Showing posts with label ஜெர்மன். Show all posts
Showing posts with label ஜெர்மன். Show all posts

Mar 23, 2016

துருக்கி, சிரிய அகதிகளை துரும்பாக வீசி சூதாடி வருகிறது


       

 
 
கடந்த மார்ச் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றியமானது, தான் துருக்கியுடன் ஓர் முக்கிய உடன்பாட்டிற்கு வந்ததாக அறிவித்தது. அந்த உடன்பாடு துருக்கியூடாக சிரிய அகதிகள் மற்றும் ஏனைய அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைவதை துருக்கி கட்டுப்படுத்த வேண்டும் என்பது பற்றியது. அகதிகள் பிரச்சனை உச்சகட்டத்தை எட்டிய வேளையில் பிரஸல்ஸிலே இடம்பெற்ற மாநாட்டிலே துருக்கிய பிரதமர் அஹ்மத் தாவுதுக்லு, தாம், துருக்கியூடாக அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதை கட்டுபடுத்த வேண்டுமானால், அல்லது ஏற்கனவே துருக்கியை விட்டு கடலினூடாக கிரேக்கத்திற்கு வெளியேறிய அகதிகளை துருக்கிக்குள் மீள அனுமதிக்க வேண்டுமானால் தமக்கு 6 பில்லியன் யூரோக்கள் தரவேண்டும் என்றும், தமது பிரஜைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் விசாவின்றி பயணிப்பது அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தார். அதேநேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நாட்டுக்குள் அகதிகள் நுழைவதைத் தடுப்பதற்காக தனது எல்லைகளை மென்மேலும் இறுக்கமாக மூடிவந்தன. சிரியா, ஆப்கான், ஈராக் மற்றும் ஏனைய சில முஸ்லிம் நாட்டிகளிலிருந்து யுத்தத்தின் கோரப்படியிலிருந்து தப்பிப்பதற்காக வெளியேறிய முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள என சுமார் 14,000 அகதிகள் மூடப்பட்டிருக்கும் மஸடோனிய எல்லையில் கடுமையான குளிரிலும், மழையிலும் போதுமான உணவோ, மருத்துவ வசதியோ, சுகாதார வசதியோ இன்றி வாடுகின்றனர். “எல்லைகளற்ற வைத்தியர்கள்” என்ற தொண்டு நிறுவனம் ஐரோப்பிய தலைவர்களைப் பார்த்து அவர்கள் “யதார்த்த உலகில் இல்லை” என்று விமர்சித்துள்ளது.
 
சில பிரதிபலிப்புக்கள்:
 
தற்போது பிரஸல்ஸ், உலகிலுள்ள மிகவுமே பலகீனமான, நாதியற்ற மக்களின் உரிமைகளை வணிகம் செய்யும் ஒரு கேவலமான சந்தையாக மாறிவருகிறது. ஐரோப்பிய நாடுகள் தமது குறுகிய அரசியல் மற்றும் தேசிய நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தாமே முன்னின்று உருவாக்கிய சர்வதேச மற்றும் ஐரோப்பிய பட்டயங்களை உதறித்தள்ளி வருகின்றனர். தாம் வளர்த்துவந்த மகோன்னத சட்டங்களாக பீற்றிக்கொள்ளும் தமது மனித உரிமைச் சட்டங்களிலேயே அவர்கள் தடக்கி விழுந்து வருகின்றனர்.
 
அகதி அந்தஸ்த்தை கோரும் மக்களை கூட்டாக மூன்றாவது நாட்டுக்கு பலவந்தமாக வெளியேற்றுவது சர்வதேச மற்றும் ஐரோப்பிய சட்டத்தின் படி தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் அது 1951ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டினதும், மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாட்டினதும், ஏனைய சர்வதேச ஒப்பந்தங்களின் தீர்மானங்களினதும் அத்துமீறலாகும். இவ்வாறு பலவந்தமாக வெளியேற்ற நினைப்பது பற்றி கருத்துத் தெரிவித்த ஐ. நா சபையின் அகதிகளுக்கான உயர் ஆளுநர், “சிரிய அகதிகளை நாடுகடத்துவது அவர்களின் பாதுகாப்பை கடுமையாக கேள்விக்குள்ளாக்குவதுடன், அவர்களை மீண்டும் யுத்த வலயத்திற்குள் தள்ளும் நிலையை உருவாக்கும்” என்பதாக எச்சரிக்கிறார். ஐரோப்பாவின் அதிகரித்து வரும் இந்த நிலைப்பாட்டை விமர்சிக்கின்ற “த காடியன்” பத்திரிகையின் ஒரு கட்டுரையாளர் “ ஐரோப்பா பணம் கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் ஒரு விடயத்திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதுதான் அகதிகளை தமது எல்லைக்கு வெளியே வைத்திருப்பது” என எழுதுகிறார். ஆரம்பம் தொட்டே அகதிகளை தனது நாட்டுக்குள் பெருமளவில் வரவேற்ற ஜேர்மனிய ஆளுநர் அன்ஜெலா மேர்க்கலின் நிலைப்பாட்டால் உள்நாட்டுக்குள்ளும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் அவரது ஆதரவு பெருமளவில் சரிந்து வருவதை நாம் அவதானிக்கிறோம்.
 
இந்த சூழலில் சிரிய அகதிகள் பிரச்சனை தொட்பாக ஒரு முஸ்லிம் நாடான துருக்கி அடுத்தடுத்து எடுக்கின்ற நிலைப்பாடுகள் எம்மை வாந்தி எடுக்கச் செய்கின்றன. முதலாளித்துவ, தேசியவாத துருக்கிய அரசாங்கம் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அகதிகளின் அவலத்தை ஐரோப்பாவில் தான் அடைய நினைக்கும் அரசியல் இலக்குகளுக்காக சூதாடும் சீட்டாகப் பயன்படுத்தும் கேவலத்தைச் கனகச்சிதமாகச் செய்து வருகிறது. கிரேக்கத்திலும், ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளிலும் பச்சிளம் பாலகர்களுடன், ஆண்களும், பெண்களும் தம்மை கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள எதுவுமின்றி உரைந்து போகும் காட்சிகளைக் கண்டபோதோ, காற்றிலும், மழையிலும் அடிபட்டு உண்ண உணவின்றியும், ஒதுங்க இடமின்றியும் நின்ற காட்சிகளை பார்த்தபோதோ அல்லது அந்த நாடுகளின் எல்லைப்பாதுகாப்பு படைகளினால் மனிதநேயமற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்ட போதோ, அல்லது சுமார் நாலாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் மத்தியதரைக்கடலிலே மூழ்கி மரணித்தபோதோ, அவர்களை தமது நாட்டுக்குள் வைத்திருப்போம், பாதுகாப்போம், வாழ்க்கை கொடுப்போம் என்று எண்ணாத துருக்கிய அரசு, இன்று இந்த அகதிகளை தமது நாட்டுக்குள் வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கெட்டித்தனமாக பிச்சை கேட்கும் காட்சி முஸ்லிம் உம்மத்திற்கே இழிவைப் பெற்றுத் தருகிறது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் என்ற  சகோதர வாஞ்சையுடன் அல்லது ஒடுக்குமுறையிலிருந்து தப்பிப்பிழைத்து வருகின்ற மக்களை அரவணைத்து அடைக்களம் கொடுப்பது மார்க்கக் கடமை என்ற சிந்தையுடன் ஒரு நொடிப்பொழுதும் சிந்திக்காது, இந்த முஸ்லிம்களின் அவலத்தை தமது அருவருப்பான அரசியல் அறுவடைக்காக பாவித்து வருவதின் ஊடாக, தானும் ஒரு சாதாரண கீழ்த்தர முதலாளித்துவ தேசமே என்பதை துருக்கி மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
 
மேலும் இந்த சிரிய அகதிகள் பிரச்சனை, மேற்குலகும், துருக்கியும், ஏனைய பல முஸ்லிம் அரசுகளும் நடைமுறைப்படுத்தும் ஜனநாயகத்தினதும், மதஒதுக்கல் கொள்கையினதும், முதலாளித்துவத்தினதும், தேசியவாதத்தினதும் கோரமான முகத்தை உலகுக்கு தோலுரித்து காட்டியிருக்கிறது. அதேபோல இந்த முறைமையின் கீழ் மனித உரிமையை நிலைநாட்டப்போகிறோம் என்ற நியாயத்தைக் கூறி ஏனைய நாடுகளின் மீது  குண்டு வீசி, ஆக்கிரமித்து, காலணித்துவம் செய்யும் அரசுகள், தமது வாக்கு வங்கிகளில் அரசியல் பிரபல்யத்தை வளர்த்துக் கொள்வதற்காக அடக்குமுறைக்குள்ளான பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பிடிங்கி எறிவதையும் நாம் அவதானிக்கிறோம். இந்த முறைமைகள் கொள்கையை விட ஜனரஞ்சகத்தை தூக்கிப்பிடிப்பதை காண்கிறோம். இந்த முறைமைகள் மனிதர்களிடமிருந்து மனிதத்தையும், மனிதாபிமானத்தையும், அகற்றி, மனித அவலங்களைக் கண்டு கசியாத கண்களையும், அழுகுரல்களைக் கேட்டு கலங்காத உள்ளத்தையும் விதைத்திருப்பதை கவலையுடன் நோக்குகிறோம்.
 
அகதிகளாக்கப்பட்டு பொருத்தமான அடைக்களத்தை பெற்றுக்கொள்ள முடியாது, ஒரு நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கும், பின் மீண்டும் அந்த நாட்டிலிருந்து பிரிதொரு நாட்டுக்கும் விரட்டப்பட்டு, பல நாடுகளின் எல்லைகளில் வாரக்கணக்காக, மாதக்கணக்காக பல்லாயிரக்கணக்கான மக்களை பரிதவிக்க விடும்  “தேசிய அரசுகள்” என்ற சிந்தனை நடைமுறைக்கு உதவாதது என்பதையும், அது நவீன காலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள சக்தியற்றது என்பதையும் இந்த அகதிகள் பிரச்சனை நிரூபித்துள்ளது.  சொல்லொண்ணா துயரங்களை சந்தித்து வரும் இந்த அகதிகளை உலகம் கையாளும் விதம் இன்றைய உலக ஒழுங்கின் கேவலமான தராதரத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. மனித விழுமியங்களுக்கும், அவர்களின் கண்ணியத்திற்கும் ஒரு சதத்தின் பெறுமதியைக் கூட வழங்க நினைக்காத, சடவாத முதலாளித்துவ முறைமைகளால் ஆதிக்கம் பெற்ற இன்றைய உலக ஒழுங்கு இந்த அகதிகள் பிரச்சனையையோ அல்லது இதுபோன்ற உலகம் எதிர்நோக்குகின்ற பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளையோ தீர்ப்பதற்கு தகுதியற்றது என்பதை உலகம் தற்போது புரிந்து வருகிறது. எனவே ஒடுக்கபட்;ட, நாதியற்ற, பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயநலமும், போட்டியும் நிறைந்த இன்றைய உலக ஒழுங்கின் கீழ் கட்டுண்டிருக்கும் எந்தவொரு தேசமும் முறையாக உதவப்போவதில்லை.
 
எனவே உலகம் உடனடியாக இன்னுமொரு உலக ஒழுங்கை வேண்டி நிற்கிறது. அந்த உலக ஒழுங்கு மனித அவலங்களை, சடவாத பொருளியல் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டோ, குறுகிய தேசிய நலன்களைக் கொண்டோ கையாளாத, மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு அதிலே எவ்விதத்திலும் சமரசம் செய்யாத ஒரு உலக ஒழுங்காக தோற்றம் பெற வேண்டும். அத்தகைய ஒரு உலக ஒழுங்கை நோக்கி உலகம் நகருவதற்கு, நீதியையும், மனித நேயத்தையும் எந்தகைய விலையைக் கொடுத்தாயினும் உலகில் நிலைநாட்டக்கூடிய நேர்வழிபெற்ற கிலாஃபா ஒன்றினால் மாத்திரமே வழிகாட்ட முடியும். அந்த கிலாஃபா அரசு, உலகிலுள்ள ஏனைய தேசங்களுக்கு மனிதர்களை மனிதர்களாக நோக்குகின்ற, அவர்களின் அவலங்களைக் கண்டு தூய்மையாக அக்கறை கொள்கின்ற, நவீன கால சவால்களை தீர்க்கமான அறிவுடனும், நேர்மையான அணுகுமுறையுடனும் எதிர்கொண்டு தீர்த்து வைக்கின்ற பாதையில் வழி காட்டும்.
 
பக்கச்சார்புக்கும், அநீதிக்கும் அப்பாற்பட்டவனான, முழு மனித குலத்தினதும் நலனை நன்கறிந்தவனான அல்லாஹ்(சுபு)வின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செய்யும் கிலாஃபா அரசால் மாத்திரமே மனிதகுலத்தை உய்விக்க முடியும். வரலாற்றில் மனிதநேயத்திற்கும், பெரும்தன்மைக்கும், உதவிக்கரம் நீட்டுவதற்கும் தனக்கென தனியான தடம்பதித்த, முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாது, அல்லல்பட்ட, அவலப்பட்ட மக்களுக்காக தனது எல்லைகளைத் திறந்து அடைக்களம் கொடுத்த பெருமைக்குரிய வரலாற்றை உடைய கிலாஃபா அரசின் மீள் வருகையே இன்றைய உடனடித் தேவையாகும்.  அத்தகைய ஒரு அரசு உலகில் தோற்றம் பெறும் போது ஏன் இறைவன் அவனது இறுதித்தூதரை அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை என்று அழைத்தான் என்பதை உலகம் வெகுவிரைவில் உணர்ந்து கொள்ளும்! இன்ஷா அல்லாஹ்!
 
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல் அன்பியா:107)

Oct 19, 2015

அகதிகளை வரவேற்கும் ஜெர்மனி, உண்மை நிலவரம் என்ன?


 
தற்போது, ஐரோப்பிய நாடுகளை சுற்றி புதிய "பெர்லின் மதில்கள்" எழுப்பப் பட்டு விட்டதால், அகதிகள் வருகையும் குறைந்து விட்டது. உலகத் தொலைக்காட்சிகளும் தமது கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட்டன. ஐரோப்பிய நாடுகளின் கனவான்கள் "தாராள மனப்பான்மையுடன்" அகதிகளை வரவேற்றதாக பிரச்சாரம் செய்து ஓய்ந்து விட்டார்கள்.

ஜெர்மனியில் புதிதாக திறக்கப் பட்ட அகதி முகாம்கள் பல எரிக்கப் பட்டன. ஒரு சம்பவத்தில் அகதி ஒருவர் பலியானார். நெதர்லாந்தில் புதிதாக அகதி முகாம்கள் அமைப்பதற்கு, சில இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உள்ளூராட்சி சபைகளில் அகதிகளுக்கு முகாம் அமைப்பது பற்றிய விவாதங்கள் நடந்த நேரம், உள்ளூர் மக்கள் கூட்டம் நடக்க விடாமல் தடுத்து இடையூறு செய்தார்கள். வெளிநாட்டவர்கள் பற்றிய அறியாமையால் ஏற்படும் அச்சவுணர்வை வெளிப்படுத்தினார்கள்.


மேற்படி தகவல்களை எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. (உள்நாட்டு ஊடகங்களில் மட்டுமே தெரிவிக்கப் பட்டன.) அது மட்டுமல்ல, தஞ்சம் கோரிய அகதிகளில், மிகக் குறைந்த அளவினரை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, எஞ்சிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவார்கள். மீறி இருந்தால், விசாவைப் பறித்து விடுவார்கள். தடுப்பு முகாம்களுக்குள் வைத்திருந்து திருப்பி அனுப்புவார்கள். அந்தத் தகவல்களும் எந்த ஊடகத்திலும் வரப் போவதில்லை.


"மேற்கு ஐரோப்பியர்களுக்கு எவ்வளவோ தாராள மனசு!"




ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன.

(பார்க்க:
ஆண்டுக்கு 5,00,000 அகதிகளுக்கு புகலிடம்: ஜெர்மனி அறிவிப்பு
அகதிகளை நெகிழவைத்த ஜெர்மனியின் வரவேற்பு
ஜெர்மனியின் சர்வதேசியத்துக்கு வாழ்த்துகள்)


பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.


பிரிட்டனை விட ஜெர்மனி பெருமளவு அகதிகளை ஏற்றுக் கொள்கின்றது என்பது உண்மை தான். பெரும்பாலான தமிழர்கள், காலனிய அடிமைத்தனம் காரணமாக பிரிட்டனுக்கு செல்ல விரும்புவதுண்டு. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த அகதிகள், பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரிட்டனை விரும்புவார்கள்.


பிரான்சின் கலே பகுதியில், யூரோ சுரங்க ரயில் பாதைக்கு அருகில் முகாமிட்டுள்ள அகதிகள் பிரிட்டனுக்கு ஒரு தலையிடியாக இருந்தனர். சுரங்க ரயில் பாதை மூலம் நடந்து செல்ல முயன்ற சில அகதிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்தனர். அப்படி இருந்தும், பிரிட்டிஷ் அரசு, தனது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் தடுப்பதற்காக, பெருமளவு நிதியை பாதுகாப்புக்கு செலவிட்டது.


பிரிட்டனுக்கு செல்லும் அகதிகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் தான், கிரேக்க தீவுகளில் ஆயிரக் கணக்கான சிரிய அகதிகள் வந்திறங்கினார்கள். அவர்கள் கிரீசில் இருந்து, மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக ஜெர்மனிக்கு சென்றனர்.

துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் என்ற குழந்தையின் படம், உலக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த பின்னர் தான், ஜெர்மனி எல்லைகளை திறந்து விட்டது. இதன் மூலம், ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல், தன் மீதான நல்லெண்ணத்தை உயர்த்திக் கொண்டமை தனிக் கதை.


பிரிட்டனோடு ஒப்பிடுகையில், ஜெர்மனியில் அகதிகளுக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தாலியில் கூட, அகதிகளுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் கிடைப்பதில்லை. அதனால், லிபியா மூலம் இத்தாலி வந்தடைந்த ஆயிரக் கணக்கான அகதிகள், ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

ஜெர்மனி மட்டுமல்ல, நெதர்லாந்து, பெல்ஜியம், மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கின்றன. யாரையும் தெருவில் படுக்க விடுவதில்லை. படுப்பதற்கு கட்டிலும், மூன்று வேளை உணவும், கைச் செலவுக்கு பணமும் கொடுக்கின்றன.


முதலில், மேற்கு ஐரோப்பிய நாடுகள், தஞ்சம் கோருவோரை அகதிகள் என்று அழைப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெறும் "தஞ்சக் கோரிக்கையாளர்கள்" மட்டும் தான், அகதிகள் அல்ல! அதாவது, அவர் அகதியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு அகதிக்கும் தனித்தனியாக விசாரணை நடக்கும். சிலநேரம் இரண்டு, மூன்று தடவைகள் விசாரிப்பார்கள். அகதி என்பதை நிரூபிக்குமாறு ஆதாரம் கேட்பார்கள். (அரசியல் காரணங்களினால் பாதிக்கப் பட்டவராக இருக்க வேண்டும்.)


அகதிகளுக்கான விசாரணைக் காலகட்டம் மாதக் கணக்கு அல்லது வருடக் கணக்காகலாம். விசாரணைகளின் முடிவின் பின்னர், குறைந்தது பத்து சதவீதமானோரை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். (ஒன்றில் "உண்மையான" அகதியாக அங்கீகாரம், அல்லது வதிவிட அனுமதி) அவர்களை மட்டும் நாட்டில் தங்க அனுமதிப்பார்கள்.

எப்போதுமே, பெரும்பாலான அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவது வழமை. அந்த துரதிர்ஷ்டசாலிகள், தாயகம் திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தப் படுவார்கள். உத்தரவை மீறி தங்கி இருந்தால், சட்டவிரோதிகள் ஆக்கப் படுவார்கள். அதற்குப் பின்னர், திடீரென ஒரு நாள் பொலிஸ் வந்து விலங்கு மாட்டி நாடு கடத்தி விடும்.


இருபது வருடங்களுக்கு முன்னர், ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்ச மனு நிராகரிக்கப் பட்ட அகதி, இன்னொரு ஐரோப்பிய நாட்டில் மீண்டும் தஞ்சம் கோர முடிந்தது. ஆனால், டப்ளின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், அது சாத்தியமில்லாமல் போனது. அது மட்டுமல்ல, ஏற்கனவே "பாதுகாப்பான" ஐரோப்பிய நாட்டில் வந்திறங்கிய அகதியை, அந்த நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று டப்ளின் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. பல வருடங்களாக, ஜெர்மனி வந்த அகதிகளில் எத்தனையோ பேர், முதலில் வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். தற்போது வந்து சேர்ந்துள்ள சிரிய அகதிகளும் திருப்பி அனுப்பப் பட மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.


இருப்பினும், அகதிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப் படும் வரையில், தற்காலிகமாக வசிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அகதிகள் தங்குவதற்கான தற்காலிக இருப்பிடங்கள், வசதிகளற்ற முகாம்கள் ஆகும். அவை பெரும்பாலும் நகரங்கள், கிராமங்களில் இருந்து தொலைவில் இருக்கும். சில இடங்களுக்கு பஸ் போக்குவரத்து கூட இருக்காது. அருகில் உள்ள கடைக்கு செல்வதற்கும், நான்கு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கலாம்.


சிலநேரம், பழைய சிறைச்சாலைகளில் கூட, அகதிகளை தங்க வைக்கிறார்கள். நகர்ப் பகுதிகளில், புதிதாக வரவிருக்கும் அகதி முகாம்களுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆங்காங்கே நடக்கிறது. ஜெர்மனியில் சில இடங்களில், அகதிகள் குடியேறுவதற்கு முன்னரே கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். நெதர்லாந்தில் ஒரு அகதி முகாமுக்கு அருகில், பெரிய சத்தம் போடும் நைட்ரேட் வெடிகுண்டு வீசினார்கள்.




மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், சில தவிர்க்கவியலாத காரணங்களினால் தான், பெருமளவு அகதிகளை நாட்டுக்குள் வர விட்டனர். அதே நேரம், எல்லைகளில் சோதனைகள் தீவிரமடைந்ததன. "பயண முகவர்கள்" என அழைக்கப்படும், அகதிகளை கடத்திக் கொண்டு வருவோர், நூற்றுக்கணக்கில் கைது செய்யப் பட்டனர். அதன் மூலம், அகதிகள் வருகையை தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.


பெரும்பாலான அகதிகள் ஜெர்மனியை நோக்கி வந்தாலும், விரைவில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினாலும் பங்கிடப் படவுள்ளனர். பல வருட காலமாக, ஐரோப்பிய நாடுகளை அவ்வாறு செய்வதற்கு ஜெர்மனி வற்புறுத்தி வந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அகதிகள் பங்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.


ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், துருக்கிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இனிமேல் புதிதாக அகதிகள் வருவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. துருக்கி மூலமாக பெருமளவு அகதிகள் வந்த படியால், அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டுள்ளனர். அதன் படி, துருக்கியில் உள்ள அகதி முகாம்களில் வசதிகள் அதிகரிக்கப் படும். அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் துருக்கி மொழி கற்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப் படும். இதற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை, ஐரோப்பிய ஒன்றியம் செலவிடவுள்ளது.


அதன் அர்த்தம், துருக்கி அகதிகளுக்கான பாதுகாப்பான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது. இதன் மூலம், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருக்கும் அகதிகளின் நோக்கம் நிறைவேறப் போவதில்லை. அவர்கள் இனிமேல் துருக்கி போன்ற எல்லையோர நாடுகளிலேயே தங்க வைக்கப் படுவார்கள்.

Sep 12, 2015

முதல் உலகப்போர் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு

 
 
 முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப்பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, உதுமானிய கிலாபத் , பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா,அமெரிக்கா,இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன.

 
 

1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.
இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின.

போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமாகியது. 1917ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் போரில், ஜெர்மனி படைகள் விஷ வாயுவை பயன்படுத்தின.

போர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும்.

எதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப்படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.
போரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷப் புகையை பயன்படுத்தியது. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன.

இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். மக்களை அடக்க, ராணுவத்தை கெய்சர் ஏவினார். உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11-ந்தேதி நுழைந்தன.

இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார். ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். சேதம் 1,561 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் 2 கோடிப்பேர் மாண்டனர்.

யுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜுன் 28ந் தேதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது.

போரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று. ஜெர்மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண்டது. இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, உதுமானிய கிலாபத் என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின.சிதறியது ஆஸ்திரியா நாடு, பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடாகும். போருக்குப்பிறகு, ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது.

யூகோஸ்லேவியா, போலந்து, செக்கசு லோவக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின.

மீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக்கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக "சர்வதேச சங்கம்" ஒன்று நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன.

ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா அச்சங்கத்தில் கடைசிவரை சேரவில்லை.
 
செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் வேற ஒரு வரலாற்று பதிவில் சந்திப்போம்.

 
நன்றி விக்கிபீடியா

Jul 14, 2014

ஜெனரல் எர்வின் ரோமல் கண்ட கொமாண்டர் காலித் இப்னு வலீத் (ரலி ) - சிறப்பு பதிவு (மீள்பதிப்பு)


by:Abu Sayyaf

காலித் இப்னு வலீத்(ரலி.). இஸ்லாமிய வரலாற்றின் வெற்றிமிகு தளபதி. போர் ஆசான். நெருங்கமுடியாத உறுதிமிக்க தளங்களை கைப்பற்றியவர். தம்மிலும் பார்க்க மிகப்பெரிய பலம்வாய்ந்த சைனியங்களை எதிர்கொண்டு களங்களில் வெற்றிவாகை சூடியவர். எதிரி படைகளின் பலவீனமான முனைகளை இனங்கண்டு அதனுள் ஊடுருவும் வியூகங்களை வகுப்பதில் வல்லவர் இவர். தனது படையினரை அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்யும் மனோநிலையை வலுப்படுத்தி அவர்களது தீரமிகு தாக்குதல்களின் ஊடாக எதிரியை நிலைகுலைய வைத்து வெற்றிகளை வளைத்து போடுபவர்.

யர்மூக் யுத்தமும் அதில் அவர் காட்டிய தலைமைத்துவமும் இதற்கு சிறந்த சான்றாகும். ரோமானிய படைகளின் கட்டளைத்தளபதிகளில் ஒருவர் ஜர்ஜாஹ். காலித் இப்னு வலீத்தின் போர் ஆற்றலை வியந்து அவரது முகாமில் அவரை சந்தித்து வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்டார். அதற்கு அவர் தனது திறமைகளை பற்றியோ யுத்தவியல் புலமைகளை பற்றியோ பதிலளிக்கவில்லை. மாறாக “நாங்கள் ஓரிறை கொள்கையை நம்புபவர்கள். அதற்காக உழைப்பவர்கள். அதனால் அந்த இறைவன் “அல்லாஹ்” எமக்கு உதவுகிறான்” என்று ஆணித்தரமாகவும், உறுதியாகவும் விடையிறுத்தார்கள். இந்த பதில் ரோமானிய படைத்தலைவரை பிரமிக்க வைத்தது.

அவர் கேட்டார் “உங்கள் கொள்கையில் இணைந்தால் நானும் வெற்றியாளனாகி விடுவேனா?” என்று. மீண்டும் காலித் சொன்னார், “ஆம். நிச்சயமாக. என்னிலும் பன்மடங்கு அதிகமான வெற்றிகளை பெறுவீர்கள். என்னை விட சிறந்த தளபதியாக உங்களால் சண்டையிடவும் முடியும்”. இந்த பதில் ரோமானிய கிறிஸ்தவ தளபதியை அதிர வைத்தது. குளறி அழுதார். அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் முஸ்லிம் தளபதியாக மாறி நின்றார். இதுதான் காலித் இப்னு வலீத். இது தான் இஸ்லாமிய வரலாறு.

ஒரு மிகப்பெரும் வீரர், தன்னிகரில்லா தளபதி, அல்லாஹ்வின் வாள் எனும் சைபுல்லாஹ் பட்டத்தை நபியவர்களின் திருவாயினால் பெற்றவர், ஜிஹாத் வேறு அவர் வேறு என்று பிரித்து பார்க்க முடியாத முஜாஹித். ஆனால் அவரிற்கு கூட ஷுஹதாவாக மரணிக்கும் களத்தின் வீர மரணம் கிட்டவில்லை. ஒரு கட்டிலில் அல்லாஹ்வின் பாதையில் நான் வெட்டப்படவில்லையே என்ற விம்மிய நெஞ்சுடன் குமுறி அழுதபடி தான் மரணித்தார்.


இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அடோல்ப் ஹிட்டலரின் முதல் நிலை தளபதிகளில் ஒருவர் Erwin Johannes Eugen Rommel. பாலைவன நரி என வரலாற்றில் புகழ் பெற்றவர். ஜேர்மனிய படைகளின் பீல்ட் மார்ஷல் எனும் உயர் பதவியை வகித்தவர். ஜேர்மனில் இவரை “இரண்டாம் ஹிட்லர்” என அழைப்பார்கள் அவரின் கைகளில் குவிந்த அதிகாரங்களின் காரணமாக. நாஸிகளின் வெற்றிகளிற்கு மிக முக்கியாக விளங்கிய சண்டைகளை வழி நடாத்தியவர். வட ஆபிரிக்க வெற்றிகளின் சொந்தக்காரர். ஜேர்மனிய இராணுவமும் அடோல்ப் ஹிட்லரும் சடுதியாக உயர்வதற்கு உழைத்த முக்கியமான ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஹிட்லர் யுத்தங்களை ஆரம்பித் போது, அவரை ஹெய்ல் ஹிட்லர் என அனைவரும் துதித்த போது, அவரை பெயர் சொல்லி அழைக்கும் துணிவு பெற்ற தளபதி ரோமல்.

ஹிட்லர் ஒரு முறை பெர்லினின் மக்கள் சதுக்கத்தில் பேசும் போது கூறினார், “எமது வெற்றிகளிற்கு காரணம் நமது வொக்ஸ் கவச வாகனங்களா? அல்லது எமது மெஸ்ஸர் சண்டை விமானங்களா? அல்லது ஜெனரல் ரோமலா? என்பதில் நான் அடிக்கடி குழம்பி விடுகிறேன். இறுதியில் அது ரோமலால் தான் என்ற முடிவுடன் தூங்கச் செல்கிறேன்” என்று.

கைப்பற்றிய இடங்களில் ஜெர்மனிய படைகள் பல அநியாயங்களை செய்தன. போலந்து முதல் பிரான்ஸ் வரை இது நிகழ்ந்தது. ஆனால் ரோமல் அதனை செய்யவில்லை. எதிரி தேச பெண்களை தனது படையினர் கற்பழிப்பதற்கு அனுமதிக்கவில்லை. சிறுவர்களையும் வயோதிபர்களையும், மத துறவிகளையும் கொலை செய்ய வேண்டான் என கண்டிப்பான கட்டளையிட்டார். பயிர் நிலங்களை தீயிடுவதை தடுத்தார். சரணடைந்த கைதிகளுடன் நியாயமாக நடந்து கொண்டார். கைது செய்யப்பட்ட எதிரி நாட்டு படைத் தளபதிகளை சித்திரவதை செய்து கொல்லாமல் தனது டின்னரில் அவர்களையும் அழைத்து, தன்னுடன் எதிர்த்து நின்ற அவர்களது வீரத்தை கண்ணியப்படுத்தினார்.

இவரது இந்த நடவடிக்கை ஜேர்மனிய சீக்கிரட் சேர்விஸ் எனும் ஹிட்லரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புலனாய்வு பிரிவினரால் திரிவுபடுத்தப்பட்டு ஹிட்லிரிற்கு தெரியப்படுத்தப்பட்டது. ஏற்கனவே ஜேர்மனிய வெற்றிகளின் பின்னால் அடோல்ப் ஹிட்லறின் உரைகளும், ரோமலின் வெற்றிகளுமே இருப்பதாக மக்கள் பேசுவதையும் கேள்விப்பட்ட ஹிட்லரிற்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. ரோமலை பீல்ட் மார்ஷல் தரத்திற்கு கீழான பதவிக்கு நியமனம் செய்தார். பிரான்ஸின் பாதுகாப்பு தளபதியாக அனுப்பினார். பின்னர் மீண்டும் ஜேர்மனிக்கு அழைத்து கொண்டார்.

சண்டைகளின் போக்கு மாறியமையும், நேசப்படைகளின் தாக்குதல்கள் வேகம் பெற்றமையும் ஜேர்மனிய இராணுவ தளபதிகளிடையே முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கியது. சண்டை வியூகங்களில் ஹிட்லரிற்காக மரணிக்க வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கி சிப்பாய்களின் வீரத்தை உயர்நிலையில் பேணி வெற்றிகளை கண்டவர் ஜெனரல் ரோமல். ஆனால் அவர் இறுதியில் ஹிட்லரின் இராணுவ வியூகங்களை விமர்சனம் செய்தார். கொளரவத்திற்காகவும், புகழிற்காகவும் எதிரியின் பலம் பொருந்திய முனைகளை தேர்வு செய்து சண்டைகளை ஆரம்பிப்பது கூட்டு தற்கொலைக்கு சமானம் என்று ஹிட்லரிற்கு நேரடியாகவே கடிதமனுப்பினார் ரோமல்.

ஹிட்லரின் முரட்டுத்தனமான, முட்டாள்தனமான இறுதி நடவடிக்கைகளால் விரக்தியடைந்த இரு ஜெனரல்கள் மேலும் மூன்று கேர்ணல்களுடன் இணைந்து ஹிட்லரை கொலை செய்து விட்டு ஜேர்மனியை காப்பாற்றுவது பற்றி திட்டமிட்டனர். அதற்கு “ஒப்பரேஷன் வல்கரீன்” என்று பெயரிட்டு அடோல்ப் ஹிட்லரை ஒரு நேரக்குண்டு வெடிப்பின் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு அதில் தோல்வியை தழுவினர். இந்த தாக்குதல் நடவடிக்கையை பற்றியும், ஹிட்லர் இல்லாத ஜேர்மனிக்கு ஜெனரல் ரோமல் தலைமையேற்க வேண்டும் என்றும் வேண்டினர். அவர்கள் ஜெனரல் ரோமலிற்கும் தங்கள் எண்ணங்களை அறியப்படுத்தினர். ரோமால் அதனை வெகுவாக எதிர்த்தார். “ஒரு சாதாரண ஜேர்மனிய வீரனாக எல்லையில் சாவது, ஜேர்மனிய அரசை சதி செய்து கவிழ்த்து அதன் தலைவனாவதை விட எவ்வளவோ மேல்” என திட்டத்தை சாடினார்.

கொலையாளிகள், திட்டமிட்டவர்கள் எல்லோரும் இனங்காணப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை ஹிட்ல் நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஜெனரல் ரோமலிற்கு ஒரு தகவல் ஹிட்லரினால் அனுப்பப்பட்டது. அதனை ஹிட்லரின் நெருங்கிய சகாக்களான இரண்டு ஜெனரல்கள் அதனை ரோமலிடம் கொண்டு சென்றனர். வில்ஹம் பேர்க்டோம், ஏர்னஸ் மய்சல் என்பவர்களே அந்த ஜெனரல்கள். “ஹிட்லரை படுகொலை செய்து ஜேர்மனியை எதிரிகளிடம் தாரை வார்க்கும் துரோக கும்பலில் நீங்களும் ஒருவர் என மக்கள் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்படுவது உங்கள் தேர்வா? அல்லது நீங்களே உங்களை தலையில் சுட்டு மரணிப்பதன் ஊடாக கௌரவமான ஜேர்மனிய ஜெனரலாக நல்லடக்கம் செய்யப்படுவது உங்கள் தேர்வா?. 30 நிமிடங்களில் இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும்.” இது தான் ஹிட்லர் அனுப்பிய கடிதத்தின் வாசகங்கள்.

ஜெனரல் ரோமல் தற்கொலையை தேர்ந்து கொண்டார். 1944-ல் ஒரு பிஸ்டலில் இருந்து புறப்பட்ட தோட்டா மூலம் உலகை வெற்றி கொண்ட தளபதி தனது ஓபல் காரினுள் வைத்து தன் கதையை முடித்துக்கொண்டார். ஹிட்லரிற்காக கோயபல்ஸ் ஒரு அறிக்கை தயாரித்து இருந்தான். அதில் “ஜெனரல் ரோமல் தனது உடலில் ஏற்பட்ட ரணங்களின் காரணமாகவும், நோர்மண்டி தோல்வியின் காரணமாகவும் தனது உயிரை தானாகவே மாய்த்து கொண்டதாகவும், இது ஜேர்மனிய இராணுவத்திற்கும், ஜேர்மனிய மக்களிற்கும், தலைவர் அடோல்ப் ஹிட்லரிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் வீரனாக வாழ்ந்து வீரனாக மரணித்தார்.” என்று குறிப்பிட்டிருந்தான். ஜேர்மனிய வானொலி தேசிய துக்கதினத்தை பிரகடனம் செய்து, ஸ்வஸ்திகா கொடியை அவர் பேழையின் மேல் போர்த்தி பூரண அரச, இராணுவ மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்தது.


ஜெனரல் ரோமல் தனது இராணுவ வாழ்வியல் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதன் பெயர் “பேப்பர்ஸ் ஒப் ரோமல்” என்பதாகும். அதில் அவர், அரேபிய தளபதி காலித் இப்னு வலீத்தை இராணுவ, மற்றும் தத்துவ ரீதியாக பின்பற்றியதாகவும், தனது வெற்றிகளின் பின்னால் தளபதி காலித்தின் உக்திகள் துணை நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு சுத்த இராணுவ வீரனாக தளபதி காலித்தை பார்க்கவில்லை என்றும், பண்பாடுகளும் மனிதாபிமானங்களும் நிறைந்த முழுமையான ஒரு மனித நேயம் கொண்ட ஒரு நபரை பார்த்ததாகவும், சண்டைகளில் மட்டுமன்றி போஸ்ட் ஒப் வோர் எனும் சண்டைகளிற்கு பின்னரான நாட்களிலும் கூட தான் தளபதி காலித்தை பின்பற்றியதாகவும் எழுதியுள்ளார்.

தளபதி காலித்தின் தந்திரங்களில் தன்னை கவர்ந்தவதை, எதிரியின் பலவீனமான முனைகளை தகர்ப்பதன் ஊடாக வெற்றியை வசமாக்குவதும், வீரர்களை தங்கள் உயிர்களை தத்தம் செய்து யுத்தம் செய்யும் மனோநிலையில் பேணுவதும் என்றும் அதனை தான் தலைமையேற்ற 37 சண்டைகளில் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அதில் 33 சண்டைகளில் தான் பரிபூரண் வெற்றியை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் யார் என்று தான் தேடியதாகவும், ஆனால் யாரையும் தன்னால் கண்டு கொள்ள முடியமாமல் போனதாகவும், அவரை வழிநடாத்தியது இஸ்லாம் எனும் மதன் என்பதை தான் கண்டறிந்ததாகவும் குறித்துள்ள தளபதி ஜெனரல் ரோமல் சண்டைகளின் நெருக்கடிமிக்க காலங்கள் காரணமாக அந்த காலித்தை வழிநடாத்திய இஸ்லாத்தை கற்க முடியாமல் போனது தனது வாழ்வின் பேரிழப்பு என்றும் கூறியுள்ளார்.


நாம் இரண்டு தளபதிகளின் வரலாறுகளை மேலே பார்த்தோம். ஆனால் இன்று இஸ்லாமிய உம்மாவை வழி நடாத்தும் ஆட்சியாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்கா மீதும், மேற்கின் ஆயுதங்கள் மீதும் தவக்கல் வைக்கிறார்கள். தங்கள் அரசியல், இராணுவ செயற்பாடுகளை பேணும் விடயங்களில் குப்பார்கள் காட்டித்தந்த விதிமுறைகளை பேணுவதில் அதீத கரிசனம் காட்டுகிறார்கள். வெற்றியின் பாதையாக சடவாதத்தை விரும்பி தேர்ந்துள்ளார்கள். இது ஆட்சியாளர்களிற்கு மட்டுமல்ல. முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் கூட முஸ்லிம்கள் இஸ்லாத்திலும் இறைவனின் வார்த்தைகளிலும், நபியின் சுன்னாவிலும் நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

மார்க்க நம்பிக்கை என்பதும், மார்க்கத்தின் விதிகளின்படி ஒழுகுதல் என்பதும் வெறுமனே வாழ்வியல் செயற்பாடுகளில் மட்டும் தான் எஞ்சி நிற்கிறது முஸ்லிம்களிடத்தில். வணக்க வழிபாடுகள், திருமண தேர்வுகளும் பந்தங்களும், தொழில் ரீதியான செயற்பாடுகள், சொத்துக்களை பகிர்தல் போன்ற பல விடயங்களில் இஸ்லாத்தை இறுக அணைத்து அதன் படி நடக்கும் முஸ்லிம்களால், தங்களிற்கான அரசியல் பாதை, தங்களிற்கான பாதுகாப்பு என்ற விடயங்கள் தங்களை அணுகும் போது முற்றிலும் இஸ்லாத்தின் தீர்வுகளை புறக்கணித்து விட்டு குப்பாரிய வழிமுறைகளை, அவர்கள் காட்டித்தந்த செயல்முறைகளை நாடி ஓடுகிறார்கள். எதிரியிடம் மண்டியிட்டு வாழ்க்கை பிச்சை கேட்கிறார்கள். குப்பாரை திருப்தி படுத்துவதன் ஊடாக தங்கள் இருப்பை பேணும் அரசியல் சாணாக்கியம் மிக்கவர்களாக தங்களை முன்னிறுத்துகிறார்கள்.

முல்லாக்கள் முட்டி மோதுகிறார்கள். எதற்காக என்று பார்த்தால் ஒரு பிக்ஹ் மசாயிலாக அது நிச்சயமாக இருக்கும். இரண்டு வழுக்கை தலையர்கள் ஒரு சீப்பிற்காக சண்டையிடுவது போல. யர்மூக் சண்டைகளின் போது தளபதி அபூ உபைதா, தளபதி யசீத், தளபதி முஆவியா, தளபதி அம்ர் இப்னு ஆஸ் போன்ற பலர் இருந்தனர். இவர்கள் காலித் இன்னு வலீத்துடன் விவாதம் நடத்தவில்லை. பரஸ்பரம் பத்வா கொடுக்கவில்லை. முன்னாலும் பின்னாலும் பழித்தும் இழித்தும் பேசவில்லை. அந்த புரிதலை அவர்களிற்கு வழங்கியது புனித இஸ்லாம். 

ஆனால் இன்று நம் நிலை தான் என்ன? எமக்கான தலைமைத்துவம் இல்லாமையே இதற்கெல்லாம் அடிப்படை. அதனால் தான் நாம் சடவாதத்திடமும், ஜனநாயகத்திடமும், தாகூத்திடமும் முழந்தாளிட்டு அடைக்கலம் தேடுகின்றோம். எமக்கான கிலாபாவை நாம் தொலைத்து விட்டு குப்பாரின் கால்களின் இடையே அதனை தேடுகின்றோம்.


கிலாபா குப்பாரின் தொடைகளில் இல்லை. அது இஸ்லாத்தில் இருக்கிறது. மறைந்த இஸ்லாமிய உன்னதமான ஆன்மாக்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருக்கிறது. சற்று அவர்களது வாழ்க்கையை தேடிப்பாருங்கள். ஜெனரல் ரோமலைப் போல. அப்போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கோலியாத்தையல்ல, தாகூத்தை வீழ்த்திய தாவீத்களாக..