Showing posts with label ஒபாமா. Show all posts
Showing posts with label ஒபாமா. Show all posts

Jun 16, 2016

ஜப்பான் நோக்கிய அமெரிக்க வருகை....!!

 
பராக் ஒபாமா, கடந்த மாத இறுதியில், ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு விஜயம் செய்யும் பதவியிலிருக்கும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஆக இருக்கிறார். அமெரிக்க இராணுவத்தால் ஆகஸ்ட் 6, 1945 இல் ஹிரோஷிமா மீதும், அதற்கு மூன்று நாட்கள் கழித்து மற்றொரு ஜப்பானிய நகரமான நாகசாகி மீதும் அணுகுண்டு வீசி அழித்தமை, 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர் குற்றங்களின் ஒன்றாக இருக்கின்றது. 

சுமார் 200,000 பேர் கொல்லப்படுவதற்குக் காரணமான அந்த இரண்டு பாதுகாப்பற்ற ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை, இராணுவரீதியில் தேவையற்ற ஓர் நடவடிக்கை என்பதை, 71 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்கா இறுதியில் ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டதோ என்று ஒருவர் நினைக்கலாம். அதுபோன்ற எதுவும் நடக்காது. "இரண்டாம் உலக போரின் முடிவில் அணுகுண்டு பயன்படுத்திய முடிவை" ஒபாமா "மீண்டும் கருத்துக்கூற மாட்டார்,” என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. எனவே எந்தவிதமான மன்னிப்புக்கோரலும் இருக்காது.

ஜப்பானின் படையெடுப்பையும் மற்றும் அடுத்து நிகழவிருந்த அமெரிக்கர்களின் உயிரிழப்பையும் தடுப்பதற்கு, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அழிப்பதே ஒரேயொரு மாற்றீடாக இருந்தது என்று அறிவித்து, ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல்கள் நடத்தியமை சரியானதே என்று அமெரிக்க அரசாங்கம் தசாப்தங்களாக வலியுறுத்தி வந்துள்ளது.

அந்த குண்டுவீச்சுக்களின் சட்டபூர்வத்தன்மை மீது கேள்வி எழுப்புவதற்கான ஒவ்வொரு முயற்சியும், வெறித்தனமான மற்றும் நேர்மையற்ற பிரச்சாரத்தைச் சந்தித்துள்ளன, அதாவது அத்தகைய பிரச்சாரம் 1995 இல் அந்த குண்டுவீச்சு நடவடிக்கையின் 50 வது நினைவாண்டை நினைவுகூற ஸ்மித்சோனியன் அமைப்பினது (Smithsonian Institution) கண்காட்சியை இரத்து செய்யக் கூட நிர்பந்தித்தது. இத்தகைய குற்ற-ஒப்புதல்கள் சம்பந்தமாக நோட்ர் டேம் பல்கலைக்கழகத்தின் மதகுருவான Miscamble இன் ஒரு கருத்துரை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் பிரசுரிக்கப்பட்டது. அதில் Miscamble பின்வருமாறு அறிவிக்கிறார், “அணுகுண்டு வீச்சுக்கு மன்னிப்புக் கோர அங்கே எந்த காரணமும் இல்லை,” ஏனென்றால் "[ஜனாதிபதி ஹேரி எஸ்.] ட்ரூமன் அமெரிக்கர்களின் கோரமான உயிரிழப்புகளைக் குறைக்கவும் மற்றும் பசிபிக் போரை சாத்தியமானளவிற்கு விரைவாக வெற்றிகொள்ள உதவுவதற்காகவும் தான், இராணுவரீதியிலும் மற்றும் தொழில்துறை ரீதியிலும் இரண்டு விதத்தில் பிரதான இலக்குகளாக இருந்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது குண்டுவீச அனுமதியளித்தார் அது ஒருசில ஜப்பானியர்களின் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது,” என்றார். 

இதே உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், நியூ யோர்க் டைம்ஸ் இவ்வாரம், "ஜப்பானின் பிரதான தீவான ஹோன்சூ (Honshu) மீதான படையெடுப்பில் இழந்திருக்கக்கூடிய பத்தாயிரக் கணக்கான அமெரிக்கர்களது உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே குண்டுவீசும் அம்முடிவு" எடுக்கப்பட்டதாக வலியுறுத்துவோர்களை மேற்கோளிட்டது. இத்தகைய கூற்றுகளில் சிறிதும் நம்பகத்தன்மை கிடையாது.

இவை, அத்தாக்குதல்களுக்கு முன்னதாக, வாஷிங்டன் மற்றும் அமெரிக்க இராணுவ உயர் கட்டளையகத்தில் நடந்த விவாதங்களது உண்மையான உள்ளடக்கத்துடன் சம்பந்தமின்றி உள்ளன. 1945 இன் ஆரம்பத்தில், அமெரிக்கா மொத்த ஜப்பான் மீதும் வான்வழி மேலாதிக்கம் கொண்டிருந்ததுடன், ஜப்பானிய பெருநிலத்தின் வான் எல்லைக்குள் பல்வேறு தீவுகளைக் கைப்பற்றி இருந்தது. ஏறத்தாழ அதே நேரத்தில், குறிப்பிட்ட இராணுவ இலக்குகளைத் துல்லியமாக குண்டுவீசி தாக்குவதிலிருந்து, அமெரிக்கா, இறுதியில் சுமார் 100,000 பேர் கொல்லப்பட்ட டோக்கியோ மீதான மார்ச் 9-10 குண்டுவீச்சும் உள்ளடங்கலாக 67 ஜப்பானிய நகரங்களை தரைமட்டமாக்கிய கொடூரமான பரந்த குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கு மாறியது. அமெரிக்க மூலோபாய விமானப்படை கட்டளையகத்தின் தலைவர் தளபதி கர்டிஸ் லெமேவிடம் (Curtis Lemay) 1945 இல் இன்னும் எத்தனை காலம் போர் தொடருமென வினவிய போது, அவர், “நாங்கள் ஒன்றுகூடி அது குறித்து சிறிது சிந்தித்தோம், செப்டம்பர் 1 வாக்கில் பெரும்பாலான இலக்குகளைச் தாக்கியழித்திருப்போம் என்பதற்கான அறிகிறிகள் காணப்பட்டன, அந்த இலக்குகளைக் காலியாக்கியப் பின்னர், போர் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியாது,” என்றார்.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான குண்டுவீச்சுக்கான காரணங்கள் மீது, அமெரிக்க உயர் கட்டளையகத்திற்கு உள்ளேயே சவால் விடுக்கப்பட்டன. ஒரு ஜோடி ஜப்பானிய நகரங்களைச் சாம்பலாக்கியமை மிகக் குறைந்த இராணுவ முக்கியத்துவமே கொண்டிருந்தது என்று அது வலியுறுத்தியது. படைத்துறைசாரா மக்கள் மீது குண்டு வீசுவதென்ற ஜனாதிபதி ட்ரூமெனின் உள்நோக்கத்தை தெரிய வந்ததன் மீது தளபதி ட்வைட் டி. ஈசன்ஹோவர் கூறுகையில், அவர் “மன அழுத்தத்தை” உணர்ந்ததாக தெரிவித்தார். “ஜப்பான் ஏற்கனவே தோற்றுப்போயிருந்தது என்ற எனது நம்பிக்கையின் அடிப்படையில் அந்த குண்டுகளை வீசுவது முற்றிலும் அவசியமற்றது என்று கருதினேன், இரண்டாவதாக ஏனென்றால் அமெரிக்கர்களைக் காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாக, இனியும் கட்டாயமாக அவசியம் பயன்படுத்த தேவையற்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தி உலக கருத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குவதை எமது நாடு தவிர்க்க வேண்டுமென நான் விரும்பினேன், இவை எனது ஆழ்ந்த அதிருப்திகளாக இருந்தன,” என்று தெரிவித்தார். 

  
ஏனைய உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அடுத்தடுத்து அதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டனர். அமெரிக்க பசிபிக் கடற்படையின் தலைமை தளபதி செஸ்டெர் டபிள்யூ நிமிட்ஸ் கூறுகையில், அப்போருக்குப் பின்னர் "முழுமையாக ஓர் இராணுவ கண்ணோட்டத்தில் பார்த்தால், ஜப்பானைத் தோற்கடிப்பதில் அணுகுண்டு எந்த தீர்க்கமான பங்கும் வகிக்கவில்லை,” என்றார். ஜனாதிபதி ட்ரூமெனின் முப்படைத் தளபதி அட்மிரல் வில்லியன் டி லீஹி, “ஜப்பானுக்கு எதிரான எங்களின் போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி எந்தவிதத்திலும் முக்கியமானரீதியில் உதவியாக இருக்கவில்லை,” என்பதை ஒப்புக் கொண்டார். ஏப்ரல் 12, 1945 இல் ஜனாதிபதி பிரான்ங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இன் மரணம், ஹேரி எஸ். ட்ரூமெனை ஜனாதிபதியாக கொண்டு வந்தது. இந்த மட்டுப்பட்ட இன்னும் சொல்லப்போனால் அறிவில்லாத அம்மனிதர், மிசோரி ஜனநாயக கட்சி அரசியல் எந்திரத்தை நடத்தி வந்தவரும், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவருடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக, "பெண்டெர்காஸ்டின் செனட்டராக" (The Senator from Pendergast) கூறப்பட்டார். 

  அணுஆயுதங்களை பயன்படுத்துவதற்கான தார்மீக உள்நோக்கங்களை ட்ரூமென் முற்றிலுமாக புறக்கணித்திருந்தார். அவரது ஆலோசகர்களில் ஒருவர் பின்னர் நினைவுகூர்கையில், ஹிரோஷிமா மீது குண்டுவீசியதைக் குறித்து ட்ரூமெனுக்கு தெரிய வந்த போது, அவர் "அதனால் வியக்கத்தக்களவில் உற்சாகமடைந்தார், நான் அவரை சந்தித்த போது மீண்டும் மீண்டும் அதை குறித்து என்னுடன் உரையாடினார்,” என்றார். அந்த குண்டை பயன்படுத்த ட்ரூமென் முடிவெடுப்பதற்கு முன்னரே, ஜப்பானிய அரசாங்கம் பல மாதங்களாக அவர்கள் சரணடைய விரும்புவதாக பலமாக சமிக்ஞை காட்டி, அவர்களது பேரரசை மட்டும் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்குள் அந்த பேரரசை அதனிடமே ஒப்படைக்கும் எண்ணத்திற்கு வெள்ளை மாளிகை வந்திருந்தது, ஆனால் இந்த உண்மையை ஜப்பானுக்கு தெரிவிப்பதா வேண்டாமா என்பதில் பிளவுபட்டிருந்தது.

இறுதியில் ஜனாதிபதி ட்ரூமென் முதலில் குண்டுவீசவும், பின்னர் ஜப்பானிய அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை தெரிவிக்கவும் முடிவெடுத்தார். அப்படியானால், உலகின் கண்ணுக்கு முன்னால், எந்தவித இராணுவ நியாயப்படுத்தலும் இல்லாமல், என்றென்றைக்கும் அதை இழிவாக முத்திரை குத்தும் ஒரு நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் ஏன் நடத்தியது? போர் முடிவுக்கு வந்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான மோதல் தீவிரமடைந்திருந்தது. யால்டா உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு இணங்க, சோவியத் ஒன்றியம் அந்த உடன்படிக்கையில் அதற்கு வழங்கப்பட்ட பிராந்தியங்கள் மீது உரிமைகோரி, ஜப்பான் மீது படையெடுக்க இருந்தது மற்றும் போரின் போது அது ஏற்றிருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவில் ஓரளவிற்கு பாரிய பாத்திரம் வகிக்க விரும்பியது. சமீபத்தில் இரண்டு வரலாற்றாளர்கள் முன்வைத்ததைப் போல, அணுகுண்டை பயன்படுத்தியமை, “அமெரிக்காவின் முதல் பனிப்போர் நடவடிக்கையாகும்.” 

ஜேர்மனியை சோவியத் ஜெயித்திருந்தாலும், அமெரிக்கர்களே உலகின் எஜமானர்கள் என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அது சோவியத்திற்குக் கொடுக்க விரும்பியது. ஒட்டுமொத்த மனிதயினத்திற்கும் அச்சுறுத்தும் மற்றும் கட்டளையிடும் வகையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அழிக்கப்பட்டமை, உலகின் சவாலுக்கிடமற்ற ஏகாதிபத்திய மேலாதிக்க சக்தியாக அமெரிக்கா நுழைந்ததை அறிவித்தது. ஜனநாயகம் என்ற மெல்லிய மறைப்பின் பின்னால், அமெரிக்கா அதன் சொந்த நலன்களைப் பேணுவதற்கும் விரிவாக்குவதற்கும், குற்றத்தின் அளவைக் குறித்தோ அல்லது எத்தனை மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதைக் குறித்தோ கவலைப்படாமல், என்ன அவசியமானாலும் அதை செய்யும் என்பதற்கு சமிக்ஞை காட்டியது.

ஹிரோஷிமா குண்டுவீச்சுக்குப் பிந்தைய ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதற்கான அதன் தீர்மானத்தை அதிகரித்து மட்டுமே உள்ளது. ஒபாமா 7 கூட்டங்களில் பங்கெடுக்கும் பாகமாக ஹிரோஷிமாவிற்கு செல்வார், அங்கே அவர் சீனாவிற்கு எதிராக ஜப்பான் உடனான அமெரிக்காவின் கூட்டணியைப் பலப்படுத்த முயற்சிப்பார் மற்றும் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அந்நாட்டை மீள்-இராணுவமயமாக்குதலுக்கு ஒத்துழைப்பளிப்பார். 

  ஏனைய ஒவ்வொரு நாடுகளிடமிருந்தும் வெள்ளை மாளிகை "அணுஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையைக்" கோரினாலும், அது அமெரிக்க அணு ஆயுத கிடங்குகளை நவீனமயப்படுத்த ட்ரில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு வருகிறது, அத்துடன் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையே போர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வருகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த கால குற்றங்களுக்கு மன்னிப்புக் கோருவதற்காக ஒபாமா ஹிரோஷிமாவிற்கு செல்லவில்லை, மாறாக புதிய குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்காக செல்கிறார். ஹிரோஷிமாவிற்குப் பின்னர் கொரியா மற்றும் வியட்நாமில்—மற்றும் கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் மத்தியக் கிழக்கு எங்கிலும்—மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கு பொறுப்பான அமெரிக்கா, இன்றும் அதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்ற போது, அது பாரிய படுகொலைக்கு மன்னிப்பு கோரும் என்று ஒருவர் எப்படி எதிர்பார்க்க முடியும்?

Sources From Khaibar Thalam


Jun 15, 2016

ஒபாமாவின் பதவிக்கால போர்கள்....!!

 
 
 
நியூயோர்க் டைம்ஸ் மே 15 அன்று தனது முகப்புப் பக்கத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஒரு முக்கியமான மைல்கல் எட்டப்பட்டிருப்பது பற்றி கவனத்தை ஈர்க்கிறது: “புஷ் அல்லது வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியை விடவும் அதிகமான காலம் அவர் போரில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.” ஒபாமா தனக்கு முன்பிருந்தவரது சாதனையை மே 6 அன்று விஞ்சியிருந்தார். 


ஆயினும் இன்னும் எட்டு மாத காலம் வெள்ளை மாளிகையில் அவர் இருப்பார் என்பதால், இன்னுமொரு சாதனையையும் அவர் எட்டவிருக்கிறார். டைம்ஸ் எழுதியது: “ஒபாமாவின் பதவிக் காலம் முடிகின்ற வரையிலும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபட்டிருக்குமாயின் - சிரியாவுக்கு 250 கூடுதல் சிறப்பு நடவடிக்கை துருப்புகளை அனுப்பவிருப்பதாக ஜனாதிபதி சமீபத்தில் அறிவித்திருப்பதை கொண்டு பார்த்தால் இது ஏறக்குறைய நிச்சயமான ஒன்று தான் - அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முழுப் பதவிக் காலமும் தேசத்தை போரில் ஈடுபடுத்தி வைத்திருந்த ஒரே ஜனாதிபதி என்ற ஒரு அபூர்வமான மரபை அவர் ஏற்படுத்தி விட்டுச் செல்வார்.”


தனது சாதனைப் பயணத்தின் பாதையில், திரு.ஒபாமா, ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய மொத்தம் ஏழு நாடுகளில் ஆபத்துமிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்திருக்கிறார். இந்தப் பட்டியல் துரிதமாய் விரிந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் அமெரிக்கா, ஆபிரிக்காவில் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. போகோ ஹராம் கிளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் நைஜீரியா, கேமரூன், நைஜர் மற்றும் சாத் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகளை கட்டியெழுப்புவதை உள்ளடக்கியிருக்கின்றன.


இந்த டைம்ஸ் கட்டுரையை எழுதியிருக்கும் மார்க் லாண்ட்லர், ஒபாமா 2009 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் என்பதை எந்த நகைமுரண் உணர்வுமின்றிக் குறிப்பிடுகிறார். மாறாக, “ஒரு போர்-எதிர்ப்பு வேட்பாளராக அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சித்தவராக” அவர் ஜனாதிபதியை சித்தரிக்கிறார்.... “வெள்ளை மாளிகையில் தனது முதலாம் ஆண்டு முதலாகவே இந்த மாற்றமுடியாத [போர் பற்றிய] யதார்த்தத்துடன் அவர் மல்லுக்கட்டி வந்திருக்கிறார்...”


”ஆப்கானிஸ்தானிற்கு 30,000 கூடுதல் துருப்புகளை அனுப்பும் உத்தரவை வழங்கும் முன்பாக ஆர்லிங்டன் தேசியக் கல்லறைகளின் நடுவே” ஒபாமா ஒரு நடை சென்று வந்தார் என லாண்ட்லர் தனது வாசகர்களுக்குக் கூறுகிறார். ”போர் சில சமயங்களில் அவசியமானதாக இருக்கிறது, சில மட்டத்தில் போர் மனித முட்டாள்தனத்தின் ஒரு வெளிப்பாடாகவும் இருக்கிறது என்ற இரண்டு ஒத்துப்போகாததாய் தோன்றுகின்ற உண்மைகளுக்கு” மனிதகுலம் இணங்கிச் செல்ல வேண்டியதாய் இருக்கிறது என்று ஒபாமா 2009 நோபல் பரிசை பெற்றுக் கொண்டபோது இயலாமையுடன் புலம்பிய உரையின் ஒரு பத்தியை லாண்ட்லர் நினைவுகூர்ந்தார்.


இதில் ஒபாமாவின் பதவிக்காலத்தில், முட்டாள்தனம் தான் மேலோங்கியிருந்தது என்பது தெளிவு. ஆயினும் லாண்ட்லரின் மாவிரர் அங்கே ஒன்றும் செய்ய இயலாதிருந்தார். தனது போர்கள் “முடிப்பதற்கு மிகவும் சிக்கல்மிகுந்தவையாக கடினமாக இருந்தன” என்பதை ஒபாமா கண்டார்.


சிறப்பு போர் நடவடிக்கையாளரான சார்லஸ் கீட்டிங் IV ISIS படைகளுடனான ஒரு துப்பாக்கிச் சண்டையில் சமீபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி ஈராக்கில் அமெரிக்க படைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது குறித்து ஒபாமா கூறுவதுடன் முரண்படுகிறது. டைம்ஸ் வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்து எழுதுகிறது, கீட்டிங்கின் மரணமானது “ஈராக்கிய படைகளுக்கு ஆலோசனையளிப்பதையும் உதவி செய்வதையும் மட்டுமே அமெரிக்கர்கள் செய்து கொண்டிருந்தனர் என்ற நிர்வாகத்தின் வாதத்தை ஒருபோதுமே நம்பமுடியாததாக்கியது.” வெளிப்படையான வார்த்தைகளில் இதைச் சொல்வதென்றால், ஒபாமா அமெரிக்க மக்களிடம் பொய் கூறி வந்திருக்கிறார்.


உள்ளார்ந்த நேர்மையின்மை தவிர, ஒபாமா குறித்த டைம்ஸின் சித்தரிப்பில் உண்மையான துன்பியலுக்கு தேவையானதாக இருக்கும் அத்தியாவசியமான கூறு இல்லாதிருக்கிறது: அதாவது ஜனாதிபதியின் நடவடிக்கைகளை தீர்மானித்த, அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட புறநிலை சக்திகளை அடையாளம் கண்டு கூறுதல். அமைதியை நேசிக்கும் இந்த மனிதர், ஜனாதிபதியாக ஆனதால், ஆளில்லா விமானக் கொலைகளை தனது சிறப்புத் தன்மையாக ஆக்க நேர்ந்ததற்காகவும் ஒரு அறநெறிரீதியான சாத்தானாக மாறத் தள்ளப்பட்டதற்காகவும் தனது வாசகர்களை கண்ணீர் வடிக்கச் செய்ய லாண்ட்லர் விரும்புகிறார் என்றால், ஒபாமாவின் இந்த “துன்பகரமான” விதியை தீர்மானித்த வரலாற்று சூழ்நிலைமைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு அவர் முயற்சி செய்திருக்க வேண்டும்.



ஆனால் இந்த சவாலை டைம்ஸ் தவிர்த்து விடுகிறது. ஒபாமாவின் போர் புரியும் சாதனையை கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையினது ஒட்டுமொத்தப் பாதையுடனும் தொடர்புபடுத்திக் காட்டுவதற்கு அது தவறி விடுகிறது. ஒபாமா 2009 இல் பதவியில் கால் வைக்கும் முன்பாகவே, அமெரிக்கா 1990-91 முதல் அமெரிக்க-ஈராக் போர் முதலாகவே ஏறக்குறைய தொடர்ச்சியானதொரு அடிப்படையில் போரில் ஈடுபட்டு வந்திருந்தது. 1990 ஆகஸ்டில் குவைத்தை ஈராக் இணைத்துக் கொண்டது தான் முதலாம் வளைகுடாப் போருக்கான போலிசாட்டாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் குவைத் அரசருடன் ஈராக் ஜனாதிபதி சதாம் குசைனின் மோதலுக்கு அமெரிக்கா காட்டிய வன்முறையான எதிர்வினை என்பது பரந்த உலக நிலைமைகள் மற்றும் கணிப்பீடுகளினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் நிலையில் இருந்தது தான் - இறுதியில் 1991 டிசம்பரில் அது கலைக்கப்பட்டது - அமெரிக்க இராணுவ நடவடிக்கை நிகழ்ந்த வரலாற்று உள்ளடக்கமாக இருந்தது. ஜனாதிபதி முதலாவது புஷ் ஒரு “புதிய உலக ஒழுங்கின்” துவக்கத்தை அறிவித்தார். 1917 இல் நடந்த முதலாவது சோசலிசப் புரட்சியின் விளைபொருளான சோவியத் ஒன்றியம் குறிப்பாக 1945 இல் இரண்டாம் உலகப் போர் முடிந்ததன் பின்னர் அமெரிக்க இராணுவ வலிமையை பிரயோகிப்பதற்கு ஒரு தடையாக இருந்தது. மேலும், வரலாற்று அர்த்தத்தில் ரஷ்யாவின் 1917 போல்ஷிவிக் புரட்சியுடன் பிணைந்ததாய் இருந்த 1949 இல் நடந்த சீனப்புரட்சியின் வெற்றியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதையில் மேலும் அதிகமான முட்டுக்கட்டைகளை இட்டது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பையும், அதனுடன் சேர்த்து சீனாவில் 1989 ஜூன் மாதத்தில் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலைகளை தொடர்ந்து முதலாளித்துவம் கட்டுப்பாடேதுமற்று மீட்சி செய்யப்பட்டதையும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் நோக்குடன் உலக புவியரசியலை பாரியளவில் மாற்றியமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமெரிக்க ஆளும் வர்க்கம் கண்டது. அமெரிக்கா தனது மிகப்பெரும் இராணுவ வல்லமையை தாட்சண்யமில்லாமல் பயன்படுத்துவதன் மூலமாக ஒரு நீண்ட காலத்தில் வீழ்ச்சியடைந்து போயிருந்த அதன் உலகளாவிய பொருளாதார நிலையை தலைகீழாக்கி விட முடியும் என்பதான நம்பிக்கையில் உயரடுக்குகளிடம் இருந்து இந்த நடவடிக்கைக்கு மிகப்பெரும் ஆதரவு கிட்டியது.


1992 பிப்ரவரியில் பாதுகாப்புத் துறை வரைவு செய்த பாதுகாப்புக் கொள்கை வழிகாட்டல் ஆவணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க அபிலாசைகளை சந்தேகத்திற்கிடமின்றி வலியுறுத்திக்கூறியது. ”எதிர்காலத்தில் மூலோபாய நோக்கங்களை அபிவிருத்தி செய்கின்ற மற்றும் பிராந்திய அல்லது உலக மேலாதிக்கத்தின் ஒரு தற்காப்பு நிலைப்பாட்டை உருவாக்குகின்ற நாடுகளோ அல்லது கூட்டணிகளோ உருவாக்கும் சாத்தியம் தோன்றலாம். எதிர்காலத்தில் அத்தகைய உலகளாவிய போட்டியாளர் ஒன்று தோன்றுவதை நிகழாமல் தடுப்பதன் மீது மறுகவனம் குவிப்பதே இப்போது நமது மூலோபாயமாக இருக்க வேண்டும்.”


1990கள் அமெரிக்காவின் இராணுவ வல்லமை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதை கண்டது, மிகக் குறிப்பாய் யூகோஸ்லேவியாவின் கலைப்பில். பால்கன் அரசுகள் மீது திணிக்கப்பட்ட மூர்க்கத்தனமான மறுசீரமைப்பு சகோதரர்களுக்கு இடையிலான ஒரு உள்நாட்டுப் போரை தூண்டியதுடன். இது கொசோவோ மாகாணப் பிரிவினையை ஏற்கச் செய்ய சேர்பியாவை நிர்ப்பந்திக்கிற அமெரிக்க தலைமையிலான 1999 ஆம் ஆண்டு குண்டுவீச்சுப் பிரச்சாரமாக உச்சம் பெற்றது. அந்த தசாப்தத்தில் நடந்த மற்ற முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் சோமாலியாவிலான தலையீடு (அது ஒரு பேரழிவில் முடிந்தது), ஹைட்டி மீதான இராணுவ ஆக்கிரமிப்பு, சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான குண்டுவீச்சு, மற்றும் ஈராக் மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சு காலகட்டங்களும் அடங்கும்.


செப்டம்பர் 11, 2001 சம்பவங்கள் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற ஒரு பிரச்சார சுலோகத்தை தொடக்க சந்தர்ப்பத்தை வழங்கியது. இந்த சுலோகம் மத்தியகிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் மற்றும் அடிக்கடி ஆபிரிக்காவிலும் இராணுவ நடவடிக்கைகளுக்குமான சகல-நோக்க நியாயப்படுத்தலை வழங்கியது. 2002 இல் அமெரிக்கா ஏற்றுக் கொண்ட “முன்கூட்டித்தாக்கும் யுத்தம்” என்ற புதிய கோட்பாட்டை அடியொற்றி அமெரிக்காவின் இராணுவ மூலோபாயம் திருத்தப்பட்டது. 



நிலவும் சர்வதேச சட்டத்தை மீறிய இந்த கோட்பாடு, அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலின் - இராணுவரீதியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, பொருளாதாரரீதியானதாக இருந்தாலும் கூட - ஒரு சாத்தியத்தை வழங்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகின்ற உலகின் எந்த ஒரு நாட்டின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது.


ஜனாதிபதி இரண்டாம் புஷ்ஷின் நிர்வாகம் 2001 இலையுதிர் காலத்தில் ஆப்கானிஸ்தான் படையெடுப்புக்கு உத்தரவிட்டது. 9/11 ஐத் தொடர்ந்த உரைகளில் புஷ் “21 ஆம் நூற்றாண்டின் போர்கள்” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார். இந்த விடயத்தில் அவர் துல்லியமாகவே கூறினார்.


“பயங்கரவாதத்தின் மீதான போர்” ஆனது ஆரம்பத்தில் இருந்தே உலகெங்கும் முடிவில்லாத இராணுவ நடவடிக்கைகளின் வரிசையாகவே சிந்திக்கப்பட்டது. ஒரு போர் அத்தியாவசியமாகவும் தவிர்க்கவியலாமலும் அடுத்த போருக்கு இட்டுச் செல்வதாய் இருந்தது. ஆப்கானிஸ்தான் போர் ஈராக் படையெடுப்புக்கான ஒத்திகையாக நிரூபணமானது. இராணுவ நடவடிக்கைகளுக்கான தொடுஎல்லை விரிந்துகொண்டே போனது. 


புதிய போர்கள் தொடங்கப்பட்டன, பழைய போர்கள் தொடரப்பட்டன. சிடுமூஞ்சித்தனத்துடன் மனித உரிமைகள் என்னும் போலிக்காரணங்கள் கையிலெடுக்கப்பட்டு லிபியாவுக்கு எதிரான போரை நடத்துவதற்கும் மும்மார் கடாபியின் ஆட்சியை தூக்கிவீசுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. அதே இரட்டைவேட சாக்கு சிரியாவில் ஒரு பினாமிப் போரை ஏற்பாடு செய்வதற்கும் பிரயோகிக்கப்பட்டது. மனித உயிர்கள் மற்றும் துயரங்களின் விடயத்தில் இந்தப் போர்கள் ஏற்படுத்திய பின்விளைவுகள் கணக்கிலடங்காதவை.


உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் மூலோபாய தர்க்கமானது மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் இரத்தம்பாயும் நவகாலனித்துவ நடவடிக்கைகளைக் கடந்த மோதல்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அமெரிக்காவின் புவிஅரசியல் அபிலாசைகள் சீனா மற்றும் ரஷ்யா உடன் அபாயம் பெருகிய மோதல்களுக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. இன்னும் சொன்னால், நடந்து கொண்டிருக்கும் பிராந்தியப் போர்கள் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஆசியக் கூட்டாளிகளுக்கும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையில் துரிதமாய் தீவிரப்பட்டுச் செல்லும் மோதலின் உள்ளார்ந்த பாகங்களாகி கொண்டிருக்கின்றன.


ஒபாமாவின் பதவிக்காலத்தை முடிவற்ற போர்களின் ஒரு காலமாக ஆக்கிய அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளில் அடித்தளத்தைகொண்டுள்ள ஆழமான புறநிலைக் காரணங்கள் குறித்து நியூஜோர்க் டைம்ஸ் அதிகம் எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல, அடுத்து வெள்ளை மாளிகையில் அமரவிருப்பவர் யாராயிருந்தாலும் - அவர் பெயர் கிளிண்டன் என்றாலும், டிரம்ப் என்றாலும், அல்லது சாண்டர்ஸே என்றாலும் - அவர் இதையே தான் என்பது மட்டுமல்ல, இதனினும் மோசமானதையே தரமுடியும் என்பது குறித்த முன்கூட்டிய எச்சரிக்கையையும் அது தன் வாசகர்களுக்கு வழங்கவில்லை. போர் பிரச்சினை என்பது இந்தத் தேர்தலில் “குறிப்பிடமுடியாத மிகப்பெரும் ஒன்றாய்” இருக்கிறது.


Sources From Khaibar Thalam