Showing posts with label சஹாபாக்கள். Show all posts
Showing posts with label சஹாபாக்கள். Show all posts

Jul 4, 2016

உக்பா பின் ஆமிர்(ரலி) - இஸ்லாத்தின் இன்னொரு அடையாளம்...!


ஆடு மேய்க்கும் இடையனாகத்தான் தீனுல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்குர்ஆனை மனனமிட்டவர்.

நபியுடன் எப்போதும் இருந்து அவரது சுன்னாவை தன் வாழ்வில் அப்படியே கொண்டு வந்தவர்.

முஸ்லிம் வாரிசுரிமை சொத்து தொடர்பான அஷ்-ஷரிய்யாவின் சட்டங்களை கலீபாக்களே இவரை கேட்டுத்தான் முடிவு சொல்வார்கள். இதையெல்லாம் தாண்டி உஹத்தில் ஆரம்பித்து தன் மரணம் வரைக்குமான இஸ்லாத்தின் எல்லாப் போர்களிலும் பங்கு கொண்டவர்.

டமஸ்கஸ் முற்றுகையின் போது ரோமானியர்களிற்கு எதிரான இஸ்லாமிய அரசின் இராணுவத்தில் துணை தளபதியாக போரிட்டவர். தனது படைகளை நேர்த்தியாக வழிநடாத்தியவர். அமீர் முஆவியா அவர்கள் டமஸ்கஸ்ஸில் தனது கிலாபாவை அமைத்த போது இவரை எகிப்தின் கவர்னராக நியமித்தார். முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு, ஸைத் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு, இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு போன்றே இவரும் இஸ்லாத்தை கற்பிக்கும் பேராசானாக திகழ்ந்தார். இன்றைய பாஷையில் புரபசர் லெவல்.

03 வருடங்களின் பின்னர் அமீர் முஆவியா கடல் கடந்த சண்டைகளை ஆரம்பித்தார். Island of Rhodes மத்தியதரைக்கடலில் உள்ள தீவுக்கூட்டம். அங்கே செல்ல வேண்டும் என்று சண்டையிட முடியுமா என முஆவியா உக்பாவை வேண்டினார். நான் ஒரு கவர்னர் அதனை விட்டு விட்டு மீண்டும் சண்டையிட செல்வதா என அவர் சிந்திக்கவேயில்லை. “யா முஆவியா, கப்பல் எங்கே நிற்கிறது?” என்று தான் கேட்டார்கள். அப்படியொரு ஈமானிய வார்ப்பில் உருவாக்கப்பட்ட நபித்தோழர் அவர்.

உக்பா பின் ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு. அல்லாஹ் அவரை இந்த பூமியில் கண்ணியமாக வாழ வைத்தான். டமஸ்கஸ்ஸில் உள்ள சென் தோமஸ் கேட் என்பது பிரதானிகள் வாழும் இடம். அதில் உள்ள தோட்டத்தில் வீடமைத்து வாழ்ந்தார். எகிப்து சென்ற போது கெய்ரோவின் அருகில் முக்கத்தம் மலையடிவாரத்தில் அழகான வீட்டில் வாழ்ந்தார். 


ஆடு மேய்க்கும் இடையனை,திண்ணைத்தோழரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எங்கு கொண்டு சென்று வைத்துள்ளான். ஆனால்...

தினமும் குறிபார்த்து அம்பு எய்து பிரக்டிஸ் பண்ணும் வழக்கமுடையவர். ஒரு நாளும் இதிலிருந்து அவர் தவறியதில்லை. மரணம் அவரை முத்தமிட்ட போது அவரை அதே நைலின் கிழக்குக்கரை முக்கத்தம் மலையடிவாரத்தில் அடக்கம் செய்தார்கள். மீண்டும் அவர் பிள்ளைகள் வீடு திரும்பி தந்தையின் அறையை திறந்து அவர் என்ன விட்டு சென்றுள்ளார் என்று பார்த்தனர்.

70 வில்லுகள். அதன் 70 அம்பறாக்கள். எல்லாவற்றிலும் லோட் செய்யப்பட்ட அம்புகள். கூடவே ஒரு கடிதம் இருந்தது. அதில் அவர் இப்படியெழுதியிருந்தார்.........

“எனது சொத்தாக நான் விட்டுச் செல்லும் இந்த விற்களையும், அம்பறாக்களையும் முஜாஹித்களிற்கு விநியோகம் செய்து விடுங்கள், ஜிஹாத்தில் அவர்களிற்கு அது அதிகம் உதவி செய்யும்....”

ஸதக்கத்துல் ஜாரியா பற்றி நான் அறிந்துள்ளேன். உக்பா பின் ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது மரண சாஸனம்.... அவரது வில்லுகளில் இருந்து அல்லாஹு அக்பர் ஒலியுடன் புறப்படும் அம்புகள் குஃபாரை துளைத்து செல்லும் போது அதற்காக அவரிற்கு கிடைக்கும்..........! சுபுஹானல்லாஹ்.

இந்த மாமனிதர்களின் தியாகங்களில் வலுவாக்கப்பட்ட இஸ்லாத்தை தான் நாம் எதற்கெல்லாமோ ரப்பராக வளைக்கின்றோம்.



Abu Maslama

Mar 15, 2016

இவர் தான் முஃமிண்களின் தலைவர்

 
வரலாறு பல வீரர்களைப்
பார்த்திருக்கிறது உமரைப் போன்ற
ஒரு வெற்றியாளரைப் பார்த்ததில்லை.

பல வெற்றியாளர்களைப் சந்தித்திருக்கிறது உமரைப் போல
ஒரு வாழ்நாள் சாதனையாளரை அது
கண்டதில்லை.

பல அரசியல் மேதைகளைப் பார்த்திருக்கிறது உமரைப் போல ஒரு தொலை நோக்கு கொண்டவரை அது சந்தித்ததில்லை.

பல ஆட்சித்தலைவர்களை பார்த்திருக்கிறது உமரை போன்று
ஏழையாக எவரும் அரசாட்சி செய்ததில்லை.

உமரைப் போல நீதியாக நடந்து
கொண்டவர், உமரைப் போல
சட்டத்திற்குட்பட்டு வாழ்ந்தவர், உமரைப்
போல ஒட்டுப் போட்ட ஆடையணிந்தவர்,உமரைப் போல
நிர்வாகம் செய்தவர்,உமரைப் போல
வளர்ச்சிப் பணிகளை
கவனித்தவர்,உமரைப் போல தன்
குடிமக்களை பாதுகாத்தவர்,உமரைப்
போல தன் அதிகாரிகளை
கண்காணித்தவர்,
உமரைப் போல குடும்பம் நடத்திய
ஆட்சியாளர், உமரைப் போல
எதிரிகளை அஞ்சி நடுங்கச் செய்தவர்,
உமரைப் போல நகர நிர்வாகம்
செய்தவர், உமரைப் போல
பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர்,
உமரைப் போல இரண்டாம்
கட்டத்தலைவர்களுக்கு
வாய்ப்பளித்தவர், உம்ரைப் போல
திறமையாளர்களைப் பயன்படுத்திக்
கொண்டவர், உமரைப் போல
முன்னேற்றத்திற்கு வழியமைத்துக்
கொடுத்தவர், உமரைப் போல
அமைதியை பராமரித்தவர், உமரைப்
போல சிறுபான்மையினர் நலனில்
அக்கறை கொண்டவர், உமரைப் போன்ற
கண்டிப்பானவர்,உமரைப் போன்ற
சாமாண்யர், உமரைப் போன்ற தொண்டர்,
உமரைப் போல தன் சமூகத்த்திற்கு
பாக்கியமான மனிதர் என்று இந்த
உலகில் எவரையும்
சுட்டிக்காட்டுவது அரிது.

நிகர் சொல்ல முடியாத மனிதர் என்ற
வார்த்தை கலீஃபா உமர் (ரலி)
அவர்களுக்கு பொறுந்துவது போல
மற்றெவருக்கும் பொருந்தாது.

அவரின் ஆட்சியைப்போன்று என் ஆட்சி இருக்கும் ! அவரின் நீதியைப்போல்
என் நீதி, நிர்வாகம் இருக்கும் ! என்று மேடைப்பேச்சி பேசிவிடலாம். !

ஆனால் அது சாத்தியமா? நடக்குமா? என்று சிந்திக்க வேண்டும்.

ஏனெனில் அவர் வெரும் அரசியல் மட்டும் அல்ல.

خليفة رسول الله صلى الله عليه وسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆன்மீகத்தையும், இஸ்லாமிய அரசியலையும் முறையாகப் படித்த இறை ஆட்சியாளர் >> கத்தாபின் மகன் உமர் (ரலி) அன்ஹு அவர்கள்.


Feb 7, 2016

வீர பெண்மணி நுஸைபா பின்த் கஅப் (ரலி)

 
நுஸைபா பின்த் கஅப்(ரலி)
نسيبة بنت كعب
பொய்யன் முஸைலமாவின் அரசவை. நிறைய மக்கள் குழுமியிருந்தனர். "யாரங்கே கொண்டு வாருங்கள் அந்தத் தூதுவனை" என்று கட்டளை பிறப்பிக்கப்பட, கனத்த சங்கிலிகளால் அவரைப் பூட்டி, இழுத்து வந்தார்கள் காவலர்கள். கால்விலங்கு தரையில் புரள வந்து நின்றார் ஹபீப் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு. இவரது வரலாற்றை நாம் முன்னர் விரிவாகவே பார்த்தோம். இங்கு முன் கதைச் சுருக்கம்போல் முக்கிய நிகழ்வொன்றை மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம்.

முகத்தில் எவ்விதக் கலக்கமோ, கலவரமோ இல்லாமல், மிகவும் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார் ஹபீப். அவர் என்ன குற்றம் செய்தார் என்று விலங்கு, பூட்டு, விசாரணை? அதைக் காண மொய்த்திருக்கும் கூட்டம்?

தானும் ஒரு நபி என்று உளற ஆரம்பித்து மக்களை வழிகெடுக்க முனைந்துவிட்ட முஸைலமாவை எச்சரித்து நபியவர்கள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதைச் சுமந்து வந்த தூதர், தோழர் ஹபீப் இப்னு ஸைது. தொன்றுதொட்டு தூதர்களுக்கு என்று அளிக்கப்பட வேண்டிய கௌரவம் உண்டு; அவர்களுக்குப் பாதுகாப்பு உண்டு. அதெல்லாம் பொது விதி. ஆனால், நபியவர்களின் எச்சரிக்கை அளித்த கோபத்தில், என்ன செய்வது என்று தெரியவில்லை மடையன் முஸைலமாவுக்கு. ஹபீபைக் கைது செய்து, மறுநாள் விசாரணைக்கு இழுத்துவரச் சொல்லியிருந்தான்.

முஸைலமா அவரை நோக்கிக் கேட்டான். "முஹம்மத் யார்? அல்லாஹ்வின் தூதரா?"

உடனே பதில் வந்தது. "ஆம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்"

கோபத்தால் வெடித்துவிடுவதைப்போல் அவரைப் பார்த்த முஸைலமா அடுத்த கேள்வி கேட்டான். "நானும் அல்லாஹ்வின் தூதன்தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகிறாயா?"

"எனக்குக் காது கொஞ்சம் மந்தம். நீ சொல்வது எனக்குக் கேட்கவில்லை", முகத்தில் நையாண்டி எதுவும் வெளிக்காட்டாமல் அப்பாவியாய் பதில் கூறினார் ஹபீப்.

சீற்றத்தில் முகம் வெளுத்தது முஸைலமாவுக்கு. உதடுகள் துடித்தன. "அவர் உடலில் ஒரு பகுதியை வெட்டி எறியுங்கள்" என்றான்.

காத்திருந்த காவலன், "அப்படியே ஆகட்டும்" என்று கூர்மையான வாள் கொண்டு அவரது உடலின் ஒரு பகுதியை வெட்டி எறிய, நிலத்தில் விழுந்தது அது. தரையெல்லாம் ரத்தம்.

"முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி பகர்கிறாயா?" என்று மீண்டும் தன் கேள்வியைக் கேட்டான் முஸைலமா.

இப்பொழுதும் உடனே பதில் வந்தது. "ஆம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்."

"நானும் அல்லாஹ்வின் தூதரென்று சாட்சி கூறுகிறாயா?"

"நான்தான் சொன்னேனே, எனக்குக் காது மந்தம் என்று. அதனால் நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குக் கேட்கவில்லை"

கோபம் மேலும் அதிகமானது பொய்யனுக்கு. மற்றுமொரு பகுதியை வெட்டச் சொன்னான். உடலின் மற்றுமொரு பகுதி தரையில் விழுந்தது. குழுமியிருந்த கூட்டத்தாருக்கு அவரின் உறுதியையும் விடாப்பிடிக் கொள்கையையும் பார்த்து வியர்த்துக் கொட்ட, இவருக்கோ குருதி கொட்டிக் கொண்டிருந்தது.

முஸைலமாவும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருக்க, மீண்டும் மீண்டும் அதே பதில் வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடையில் தொங்கும் ஆட்டிறைச்சியை வெட்டுவார்களே அதைப்போல், காவலனும் ஹபீபின் உடலை பாகம் பாகமாய் வெட்டிக் கொண்டிருந்தான்.

பாதிக்கும் மேற்பட்ட அவரது அங்கங்கள் தரையில் துண்டுகளாக சிதறிக் கிடக்க, மறுபாதி இரத்தக் களறியில் படுகோரமாய் உருமாறிக் கிடந்தது. ஆனாலும் அவர் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் மட்டும் மாறவில்லை. "முஹம்மத் அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்" என்று சொன்னபடியே இறுதியில் விடைபெற்றது அவரது ஆவி. குற்றுயிராய் இருந்தவர் முற்றிலுமாய் இறந்து விழுந்தார். ஹபீப் இப்னு ஸைத் அல்-அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு.

செய்தி மதீனா வந்து சேர்ந்தது. அவரின் தாயாரையும் அடைந்தது. மகன் இறந்த செய்தி ஒரு தாய்க்கு எத்தகைய சோகச் செய்தி? அதிலும் கண்டதுண்டமாய் வெட்டிக் கொல்லப்பட்டார் என்றால் பெற்ற வயிற்றுக்கு அது எவ்வளவு வலி?

ஆனால் அதைக்கேட்ட அவரோ, "இத்தகைய ஒரு நிகழ்வுக்காகத்தான் நான் அவனை வளர்த்தும் உருவாக்கியும் வந்தேன். என்னுடைய நற்கூலியையும் அவனுடைய பரிசையும் அல்லாஹ்விடமே தேடுகிறேன்” என்றார் எளிதாய்!

“சிறுவனாய் இருக்கும்போது, ஒருநாள் இரவு அகபாவில் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்து தந்தான். அதைப் பெரியவனானதும் நிறைவேற்றிவிட்டான் என் மகன். எனக்கு அல்லாஹ் வாய்ப்பளித்து முஸைலமாவை நான் நெருங்கினால், அவனது இழப்பிற்காக தங்களது முகத்தை அறைந்து கொண்டு துன்பத்தில் அரற்றுவதற்கு அவனுடைய மகள்களுக்கு நல்ல வாய்ப்பளிப்பேன்"

தம் மகனின் கோர முடிவைக் கேட்ட அந்த வீரத் தாய் நுஸைபா பின்த் அல் கஅப் அல்-மாஸினிய்யாவின் பதில் அவ்வளவுதான்! ரலியல்லாஹு அன்ஹா.
oOo
யத்ரிப் நகரில் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வந்தது. தந்தை, தாய், இரு மகன்கள் என்ற அளவான குடும்பம். எப்பொழுதும்போல் அவர்களது பொழுது ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் மக்காவிற்கு யாத்திரை சென்று வந்த யத்ரிப் மக்கள் சிலர் தம்முடன் மக்காவாசிகள் ஓரிருவரை அழைத்து வந்திருந்தனர் – முஸ்அப் இப்னு உமைர், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் – ரலியல்லாஹு அன்ஹுமா.

‘இவர்கள் சொல்வதைக் கேளுங்களேன்’ என்று மக்காவாசிகளைத் தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள் வந்தவர்கள். துவங்கியது முஸ்அப் இப்னு உமைரின் பணி. ஏறக்குறைய யத்ரிபின் அனைத்து வீட்டுக் கதவுகளையும் அவரது செய்தி தட்டியது. காந்தமாய் மாறிப்போனார் அவர். அதன் பலன் அடுத்த யாத்திரை காலத்தில் 73 ஆண்களும், 2 பெண்களும் கொண்ட மதீனத்துக் குழு, மக்கா சென்றது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திக்க. அந்தக் குழுவில் மேற்சொன்ன குடும்பமும் அடக்கம்.

மக்காவிற்குச் சென்று புனித யாத்திரை முடித்த அந்தக் குழுவினர் இரண்டாம்நாள் ஊர் உறங்கிய நள்ளிரவு நேரத்தில் அகபா பள்ளத்தாக்கில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓர் இரகசிய சந்திப்பு நிகழ்த்தினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அதன் முடிவில் நபியவர்களுக்கும் அந்த யத்ரிப் குழுவினருக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இரண்டாம் அகபா உடன்படிக்கை.

தங்களது "உயிர், பொருள், செல்வம்" அனைத்திற்கும் மேலாய் நபியை ஏற்றுக் கொள்வதாகவும் காப்பாற்றுவதாகவும் அவர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர்.

அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் அந்த சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டனர். ஸைத் இப்னு ஆஸிம், அவரின் மனைவி உம்மு உமாரா எனும் நுஸைபா பின்த் கஅப் அல்-மாஸினிய்யா, அவர்களின் இரு மகன்கள் அப்துல்லாஹ் இப்னு ஸைத் மற்றும் ஹபீப் இப்னு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹும்). உம்மு உமாரா என்பது புனைப்பெயராகத்தான் நுஸைபாவுக்கு ஏற்பட்டு இருந்ததே தவிர அவருக்கு உமாரா என்ற பெயரில் மகனோ மகளோ இல்லை.

அந்தக் குழுவில் இரண்டு பெண்கள் என்று பார்த்தோமல்லவா? உம்மு உமாராவுடன் இடம்பெற்றிருந்த மற்றொரு பெண் உம்மு முனீஃ என்ற அஸ்மா பின்த் அம்ரு இப்னு அதீ. இந்தப் பெண்கள் இருவரும் பிரமாணம் அளிக்கும் முறை வந்ததும், “ஆண்களது பிரமாணத்தை ஏற்றுக்கொண்ட அதே நிபந்தனைகளுடன் பெண்களின் பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்நியப் பெண்களின் கைகளைப் பிடிக்கமாட்டேன்” என்று தெரிவித்துவிட்டார்கள் நபியவர்கள். அதன்படி அதே நிபந்தனைகளுடன் அந்த இரு பெண்மணிகளும் பிரமாணம் அளித்தனர். சத்தியமான பிரமாணம்.

அதன் பிறகு, குழு மதீனா திரும்பி, தம் வாசலை அகலத் திறந்து வைத்தது – மக்காவிலிருந்து வரப்போகும் முஸ்லிம்களுக்காக. நிறைய முஸ்லிம்கள் யத்ரிபிற்குப் புலம் பெயர்ந்தனர். முத்தாய்ப்பாய் அமைந்தது நபியவர்களின் ஹிஜ்ரத். யத்ரிப் மதீனாவானது.

நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்தபின் நிகழ்வுற்ற முதல் யுத்தமான பத்ருப் போரில் நுஸைபாவின் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு கஅப் அல் மாஸினீ (ரலி) எனும் வீரர் கலந்து கொண்டார். சில காலத்தில் ஹபீபின் தந்தை ஸைத் இப்னு ஆஸிம் இறந்து விட்டதால், நுஸைபா, கஸிய்யா இப்னு அம்ரு என்பவரை மறுமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு தமீம் என்றொரு மகனும், ஃகவ்லா எனும் மகளும் பிறந்தனர்.

பத்ருப் போர் முடிந்த அடுத்த ஆண்டே நிகழ்ந்தது அடுத்த போர் – உஹதுப் போர். இந்தப் போரில் நுஸைபா, அவரின் கணவர் கஸிய்யா, நுஸைபாவின் மூத்த மகன் அப்துல்லாஹ் இப்னு ஸைது ஆகியோரும் கலந்து கொண்டார்கள். "கலந்து கொண்டார்கள்" என்ற அளவிலான சிறு வாக்கியத்தில் முடித்துவிட முடியாத வீர நிகழ்வாய் வரலாற்றில் இடம் பெற்றுப்போனது அது.

உஹதுப் போரின் ஆரம்பத் தருணங்கள் முஸ்லிம்களுக்குச் சாதகமாகத்தான் இருந்தன. மலையுச்சியில் காவலுக்கிருந்த முஸ்லிம் வீரர்கள் ‘போர் முடிந்துவிட்டது’ என நினைத்து, தங்களுக்கு நபியவர்கள் இட்ட கட்டளையை மறந்து கீழே இறங்கி ஓடிவந்ததும்தான் போரின் போக்கு மாறிப்போனது. அதுவரை முஸ்லிம் போர் வீரர்களுக்கு குடிநீர் அளிப்பது, காயங்களுக்குச் சிகிச்சை புரிவது போன்ற ஒத்தாசை சேவைகளில் மட்டும் இதரப் பெண்களுடன் ஈடுபட்டிருந்தார் நுஸைபா.

சடுதியில் எதிரிகளின் கை ஓங்கி, நிலைமை மோசமாகி, முஸ்லிம் வீரர்களின் கட்டுக்கோப்புக் குலைந்து போனதும் நுஸைபாவின் வீரம் பொங்கி எழுந்தது. நபியவர்களைச் சுற்றி மிகச் சில தோழர்களே நின்றிருந்தனர். பதட்டம், ஆத்திரம், கவலை என்று அனைத்தும் உணர்வில் கலந்துபோய் தம் கணவர், மகன் ஆகியோருடன் தாமும் நபியவர்களை நோக்கி ஓடினார் நுஸைபா. நபியவர்களைச் சூழ்ந்து காத்து நின்று போர் புரிந்து கொண்டிருந்தார்கள் சில தோழர்கள். அவர்களுடன் சேர்ந்து கொண்டார். தகுந்த கேடயம்கூட அப்பொழுது அவரிடம் இல்லை. அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாய்த் தோன்றவில்லை. நபியவர்களைக் காக்க வேண்டும்; அவர்களுக்கு எந்த பாதகமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர் நினைவு முழுதும் அந்த ஒரே ஒரு கவலை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.

நிராயுதபாணியாக இருக்கும் நுஸைபாவின் நிலையைக்கண்டு, ஓடிக்கொண்டிருந்த ஒருவனிடம், “உனது கேடயத்தை சண்டையிடுபவரிடம் கொடுத்துவிட்டுச் செல்” என்றார்கள் நபியவர்கள். அதை வாங்கி ஏந்திக்கொண்டு, இடுப்பில் துணியைச் சுற்றி இறுக்கக் கட்டிக்கொண்டு, முழுஅளவிலான சண்டையில் மூர்க்கமாய் வாள்வீசி இறங்கிவிட்டார் நுஸைபா. மிகுந்திருந்த எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றிய அச்சமோ, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் தயக்கமோ, தடுமாற்றமோ அவருக்கு ஏற்படவில்லை. ஆணுக்கு நிகராகச் சண்டை இட்டிருக்கிறார் அவர். சாட்சி உரைக்கின்றன அன்றைய அவரின் வீரச் செயல்கள்.

குரைஷிகளின் குதிரைப்படை நிறைய சேதம் விளைவித்துக் கொண்டிருந்தது. அதையெல்லாம் வெகு சில தோழர்கள் கொண்ட அந்தக் குழு எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தது. “அவர்கள் மட்டும் எங்களைப் போன்ற காலாட்படையாக இருந்திருந்தால் அவர்களுக்குப் படுதோல்வியை அளித்திருப்போம்” என்று பின்னர் ஒருமுறை கூறியுள்ளார் நுஸைபா. வாள் வீச்சு, அம்பு எய்தல் என்று மாறி மாறி துள்ளி இயங்கிக்கொண்டிருந்த நுஸைபாவை நோக்கிக் குதிரையொன்று வேகமாய் வந்தது. அதன்மீது இப்னு குமைய்யா எனும் குரைஷி. வந்த வேகத்தில் நுஸைபாவின் தோள்பட்டையில் வெகு பலமாய் வெட்டினான் அவன். அந்த வேகத்துக்குத் துவண்டிருக்க வேண்டும் அவர். ஆனால் அதைத் தாங்கிய நுஸைபா, தம் கேடயத்தால் தற்காத்துக்கொண்டு மேலும் கடுமையாய்ப் போர் புரிய ஆரம்பித்தார். மேற்கொண்டு அவனால் அவரைத் தாக்க முடியவில்லை. திரும்பிவிட யத்தனித்தான் இப்னு குமைய்யா. ஆனால் நுஸைபா ஒரு காரியம் செய்தார். அவன் அமர்ந்திருந்த குதிரையின் கால்களை தம் ஆயுதத்தால் பலமாகத் தாக்கி முடமாக்க, சடேரெனச் சரிந்தது குதிரை. ‘தொப்’பென்று மல்லாக்கத் தரையில் விழுந்தான் அவன்.

இதற்கிடையே இதைக் கவனித்துவிட்ட நபியவர்கள், நுஸைபாவின் மகனை நோக்கி, “உம்மு உமைராவின் மகனே! உன் தாயார்! உன் தாயார்! அவரது காயத்திற்குக் கட்டு இடு,” என்று கத்தினார்கள். நுஸைபாவுக்கு ஏற்பட்ட காயம் மிக மிக ஆழமான வெட்டு. நிறைய இரத்தம் கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது. “யா அல்லாஹ்! இவர்களைச் சொர்க்கத்தில் என் தோழர்களாக ஆக்கி வைப்பாயாக” என்று இறைஞ்சினார்கள் நபியவர்கள்.

அந்த வார்த்தைகள் நுஸைபாவின் செவியில் தெளிவாய் விழுந்தன. தெள்ளத் தெளிவாய் அதன் அர்த்தத்தை உணர்ந்தார் அவர். நம் வாழ்வு உய்வுற இது போதாது? மகிழ்ச்சி பொங்கச் சொன்னார், “ஆஹா!…. இதன்பிறகு இவ்வுலகில் எனக்கு என்ன நிகழ்ந்தாலும் கவலையே இல்லை.” எல்லாம் துச்சம்!

மகன் தம் உதவிக்கு வரும்வரை நுஸைபா காத்திருக்கவில்லை. கீழே விழுந்தவனைச் சரமாரியாகத் தாக்கி அவனைக் கொன்றுவிட்டுத்தான் நின்றார். நுஸைபாவுக்கு ஏற்பட்ட அந்தக் காயம் எத்தனை ஆழமாக இருந்ததென்றால் பின்னர் அதற்காக ஓர் ஆண்டுவரை அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அன்று போரில், களத்தில், என்ன துணி கிடைத்ததோ அதை எடுத்து காயத்தைச் சுற்றி கட்டிக்கொண்டு அவர் போரைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

அவரின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸைதுக்கும் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. தடுத்து நிறுத்த இயலாமல் எக்கச்சக்க இரத்தம் ஓடியது. “உனது காயத்துக்குக் கட்டுப்போடு” என்றார்கள் நபியவர்கள். இதைக் கவனித்துவிட்ட நுஸைபா தம் மகனிடம் விரைந்து வந்தார். பெற்ற மகனின் ரத்தம் பொங்கும் காயத்திற்குத் தம் இடுப்புத் துணியைக் கிழித்து பாசம் பொங்க கட்டு இட்டவர் அடுத்து பேசியது வீரம்.

“எழுந்திரு மகனே! எதிரிகளைத் தாக்கு.”

“இன்று நீர் பொறுத்துக் கொள்வதைப்போல் எவரால் பொறுத்துக்கொள்ள முடியும் உம்மு உமாரா?” என்றார்கள் நபியவர்கள்.

அப்துல்லாஹ்வைத் தாக்கிய எதிரி மீண்டும் அங்கு நெருங்கினான். அவனை நுஸைபாவுக்கு அடையாளம் காண்பித்தார்கள் நபியவர்கள்.

“அவன்தான் உம் மகனைத் தாக்கியவன்.”

அவனை நோக்கி புலியாய்ப் பாய்ந்தார் நுஸைபா. அவனது கெண்டைக்காலில் தம் வாளால் பலமான போடு. ‘மளுக்’கென்று முழங்கால் மடங்கி தரையில் விழுந்தான் அவன். முஸ்லிம்கள் அவனைச் சுற்றி வளைத்தனர். கொன்று முடித்தனர். கடைவாய்ப்பல் தெரியுமளவு சிரித்தார்கள் நபியவர்கள். “பழிவாங்கிவிட்டாய் உம்மு உமாரா. உன்னை மேலோங்க வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்றார்கள்.

பின்னர் இந்நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது “உஹதுப் போர் நாளன்று இடப்புறம், வலப்புறம் என்று எங்கு திரும்பினும், நுஸைபா என்னைத் தற்காத்து போர் புரிவதைக் கண்டேன்” என்று நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள். அப்படிச் சுழன்றுச் சுழன்று போரிட்ட நுஸைபாவுக்கு அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் பன்னிரெண்டு.

சிராய்ப்புக் காயம், நகம் பெயர்ந்தது, பிடரியில் வலி போன்ற விஷயமெல்லாம் இல்லை. உம்மு ஸயீத் பின்த் ஸஅத் இப்னு ரபீஉ என்பவர் ஒருமுறை நுஸைபாவின் உஹதுப் போர் நிகழ்வைக் குறிப்பிடும்போது, “நுஸைபாவின் கழுத்துக்கும் தோளுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரும் பள்ளம் ஒன்றைக் கண்டேன். அந்தப் போரில் அவர் அடைந்த காயம் அது” என்று கூறியிருக்கிறார். தோள்பட்டையில் சதை காணாமல் போய் ஏற்பட்ட பள்ளம்!

இக்காலத்தில் அலங்காரம் என்ற பெயரில் கண்ட இடத்தில் உடலைப் பொத்தலாக்கி அலங்கோலமாக்கிக் கொள்வது நாகரீகம். அவர்களோ இறைவனுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் தம் உடல் அலங்கோலமானாலும் பரவாயில்லை என்று களம் புகுந்து வெளிவந்திருக்கிறார்கள். அகமெல்லாம் பேரழகாகிப் போனது.

அதன் பின்னர் ஹுதைபிய்யா உடன்படிக்கை, ஃகைபர் யுத்தம், மக்காவின் வெற்றி, ஹுனைன் யுத்தம் என்று எந்த எந்த முக்கிய நிகழ்வுகளையும் தவறவிடவில்லை நுஸைபா. இவ்விதம் வீரமே வாழ்க்கையாக வாழ்ந்தவரின் மகன் ஹபீப் இப்னு ஸைதைத்தான் முஸைலமாவிடம் தம் தூதராக அனுப்பிவைத்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ‘கண்டதுண்டமாய் வெட்டிக் கொல்லப்பட்டார்’ என்று அந்த மகனைப் பற்றிய செய்தி வந்ததும் அத்தனை வலியும் அவருள் அமுங்கிப் போய், வெளிவந்தன இறை நேசமும் மிதமிஞ்சிய பக்குவ வார்த்தைகளும்.

"இத்தகைய ஒரு நிகழ்வுக்காகத்தான் நான் அவனை வளர்த்தும் உருவாக்கியும் வந்தேன். என்னுடைய நற்கூலியையும் அவனுடைய பரிசையும் அல்லாஹ்விடமே தேடுகிறேன். சிறுவனாய் இருக்கும்போது, ஒருநாள் இரவு அகபாவில் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்து தந்தான் என் மகன். அதைப் பெரியவனானதும் நிறைவேற்றிவிட்டான். எனக்கு அல்லாஹ் வாய்ப்பளித்து முஸைலமாவை நான் நெருங்கினால், அவனது இழப்பிற்காக தங்களது முகத்தை அறைந்து கொண்டு துன்பத்தில் அரற்றுவதற்கு அவனுடைய மகள்களுக்கு நல்ல வாய்ப்பளிப்பேன்"
அது அடுத்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தது.
oOo
நபியவர்களின் மறைவிற்குப் பின்னரும் முஸைலமாவின் பிரச்சினை ஓயாமல் தொடர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் உச்சக்கட்டத்தை அடைந்தது. அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் இந்த விவகாரத்தில் முக்கியமாய்க் கவனம் செலுத்தினார். மதீனாவிலிருந்து கிளம்பியது முஸ்லிம்களின் படை. அதன் விபரங்களை இதர தோழர்களின் வரலாற்றில் நெடுக விரிவாய்ப் படித்தோம். அதனால் இங்கு நுஸைபாவின் பங்கை மட்டும் பார்ப்போம்.

கலீஃபா அபூபக்ரின் முஅத்தின் மதீனா நகர வீதிகளில் பொய்யன் முஸைலமாவை எதிர்த்துப் போரிட மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே சென்றார். தொழுகையின் அழைப்பிற்கு எப்படி முந்திக் கொண்டு ஓடி வருவார்களோ, அதேபோல்தான் போரின் அழைப்பிற்கும் கிளம்பினார்கள் அந்த மக்கள்.

நுஸைபா ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நாளாயிற்றே அது! போர் அழைப்புக் காதில் விழுந்ததும் "மகனே கிளம்பு" என்று தம்முடைய மகன் அப்துல்லாஹ்வுடன் வாளைத் தூக்கிக் கொண்டு, முஸ்லிம் படைகளுடன் யமாமாவை (சுட்டி) நோக்கி ஓடினார் உம்மு உமாரா. அங்கோ கடுமையான யுத்தம். முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலாய் அமைந்த யுத்தம் அது.

"அல்லாஹ்வின் விரோதி எங்கே? எனக்குக் காண்பியுங்கள். எங்கே அல்லாஹ்வின் அந்த விரோதி!" என்று, இரை தேடும் பெண் புலியைப் போன்று படை வரிசையினூடே சீற்றமுடன் பாய்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார் நுஸைபா. கடைசியில் அவனை அந்த அம்மையார் அடைந்தபோது, துண்டாடப்பட்டுக் கிடந்தான் முஸைலமா. வஹ்ஷி பின் ஹர்பு தமது ஈட்டியால் அவனுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அதைக் கண்டவுடன்தான் அமைதியும் உளநிறைவும் ஏற்பட்டது அந்த அம்மையாருக்கு.

உஹதுப் போரில் நுஸைபாவுக்குப் பன்னிரெண்டு விழுப்புண்கள் என்று பார்த்தோமா? இந்தப் போரில் பதினொன்று. தவிர, உஹதுப் போரின்போது தோள்பட்டையில் காயம் பட்ட அந்தக் கையை இந்தப் போரில் இழந்திருந்தார் அவர்.

போரில் கலந்துகொண்டார்கள்; காயமுற்றார்கள்; அங்கங்களை இழந்தார்கள் என்று எளிதாய் எழுதிவிடுகிறோம்; படித்துவிட்டு அடுத்த வரிக்கு நம் பார்வை தாவிவிடுகிறது. நவீன மருத்துவ வசதிகள் எதுவுமற்ற அக்கால கட்டத்தில் காயமுற்ற வீரர்களுக்கு அளிக்கும் சிகிச்சை முரட்டுத்தனமான ஒன்று. யமாமா போரில் காலித் பின் வலீத் தமக்கு நல்ல சிகிச்சை அளித்து கவனித்துக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார் நுஸைபா. அது எப்படியான சிகிச்சை?

எண்ணெய்யைக் கொதிக்க வைத்துக் காயங்களின் மேல் ஊற்றுவார்கள். அது கிருமி நாசினியாகவும் காயத்தைத் தீய்த்தும் உதவுகின்ற மருத்துவம். எவ்விதமான மயக்க மருந்தோ, வலி மரத்துப்போகும் மருந்துகளோ இல்லாத அக்காலத்தில் இந்தச் சிகிச்சைக்கு உட்படும் வேதனை எப்படி இருக்கும்? ‘அதைவிட அங்கத்தை இழந்துவிடுவது எவ்வளவோ மேல்’ என்று கூறியிருக்கிறார் நுஸைபா.

நாமெல்லாம் மனம் மரத்துப்போய், சொகுசில் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.

இத்தகு வேதனைகளையும் வலியையும் தாமே முன்வந்து இழுத்து போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு என்ன இருந்தது? அங்கங்களை இழந்தாலும் பரவாயில்லை, உயிரையேகூட இழந்தாலும் பரவாயில்லை என்று ஏன் களம் புகுந்தார்கள்? பொருளாசையா? பதவி ஆசையா? அந்த மண்ணாசையெல்லாம் இல்லை; சுத்தமாக இல்லை.  இறைவனும் இறைத் தூதரும் இறை மார்க்கமும் மட்டுமே பிரதானம்; மறுமை ஈடேற்றம் மட்டுமே குறிக்கோள்.
பெரும் திருப்தியுடன் மதீனா திரும்பியவர், கலீஃபா உமர் (ரலி) அவர்களின் கிலாஃபத்தில் ஹிஜ்ரீ 13 வரை உயிர் வாழ்ந்து, இறவாப் புகழடைந்தார் நுஸைபா.
ரலியல்லாஹு அன்ஹா!
 
 

Sep 14, 2015

சுகவீனமும், மரணமும்

ரோமர்களின் படையெடுப்பு

ஜர்ஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல் 

அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 21

ரோமர்களை வெற்றி கொள்ளுதல்

மேற்கண்ட மூன்று தலைப்புக்களில் வரும் சம்பவங்கள் அனைத்தும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. தயவுசெய்து காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வரலாற்றை இதே இணையத்தளத்தில் உள்ள இஸ்லாமிய வரலாறு என்னும் பகுதியில், ''காலித் பின் வலீத் (ரலி)" என்னும் தலைப்பில் காண்க.


(காலித் பின் வலீத் (ரலி) வரலாறு)


ரோமர்களுடன் முஸ்லிம்கள் போர் நடந்து கொண்டிருக்கின்ற தருணத்தில் மதினாவிலிருந்த வந்ததொரு தூதுவர் அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்ற துயரச் செய்தியைக் கொண்டு வந்தார். மேலும், அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள், ரோமர்களுக்கு எதிரான போரில் படைத் தளபதியாக இதுவரை செயல்பட்டு வந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்களை நீக்கி விட்டு, அவருக்கும் பதிலாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களை படைத் தளபதியாக நியமித்து விடும்படி கட்டளை அனுப்பி வைத்தார்கள்.

சுகவீனமும், மரணமும்

07, ஜமாதுல் ஆகிர் ஹிஜ்ரி 13, ஆம் ஆண்டில், ஒரு குளிர் நாளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் குளித்து விட்டு வரும் பொழுது அடித்த குளிர் காற்றில் அவர்களது மேனியில் தாக்கப்பட்டதன் காரணமாக, உடனே அவர்களுக்கு காய்ச்சல் காண ஆரம்பித்து விட்டது. அதுவே அவர்களது மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.

பதினைந்து நாட்களாக அவர்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். அவர்களது நிலைமை மிகவும் மோசமாக ஆனதுடன், பள்ளிவாசலுக்குச் சென்று தொழவே மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, உமர் (ரலி) அவர்களை இமாமாக நியமித்து தொழுகைகளை நடத்தும்படி உத்தரவிட்டார்கள். இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது நிலை மிகவும் மோசமாக ஆகிக் கொண்டிருந்த பொழுது, மருத்துவர் அழைக்கப்பட்டார். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களோ எல்லாம் முடிந்து விட்டது, இனி மருத்துவர் வந்து என்ன பயன்! என்று கூறி விட்டார்கள். மீண்டும் அவர்களிடம் இது பற்றிக் கேட்ட பொழுது, நான் என்ன சொல்கின்றேனோ அதனை நீங்கள் செய்தால் போதுமானது என்று கூறி விட்டார்கள். எனவே, மீண்டும் அபுபக்கர் (ரலி) அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாத தோழர்களும், குடும்பத்தவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள். நோய்வாய்ப்பட்;டிருந்த அந்த கால கட்டத்தில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அளித்த வீட்டில் - அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளிக்கு மிக அருகிலேயே தனது இறுதிக் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களது வீடும் அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு மிகத் தொலைவில் ஒன்றும் இல்லை, அன்னார் தனது அதிகமான நேரங்களை அபுபக்கர் (ரலி) அவர்களுடனேயே கழித்தார்கள். எப்பொழுதும் அபுபக்கர் (ரலி) அவர்களது படுக்கைக்கு மிக அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இப்பொழுது கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள், தனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்றும், அவ்வாறு தான் செய்யவில்லையாயின் மக்கள் தங்களுக்குள் முட்டி மோதி, ஒரு குழப்பமான நிலை உருவாகி விடுமே என்றும் கருதலானார்கள். தனது விருப்பத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூத்த தோழர்களிடம் கலந்தாலோசனை செய்து, இறுதியாக உமர் (ரலி) அவர்களை தனக்குப் பின் அடுத்த கலீஃபாவாக நியமிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களின் முன் கோபம் குறித்து சிலர் அவரை ஆட்சியாளராக நியமிப்பது குறித்து அச்சம் தெரிவித்தனர். அத்தகையவர்களை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள், உமர் (ரலி) அவர்களிடம் உள்ள நற்குணம் என்னவென்றால், ஆட்சித் தலைவருக்கே உரிய குணங்களான, வளைந்து கொடுத்துப் போகாத தன்மையும், இளகிய மனதும் அவரிடம் இருக்கின்றது என்று விளக்கமளித்தார்கள். மேலும் தொடர்ந்து, நான் அவரிடம் பழகிய நாட்களின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின்படி, நான் கோபமாக இருக்கின்ற சமயத்தில் அவர் என்னை சாந்தப்படுத்த முயற்சி செய்திருக்கின்றார், இன்னும் இளகிய மனதுடன் காணப்பட்ட இடங்களில் உறுதியுடன் இருக்குமாறும் அவர் எனக்கு அறிவுரை பகர்ந்துள்ளார். மேற்கண்ட அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் மாடிப் பகுதிக்குச் சென்ற அபுபக்கர் (ரலி) அவர்கள், மிகவும் தளர்ந்து போயிருந்த காரணத்தால், தனது மனைவியான அமிஸ் அவர்களின் மகளான அஸ்மா அவர்களின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டவராக அங்கே கூடி நின்ற மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் :

எனக்கு அடுத்ததாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நடத்துவதற்காக நான் தேர்ந்தெடுத்திருக்கின்ற நபரை நீங்கள் உங்களது ஆட்சியாளராக ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். நிச்சயமாக, நான் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன் என்பதனை விளக்குவதற்கு எனது உடல் வலி இடம் தராத நிலையில் நான் இருக்கின்றேன். நான் எனது உறவினர் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. எனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்குரியவராக, உமர் (ரலி) அவர்களையே நான் தேர்வு செய்துள்ளேன். நான் சொல்வதை செவிதாழ்த்திக் கேளுங்கள், எனது விருப்பத்திற்கு நீங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள் என்று தனது உரையை முடித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

அங்கு கூடியிருந்த அனைவரும் ஒருமித்த குரலில், ''நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், அதற்கு கட்டுப்படுகின்றோம்"" என்று கூறினார்கள். அதன் பின் அங்கிருந்த உதுமான் (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது உரையை மக்களிடம் வாசித்துக் காண்பிக்குமாறு கூறினார்கள் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்... அபுபக்கர் பின் அபூ குஹஃபா ஆகிய நான் இந்த உலகத்தை விட்டுப் பிரிகின்ற தருணத்தில் இன்னும் மறுமைக்குப் பயணப்படுகின்ற ஆரம்ப நேரத்தில், இன்னும் நிராகரிப்பளர்கள் சத்தியத்தை விசுவாசிப்பவர்களாக மாற விரும்புகின்ற, சத்தியத்தை அசாதாரணமாக கருதிக் கொண்டிருந்தவர்கள் சத்திய சீலர்களாக மாற நினைக்கின்ற மற்றும் பொய்யர்கள் சத்தியவான்களாக மாற விருக்கின்ற அந்த மறு உலகத்தின் முதற்படிக்குச் செல்வதற்காக உங்களிடம் பிரியாவிடை பகர்கின்ற நான் ஆற்றுகின்ற இறுதி உரையாகும் இது!

எனக்குப் பின் ஆட்சியாளராக உமர் (ரலி) அவர்களை நான் நியமித்துள்ளேன். அவருக்கு செவிதாழ்த்துங்கள், கட்டுப்படுங்கள். (நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்) அல்லாஹ்வின் அவனது தூதர் (ஸல்) அவர்களும் என் மீது பொறுப்புச் சுமத்திய கடமைகளையும், இன்னும் உங்கள் மீதும் என் மீதும், நான் என்னால் இயலுமான வரை நிறைவேற்றி உள்ளேன். அவர் நீதி செலுத்தவராரென்றால், அதனைத் தான் அவரிடம் நான் எதிர்பார்த்தது. மேலும், அது நான் அவரிடம் அறிந்து வைத்திருந்தது, இன்னும் (நல்லதொரு) மாற்றங்கள் செய்வாரென்றால், அதில் கிடைக்கக் கூடிய நல்லனவற்றை நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள். என்னுடைய நோக்கம் சிறந்ததென்றே கருதுகின்றேன், ஆனால் மறைவானவற்றை நான் அறியக் கூடியவனல்லன். ஆனால், எவரொருவர் தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துவாரென்றால், அவர் விரைவில் ஆட்சிப் பொறுப்பினை விட்டும் எவ்வாறு அகற்றப்படுவார் என்பதனையும் கண்டு கொள்வார்.

உங்கள் மீது இறைவனது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! (என்று கூறி தனது உரையை முடித்தார்கள்).

இந்த உரையை முடித்த பின் ஒரு மனிதர் அபுபக்கர் (ரலி) அவர்களைச் சந்தித்து, உமரையா உங்களையடுத்த ஆட்சியாளராக நியமித்திருக்கின்றீர்கள், உங்கள் முன்பதாகவே அவர் மக்களை எந்தவிதமாக நடத்தினார்கள் என்பதனை நீங்கள் அறியாததொன்றுமல்ல என்று கூறினார். இப்பொழுது அவரே முழு ஆட்சிப் பொறுப்புக்கும் உரித்தவராகி விட்டார், மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம் என்றும் வந்த அந்த மனிதர் கூறினார். நீங்கள் இப்பொழுது உங்களது இறைவனைச் சந்திக்கப் போகின்றீர்கள், மக்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உங்களின் இந்த நிலை குறித்து அங்கே நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என்றும் அந்த நபர் கூறினார். படுக்கையில் படுத்துக் கிடந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், வந்திருந்த நபரை அமரச் சொல்லி விட்டு, எனது இறைவனைச் சந்திக்கின்ற பொழுது, அச்சத்தோடு அவனைச் சந்திக்கின்ற நிலையைக் கூறி என்னை கலவரமடையச் செய்கின்றீர்களா? எனது இறைவன் முன்னிலையில் நான் நின்று கொண்டிருக்கும் பொழுது, 'உன்னுடைய படைப்பினங்களிலேயே உன்னதமான படைப்பளார் ஒருவரை எனக்குப் பின் ஆட்சியாளராக நியமித்து விட்டு வந்திருக்கின்றேன்" என்ற பதிலைக் கூறுவேன் என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறி விட்டு, உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள். தனிமையில் அவர்களை அமர வைத்து, உமர் (ரலி) அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறினார்கள்.

பின்பு, இறைவனை நோக்கி கையை உயர்த்திய அபுபக்கர்(ரலி) அவர்கள், இறைவா! இந்த மக்களின் நல்வாழ்வுக்காகவே இவரை நான் தேர்வு செய்தேன், இன்னும் ஒருவரோடு ஒருவர் கருத்துமுரண்பாடு கொள்வதனின்றும் தடுக்கும் பொருட்டே இந்தத் தேர்வினை நான் செய்தேன். நீயே மிக அறிந்தவன்! என்று கூறினார்.

மிக நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே நான் உமரை எனக்குப் பின்னர் ஆட்சியாளராக நியமித்தேன். மிகச் சிறந்தவரும், உறுதி படைத்தவரும், இன்னும் நேர்வழியைப் பின்பற்றி நடப்பதற்கு ஆர்வம் கொண்டவருமாவார். யா அல்லாஹ்! ஆட்சியாளர்களை நேர்வழியில் நடப்பவர்களாக நீ ஆக்கியருள்வாயாக! இன்னும் எனக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பவரை ஆட்சியாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த ஆட்சியாளராக ஆக்கியருள்வாயாக!

மேலும், ஈராக்கை விட்டும் புறப்படுவதற்கு முன்னாள், காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது பொறுப்பினை முதன்னா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதற்குப் பின்னர் பாரசீக மன்னர் மேலும் துணைப்படைகளை ஈராக்கை நோக்கி அனுப்ப ஆரம்பித்தான். கலீபாவின் உடல்நலக் குறைவின் காரணமாக முதன்னா (ரலி) அவர்கள் தலைநகர் மதீனாவிலிருந்து வரக் கூடிய செய்திகளும், தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால் மிகவும் மனமுடைந்து போன முதன்னா (ரலி) அவர்கள் தனது பொறுப்புக்களை பஷீர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மதீனாவை நோக்கிக் கிளம்பினார். அவ்வாறு கிளம்பிய அவர் மதீனாவை அடைந்த பொழுது, அந்த நாள் அபுபக்கர் (ரலி) அவர்களின் இறுதிநாளாக இருந்தது.

ஈராக்கின் முழு நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள். உமரே..! நீங்கள் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நாள் எனது இறுதி நாளாக இருக்கக் கூடும் என்றே நான் நினைக்கின்றேன். நான் பகலில் இறந்தால் வரக் கூடிய மாலை நேரத்திலும் இன்னும் இரவில் இறந்தால் வரக்கூடிய அதிகாலை நேரத்திலும், நீங்கள் முஸ்லிம்களின் படையைத் திரட்டி முதன்னா (ரலி) அவர்களின் உதவிக்கு அனுப்பி வையுங்கள். (நான் இறந்து விடுவதால் ஏற்படுகின்ற) எந்த துக்கமும் இறைநம்பிக்கையாளர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையினின்றும், இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய கடமையினின்றும் உங்களைத் தடுத்து விட வேண்டாம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததை விடவா மிகப் பெரிய துன்பம் ஒன்று இனி ஏற்பட்டு விடப் போகின்றது? அந்த நாளில் நான் செய்த கடமைகளை நீங்கள் அறிவீர்கள். இறைவன் மீது சத்தியமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த அந்த நாளில், என்னிடம் மிகச் சிறிய அளவு பலவீனத்தைக் கூட நான் வெளிப்படுத்தியிருந்திருப்பேன் என்று சொன்னால், கருத்து முரண்பாடு காரணமாக மதீனா நகரமே தீப்பற்றி எறிந்து போயிருக்கும். இறைவன் தன்னுடைய அருட்கொடைகளின் மூலமாக சிரியாவில் வெற்றி அளித்து விட்டான் என்று சொன்னால், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை நீங்கள் மீண்டும் ஈராக்கிற்கு அனுப்பி வைத்து விடுங்கள். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவராவார், அவர் நாட்டின் முழுமையான நிலையையும் சீர்தூக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடக் கூடியவர் என்றும் கூறினார்கள்.

இன்னும் மரணப்படுக்கையில் இருந்து கொண்டிருந்த நிலையிலேயே, அரசின் கருவூலகத்திலிருந்து நான் எவ்வளவு பணத்தை கடனாகப் பெற்றிருக்கின்றேன் என்று கேட்டார்கள். ஆறாயிரம் திர்ஹம்கள் என்று சொல்லப்பட்டது. குறிப்பிட்ட நிலத்தை விற்று அந்த விற்ற பணம் முழுவதையும் கருவூலகத்தில் ஒப்படைத்து விடும்படிக் கூறினார்கள். அதன்படியே அந்த நிலம் விற்கப்பட்டு, முழுத் தொகையும் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் தான் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட நாளிலிருந்து இதுவரை தனக்காகச் சேர்த்துக் கொண்ட சொத்துக்களின் விபரத்தைக் கேட்டார்கள். அவரது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவும், முஸ்லிம்களின் போர்த்தளவாடங்களை மெருகூட்டுவதற்காக பெறப்பட்ட அடிமையும், தண்ணீர் சுமந்து வருவதற்காக வாங்கப்பட்ட ஒட்டகமும், ஒன்றரை ரூபாய் பணத்திற்குப் பெறப்பட்டதொரு துணியும் உள்ளன என்று கூறப்பட்டது. இவை அனைத்தையும் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கின்ற ஆட்சியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

இவையனைத்தையும் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களது முன்னிலையில் கொண்டு வரப்பட்ட பொழுது, அழுதவர்களாக.. ஓ..! அபுபக்கர் அவர்களே..! உங்களுக்குப் பின்னாள் ஆட்சிப் பொறுப்புக்கு வரவிருக்கின்றவர்களை நீங்கள் நிர்க்கதிக்குள்ளாக்கி விட்டீர்களே..! என்றார்கள்.

இறப்பிற்குச் சற்று முன்னதாக தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஜனாஸாவை எத்தனை துணிகளைக் கொண்டு சுற்றி கபனிடப்பட்டது என்று கேட்டார்கள். மூன்று துண்டுத் துணிகளை வைத்துக் கபனிடப்பட்டது என்று அவர்கள் பதில் கூறிய பொழுது, அதே போன்ற அளவுத் துணிகளைக் கொண்டு என்னைக் கபனிட்டால் போதுமானது என்று கூறினார்கள். அவற்றில் துவைத்து வைக்கப்பட்ட இரண்டு துண்டுகள் ஏற்கனவே நம்மிடம் உள்ளன, அதனை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்னுமொரு துண்டை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இதற்கு, என்னுடைய தந்தையே..! புதிய கபன் துண்டுகளை வாங்க இயலாத அளவுக்கு நாம் ஏழைகளாக இருக்கவில்லையே..! என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தனது தந்தையிடம் கூறினார்கள். புதிய ஆடைகளா..! இறந்த மனிதன் புதிய ஆடைகளை அணிவதை விட உயிருள்ளவர்கள் அணிவதே சிறந்தது என்று பதில் கூறினார்கள். இறந்த உடலைச் சுற்றப்பயன்படும் ஆடை அந்த மனிதனின் சலத்தையும், இரத்தத்தையுமே போர்த்திக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தநாளில் மரணமடைந்தார்கள் என்றும் கேட்டார்கள். இதற்கு, 'திங்கட்கிழமை" என்று பதில் கூறப்பட்டதும், நானும் இதே நாளில் மரணமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றேன் என்றார்கள். மேலும், தன்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

இறுதியாக, இறைவா..! என்னை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக..! இன்னும் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக..! என்றும் பிரார்த்தித்தார்கள். இதுவே, அவர்களது வதனத்திலிருந்து வெளிவந்த இறுதி வார்த்தைகளாகவும் அமைந்தன.

அவர்கள் நினைத்தது போலவே, 22, ஜமாதுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை அன்று மக்ரிப் மற்றும் இஷா நேரத்திற்கிடையே மரணமடைந்தார்கள். இன்னா லில்லாhஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது.

ஜனஸா நல்லடக்கத் தொழுகையை உமர் (ரலி) அவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அன்றைய இரவே ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அடக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கு மிக அருகில், தன்னுடைய தலைவருக்கு மிக அருகிலேயே அவரின் உற்ற நண்பரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணமடைந்த பொழுது அவருக்கு 63 வயதாகியிருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள், பதினொரு நாட்கள் கழித்து மரணத்தைச் சந்தித்தார்கள்.



                                                           END 

சிரியா


காலித் பின் வலீத் 

அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 20
பெர்ஸியாவைக் கைப்பற்றியதில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் பங்கு மகத்தானது. பொய்த்தூதர்கள் முறியடிக்கப்பட்டதன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்கள் பெர்ஸியாவைக் கைப்பற்றும் பொறுப்பை காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் கொடுத்ததோடு, காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 10 ஆயிரம் வீரர்களையும், அதன் பின் மதன்னா (ரலி) அவர்களின் தலைமையில் 8 ஆயிரம் வீரர்களையும், ஆக மொத்தம் 18 ஆயிரம் வீரர்களோடு களம் இறங்கினார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். (இந்த வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ள இணையத்தில் உள்ள காலித் பின் வலீத் (ரலி) அவர்களது வாழ்க்கை வரலாற்றைப் பார்வையிடவும்).

(காலித் பின் வலீத் (ரலி) வரலாறு)


சிரியா (ஹிஜ்ரி 13)

இந்த கால கட்டத்தில் சிரியாவானது ரோமர்களின் ஆட்சிப் பிரதேசத்தில் இருந்து வந்தது. ஈராக்கினைப் போலவே, ரோமப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரபுக் குலத்தவர்களுக்கும் ஹிஜாஸில் வாழ்ந்து கொண்டிருந்த அரபுக்களுக்கும் தொடர்புகள் பல இருந்து வந்தன. மதீனாவிற்கு முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்து வந்த பின்பு யூதர்களின் எதிர்ப்புக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக அதிகமாகிக் கொண்டே வந்தன. இந்த எதிர்ப்புகள் மதீனாவின் எல்லை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் வாழ்ந்து வந்த குலத்தவர்களைப் பாதிக்க ஆரம்பித்தது, ஆங்காங்கே சிறு சிறு பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்திருந்தன.

ஹிஜ்ரி 8 ம் ஆண்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரோமர்களுக்கு எதிராக மிகப் பெரிய படையெடுப்பு ஒன்றை எடுத்தார்கள், அதற்கு முஅத்தா போர் என்று வரலாறு சிறப்பித்துக் கூறுகின்றது. இந்தப் போரில் மிகச் சிறிய முஸ்லிம்களின் படையானது, மிகப் பெரும் படையான ரோமர்களை எதிர்த்துக் களமிறங்கியது. ரோமர்களின் படையை ஹிராக்குளியஸ் மன்னனே நடத்தி வந்ததோடு, அவனது படையில் அரபுக்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போரில் ஜஃபர் தய்யார் (ரலி) மற்றும் ஸைத் பின் ஹாரிதா (ரலி) ஆகிய இருவரும் ஷஹீது என்ற வீரத்தியாகிகளானார்கள். ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தானே தலைமையேற்று 30 ஆயிரம் தனது தோழர்களுடன் தபூக் நோக்கி படை எடுத்துச் சென்றார்கள். ரோமர்களை எதிர்த்துக் களமிறங்கிய இந்தப் படையின் தொடர்ச்சியாகத் தான், அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உஸாமா (ரலி) அவர்களின் தலைமையேற்க ஒரு படையை, ரோமர்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு அனுப்பி வைத்தார்கள் என்பதும், இந்தப் படைக்குத் தலைவராக உஸாமா (ரலி) அவர்களை நியமித்து விட்டதன் பின்னாள் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

ரோம மற்றும் பாரசீகப் பேரரசுகள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மீது எப்பொழுதும் போர் தொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே இருப்பதால், அபுபக்கர் (ரலி) அவர்கள் இப்பொழுது ரோமப் பேரரசின் நடவடிக்கைகள் குறித்து எப்பொழுதும், ஒரு உஷாராகவே இருந்தார்கள். ஈராக்கை வெற்றி கொண்டதன் பின்னாள், காலித் பின் ஸயீத் (ரலி) அவர்களது தலைமையில் ஒரு படையை சிரியாவை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்தப் படையை தைமா என்ற இடத்தில் தங்குமாறும், தனது அடுத்த கட்டளை கிடைக்கும் வரை போரைத் துவக்க வேண்டாம் என்றும் அபுபக்கர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். மேலும், நாமாகச் சென்று போரைத் துவக்க வேண்டாம் என்றும், எதிரிகள் போரைத் திணிக்கும்பட்சத்தில் நம்முடைய பகுதிகளைத் தற்காத்துக் கொள்வதற்குண்டான முறையில் போர் செய்யுமாறும் கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார்கள். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மறுத்து, பொய்த்தூதர்களுடன் கூட்டு வைத்திருப்பவர்களைத் தவிர்த்து, அப்பகுதியில் உள்ள ஏனைய குலத்தவர்களை கலந்தாலோசனை செய்து நம்முடைய படைகளுடன் சேர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் பணித்தார்கள். முஸ்லிம்களின் இந்த நடவடிக்கைகளைக் கண்டு ரோமர்கள் எச்சரிக்கை அடைந்து, முஸ்லிம்களை எதிர்ப்பதற்குண்டான படைகளைத் தயாரித்ததோடு, அந்தப் படைகளை முஸ்லிம்கள் கூடாரமடித்திருக்கும் தைமா என்ற இடத்திலிருந்து, லாக்ம், கஸ்ஸான் மற்றம் ஜுதாம் என்ற மூன்று ஊர்களுக்கு அப்பால், முஸ்லிம்களுடன் போர் புரிவதற்குப் பதிலாக எச்சரிக்கையாகத் தனது படைகளை ஹிராக்கிளியஸ் நிறுத்திக் கொண்டான்.

ஹிராக்கிளியஸ் ன் இந்த நடவடிக்கைகள் பற்றி கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், சற்றும் தாமதிக்கமால், அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு போரைத் துவக்குமாறு, காலித் பின் ஸயீத் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

போரைத் துவக்குங்கள், எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம், இறைவனிடம் உதவி கோரி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

கலீபா அவர்களின் உத்தரவினை ஏற்றுக் கொண்ட காலித் பின் ஸயீத் (ரலி) அவர்கள் சற்றும் தாமதிக்காமல், தனது படைகளை நகர்த்தினார். எதிரிகள் இப்பொழுது களைந்து புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தார்கள். இதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், முஸ்லிம்களை எதிப்பதற்காக களமிறங்கிய அரபுக்குலத்தவர்கள் பலர் சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

களைந்து ஓடிக் கொண்டிருக்கும் எதிரிகளைத் துரத்தும் பொழுது, மிகவும் எச்சரிக்கையைக் கைக் கொள்ளுமாறு கலீபா அவர்கள் புதிய உத்தரவினை தனது தளபதிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த உத்தரவினைப் பெற்றுக் கொண்ட தளபதி அவர்கள், ஸிரா மற்றும் அபில் என்ற ஊர்களுக்கு நடுவே தனது படையை முகாமிட்டுக் கொண்டார்கள். இந்த இடத்தில் வைத்து, முஸ்லிம்களின் படைகளை முன்னேற விடாமல் தடுப்பதற்கு முயற்சித்த பஹான் என்ற ரோமத் தளபதியை வெற்றி கொண்டார்கள்.

ரோமர்களுக்கு எதிரான இந்தப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான், யமன், பஹ்ரைன் மற்றும் திஹாமா போன்ற பகுதிகளில் இருந்து பொய்த்தூதர்களை வெற்றி வாகை சூடி விட்டு, முஸ்லிம் படைகள் மதீனாவிற்குத் திரும்பி இருந்தன. காலித் (ரலி) அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, இந்தப் படைகள் இப்பொழுது, ரோமர்களை எதிர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

நான்கு பிரிவுகளாக அனுப்பி வைக்கப்பட்ட முஸ்லிம்களின் படைப் பிரிவில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் இயங்கும் படைகளின் எண்ணிக்கையைத் தவிர்த்து 27,000 படை வீரர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களின் இந்த படை நகர்த்தலை அறிந்து கொண்ட ஹிராக்ளியஸ் மன்னன், தனது தம்பி தியோடிரிக் என்பவர் தலைமையில் 90 ஆயிரம் வீரர்கள் கொண்டதொரு படையை அமைத்து, அமர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களது தலைமையில் வரும் படையை எதிர்க்கவும், தியோடிரிக் - ன் மகன் ஜார்ஜ் ன் தலைமையில் இதே போன்றதொரு எண்ணிக்கையில் ஒரு படையை அமைத்து, யஸீத் பின் சுஃப்யான் (ரலி) அவர்களின் தலைமையில் வரும் படையை எதிர்க்கவும், தராக்கிஸ் என்பவன் தலைமையில் சுராஹ்பில் பின் ஹ{ஸ்னா (ரலி) அவர்களின் தலைமையில் வரும் படையை எதிர்க்கவும், மற்றும் கெய்கர் பின் நெஸ்டஸ் என்பவனது தலைமையில் 60 ஆயிரம் படைவீரர்கள் கொண்டதொரு படையை அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களது தலைமையின் கீழ் வரும் படையை எதிர்க்கவும், ஆக நான்கு படைப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று சந்திக்கு முன்பாகவே, அவர்களைத் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற திட்டத்துடன் ஹெராக்ளியஸ் செயல்பட்டான்.

தியோடரின் தலைமையில் வந்த படை முஸ்லிம் படைகளுக்கு முன்பதாகவே வந்து பாலஸ்தீனத்தின் மேட்டுப் பகுதியாகிய திமஸ் ல் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகத் தயாராக இருந்தார்கள். ரோமர்களின் மிகப் பெரும் படையைப் பார்த்த முஸ்லிம்களின் மனதில் ஒரு வித கலக்கம் உண்டானது, இந்த நான்கு படைப்பிரிவுகளில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் அடங்கிய பிரிவுக்கு தலைமை வகித்து வந்த அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் மற்ற தளபதிகள், நிலைமையின் தீவீரம் குறித்தும், இனி செயல்பட வேண்டியதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசனை நடத்தினார்கள்.

நாம் இனி தனித்தனி பிரிவுகளாக நின்று போர் புரிவோமென்றால், இவ்வளவு பெரிய எதிரிகளின் படையை எதிர்த்து வெல்வது என்பது கடினம், எனவே, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே படையாக எதிரிகளை நோக்கி களம் புகுவதே சிறந்ததென நினைக்கின்றேன், நாம் அனைவரும் எர்முக் என்ற இடத்தில் ஒன்று கூடுவோம் என்றும் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் தனது கருத்தைத் தெரிவித்தார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களும் அமர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு, ''அனைத்துப் படைப்பிரிவுகளும் எர்முக் ல் ஒன்று கூடி, எதிரிகளை நோக்கி களம் புகுந்து விடுங்கள். நிராகரிப்பாளர்களின் அந்த அணிகளைத் துவம்சம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டதோடு, மேலும் - நீங்கள் அல்லாஹ்வின் சத்திய வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காக களம் புகுந்திருக்கின்றீர்கள், அந்த சத்தியத்தை மேலோங்கச் செய்ய வேண்டிய பணியின் பொருட்டு அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைப் பரிசாகத் தர வல்லவனாக இருக்கின்றான், இன்னும் அவன் மீது யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களைத் தான் அவன் இழிவடையச் செய்வான்"" என்றும் தனது படைகளுக்கு கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)  

ஈராக் மீதான படையெடுப்பு

ஈராக் மீதான படையெடுப்பு
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 19

பொய்த்தூதர்களை ஒரு வழியாக அடக்கி விட்டதன் பின்பு, இப்பொழுது கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள், ஈராக்கின் தனது கவனத்தைத் திசை திருப்பினார்கள். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மிகப் பெரும் எதிரிகளாக விளங்கிய பைஸாந்தியம் மற்றும் பெர்ஸியப் படைகள் முஸ்லிம்களின் ஆட்சிப் பிரதேசத்திற்கு அதிகமான அச்சுறுத்தல்களைத் தந்து கொண்டிருந்தன. பல்வேறு அரச அலுவல்களுக்கு இடையேயும் கலீபா அவர்கள் எவ்வளவு தூரம் இந்த ஈராக் விவகாரத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள் என்பதைக் கீழ்க்கண்ட சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஒருநாள் ஒரு நபித்தோழர் தனது குலத்தவர்களில் சிலரைப் பற்றிய பிரச்னையை விவாதிப்பதற்காக அபுபக்கர் (ரலி) அவர்களிடம் வந்தார். இந்த விவகாரத்தைக் கேட்டு அதில் கலீபா அவர்களின் இறுதி முடிவை எதிர்பார்த்திருந்த அவரை நோக்கி, ''இஸ்லாத்தையும், அதனைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களையும் அழித்தொழிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும், இரண்டு எதிரிகளைப் பற்றி நான் இங்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, இந்த அற்பப் பிரச்னையைக் கொண்டு வந்து, எனது கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கின்றீர்களே.. இது நியாயமா?"" என்று கூறினார்கள்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டின் பொழுது இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு பல்வேறு நாட்டு அரசர்களுக்கு அழைப்பு மடல்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறானதொரு மடலை ஏந்திக் கொண்டு பெர்ஸியாவின் மன்னர் குஷ்ரூ பர்வேஸ் அவர்களைச் சந்தித்து வழங்குவதற்காக, அப்துல்லா பின் ஹ{தைபா (ரலி) என்ற தோழர் சென்றார். அந்த மடலில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். பெர்ஸியாவின் மன்னரான கிஸ்ரா அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் எழுதிக் கொள்ளும் மடல். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இன்னும் நேர்வழியைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு இறைவனுடைய ஆசி உண்டாவதாக! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை துணை ஏதும் இல்லை, முஹம்மத் அத்தகைய இறைவனின் தூதராகவும், அடிமையாகவும் இருக்கின்றார். நான் அல்லாஹ்வின் தூதுத்துவத்தை உங்களுக்கு தெரிவித்து (இஸ்லாத்தின் பால்) அழைப்பு விடுக்கின்றேன், (இத்தகைய பணிக்காகவே) முழு உலக மக்களுக்கும் தூதராக அல்லாஹ் என்னை அனுப்பி வைத்துள்ளான். இந்தப் பூமியில் வசிப்பவர்களின் உள்ளங்களில் இறைவனது அச்சத்தை ஊட்டவும், நிராகரிப்பில் வாழ்கின்ற மக்களுக்கு சத்தியத்தை விளங்கப்படுத்தவுமே என்னை இறைவன் தூதராக அனுப்பி வைத்துள்ளான். (எனவே) இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றும் அதன் மூலம் நீங்கள் சாந்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். அதனை நிராகரிப்பீர்கள் என்று சொன்னால், நெருப்பை வணங்கிய குற்றத்திற்காக நீங்கள் பொறுப்பாளியாக (குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளியாக மறுமை நாளில்) ஆக்கப்படுவீர்கள்"".

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிய இந்த சத்திய அழைப்பு மடலை பார்த்த மாத்திரத்தில் அதனைக் கிழித்தெறிந்த மன்னர் குஷ்ரூ, யமனின் கவர்னராக இருந்த பதான் என்பவருக்கு ஒரு மடலை எழுதினார். அதில், ஹிஜாஸ் க்கு இரண்டு குதிரை வீரர்களை அனுப்பி, இந்தக் கடிதத்தை எழுதி எனக்கு அனுப்பி வைத்த மனிதரை என்னிடம் அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டிருந்தார். மன்னர் குஷ்ரூ வின் கடிதத்தைப் பார்த்த யமனின் கவர்னர் பதான், பாபூயா என்பவரையும், பெர்ஷிய வீரனான கர்கரா என்பவரையும் அனுப்பி, அவர்களிடம் ஒரு மடலையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தில் இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் தூதர்களுடன் சென்று, மன்னர் குஷ்ரூ அவர்களைச் சென்று சந்திக்கும்படிக் கூறி தெரிவித்திருந்தார். இந்தத் தூதர்கள் இருவரும், தாயிஃப் நகர் வழியாக மதீனாவுக்கு வந்து கொண்டிந்தார்கள். இவர்களது வருகையின் நோக்கம் முழு அரேபியாவுக்கும் இப்பொழுது தெளிவாகத் தெரிந்திருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் நின்று கொண்டிருந்த பாபுயா, மன்னர்களின் மன்னரான கிஷ்ரா அவர்கள், உங்களை மன்னரது சமூகத்திற்கு அழைத்து வரும்படி யமனின் கவர்னருக்கு இட்ட உத்தரவின் பேரில் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று கூறினார். அந்தக் கடிதத்தில், மேன்மைமிகு எங்களது மன்னரது கட்டளையை ஏற்று நீங்கள் எனது தூதுவர்களுடன் மன்னரது அவைக்கு வருவீர்கள் என்று சொன்னால், எங்களது மன்னர் உங்களை அரசராக ஆக்குவதற்கு பரிந்துரைக்க முடியுமாக இருக்கும் என்பதை வாய்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், யமன் தேசத்து இளவரசனான நான் உங்களையும், உங்களது நாட்டையும் இல்லாமலாக்கி விடுவேன் என்பதனையும் நீங்கள் அறிவீர்கள் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது. நன்றாக முகச்சவரம் செய்து, இன்னும் மீசையை பெரிதாக வளர்த்திருந்த அந்தத் தூதுவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் அவர்களை நோக்கிப் பார்வையை வீசிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''நான் உங்கள் மீது இரக்கப்படுகின்றேன்"" என்று கூறி விட்டு, யாருடைய உத்தரவின் பேரில் உங்களது முகங்கள் இவ்வாறு வெறுமையாக உள்ளன என்று கேட்டார்கள். ''எங்களது இரட்சகரான மன்னர் கிஷ்ரா"" என்று அவர்களிடம் பதில் வந்தது. இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''மீசையை மழித்துக் கொள்ளுங்கள், தாடியை வளர விடுங்கள்"" என்று அவர்களைப் பார்த்துக் கூறி விட்டு, இன்றைய பொழுதை இங்கேயே நீங்கள் கழித்து விட்டு, நாளை மீண்டும் வந்து என்னைப் பாருங்கள் என்று கூறி விட்டுச் சென்றார்கள்.

மறுநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை குஷ்ருவின் தூதுவர்கள் சந்திக்க வந்த பொழுது, உங்களது மன்னாதி மன்னர் அவரது மகனால் இன்ன இரவில் கொல்லப்பட்டு விட்டார். கொலைகாரனான உங்களது மன்னனிடம் நீங்கள் சென்று, என்னுடைய நம்பிக்கையான இஸ்லாமும், என்னுடைய அதிகாரமும் விரைவில் உங்களது பூமியையும், உலகத்தின் கடைசி முனையையும் அது அடையும் என்று தெரிவியுங்கள் என்று கூறினார்கள். இன்னும், நீங்கள் இஸ்லாத்தைத் தழுவினீர்கள் என்று சொன்னால், உங்களது ஆட்சிப் பிரதேசங்களுக்கு உங்களையே ஆட்சியாளர்களாக நியமிப்போம் என்றும் அவர்களிடம் தெரிவியுங்கள். அந்தத் தூதுவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டும் பிரிந்து செல்லும் பொழுது, ஒரு இளவரசர் ஒருவர் அன்பளிப்பாக அளித்த தங்கத்தினாலான இடுப்பில் அணியக் கூடிய வார்ப்பட்டை ஒன்றை அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பரிசாக அளித்தார்கள். இன்னும் இவர்கள் யமனின் கவர்னரைச் சென்று சந்தித்த பொழுது, நடந்த அத்தனை விபரங்களையும் தெரிவித்ததோடு, ''உண்மையில் அவர் ஒரு இறைவனது தூதராகவே இருக்கக் கூடும்"" என்றும் தெரிவித்தார்கள். அடுத்த சில நாட்களில், மன்னர் படுகொலைக்கு ஆளான செய்தி யமனை வந்தடைந்தது. அத்துடன், அரேபியாவின் விவகாரத்தில் எந்த விதத்திலும் தலையீடு செய்ய வேண்டாம் என்றும் யமனின் ஆட்சியாளருக்கு அறிவுறுத்தலும் வந்தடைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்வதற்கு முன்னர், பதான் மற்றும் யமனில் வாழ்ந்த பெர்ஸியர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்;டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெர்ஸியாவின் மன்னர் குஷ்ரு அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்பு, ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதில் போட்டா போட்டி நிலவியது. இதில் 12 அல்லது 13 நபர்கள் போட்டியிட்டதில், அவர்களுள் பெண்களும் இருந்தனர். நாடெங்கும் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவியது. முதலாவது கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்தில், ஈராக் பிரதேசத்தை பெர்ஸியாவின் கவர்னர் ஹெர்மூஸ் அவர்ள் ஆண்டு கொண்டிருந்தார். இவர் அரேபிய மக்கள் மீது தீராத தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டுமிருந்தார். எனவே,அரபுக்களும் அவரை வெறுத்தனர்.

எனவே, அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்பு, ஈராக் பகுதியில் வாழும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குண்டான ஏற்பாடுகளைத் துவங்க ஆரம்பித்தார்கள். இருப்பினும், நாடெங்கும் கிளர்ந்தெழுந்திருந்த பொய்த் தூதுவர்களை அடக்குவதற்கு அவர் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக, ஈராக் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சாத்தியக் கூறுகள் குறைவாக இருந்தன.

இந்த நிலையில், மதனா (ரலி) என்ற நபித்தோழர், இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக முன் வந்ததோடல்லாமல், தனது குலத்தவர்களுக்கு தன்னை அமீராக நியமிக்கும்பட்சத்தில், எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து வரும் தொல்லைகளுக்கு எதிராக தான் போராடத் தயாராக இருப்பதாகவும் கலீபா அவர்களிடம் தெரிவித்தார். மதனா (ரலி) அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் பின்பு, மதனா (ரலி) அவர்கள் ஈராக் சென்று போர் செய்ததோடல்லாமல், பெர்ஸியர்களின் வலிமை ஆகியவற்றைக் கணித்ததோடு, அவர்களது தொந்தரவுகளை சற்று மட்டுப்படுத்தியும் வைத்திருந்தார்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)  
 

முஸைலமா என்ற பொய்யன்

முஸைலமா என்ற பொய்யன் 
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 18


பொய்த்தூதர்களை முறியடிப்பதற்காக புறப்பட்ட இஸ்லாமியப் படைகள் மிகவும் கடுமையானதொரு போராட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டியதிருந்தது. எந்தப் போரும் மிகவும் எளிதாக இருக்கவில்லை. அதிலும் பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்தவனும், நஜ்துப் பிரதேசத்தின் யமாமாப் பகுதியின் முஸைலமா வினை எதிர்த்து முஸ்லிம்கள் தொடுத்த போரானது மற்ற போர்களை விடவும் மிகக் கடுமையான போராக இருந்தது. முஸ்லிம்கள் கடுமையான முறையில் அழைக்கழிக்கப்பட்டார்கள். அவன், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தூதுத்துவத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக வாதிட்டான்.

யமாமாப் பகுதி மக்களுக்கு இஸ்லாத்தின் தூதை தெளிவாக எடுத்துரைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் இந்த முஸைலமா தனது வாதத்திறமையினால் முறியடித்தான். மேலும், தொழுகைகக்காக அழைக்கப்படும் அதானிலும் இவன் மாற்றம் செய்தான். இன்னும் மதுபானத்தையும், விபச்சாரத்தையும் ஆகுமானவைகளாக அறிவித்தான். இதன் காரணமாக, கவரப்பட்ட மக்கள், இந்த வழிகேடனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள், இன்னும் இவ்வாறு பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது. அந்தப் பகுதியெங்கும் இவனைப் பிரபலப்படுத்தியது. இன்னும் இவன் பெண் தூதுவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட சஜாவை மணந்து கொண்ட பின், தன்னுடைய தூதுத்துவம் முன்னைக் காட்டிலும் வலுவடைந்திருப்பதாகவும் இவன் கூற ஆரம்பித்து விட்டான்.

எனவே, முதலில் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக்கு எந்தவித பலனும் இல்லாத காரணத்தால், இப்பொழுது போரைத் துவக்க வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. எனவே, இவனை எதிர்த்துப் போர் புரிய முதலில் இக்ரிமா (ரலி) அவர்களையும், அவர்களை அடுத்து ஷ{ரஹ்பில் பின் ஹஸ்னா (ரலி) அவர்களது தலைமையிலும் படைகள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த இரு படைகளையும் முஸைலமா தோற்கடித்தான்.

இப்பொழுது, கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில் ஒரு படையைத் தயார் செய்து, முஸைலமாவை எதிர்த்துப் போர் புரிய அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், சற்று முன் தான் துலைஹா என்ற பொய்யனைத் தோற்கடித்து வந்திருந்தார்கள். இன்னும் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களது தலைமையில் அன்ஸார்களையும், ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்களது தலைமையில் முஹாஜிர்களையும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களது படைகளுடன் சேர்ந்து கொள்ளும்படி கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் படை நடத்தி வருகின்றார்கள் என்பதனைக் கேள்விப்பட்ட முஸைலமா தனது படைகளை மேலும் அதிகரித்ததோடு, இப்பொழுது 40 ஆயிரம் படை வீரர்களுடன் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகத் தனது படையைத் தயாராக்கி, அந்தப் படைகளை அக்ரபா என்ற இடத்தில் நிலைகொள்ள வைத்தான்.

இப்பொழுது, இரண்டு படைகளும் நேருக்கு நேர் மோதுவதற்காகத் தயாராகி விட்டன. இப்பொழுது முஸைலமாவின் படைப்பிரிவில் இருந்த நஹார் என்பவன் முன் வந்து, தன்னை எதிர்க்கும் துணிவு முஸ்லிம்களில் எவருக்கும் உண்டா? என்று கர்ஜித்து நின்றான்.

அவனது சவாலை உமர் (ரலி) அவர்களின் தம்பியான ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டு அவனுடன் மோதினார்கள். ஒரே வாள் வீச்சில் அவனது தலையைத் தரையில் உருட்டி விட்டார்கள் ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள். இந்த நேருக்கு நேர் யுத்தம் முடிந்தவுடன், யுத்தம் ஆரம்பமாகியது.

ஆரம்பத்தில், முஸைலமாவின் படைகளை எதிர்க்க இயலாத முஸ்லிம்கள் பின்வாங்கினார்கள், இன்னும் சிறிது நேரங் கழித்து முஸ்லிம்கள் கலைந்து ஓடவும் ஆரம்பித்தார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்ட முஸைலமா, காலித் பின் வலீத் (ரலி) அவர்களது கூடாரம் வரைக்கும் முஸ்லிம் படைகளை துரத்திக் கொண்டு வந்து விட்டான். ஏன்...?! காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூட பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள்.

அப்பொழுது, கூடாரத்தில் காலித் பின் வலீத் (ரலி) இல்லை, அவர்களது மனைவி உம்மு தமீம் (ரலி) அவர்கள் மட்டும் தான் இருந்தார்கள். அங்கே காவலுக்கு முஜாஆ என்ற கைதி நின்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மனைவியான உம்மு தமீம் (ரலி) அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் முஸைலமாவின் ஆட்கள் கூடாரத்தில் நுழைந்தார்கள். இதனைக் கண்ட, கைதி முஜாஆ அவர்களைத் தடுத்தி நிறுத்தியதோடு,

அந்தப் பெண்மணியோ சுதந்திரமான பெண்..!

போயும் போயும் ஒரு பெண்ணையா நீங்கள் கொல்லப் போகின்றீர்கள்..!

அதோ.. பாருங்கள். அவர்களது ஆண்கள் நிற்கின்றார்கள்..! அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள்..! என்றதுடன், உம்மு தமீம் (ரலி) அவர்களை விட்டு விட்டு, முஸைலமாவின் ஆட்கள் அந்தக் கூடாரத்தை விட்டும் அகன்று விடுகின்றார்கள். அந்த இடத்தை விட்டும் அகலும் பொழுது, கூடாத்தைப் பிணைத்திருந்த கயிறுகளை வெட்டி, அறுத்தெறிந்து விட்டுச் செல்கின்றார்கள்.

(முஸாஆ அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களால் சிறை பிடிக்கப்பட்ட கைதியாக இருப்பினும், அந்தக் கூடாரத்தை விட்டு விட்டு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கிளம்பும் பொழுது, அதன் பாதுகாப்புப் பொறுப்பை முஜாஆ விடம் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் நடத்தை காரணமாகவும், முஜாஆ வைக் கௌரவமாக நடத்தியதன் காரணமாகவும் கவரப்பட்ட முஜாஆ அதற்குப் பிரதயீடாக, காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மனைவியைக் காப்பாற்ற மிகவும் சாதுர்யமான முறையில் முஸைலமாவின் ஆட்களைச் சமாளித்து, அதன் மூலம் உம்மு தமீம் (ரலி) அவர்களைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது).

அசைக்க முடியாத இஸ்லாத்தின் இறைநம்பிக்கையானது, சற்று நேரத்தில் தோற்று விட்டோம் நம்மால் முஸைலமாவை எதிர்த்து நிற்க முடியாது என்று சிதறி ஓடிய முஸ்லிம்களை, எவர் அசைந்தாலும், அசையாத உள்ளத்துக்குச் சொந்தக்காரரான தலைமைத் தளபதி, நிலைமையின் விபரீதத்தினைப் புரிந்து கொண்டு கன நேரத்தில், மீண்டும் சுதாரித்துக் கொண்டு, சிதறி ஓடிய முஸ்லிம்களை மீண்டும் ஒருங்கிணைத்து, அவர்களை களத்தில் நிற்க வைத்துப் போராட வைத்த நிகழ்வானது, இன்றும் வரலாற்றுப் பக்கங்களில் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஒருவர் பின் ஒருவராக தாங்கள் வந்த நோக்கம் நிறைவேற ஒருவர் பின் ஒருவராக, தங்களை அற்பணித்துக் கொண்டிருந்தார்கள் முஸ்லிம் வீரர்கள்.

ஓடிக் கொண்டிருந்த தோழர்களைப் பார்த்து தாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூவினார்கள்..!

என்னருமைத் தோழர்களே..!

இன்று நீங்கள் மிக மோசமானதொரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்களே..!

யா அல்லாஹ்..!

இந்த யமாமா மக்கள் வணங்குபவற்றை விட்டும், (ஓடிக் கொண்டிருக்கின்றார்களே) இந்த முஸ்லிம்களின் செயல்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொண்டேன்.

இதோ ..! இங்கே பாருங்கள்.. தோழர்களே..!

இவ்வாறு தான் தாக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே எதிரியை நோக்கி விரைந்தார்கள் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள். எதிரிகளில் ஒருவனைத் தாபித் கைஸ் (ரலி) அவர்கள் தாக்கிய பொழுது, அவன் கொடுத்த எதிர்த் தாக்குதலின் காரணமாக, தாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தொடை துண்டிக்கப்பட்டது. மிகவும் துணிச்சலானதொரு முஸ்லிம் வீரர் ஒருவர், துண்டிக்கப்பட்ட தொடையை எடுத்து எதிரியின் பக்கம் வீசினார்கள், அந்தத் தொடை எவன் மீது பட்டதோ அவன் அக்கணமே உயிரை விட்டான். தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களும், உயிர்த்தியாக ஆகி விட்டார்கள்.

இருப்பினும், முஸ்லிம்கள் இன்னும் தங்களது கூடாத்தை விட்டும் வெகு தூரம் விரட்டப்பட்ட நிலையில் இருந்தார்கள். இந்த நிலையில் முஸ்லிம்களைப் பார்த்து, ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்..!

(ஓடிக் கொண்டிருந்த முஸ்லிம்களைத் தடுத்த நிறுத்திய) அவர் கூறினார், இந்தக் கூடாரம் காலியானதன் பின் நீங்கள் எங்கு தான் போக முடியும்?

இறைவன் மீது சத்தியமாக..!

எதிரியைத் துரத்தி அடித்து வெற்றி வாகை சூடும் வரையிலும், அல்லது இறைவனிடம் என்னை ஒப்படைக்கும் வரையிலும், இதற்கு மேல் நான் ஒரு வார்த்தை பேச மாட்டேன். அதன் காரணமாக நான் அவனிடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதனைக் கூறிக் கொண்டே எதிரியை நோக்கிப் பாய்ந்த ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள், அவர்களது கையில் வாளை ஏந்திக் கொண்டிருந்த நிலையிலேயே இறையடி சேர்ந்தார்கள்.

அவருக்குப் பின் அபூ ஹ{தைபா (ரலி) அவர்கள், இவ்வாறு கூறிக் கொண்டே எதிரியின் மீது பாய்ந்தர்கள்.

ஓ..! என்னருமைக் குர்ஆனிய மக்களே..!

உங்களது செயல்களின் மூலம் குர்ஆனை அழகுபடுத்துங்கள்..!

இப்பொழுது அபூ ஹ{தைபா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள்.

ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்களும் கொல்லப்பட்ட பின், பராஆ பின் மாலிக் (ரலி) (இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உதவியாளரான அனஸ் (ரலி) அவர்களின் சகோதரரவார்) அவர்கள் முன் வந்தார்கள். இவரிடம் ஒருவிதமான பழக்கம் இருந்தது. அதாவது, போருக்குக் கிளம்பு முன் அதன் உத்வேகத்தால், இவரது உடல் குலுங்க ஆரம்பித்து விடும், எந்தளவுக்கெனில் பிறர் இவரைப் பிடித்து நிறுத்தும் அளவுக்கு உடல் குலுங்க ஆரம்பித்து விடும். இப்பொழுது, முஸ்லிம்கள் தோல்வியைச் சந்திக்கக் கூடிய நிலையில் இருந்து கொண்டிருப்பதை நினைத்தும், அடுத்து நாம் களத்தில் மிகவும் உத்வேகத்துடன் இறங்க வேண்டிய சூழ்நிலை வந்திருப்பதையிட்டும், அவரது உடல் குலுங்க ஆரம்பித்தது. அந்த நிலையிலேயே, தனது தோழர்களைப் பார்த்துக் கூவி அழைக்க ஆரம்பித்தார்.

என்னருமை முஸ்லிம்களே..!

நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்?

இங்கே பாருங்கள்..!

உங்களது சகோதரன் பராஆ பின் மாலிக்..! நின்று கொண்டிருக்கின்றேன்.

என்னிடம் விரைந்து வாருங்கள்..!

பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள் கூவியழைத்ததன் தாக்கம், உணர்வு கொண்ட சில முஸ்லிம் வீரர்கள் பராஆ வை நோக்கி, தங்களது அற்பணம் செய்யும் நோக்கில் திரண்டு வந்தார்கள். வந்த வேகத்திலேயே எதிரியுடன் களம் புகுந்து போராட ஆரம்பித்தார்கள்.

இந்தப் புதுவித தாக்குதலை எதிர்பாராத எதிரிகளால், இந்தக் குழுவினரைத் தாக்குப் பிடிக்க இயலாமல் பின்வாங்க ஆரம்பித்த எதிரிகள், முஸைலமாவின் தீவிர ஆதரவாளனான முஹக்கம் பின் அல் துஃபைல் என்பவன் கூடாரமடித்திருந்த இடம் வரை வந்து விட்டார்கள். பின்வாங்கி ஓடிய எதிரிகள் தங்களது ஆட்களைப் பார்த்ததும் முஸ்லிம்களைத் தாக்குவதற்காகத் தங்களது தோழர்களைக் கூவி அழைக்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் அப்துர் ரஹ்மான் பின் அபுபக்கர் (ரலி) அவர்கள் எய்ததொரு அம்பு அல் துஃபைல் ன் கழுத்தில் சொறுகியது. அந்த நிலையிலேயே அவன் இறந்து தரையில் சரிந்தான்.

முஸ்லிம்களின் இந்த முன்னேற்றம் புதுவிதத் தெம்பை முஸ்லிம்களுக்கு அளித்தது. இதன் காரணமாக அவர்கள் எதிரிகளை ஹதீகா என்ற இடம் வரை பின்வாங்கச் செய்தார்கள். இந்த இடத்தில் முஸைலமா பாதுகாப்பானதொரு கோட்டையில் நுழைந்து கொண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து அவனது ஆட்களும் அந்த கோட்டைக்குள் நுழைந்து கொண்டு, கோட்டைக் கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள்.

இப்பொழுது, பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள் தனது தோழர்களை அழைத்து, தோழர்களே..! இந்த தாழிடப்பட்ட கோட்டை மதில்களையும் தாண்டி, கோட்டைக்குள் என்னைத் தூக்கி எறியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அங்கிருந்த தோழர்கள் இந்த ஆபத்தான செயலில் இறங்க மனமில்லாமல் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள் தனது தோழர்களை வற்புறுத்தி, தன்னை கோட்டைக்குள் தூக்கி எறியுமாறு வேண்டிக் கொண்டார்.

பின், கோட்டைச் சுவரின் மீதேறி கோட்டைக்குள் குதித்த பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள், நேரே வாயிற் கதவருகே சென்று வாயிற் கதவை முஸ்லிம்கள் நுழைவதற்காகத் திறந்து விட்டார். கோட்டைக் கதவு திறந்தவுடன், உள்ளே நுழைந்த முஸ்லிம் வீரர்கள் எதிரிகளைத்தாக்க ஆரம்பித்தார்கள். ஆனால், எதிரிகளும் சளைக்காமல் போரிட்டார்கள், முஸைலமா தனது இடத்தை விட்டும் அகலவில்லை, விட்டுக் கொடுக்காது போரிட ஆரம்பித்தான்.

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது யுத்த தந்திரத்தை மாற்றி அமைக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கோத்திரத்தாரையும் அழைத்து, அவரவர் அந்த கோத்திரத்துத் தலைவருக்குக் கீழ் போரிடுமாறு, தனது தோழர்களைக் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் யார் பலவீனமாக இருக்கின்றார்கள் என்பது தெரிந்து விடும்.

இப்பொழுது, ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களது திறமையையும், தங்களது முழுப்பலத்தையும் பிரயோகித்துத் தங்களது அணிக்கு கௌரவம் சேர்க்க வேண்டும், பலவீனமான நிலையில் நாம் இருந்து விடக் கூடாது, நமக்கு ஒப்பாக யாரும் இல்லை' என்று சொல்லும் அளவுக்கு போரிட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கவே, முன்னைக்காட்டிலும் அனைவரும் மிகவும் உத்வேகத்துடன் போரிட ஆரம்பித்தார்கள்.

முஹாஜிர்கள் பக்கமும், அன்ஸாரிகள் பக்கமும் மிகவும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், இன்னும் முஸைலமா தனது பிடியை சற்றும் தளர்த்தாமல் போரிட்டுக் கொண்டிருந்தான். முஸைலமா கொல்லப்படாதது வரைக்கும் இந்தப் போர் நிற்காது என்பதை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் முன்வந்து, தனி நபர் யுத்தத்திற்குத் தயாரா? என்னை எதிர்க்கும் சக்தி உங்களில் எவருக்கேனும் உண்டா? என்று கூவி அழைக்க ஆரம்பித்தார். அவரது அறைகூவலை ஏற்று முன்வந்த பலர் அவரது வாளுக்கு இரையாகி உயிரை மாய்த்துக் கொண்டனர். இவ்வாறாக,முன்னேறிக் கொண்டிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், இறுதியாக முஸைலமா இருக்கின்ற இடத்தினருகே வந்து விட்டார். அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவன் எதிர்பாராத வகையில் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்திய காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், அந்த அதிரடித் தாக்குதலின் காரணமாக நிலைகுலைந்தான் முஸைலமா.

பின் தனது தோழர்களைப் பார்த்து, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். தோழர்களே..! நீங்கள் தைரியத்தை இழக்க வேண்டாம். உறுதியாக நின்று நீங்கள் தாக்கினீர்கள் என்றால், அதனைச் சமாளிக்கும் சக்தி அவர்களுக்குக் கிடையாது, எதிரியைச் சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று ஆர்வமூட்டினார்.

ஒரு தாக்குதலையே சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து விட்டான். ஒரு தாக்குதலையே, தலைவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று கூறிக் கொண்டு, முஸைலமாவின் ஆட்கள் இப்பொழுது கலைந்து ஓட ஆரம்பித்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் முஸைலமாவின் ஆதரவாளர்கள் கேட்டார்கள்,

முஸைலமாவே..

உனக்கு அருளப்பட்டிருப்பதாக வாதிட்டாயே, அந்த வேத வாக்குறுதிகள் என்னவாயிற்று இப்பொழுது?

முஸைலமா பதில் கூறினான் :

'எதனைப் பாதுகாப்பதற்காக நீங்கள் அணி திரண்டிருக்கின்றீர்களோ, அந்த உங்களது கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'.

இந்த வார்த்தைகளை அவன் முழுவதுமாகச் சொல்லி முடித்திருக்கவில்லை,

ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்ற அதே வஹ்ஸி (ரலி) அவர்கள், தான் இஸ்லாத்திற்கு முன்னிருந்த பொழுது ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதனை ஈடு செய்யும் பொருட்டு, தன் கையிலிருந்த வேல் கம்பை முஸைலமாவை நோக்கி வீசினார். அதனை சமாளிக்க இயலாத முஸைலமா கீழே வீழ்ந்த பொழுது, அன்ஸாரிகளில் உள்ள இளைஞரொருவர், அவனது கழுத்தை வெட்டி சாய்த்தார்.

அபீசீனியா அடிமையான வஹ்ஸி (ரலி) அவர்களின் கரங்களால், முஸைலமா கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்தி காட்டுத் தீ போல போர்க்களத்தில் பரவ ஆரம்பித்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முஸைலமாவின் ஆட்கள் நாலா பக்கமும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். இத்துடன், முஸ்லிம் படை முஸைலமாவிற்கு எதிரான போரில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் போரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான எதிரிகள் கொல்லப்பட்டார்கள் என்று தபரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் காரணமாக, இந்தப் பகுதியை 'மரணப் பூங்கா' என்றழைக்கப்படுவதுண்டு.

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், முஸைலமாவின் உடலை முஜாஆ அவர்களின் துணையுடன் அடையாளம் கண்டு கொண்டார்கள். இந்தப் போரில் முஹாஜிர்களும், அன்ஸாரிகளுமாக 300 பேர்களும், இன்னும் அவர்களல்லாத மற்ற பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட முஸ்லிம்கள் 300 பேர்களும், உயிர்த்தியாகிகளானார்கள்.

வெற்றியை கலீபா அவர்களுக்கு அறிவிக்கு முகமாக, பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரையே தனது பிரதிநிதியாக காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

தன்னிடம் வந்த பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்த அந்தப் பிரதிநிதியிடம், பாவச்சுமைகளுடன் உங்களது கோத்திரத்தாரின் உயிர்கள் பிடுங்கப்பட்டது குறித்து நான் வருத்தமடைகின்றேன், அவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ்த்தரமானது என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் கேள்விப்பட்டதும், சொல்வதும் அனைத்தும் உண்மையே என்று அந்தப் பிரதிநிதியானவர், அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்.

முஸைலமாவினுடைய போதனைகள் தான் என்ன? சற்று கூறுங்கள் பார்ப்போம் என்றார்கள்.

இதே அதனுடைய நகல் என்னிடமிருக்கின்றது என்று கூறிய அவர் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களது முன்னிலையில் அதனை வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தார் :

“ஓ.. தவளையே..! இது வேதமாகும். குடிப்பவரைத் தடுக்காதீர்கள், தண்ணீரை அசுத்தமாக்காதீர்கள். இந்த உலகத்தின் பாதி நமக்குரியது, மற்ற பாதி குறைஷிகளுக்குரியது. ஆனால் குறைஷிகள் மிகவும் கொடூரமானவர்கள்''.

இதனைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைவனைப் புகழ்ந்தவர்களாக, உங்கள் இரக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய அபுபக்கர் (ரலி) அவர்கள், இது தான் உங்களது வேத வசனங்களா? இதில் எந்த தெய்வீகத் தன்மையும் இல்லையே..! இவ்வாறிருக்கும் பொழுது, எது தான் சத்தியத்திலிருந்து உங்களைப் பாதை மாற்றிச் சென்றது? தபரி, 3ம் பாகம், பக்.254.

சுருங்கச் சொன்னால், பொய்த்தூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அங்கும் இங்குமாக சில நிகழ்வுகளில் முஸ்லிம்கள் தைரியம் இழந்து பின்வாங்கினாலும், அத்தகைய சந்தர்ப்பங்களை அடுத்து மீண்டும் அவர்கள் சுதாரித்துக் கொண்டு போரிட்டார்கள், பொய்த்தூதர்களை வேரறுத்தார்கள். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில், பொய்த்தூதர்கள் வேரறுக்கப்பட்ட செய்தி அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது, குறுகிய 9 மாத கால அவகாசத்தில், மதீனா விலிருந்து பஹ்ரைன் வரைக்கும் மற்றும் அம்மான் ஆகிய பகுதிகளும் இப்பொழுது முஸ்லிம்களின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பனீ தயீ

பனீ தயீ
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 17


காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் இந்த பனீ தயீ என்ற குலத்தை எதிர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்டடார்கள், இந்தக் குலத்தவர்கள் துலைஹா என்ற பொய்யனுக்கு ஆதரவளித்து வந்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பதாக, அதி பின் காதிம் (ரலி) அவர்களை அபுபக்கர் (ரலி) அவர்கள் இந்தக் கோத்திரத்தவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.

முஸ்லிம்களின் அனைத்துத் தயாரிப்புப் பற்றியும் அவர்களிடம் விளக்கிக் கூறுவது, அதன் மூலம் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகள் குறித்து எச்சரிக்கை செய்வது, ஆகியவையே அதீ பின் காதிம் (ரலி) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியாக இருந்தது.

இப்பொழுது, இஸ்லாத்தின் தூதை ஏந்திக் கொண்டு அதீ (ரலி) அவர்கள் பனீ தயீ குலத்தவர்களை நோக்கிச் சென்றார்கள்.

பனீ தயீ குலத்தவர்களே..!

முஸ்லிம்களிடம் மோதுவது குறித்து நீங்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும், அவ்வாறு நீங்கள் மோதுவதென்று முடிவெடுத்தால், அதை விடப் பாரதூரமான விளைவொன்றை நீங்கள் இனிச் சந்திக்கப் போவதுமில்லை என்று கூறினார்கள்.

அதீ (ரலி) அவர்களின் முதல் முயற்சி சற்றுத் தோல்வியைத் தழுவி இருந்தாலும், மீண்டும் மீண்டும் அவர் செய்த முயற்சி நல்ல பலனைத் தந்தது. இப்பொழுது, இஸ்லாத்தின் பால் தங்களை மீண்டும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்த அவர்கள்,

‘நாங்கள் இஸ்லாத்திற்குள் வந்து விட்டோம் என்பதை துலைஹா அறிந்து கொண்டால், எங்களையும் எங்களது மனைவி மக்களையும் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவான். எனவே, எங்களது மனைவி மக்களை பாதுகாப்பாக அவனிடம் இருந்து மீட்டுக் கொள்வதற்கு சற்று எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று அவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.

இவர்களது இந்த வேண்டுகோளை அதீ (ரலி) அவர்கள் தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கவே, அவரும் அதற்குச் சம்மதித்து மூன்று நாட்கள் அவகாசத்தை வழங்கி விடுகின்றார்கள். பனீ தயீ குலத்தவர்கள், வாக்களித்தது போல தங்களது குடும்பத்தவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றதன் பின்பு, தங்களை மீண்டும் இஸ்லாத்திற்குள் இணைத்துக் கொண்டார்கள். இரத்தம் எதுவும் சிந்தாமல், இப்பொழுது முஸ்லிம்கள் பனீ தயீ குலத்தவர்களுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி பெற்றார்கள்.

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது படையை பனீ ஜதீலா என்ற குலத்தை நோக்கித் திருப்பினார்கள். இப்பொழுது காலீத் பின் வலீத் (ரலி) அவர்களது படையில், ஆயிரம் பனீ தயீ குலத்தைச் சேர்ந்த குதிரை வீரர்கள் இடம் பெற்றிருந்தார்கள். படையெடுப்புக்கு முன்பு, இவர்களிடமும் பனீ தயீ குலத்தவர்களிடம் பேசிப் பார்த்தது போன்று பேசிப் பார்த்து விடுவது என்றும், ஒரு பறவையின் இரண்டு இறக்கைகள் போன்றவர்கள், பனீ தயீ குலத்தவர்களும், பனீ ஜதீலா குலத்தவர்களும் என்று காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு விளக்கம் கொடுத்த அதீ (ரலி) அவர்கள், சமாதானத் தூது சென்றார்கள். பனீ தயீ யைப் போலவே, பனீ ஜதீலா குலத்தவர்களும் தங்களை இஸ்லாத்திற்குள் மீண்டும் இணைத்துக் கொண்டார்கள்.

துலைஹா என்ற பொய்யனுக்கு எதிராகத் துவக்கப்பட்ட இந்தப் போரில், அதீ பின் காதிம் (ரலி) அவர்களின் சாதுர்யத்தால், மிகப் பெரிய வெற்றியை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் பெற்றார்கள். இந்த வெற்றியை அடுத்து, துலைஹா தனது இருப்பிடத்தை விட்டு விட்டு, சிரியாவை நோக்கி ஓடி விட்டான். பின் அங்கிருந்தபடி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்.

ஒரு முறை துலைஹா மக்காவிற்கு ஹஜ் செய்யும் நிமித்தம் வந்த பொழுது, ஒருவர் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் துலைஹா வந்திருப்பதாகக் கூறிய பொழுது, இப்பொழுது துலைஹா ஒரு முஸ்லிம், அவரது நடவடிக்கை பற்றி எந்த வித கேள்வியும் கிடையாது’ என்று பதில் கூறி விட்டார்கள். உமர் (ரலி) அவர்களின் காலத்தில், உமர் (ரலி) அவர்களிடம் வந்து பைஅத் செய்து கொண்டார் துலைஹா அவர்கள்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
 

Sep 13, 2015

பொய்த் தூதர்கள் கொல்லப்படுதல்

பொய்த் தூதர்கள் கொல்லப்படுதல்
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 16


இப்பொழுது உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் சென்ற படை மதீனாவில் இருந்து நிறைவாக ஓய்வெடுத்திருந்தது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தேவையான அளவுக்கு ஜகாத் - லிருந்து நிதியும் வந்து சேர்ந்திருந்தது. இப்பொழுது அப்ரக் கில் தங்கிக் கொண்டு, பொய்த் தூதர்களின் அட்டகாசங்களை அடக்குவதற்குண்டான தயாரிப்புகளைச் செய்ய ஆரம்பித்தார்கள் கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள். பொய்த் தூதர்களின் கொட்டங்களை அடக்குவதற்கென்றே, பதினொரு படைப் பிரிவுகளை உருவாக்கி, நாட்டின் பல பாகங்களுக்கு அந்தப் படைகளை அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு இருப்பது போல அன்றைய நாட்களில் கூலிக்கு ஆள் அமர்த்திப் போராடும் படைப் பிரிவுகள் இருக்கவில்லை. முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், தங்களது உயிர், பொருள், உடமைகளை அற்பணிக்க முன் வந்ததோடு, அதற்கான கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் மட்டுமே போர்க் களத்திற்குள் நுழையக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் சரி, அவர்களுக்குப் பின் வந்த அபுபக்கர் (ரலி) போன்ற கலீபாக்களின் காலத்திலும் சரி, முஸ்லிம்களைக் கொண்ட படை உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு தலைமையையும் நியமித்ததோடு, அந்த ஒரு தலைமையின் கீழ் பல குலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களைக் கொண்டு படையை ஒருங்கிணைத்து, அந்த ஒவ்வொரு பிரிவின் தலைமையின் கைகளிலும் அவர்களின் கொடியையும் வழங்கி, போருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அந்தக் கொடியை ஏந்தி இருப்பவர் எங்கே செல்கின்றாரோ, அவரைப் பின்பற்றிச் செல்ல வேண்டியது அந்தந்தக் கொடிக்குரிய குலத்தவர்களின் கடமையாகவும், இன்னும் அவர் படை நடத்திச் சென்றால் அவருக்குப் பின்னால் தங்களது இளவல்களை அனுப்பி அவருடன் சேர்ந்து கொள்ளச் செய்வதும் அந்தந்தக் குலத்தவர்களின் பொறுப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு படை வீரரும் தனது சொந்தச் செலவில் போர்க் கருவிகளையும், வாகனங்களையும் வாங்கி போருக்குத் தயாராக வேண்டியவராவார், இன்னும் அதற்கு வசதியற்றவர்களுக்கு நிதிக் கருவூலகத்திலிருந்து உதவியும் செய்யப்படும். இந்த வழிமுறை நன்றாக அந்தக் காலத்தில் வேலை செய்ததோடு, ஒவ்வொருவரும் தங்களது சொந்த உபயோகத்திற்கென்றே ஆயுதங்களைப் பெற்றிருந்ததும், அவர்கள் போருக்குத் தயாராகும் பணியை மிகவும் எளிதாக்கியது.

மேலே நாம் விவரித்த வண்ணம், துல் கஸ்ஸாவில் இருந்து கொண்டு அபுபக்கர் (ரலி) அவர்கள் பதினொரு படைப் பிரிவுகளைத் தயாரித்ததோடு, அதற்கு பதினொரு தலைமையையும் நியமித்ததோடு, எந்தத் தலைமையுடன் எந்தக் குலத்தவர்கள் இணைந்து கொள்வது என்ற திட்டத்தையும் அறிவித்தார்கள். ஒவ்வொரு தலைமையும், அவரவர்க்கென்ற தனிப்பட்ட உத்தரவுகளை கலீபாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். இதற்கு முன் சந்தித்த எதிரிகளுக்கும், இப்பொழுது சந்திக்கப் போகும் எதிரிகளுக்கும் மிகவும் வித்தியாசமிருந்தது, எனவே, அதனைக் கருத்தில் கொண்டு எவ்வாறு தாக்குதல் தொடுப்பது, போரை ஆரம்பிப்பது என்பன போன்ற அறிவுரைகளைத் தனது தளபதிகளுக்கு வழங்கி, அவர்களை அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள்.

இந்த அடிப்படையில், காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் துலைஹா என்பவனுக்கு எதிராகவும், இக்ரிமா (ரலி) அவர்கள் முஸைலமாவுக்கு எதிராகவும், சுபைர் (ரலி) அவர்கள் அஸ்வத் அன்ஸிக்கு எதிராகவும் அனுப்பி வைக்கப்பட்ட முக்கியத் தோழர்கள் ஆவார்கள்.

இன்னும் பொதுவான சில உத்தரவுகளை அனைத்து தளபதிகளுக்கும் கலீபா அவர்கள் வழங்கினார்கள். இந்த உத்தரவுகளில் எதிரிகளை எதிர்த்துப் போர் தொடுப்பதற்கு முதலாக, அவர்களிடம் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும்படியும், இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து நடடிவக்கைகளையும் கைவிடும்படியும் விண்ணப்பித்துக் கொள்வது. இன்னும் சமாதான ஒப்பந்தங்களைச் செய்வதற்கு முன் வரும்பட்சத்தில், போர் நடவடிக்கைகளைக் கைவிடுவது போன்ற முறைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இவற்றில் எதுவுமே அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில், இறுதி நடவடிக்கையாக போரைத் துவங்கும்படியும் கலீபா அவர்கள் அனைத்துத் தளபதிகளுக்கும் பொதுவான உத்தரவு ஒன்றை பிறப்பித்து, அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

கலீபா அவர்களால் உருவாக்கி வழங்கப்பட்ட பிரமாணங்களை, ஒருவர் முதலில் சென்று எதிரிகளிடம் வாசித்துக் காட்டுவது, அதற்காக அங்கு அதான் சொல்லப்பட்டு மக்களை ஒன்று திரட்டுவது. இவ்வாறு ஒன்று திரட்டப்பட்ட மக்களிடம் கலீபாவின் பிரமாணங்களை வாசித்துக் காட்டுவது, இதனைச் செவியுற்று விட்ட பின் எவர், அதனை ஏற்காது அங்கிருந்து திரும்பிச் சென்று விடுகின்றாரோ அவரை இஸ்லாத்தின் எதிரியாகக் கணிப்பிடுவது, அவர்களை ஒடுக்குவது என்பது தான் முஸ்லிம்களின் திட்டமாக இருந்தது. இதுவல்லாமல், இன்னும் சில கட்டளைகளையும் ஒவ்வொரு தளபதிகளுக்கும், அவரவர் செல்லக் கூடிய பகுதிகளுக்கு ஏற்றவாறு உத்தரவுகளும் வழங்கப்பட்டன.

இந்த விரிவான அடிப்படையில் பதினொரு படைப்பிரிவுகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பதினொரு படைப்பிரிவுகளின் பணிகள் பற்றி நாம் இங்கு நோக்குவது, மிகுந்த சிரமமான ஒன்று என்பதால், குறிப்பிட்ட சில படைப்பிரிவுகளின் பணிகள் குறித்து நாம் இங்கு சிறிது நோக்குவோம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்) 
 

மதீனாவின் மீதான தாக்குதல் முறியடிப்பு

மதீனாவின் மீதான தாக்குதல் முறியடிப்பு
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 15

அபுபக்கர் (ரலி) அவர்கள் மதீனாவைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தானே முன்னின்று செய்ய ஆரம்பித்தார்கள். அலீ (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா (ரலி), மற்றம் அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோர்களை நகரின் முக்கியப் பகுதிகளின் பாதுகாப்புப் பொறுப்பை வழங்கி, அவர்களின் கண்காணிப்பில் விட்டிருந்தார்கள். இப்பொழுது, தனது மக்களை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் நகரின் பாதுகாப்பு மற்றும் எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்து, மதீனாவைப் பாதுகாப்பதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டிக் கொண்டதோடு, எதிரிகள் எந்த நேரத்திலும் தாக்க ஆரம்பிக்கலாம் எனவே, முழுத் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஏனெனில், அபுபக்கர் (ரலி) அவர்களின் சமாதான ஒப்பந்தத்தை, இந்த எதிரிகள் உதாசினம் செய்து விட்டதும், இந்த பாதுகாப்பு நடவடிக்கையை துதரிப்படுத்த வேண்டியதும் அவசியமாயிற்று. சமாதானத் தூதுக் கமிட்டி திரும்பி வந்ததன் பின் மூன்று நாட்கள் கழிந்திருந்த நிலையில், எதிரிகள் இப்பொழுது தங்களது இருப்பிடங்களை விட்டு விட்டு, முஸ்லிம்களைத் தாக்கும் நோக்கத்துடன் வெளியே வர ஆரம்பித்தார்கள். இவர்கள் அனைவரும் தீ ஹஸ்ஸி என்ற இடத்தில் குழு ஆரம்பித்தார்கள்.

ஏற்கனவே மதீனாவின் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படை, இந்த எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்து, கலீபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு தகவல் அனுப்பி வைத்தார்கள். கலீபா அவர்களோ, தான் வரும் வரை அந்த இடத்திலேயே இருக்கும்படியும், தனது வருகைக்காகக் காத்திருக்கும்படியும் உத்தரவிட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களுடன் வந்திருந்த தோழர்களும், இன்னும் பொதுமக்களும் இப்பொழுது தாக்கும் நோக்குடன் வந்திருக்கும் எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்ததோடு, அவர்களைத் திரும்பி ஓடவும் வைத்தார்கள். ஆனால், இந்தப் பணி சுலபமான பணியாக முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை.

ஏனெனில், எதிரிகள் செய்த சதிச் செயலின் விளைவாக முஸ்லிம்கள் பின்வாங்கவும் நேரிட்டது. காற்றடைக்கப்பட்ட தோல் பைகளை, பாதையெங்கும் பரப்பி வைத்திருந்ததன் காரணமாக, அதன் மேல் கால் வைத்த ஒட்டகங்கள், மிரண்டு மதீனாவின் பக்கம் திரும்ப ஆரம்பித்தன. முஸ்லிம்களின் படைகள் இவ்வாறு திரும்பி ஓட ஆரம்பித்தது எதிரிகளுக்கு மிகவும் மன ஊக்கத்தை அளித்ததோடு, மேலும் படைகளை முஸ்லிம்களை எதிர்த்துக் குவிக்க ஆரம்பித்தார்கள்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள், அன்றைய தினமே புதிய உத்வேகத்துடனான தாக்குதல் ஒன்றைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். இரவோடிரவாக எதிரிகளின் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த அவர்கள், அன்றைய மதிய வேளைக்கு முன்பாகவே எதிரிகளைத் துவம்சம் செய்து, அவர்களைத் தோற்கடித்ததோடு, தீ ஹஸ்ஸியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்.

இந்த நடவடிக்கையின் காரணமாக, துலைஹா என்ற பொய்த் தூதனின் தளபதியாக இருந்தவனும், ஆதரவாளனாக இருந்தவனுமான ஹப்பல் என்பவனின் தலை துண்டிக்கப்பட்டது. மதீனாவின் பாதுகாப்புப் பொறுப்பை நுஃமான் பின் மக்ரான் (ரலி) என்பவரது தலைமையில் அமைந்த சிறு படையின் பொறுப்பில் விட்டு விட்டு, தப்பித்து ஓடியவர்களை துல் கஸ்ஸா வரைக்கும் விரட்டிச் சென்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

முஸ்லிம்களின் இந்த வெற்றி எதிரிகளுக்கு எரிச்சலைக் கொடுக்க ஆரம்பித்தது. தங்களது குலத்தவர்களில் யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்களோ, அவர்களை நோவினை செய்ய ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களின் அங்கங்கள் சிதைக்கப்பட்டன, அவர்களில் சிலரை எரிக்கவும் செய்தார்கள் எதிரிகள். இந்த கொடுமையான செய்திகள் அரபுலக மெங்கும் பரவ ஆரம்பித்தவுடன், இது மாதிரியான கொடுமைகளை முஸ்லிம்களின் மீது அனைத்து எதிரிகளும் புரியத் தலைப்பட்டார்கள்.

முஸ்லிம்களின் மீது புரியப்படுகின்ற இந்த அடக்கு முறைகளையும், சித்தரவதைகளையும் பற்றிக் கேள்விப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், எதிரிகளுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். துல் கஸ்ஸா வில் கிடைத்த வெற்றியின் காரணமாக, முஸ்லிம்களின் இறைநம்பிக்கையின் வேகம் அதிகரித்திருந்தது. மனதளவில் அவர்கள் மிகவும் பலம் மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கையையும் பெற்றிருந்தார்கள். இன்னும் சில முஸ்லிம்கள், தங்களது பகுதியிலிருந்து ஜகாத் பணத்தைக் கூட, தலைநகருக்கு அனுப்பி வைத்தார்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைத்திருந்த படைகள் வரும் வரை தலைநகரைப் பாதுகாப்பதற்குண்டான அனைத்து ஏற்பாடுகளையும் கலீபா அவர்கள் செய்து வைத்திருந்தார்கள். இப்பொழுது, உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த படை வந்தவுடன், அவர்களின் பொறுப்பில் மதீனா நகரின் பாதுகாப்பை வழங்கி விட்டு, அந்தப் படைப்பிரிவு மதீனாவைப் பாதுகாப்பதோடு, சற்று ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என்று கலீபா அவர்கள் முடிவெடுத்து, அதன் படியே செய்தார்கள்.

பின்பு, மற்ற முஸ்லிம்களை ஒன்று திரட்டிக் கொண்டு, தன்னுடைய தலைமையின் கீழ் ஒரு படையைத் தயார் செய்து, புறப்பட ஆயத்தமானார்கள். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களது சொந்த தலைமையின் கீழ் மதீனாவை விட்டும் படைகள் புறப்படுவதை, சில தோழர்கள் மறுபரீசீலனை செய்யும்படி கலீபாவை வேண்டிக் கொண்டார்கள். அதாவது, கலீபாவுக்கு நேரக் கூடிய சிறு காயம் கூட, மதீனாவின் நிர்வாக இயந்திரத்தை பலமிழக்கச் செய்து விடும், இன்னும் தேவையில்லாத குழப்பங்கள் பரவுவதற்குக் காரணமாகி விடும் என்று அவர்கள் எதிர்பார்த்ததே, இதன் காரணமாகும். படையின் தளபதிப் பொறுப்பை யாராவது ஒருவரது தலைமையின் கீழ் விடுவது, அவர் இறந்து விட்டால் இன்னொருவரை நியமித்துக் கொள்வது என்ற அடிப்படையில், படையின் தலைமைப் பொறுப்பில் இருந்து அபுபக்கர் (ரலி) அவர்கள் விலகி, மேற்படி செயல்முறைத் திட்டத்தின் படி, படையை நகர்த்துவது என்று ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், இதற்குச் சம்மதிக்க மறுத்து விட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது தலைமையின் கீழ் படையை நகர்த்துவது என்று இறுதியாக முடிவெடுத்து, அதன்படியே, படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று படையை நகர்த்த ஆரம்பித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள். படை இப்பொழுது துல்கஸ்ஸா வழியாக, ரப்தா என்ற பகுதியில் உள்ள அப்ரக் என்ற இடத்தை அடைந்தது. எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது, எதிரிகள் நிர்மூலமாக்கப்பட்டார்கள். அப்ரக் இப்பொழுது, முஸ்லிம் படைகளில் உள்ள குதிரைகளுக்குரிய தீவனத்தை உற்பத்தி செய்யக் கூடிய புல்வெளியாக மாற்றும்படி, கலீபா அவர்கள் உத்தரவிட்டார்கள்.



(இன்ஷா அல்லாஹ் தொடரும்) 

பொய்த் தூதர்கள்


பொய்த் தூதர்கள்
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 14

மக்காவின் வெற்றிக்குப் பின்பு, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக பல்வேறு குலத்தவர்கள் வந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்கள் மூலம், அந்தப் பிரதேசத்து மக்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறே முஸைலமா வாழ்ந்த பகுதியான எமன் மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை எமனுக்கு அனுப்பி வைத்து, அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுக்க அனுப்பி வைத்தார்கள். அலீ (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்படுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் தான் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் எமனுக்கு சென்றிருந்தார்கள், எனினும் குறைந்த அளவே அவர்களின் பயணத்திற்கு வெற்றி கிடைத்தது.

அதன் பின் தான் அல்லாஹ்வின் சிங்கமான அலீ (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். எமன் தேசத்து மக்கள் அலி (ரலி) அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார்கள். அலீ (ரலி) அவர்கள் அன்றைய காலைத் தொழுகையை தானே முன்னின்று நடத்தினார்கள். அதன் பின் இஸ்லாத்தைப் பற்றி விரிவானதொரு விளக்கம் அளித்தார்கள். அதனால் கவரப்பட்ட அந்த ஹம்தான் பகுதி மக்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அலீ (ரலி) அவர்கள் எமன் பிரதேசத்தை விட்டு, மக்காவிற்கு கிளம்பினார்கள். அதுபோது, எமன் தேசம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு, ஜகாத் என்ற ஏழை வரியை இறைவன் அனைத்து வசதி வாய்ப்புள்ள முஸ்லிம்கள் மீது கடமையாக்கி வைத்த பின், அதனை வசூலிப்பதற்காக நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் நிர்வாகிகள் நாடு முழுவதும் ஜகாத் பணத்தை வசூல் செய்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே எமனைப் பல மாவட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒரு பொறுப்புதாரியும் நியமிக்கப்பட்டார். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பிரச்சாரகராக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த நேரத்தில் தான் சன்ஆ வில் அஸ்வத் அன்ஸி என்பவன் தானும் இறைத்தூதர் தான் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டான். இவனது ஆரம்ப காலப் பிரச்சாரம் வெகு வேகமான நடைபெற்றது. பனீ அஸத் மற்றும் துலைஹா ஆகிய குலத்தவர்கள் தங்களது குலத்தைச் சேர்ந்த ஒருவனை, தங்களுக்குரிய இறைத்தூதராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். மூன்றாவதாக முஸைலமா என்ற பொய்த்தூதன் தோன்றினான். அஸ்வத் அன்ஸி யின் வளர்ச்சி இவனுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. இவன் தன்னைப் பொய்த்தூதனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டதோடல்லாமல், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு மடலையும் அனுப்பி வைத்தான். அதில் :

இறைவனின் தூதனான முஸைலமா, இறைவனின் தூதரான முஹம்மதிற்கு எழுதும் மடல். உங்களது இறைத்தூதுத்துவத்தில் ஒரு பங்காளியாக நான் நியமனம் செய்யப்பட்டுள்ளேன். இந்த உலகின் பாதி நம்மைச் சேர்ந்தது, மீதிப் பங்கு குறைஷிகளுக்கு உரியது. ஆனால் இதில் அதிக உரித்துடையவர்கள் குறைஷிகளே என்றும் அதில் குறிப்பிட்டிருந்தான்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கடிதம் ஒன்றை முஸைலாமா என்ற பொய்யனுக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதரான முஹம்மதுவிடமிருந்து பொய்யனான முஸைலமாவுக்கு.., இறைவனைப் போற்றிப் புகழ்ந்ததன் பின், நேர்வழியைப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக..! சந்தேகமில்லாமல், இந்த உலகமும் அதில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. இதில் அவன் தான் விரும்பியவர்களுக்கு அதிலிருந்து தன்னுடைய அடிமைகளுக்கு வழங்கி இருக்கின்றான். இறையச்சமுடையவர்களுக்கே இறுதி வெற்றி உள்ளது.

இந்தப் பொய்யனுக்கு அறவுரைகள் மூலமும், படிப்பினைகள் மூலமும் அவனுடைய பொய் வாதத்தை முறியடிக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் இதனால் எந்தப் பயனும் விளயைவில்லை. முஸைலமாவோ தனது படைகளைத் திரட்டிக் கொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தவும், முஸ்லிம்களின் மீது போர் தொடுக்கவும் புறப்பட்டு விட்டான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், முஸைலமாவினுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருமாறு தன்னுடைய பிரதிநிதிகளுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அஸ்வத் அன்ஸி என்பவனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டு விட்டான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, இந்தப் பொய்த்தூதர்களின் பிரச்சார வேகம் கடுமையாகியது. எமன் முழுவதும் கலவரச் சூழல் பரவியது. எமனில் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகள் தூக்கி எறியப்பட்டு, அந்த இடத்திற்கு கலவரக்காரர்கள் வந்தமர்ந்தார்கள். இன்னும் மதீனாவையும் இந்தப் பிரச்னை விட்டு வைக்கவில்லை. மதீனாவில் வாழ்ந்த குறைஷிகள் மற்றும் பனூ தக்கீஃப் குலத்தவர்களைத் தவிர மற்ற குலத்தவர்கள் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியினரோ இந்த பொய்த் தூதர்களால் கவரப்பட்டு, இஸ்லாத்தை விட்டும் வெளியேறக் கூடிய சூழ்நிலையில் இருந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட உலக ஆசையால் வார்க்கப்பட்ட மனிதர்கள் பலர், தங்களை இறைவனது தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் ஒவ்வொரு குலத்தவர்களும் தங்களது குலத்தவர்களிலிருந்து தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்களுக்கு வலுச் சேர்க்க ஆரம்பித்தார்கள். அவர்களை ஆதரித்தும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அமிர் பின் துஃபைல் என்பவர், பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்தவர் வெளிப்படையாகவே இவ்வாறு கூற ஆரம்பித்தார். நான் அரேபியா முழுவதற்கும் தலைவராக ஆக விரும்புகின்றேன். எனவே, குறைஷிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று அறிவித்தார்.

பனூ அஸத் கோத்திரத்தாரின் நண்பர்களான கதஃபான் கோத்திரத்தார்கள், நாங்கள் ஏன் குறைஷிக் குலத்தில் உதித்த ஒருவரை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும், எங்களது நண்பர்கள் இருக்க நாங்கள் ஏன் குறைஷிக் குலத்து இறைத்தூதருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்று கூற ஆரம்பித்தார்கள். இன்னும் குறைஷிகளின் இறைத்தூதர் இறந்து விட்டார், பனீ அஸத் ன் இறைத்தூதர் உயிருடன் உள்ளார் என்று இறுமாப்புடன் கூறினார்கள்.

பல நூற்றாண்டுகளாக எமன் தேசத்தை அரசாண்டு வந்த ஹிமையரைட்ஸ் குலத்தவர்களின் இறுதி மன்னரான நுஃமான் பின் முன்திர் ன் பேரனான அப்துல் கைஸ் என்பவனும் தன்னை இறைத்தூதராகப் பிகடனப்படுத்திக் கொண்டான்.

ஆண்கள் தான் என்றில்லை, பெண்கள் கூட தாங்களும் இறைத்தூதர்கள் தான் எனப் பிரகடனப்படுத்தும் செயல்களும் நடைபெற்றன. சஜா என்ற எமன் தேசத்துப் பெண்மணி தன்னைப் பொய்த்தூதராகப் பிரகடனப்படுத்திக் கொள்ள, கிறிஸ்தவக் குலமான பனூ தக்லீப் கோத்திரத்தார்கள், இந்த பெண் பொய்த்தூதரை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் பொய்த்தூதர்கள் தங்களுக்குள்ளே, ஒருவர் மற்றவரது தூதுத்துவத்தை பொய் என பிரஸ்தாபிக்க ஆரம்பித்தார்கள்.

துலைஹா என்பவன் தொழுகையிலிருந்து சஜ்தா வை நீக்கி விட்டான், மதுபானம் அருந்துவதும், விபச்சாரமும் தடை செய்யப்பட்டதல்ல என்று முஸைலமா அறிவித்ததோடு, பெண் தூதராக அறிவித்துக் கொண்ட சஜா வைத் திருமணம் செய்து கொண்டதோடு, ஐந்து வேளைத் தொழுகையை மூன்று வேளையாக மாற்றினான். நீக்கப்பட்ட காலை மற்றும் இரவுத் தொழுகையானது, சஜாவின் திருமணக் கொடைகளாகவும் என்றும் அறிவித்தான். இவ்வாறாக விதவிதமான அறிவிப்புகள் வெளிவரத் துவங்கின.

இதில் குறிப்பிட்டத்தக்கதும் நாம் கவனிக்கத் தக்கதும் என்னவென்றால், யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் ஆரம்பக் கட்டத்தில் இஸ்லாத்தைத் தழுவினார்களோ, அவர்கள் அனைவரும் உறுதியாக இருந்த அதே வேளையில், சமீக காலத்தில் இஸ்லாத்தை; தழுவியோர்கள் தான் இவ்வாறான பொய்ப்பிரச்சாரத்திற்கு பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால், மிக எளிதாக அவர்களால் குழப்பத்தை உண்டு பண்ண முடிந்தது. துலைஹா என்பவன் மட்டும், அவனது பிரச்சாரத்தின் காரணமாக மட்டும் பனூ தாய் மற்றும் அஸத் குலத்தவர்களையே ஒன்று திரட்டி வைத்திருந்தான்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் கலீபா பொறுப்பேற்றுக் கொண்டவுடன், இந்த விவகாரத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்து, இதனை முறியடிக்க திட்டம் வகுத்தார்கள்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)