என்பதும், MH17ஐ அழித்த ஏவுகணை தாக்குதல் புட்டினைக் குறி வைத்து நடத்தப்பட்டு இருக்கலாம் என்று மாஸ்கோவின் சில கன்னைகள் நம்புகின்றன என்றும் வெளியான ரஷ்ய ஊடக செய்திகள் குறிப்பாக முக்கியத்துவம் பெறுகின்றன. அத்தகைய செய்திகள் சரியானவையா என்பதைக் கண்டறிவது சாத்தியமில்லை. இருந்த போதினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை அமைப்புகள் ரஷ்ய அரசுத் தலைவரைக் கொல்லும் ஒரு கொலை முயற்சிக்கு ஒப்புதல் வழங்கி இருந்தன என்று ரஷ்ய அரசு பிரிவுகள் நம்புவதற்கு முன்வந்தால், அதன் தாக்கங்கள் மனதை உறைய வைப்பதாக இருக்கும்.

மறுமுனையில், அமெரிக்க பிரச்சார நடவடிக்கை வாதிடுவதைப் போல,ஒருவேளை, MH17 ரஷ்யாவின் தரப்பில் சாய்ந்திருக்கும் அல்லது நேரடியாக ரஷ்யாவினால் உதவியளிக்கப்படும் படைகளால் செலுத்தப்பட்ட ஒரு ஏவுகணையால் அழிக்கப்பட்டது என்றால், அது சம்பந்தப்பட்ட ரஷ்ய கன்னைகள் சுமார் 300 மக்களைப் படுகொலை செய்வதற்கான அவர்களின் விருப்பத்தை எடுத்துக்காட்டுவதன் மூலமாக என்ன சேதியை அளிக்க முயன்றன என்ற கேள்வியை எழுப்புகின்றது. அவ்வாறிருந்தால் நிச்சயமாக அது உக்ரேனிய நெருக்கடியை வாஷிங்டனை விட மாஸ்கோ அதிகளவில் கையிலெடுக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் என்பதோடு, நிலைமை அதிதீவிர அபாயகரமாக இருக்கிறது என்றாகும்.

ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டுவதற்கான அவற்றின் தாகத்தில், அமெரிக்க ஊடகங்களும் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களும், இந்த கேள்விகளில் முற்றிலுமாக ஆர்வமற்று இருப்பதாக தெரிகிறது. இந்த மனோபாவம் மேலோட்டமான சிந்தனையோடு கூடிய மற்றும் முற்றிலும் பொறுப்பற்ற தன்மையோடு இணைகிறது. MH17 பேரழிவால் ஏற்கனவே என்ன வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறதென்றால், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் ஆழ்ந்த நெருக்கடியும் மற்றும் உலகளாவிய யுத்தத்தின் அபாயமும் ஆகும்.


மூலம்:wsws.org

No comments:

Post a Comment