Sep 3, 2015

ஐந்து ஆண்டுகளில் காசா யாரும் வாழ முடியாத இடமாக மாறிவிடலாம்: ஐநா எச்சரிக்கை!!

இஸ்ரேலிய வான் தாக்குதலில் காசா பெரும் அழிந்துள்ளது.
               
மத்திய கிழக்கின் காசாவில் தற்போதைய கெடுபிடிகள் நீடித்தால் ஐந்து ஆண்டுகளுக்குள் அவ்விடம் ஆட்கள் வசிக்க முடியாத இடமாக மாறிவிடும் என்று ஐநாவின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
 
இஸ்ரேல் விதித்துள்ள தடைகள் மற்றும் அண்மைய காலத்தில் அங்கு செய்யப்பட்ட மூன்று இராணுவ நடவடிக்கைகள் காரணமாக காசாவின் சமூகப் பொருளாதாரக் குறியீடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி தொடர்பான ஐநா நிறுவனமான UNCTAD எச்சரித்துள்ளது.
காசாவை இஸ்ரேல் கைப்பற்றிய கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் முன்பில்லாத அளவில் நிலைமை மோசமாக உள்ளதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உணவு, உறைவிடம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லாமல் காசாவில் மக்கள் பலர் வாடுவதாகவும், அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாகவும், பொருளாதார உற்பத்தி என்று எதுவுமே இல்லை என்றும் UNCTAD குறிப்பிடுகிறது.

சர்வதேச உதவிகளால் காசாவுக்கு நிலைக்கக்கூடிய நெடுங்காலத் தீர்வாக இருக்க முடியாது என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

செய்தி : BBC

No comments:

Post a Comment