Showing posts with label ரமழான். Show all posts
Showing posts with label ரமழான். Show all posts

Jul 8, 2016

ரமதானும் குண்டுவெடிப்புகளும்

முஃமீன்களின் குருதி அநியாயமாக சிந்தப்பட்ட இன்னுமொரு ரமதானை சற்று முன்னரே நாம் தாண்டியிருக்கிறோம். இஸ்தான்புல் விமானநிலையத் தாக்குதலாக இருக்கலாம், டாக்கா சிற்றுண்டிச் சாலைச் தாக்குதலாக இருக்கலாம், கராச்சியில் கவ்வாலின் படுகொலையாக இருக்கலாம், பக்தாத் சிடி சென்டர் குண்டு வெடிப்பாக இருக்கலாம், இன்று புனித்தளமான மதீனா அல் முனவ்வரா உட்பட அரேபிய தீபகற்பத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களாக இருக்கலாம் - அவை அனைத்தும் ரமதானின் புனிதத்தன்மையை மதியாத, உம்மத்தை கதிகலங்க வைத்த நிகழ்வுகளாக இடம்பெற்று இருக்கின்றன.
இவ்வாறு இந்த புனித மாதத்தில் பதைக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட எமது உறவுகளை அல்லாஹ்(சுபு) ஷ}ஹதாக்களாக ஏற்றுக்கொள்வானாக! இவற்றில் அகப்பட்டு காயமடைந்தவர்களுக்கு விரைவான சுகத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிறைவான பொறுமையும் வழங்குவானாக!
இவை இஸ்லாமிய குழுக்களில் கைவேலைகள் என்று சிலர் கூற, இன்னும் சிலர் அவை போன்ற குழுக்களின் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட சில தனிநபர்களின் தன்னிச்கையான கருமங்கள் என நம்ப, இன்னும் சிலர் இவை வெளிநாட்டு நாசகார பாதுகாப்பு முகவர்களின் சதிவேலைகள் என வாதாடலாம்.
எனினும் எது நிச்சயமானது என்றால் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சூழ்ச்சிகள் பலிக்காத அல்லாஹ்(சுபு)வின் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்பதே.
மேலும் எது நிச்சயமானது என்றால் சிந்தப்பட்ட இரத்தையும், உருவாகியிருக்கும் பீதியையும் தாண்டி இந்த நிகழ்வுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் எதிரிகளும், முஸ்லிம்களின் எதிரிகளும் கச்சிதமாகப் பயன்படுத்துவார்கள் என்பதுமே.
  • முஸ்லிம் உலக அரசுகள் இந்த நிகழ்வுகளை விமர்சகர்களினதும், அரசியல் எதிராளிகளினதும் குரல்வலைகளை நசுக்குவதற்காக பயன்படுத்துவார்கள். அத்தகையவர்கள் வன்முறை நடவடிக்கைகளுடன் எவ்வித தொடர்பற்றிருந்தாலும் கூட. சவூதி மன்னர் சல்மான் தீவிரவாதத்தை இருப்புக்கரம் கொண்டு நசுக்கப்போவதாக நேன்று முன்தினம் தெரிவிருத்திருந்தமை இதற்கொரு நல்ல சமிக்ஞை.

  • மேற்குலக அரசாங்கங்கள் தமது இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு இந்தத் தாக்குதல்களை பயன்படுத்துவார்கள்.

  • இஸ்லாத்தின் எதிரிகள் இந்தத் தாக்குதல்களை இஸ்லாத்தின் அரசியல் சிந்தனைகளை மலினப்படுத்துவதற்கும், இஸ்லாத்தை மதச்சார்பின்மையாக்க அழைப்பு விடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.

  • இந்த நிகழ்வுகள் முஸ்லிம் உலகில் காணப்படும் இஸ்லாமிய மாற்றத்திற்கான அழைப்புக்களிலிருந்து மக்களை தூரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். 70களின் எகிப்த்திலே பயன்படுத்தப்பட்டதைபோல...90களில் அல்ஜீரியாவிலே பயன்படுத்தப்பட்டதைப்போல...

  • இத்தகைய நடவடிக்கைகளைக் பயன்படுத்தி இஸ்லாமே வன்முறைகளின் தோற்றுவாய் எனப் பரப்புரை செய்யப்படும் புனைவுகளால்; பஷாரினது அல்லது சீசியினது சடவாத அரசுகள் நிகழ்த்தும் வன்முறைகளும், காலணித்துவ அல்லது நவகாலணித்துவ அரசுகளான சவூதியும், குருங்குழுவாத பக்தாத் அரசும் புரியும் அயோக்கியங்களும்;, மேற்குலக சக்திகள் ஆளில்லா விமானங்களையும், நேரடி படையெடுப்புக்களையும்; பயன்படுத்தி மேற்கொள்ளும் அத்துமீறல்களும், பலஸ்தீனத்திலும், காஷ்மீரிலும் தசாப்த்தங்களாக தொடரும் ஆக்கிரமிப்புக்களும் மூடி மறைக்கப்படும். இஸ்லாமே அனைத்து பிரச்சனைகளுக்குமான சூத்திரதாரி என காட்டப்படும்.

ஆனால் உண்மை தலைகீழானது. இஸ்லாத்தின் அரசியல் பிரசன்னம் உலகில் இல்லாமையே அனைத்து பிரச்சனைகளுக்குமான மூலம் என்பதைதான் வரலாறு பகர்கிறது!
எமது உலகில் நிலைக்கும் இந்த அராஜகச் சூழல் 1924 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உத்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சியிலிருந்தே வீரியமடைந்தது.
இன்று முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதோர்களையும், குருங்குழுவாத வேறுபாடுகளாலும், சிந்தனைப்பள்ளி பிரிவுகளாலும் வேறுபட்டவர்களையும் ஓர் தேசத்தின் பிரஜைகளாக நீதமாக வழிநாடத்தும் கலீஃபா எம் மத்தியில் இல்லை. மாறாக இன்று எம்மீது வீற்றிருப்பது பிரித்தாளும் நரித்தனத்திற்கு இந்த வேறுபாடுகளை பயன்படுத்தும் கொடுங்கோல் ஆட்சியாளர்களே.
வெளிநாட்டுப் படையெடுப்புக்களில் இருந்து எம்மை பாதுகாப்பதற்கும், எமது நிலங்களை ஆக்கிரமிப்புக்களிலிருந்து மீட்டெடுப்பதற்கும் எமக்கொரு கேடயம் (இமாம்) இல்லை. எது சரி, எது பிழை என அதிகார பூர்வமாக வழிகாட்ட எமக்கொரு தலைமை இல்லை. எமது நிலங்களில் இன்றிருக்கும் உயர்தர ஆன்மீகத் தலைவர்களில் அனேகர் அவ்வவ்வரசுகளின் ஊதுகுழல்களாகவே தொழிற்படுகின்றனர்.
உலக வல்லாதிக்க சக்திகளின் கொடிய முதலாளித்துவ கொள்கைகளால் அல்லலுறும் முஸ்லிம்களையும், ஏனைய நலிவுற்ற மக்களையும் மீட்டெடுப்பதற்கு எமக்கொரு அமீருல் முஃமிமீன் இல்லை. மாறாக கொடிய முதலாளித்துவதற்கு இஸ்லாமியச் சான்றுதல் அளிப்பதற்கு எம்மில் பல தலைமைகள் தலையெடுத்திருக்கிறார்கள்.
எனவே முஃமீன்களின் உயிரழப்புக்களுக்காக கண்ணீர் வடிக்கும் நாம், இத்தகைய நாசகார நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடையும் நாம் இந்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேற்றப்படும் இன்றைய உலக சூழலை மறந்து அவற்றைப் பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வுகளின் கர்த்தாக்கள் யார்? அரங்கேற்றாளர்கள் யார்? பாத்திரங்கள் யார்? அதற்காக ஆடுவது யார்? பாடுவது யார் என்பதை ஆழமாக நோக்க வேண்டும். இந்த இழி நிலையை உலகு ஏன் அனுபவிக்கிறது? அதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன என்பதை வஹியின் வெளிச்சத்தில் தேட வேண்டும்.
அவ்வாறு செய்தால்...
மனிதகுல அவலங்களின் தீர்வுக்கும், பீடித்திருக்கும் பீதிகளின் முடிவுக்கும், முழு உலக அமைதிக்கும் வல்ல இறைவன் எதனை தீர்வாக முன்வைக்கிறானோ அதன் பக்கம் எம் கவனம் குவியும். உலகம் அமைதிப் பூங்காவாக மலரும். தீர்வு திருமறையின் ஒரே வசனத்தில் இவ்வாறு அமைகிறது,
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அந்நூர்:55)

Sources : Darulaman.net

Jun 21, 2016

ரமழானும் உம்மத்தின் அதிமுக்கிய பொறுப்புக்கள் இரண்டும்!

       

 
அல்லாஹ்(சுபு) தனது நிறைவான ஞானத்திலிருந்தும், அதியுயர் அதிகாரத்திலிருந்தும் தனது அடியார்களில் சிலரை விட சிலரை மேன்மைப்படுத்தியிருக்கிறான். பூமியில் சில இடங்களை விட  சில இடங்களையும், சில சமூகங்களை விட சில சமூகங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அது போன்றே ரமழான் மாதத்தை ஏனைய அனைத்து மாதங்களையும் விடவும் சிறப்பான மாதமாக அறிவித்திருக்கிறான். அதற்கொரு முக்கிய காரணத்தையும் அவன் திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
(அல் பகறா:185)

எனவே ரமழானின் அடிப்படைச் சிறப்பு  என்னவென்றால் அது அகிலத்தாருக்கு வழிகாட்டியை கொண்டு வந்திருக்கிறது. அண்ட சராசரங்களை படைத்து கட்டியாளும் அந்த ரப்பின் நற்செய்திகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இறுதித்தூதான புர்கானை மாத்திரமல்லாது, தவ்ராத்தையும், இன்ஜீலையும், சபூரையும் கூட ரமழான் மாதத்திலேயே அல்லாஹ்(சுபு) அருளியிருப்பது ரமழானின் தனிச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

அத்தகைய சிறப்புக்குரிய மாதமான ரமழானிலே திருக்குர்ஆனை அருளிய அல்லாஹ்(சுபு), அது யாருக்கு வழிகாட்டியாகப் பயன்படும்; என்பது பற்றியும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; தக்வா பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல் பகறா:2)

உறுதியான இறைவிசுவாசமும், அனைத்து சந்தர்ப்பத்திலும் அவனது பிரசன்னத்தை மறந்திராத விழிப்புணர்வும், என்றும் அவனது விசாரணைக்கு அஞ்சி வாழ்கின்ற இறையச்சமும் உள்ள ஒருவருக்கே அல்லது ஒரு சமூகத்திற்கே அல்குர்ஆன் வழிகாட்டியாக தொழிற்படும் என்பதே இதன் பொருளாகும். ரமழானிலே மனித குலத்திற்கான வழிகாட்டலை வழங்கியதற்காக அந்த மாதத்தை ஏனைய மாதங்களை விட சிறப்பித்த அல்லாஹ்(சுபு), அந்த வழிகாட்டலால் பயன் பெறக்கூடிய ஒரு சமூகத்தின் முக்கிய பண்பான தக்வாவை வளர்ப்பதற்கான ஓர் பயிற்சியையும் அதே மாதத்திற்குள் பொதித்திருப்பது அவனது வழிகாட்டலின் பரிபூரணத் தன்மையை நிரூபிக்கிறது. ரமழானில் நோன்பை  அல்லாஹ்(சுபு) கடமையாக்கியிருப்பது அதற்காகத்தான். நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விபரிக்கும் இந்த திருமறை வசனம் இதனை தெளிவுபடுத்துகிறது.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தக்வாயுடையோர் ஆகலாம்.
(அல் பகறா:183)

எனவே ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்ற முஸ்லிம் உம்மத்தின் மீது குறைந்தது இரண்டு முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன. முதலாவது, மனிதகுலத்தின் வழிகாட்டியான அல்குர்ஆனை தனது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் அமூல்படுத்த அது தயாராக வேண்டும். அல்லது அதற்காக முயற்சிக்க வேண்டும். இரண்டாவது, அந்த வழிகாட்டலை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளக்கூடய மனோபாவமான தக்வாவை இந்த மாதத்தில் மிக ஆழமாக வளர்த்துக் கொள்ள அது எத்தனிக்க வேண்டும்.

முதலாவது அல்குர்ஆனை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது என்பதன் பொருள் என்ன என்பதை மேற்குறிப்பிட்ட அல் பகறாவின் 185 வசனத்தின் ஊடாக சுருக்கமாக பார்ப்போம்...

இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்குர்ஆனை அல்ஹுதா என அல்லாஹ்(சுபு) அறிமுகப்படுத்துவது “ அது சத்தியத்தின்பாலும், ஸிறாத்தல் முஸ்தக்கீமின் பாலும் வழிகாட்டக்கூடியது என்ற பொருளிலும், கால, இட வேறுபாடுகளைக் கடந்த முழு மனதிகுலத்திற்குமான பூகோள வழிகாட்டி என்ற பொருளிலுமாகும்.

தொடர்ந்து பய்யினாத் மின் அல் ஹுதா என்று அல்லாஹ்(சுபு) தெரிவிப்பது, அந்த வழிகாட்டலுக்கான (அனைத்தையும் பற்றிய) மிகத்தெளிவான விளக்கமாக அது அருளப்பட்டிருக்கிறது என்பதையும், அது எதனுடனும் ஒப்பிடமுடியாத, இன்னொருவரால் கொண்டு வர முடியாத அல்லாஹ்(சுபு) வின் தீர்க்கமான அத்தாட்சி என்பதையும் தெளிவுபடுத்துவதாகும். இமாம் அல் மவர்தி இந்த வசனத்தில் வருகின்ற (பய்யினாத் மில் அல் ஹுதா மற்றும் அல் புர்கான்) என்ற சொல்லாட்சிகள் குறித்து குறிப்பிடும் போது “அது எது ஹலால், எது ஹராம் என்பதை விளக்குவதாகவும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய அளவுகோளாகவும் வந்திருக்கிறது” என விளக்குகிறார்கள்.

இறுதியாக அல்குர்ஆன் தன்னை அல் புர்கான் அதாவது அளவுகோல் என்று அழைக்கும் சொல்லாட்சி அது சத்தியத்தையும், அசத்தியத்தையும், நல்லதையும், கெட்டதையும், நல்ல செயலையும், கெட்ட செயலையும் வேறு பிரிக்கக் கூடியது என்ற பொருளை விளக்குவதாக அமைந்துள்ளது. இமாம் அல் பைதாவி அல்குர்ஆன், தன்னை “பய்யினாத் மின் அல் ஹுதா மற்றும் அல் புர்கான் - என இரு விதமாக அறிமுகப்படுத்துவதன் ஊடாக சொல்லவருவது, அல்லாஹ்(சுபு), அல்குர்ஆனை அற்புதத்தன்மை பொருந்திய, மனிதகுலத்திற்கான வழிகாட்டியாக அருளியுள்ளதுடன் அது சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடிய மிகத்தெளிவான வசனங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது. மேலும் அது தனக்கும்; ஏனைய பிழையான சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் இடையான வித்தியாசத்தை பிரித்துக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது” என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

ரமதான் மாதத்திலே அல்குர்ஆனின் மகிமை பற்றி மஸ்ஜித்கள், குத்பாக்கள், வெகுசன ஊடகங்கள் என அனைத்திலும் ஞாபகமூட்டப்படுவதைப் பார்க்கிறோம். இம்மாதத்தில் அதனை ஓதுவதன் சிறப்புப்பற்றியும், அது தரக்கூடிய அதியுயர் வெகுமதி பற்றியும் நாம் தொடர்ந்து நினைவு படுத்தப்படுகிறோம். எனினும் நாம் மேலே சுட்டிக்காட்டியதைப்போல அதனை முழுமையான அந்தஸ்த்துடன் அணுகுகிறோமா? அல்லது அது வெறுமனவே பாராயணம் செய்வதற்கும், ஒரு சில கிரிகைகளில் ஓதுவதற்கும் மாத்திரம் பயன்படுகிறதா? ஏன் அல்குர்ஆனை ஹுதாவாவும்(வழிகாட்டி), அல் புர்கானாகவும்(அளவுகோல்) நாம் பயன்படுத்துவதில்லை? ஏன் முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களை அல்குர்ஆன் தீர்மானிப்பதில்லை?  இவை போன்ற கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளித்தால் எமது அணுகுமுறையின் ஆபத்து புலப்படுவதுடன் இன்று உம்மத் அடைந்துள்ள இழிநிலை ஏற்பட்டதற்கான காரணிகளும் தெளிவாகும்.

இன்று தராவீஹ் தொழுகைகளிலே அல்குர்ஆன் அதிகமதிகம் பாராயணம்  செய்யப்படுவதும், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்(சுபு) திருப்த்தியைப் நாடி இந்த மாதத்திலே ஒருமுறையேனும் முழு குர்ஆனையும் ஓதி முடிக்க முயன்று வருவதும் சந்தோசமான விடயங்கள்தான். எனினும் அந்த அல் குர்ஆன் எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்தை இன்று வரை எம்மால் நிறைவேற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது? எமது சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நீதித்துறைகள் அனைத்தும் அல்குர்ஆன் வழிகாட்டாத, இஸ்லாம் சொல்லாத அந்நிய சட்டங்களாலும், கொள்கைகளாலும் அல்லவா வழிநடத்தப்படுகின்றன? எமது அகீதாவுக்கும், பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும், வரலாறுக்கும் மாற்றமாக மனித மூளைகளிலிருந்து உதித்த சடவாத சிந்தனைகளினால் அவை கட்டுப்படுத்தப்படுவதையும், முதலாளித்துவ சிந்தனைகளாலும், முறைமைகளாலும் நாம் ஆளப்பட்டு வருவதையும் அல்லவா நாம் அனுபவித்து வருகிறோம்? காலத்திற்கு காலம் சீர்திருத்தம் என்ற வேடம் தரித்து வந்த அந்நிய சிந்தனைகள் அல்குர்ஆனை எமது நடைமுறை வாழ்விலிருந்து படிப்படியாகப் பறித்து விட்ட பிறகு நாம் இந்த இழிநிலையை அடைந்திருப்பது தவிர்க்க முடியாததுதான்.

இஸ்லாமிய அரசியல் அதிகாரம் சுமார் ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் முஸ்லிம்களின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்ட பின்னர் உம்மத்தின் விவகாரங்களை ஆளுகின்ற சட்டங்களும், முறைமைகளும் இஸ்லாம் அல்லாத மூலங்களிலிருந்தும், பெறுமானங்களிலிருந்தும் பெறப்பட்டு மோசடியான கொடுங்கோலர்களின் கரங்களினால் எம்மீது அமூல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடருகின்ற இந்த அரசியல் சாபத்தின் விளைவு சர்வாதிகாரமும், கொடுங்கோலும், வறுமையும், வன்முறையும், பலகீனமும், பாரபட்சமும் கொண்ட தேசமாக எமது தேசம் மாறியிருக்கிறது. அனைத்து வளங்களையும் பெருமளவில் கொண்ட எமது நிலங்கள் தற்போது பொருளாதார மேம்பாடற்ற, கைத்தொழில் முன்னேற்றமற்ற பிராந்தியங்களாகவும், மேற்குலகின் சுரண்டல் சந்தைகளாகவும்  உருமாறியிருக்கின்றன.

ஆனால் நம்பிக்கை தருகின்ற விடயம் என்னவென்றால் எமது மிக அண்மிய வரலாறு மாற்றத்திற்கான வேட்கை உம்மத்தில் மீண்டும் ஓங்கி வருவதை காட்டுகிறது. மக்கள் அதற்காக எவ்விலையையும் தர தயாராகி வருகிறார்கள் என்பதை தெரிவிக்கிறது. அரபுலகில் வெடித்த புரட்சிகள் மக்கள் மத்தியில் பலமான சிந்தனை அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. சிரியாவிலே அரை தசாப்த்தங்களையும் தாண்டி இன்று வரை பஷாருக்கு எதிரான புரட்சி நிலைத்து நிற்கிறது என்றால் அது குறைத்து மதிப்பிடமுடியாத நல்ல சமிஞ்ஞையே. அல்ஹம்துலில்லாஹ்!

உம்மத்தில் தோன்றியிருக்கின்ற இந்த மாற்றம் ஆறுதல் அளித்தாலும் எப்போது அல்குர்ஆன் எமது அரசியல் சாசனத்தின் அடிப்படையாக மாறுகிறதோ, எமது வாழ்வியல் விவகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக செயற்பட ஆரம்பிக்கிறதோ அப்போது மாத்திரமே உண்மையான மாற்றம் சாத்தியமாகும். எமது துயரங்களும், கஷ்டங்களும் அது வரையில் அகழப் போவதில்லை. அந்த உண்மை மாற்றத்தை அடைவதற்கு அல்குர்ஆன் தன்னைத்தான் அறிமுகப்படுத்துவதைப்போல அல்குர்ஆனை உம்மத் பூரண வழிகாட்டியாகவும் (ஹுதாவாகவும்), அந்த வழிகாட்டலின் விளக்கமாகவும், தனது வாழ்வுக்கான ஒரேயோரு அளவுகோலாகவும்(புர்கானாகவும்) முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே மறுமலர்ச்சியின் பாதையில் அதனால் பயணிக்க முடியும்.

அல்குர்ஆனை முஹம்மத்(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் இவ்வாறு எடுத்துக்கொண்டதன் விளைவுதான் அவர்களால்; முழுக்க முழுக்க அல்குர்ஆனிய ஆளுமைகளாக நடமாட முடிந்தது. அல்குர்ஆனிய சமூகமொன்றை முதன்முறையாக மதீனாவில் நிலைநாட்ட முடிந்தது. இதேபோன்றதொரு ரமழான் மாதத்திலே பத்ர் களமானது, யவ்முல் புர்கானாக - (சத்தியவான்கள் யார்?, அசத்தியவான்கள் யார்? எனத் தீர்மானிக்கும் நாளாக) மாறியதென்றால் அதற்கு காரணம் அல்குர்ஆனை அவர்கள் அல்புர்கானாக ஏற்றுக்கொண்டதே. அதேபோல அவர்கள்  அல்குர்ஆனை ஒரு பாரிய சமூகப்புரட்சியின் ஆயுதமாக எடுத்துக்; கொண்டதன்; விளைவுதான் மீண்டும் ஒரு ரமழானில் மக்காவை வெற்றி கொண்டு முழு அரேபிய தீபகற்பத்தையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு அல்குர்ஆன் தம்மீது சுமத்திய பொறுப்பின் பரப்பை ஸஹாபாக்கள் மாத்திரம் புரிந்திருக்க வில்லை. அதற்கு பின்னர் வந்த இஸ்லாமிய சமூகமும் பல நூற்றாண்டுகளாக உணர்ந்திருந்தது. அதனால்தான் எவ்வாறு ரமழான் மாதம் ஸஹாபாக்களுக்கு வெற்றியின் மாதமாக அமைந்ததோ, அவர்களுக்கு பின் வந்தவர்களுக்கும் அது வெற்றியின் மாதமாக திகழ்ந்தது. சலாஹ}த்தீன் அய்யூபி ஹித்தீன் சமரில் சிலுவை யுத்தக்காரர்களுக்கு முடிவு கட்டியதும், ஐன்ஜாலூத் போரில் சைப்புத்தீன் குத்ஸ் தாத்தாரியர்களை முறியடித்ததும் இந்த மாதத்தில்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே அல்குர்ஆனை முழுமையான வழிகாட்டியாக, நிரந்தரமான அளவுகோலாக கைக்கொள்ள வேண்டிய பொறுப்பை இன்றைய முஸ்லிம் உம்மத் ஏற்றாக வேண்டும். அதனை இந்த ரமழான் மாதம் அவர்களுக்கு ஞாபகப்படுத்துமாக இருந்தால் அது விமோசனத்தின் முதற்படியாக அமையும்.

எனினும் தாஹுத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்தின் கீழும், கொடுங்கோண்மையான குப்ரிய ஆட்சிகளுக்கு கீழும் பல இருண்ட யுகங்களை கடந்து வருகின்ற உம்மத்திற்குள் இந்த தலைகீழ் மாற்றம் தோன்றுவது இலகுவான காரியமல்ல. அந்த மாற்றம் மிக உறுதியான ஈமானும், துடிப்புள்ள தக்வாவும் இருக்கின்ற ஒரு உம்மத்தில் மாத்திரமே தோற்றம் பெறும். இந்தக்கருத்து நாம் இந்தக் ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டாவது பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது. அதுதான் தக்வாவை அடைந்து கொள்வது பற்றியது.  அல்லாஹ்(சுபு) நோன்பை கடமையாக்கியிருப்பதும், இராப்பொழுதுகளில் நின்று வணங்கச் சொல்லியிருப்பதும் அல்லாஹ்(சுபு)வின் பிரசன்னத்தை கனப்பொழுதும் மறவாத ஓர் உயர்ந்த உம்மத்தை தோற்றுவிக்கவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரமழானிலே இரவு பகலாக வளர்க்கப்படும் இந்த மனோபாவம் அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டலை உம்மத்தின் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமூல்படுத்துவதற்கு இன்றியமையாதது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், எத்தனை சோதனைகளை கடக்க வேண்டி ஏற்பட்டாலும் அவனது தீனை இந்த உலகத்திலே நிலை நாட்டுவதற்கு தக்வா எனும் இந்த மனோநிலையே அடிப்படையான ஆயுதம். எப்போது தக்வா என்னும் இந்த மனோநிலை உம்மத்திடம் வலுவிழந்து போனதோ, எப்போது அல்லாஹ்(சுபு)விற்கு மாற்றாக அவனது சிருஷ்டிகளின் பால் அதனது அவதானமும், அச்சமும் தோன்றியதோ அப்போதே அழிவின் பாதையை அது திறந்து விட்டது. அந்த அழிவின் பாதையில் மிக நீண்ட தூரம் பயணித்தது. தக்வாவுடையவர்களுக்கு மாத்திரம்தான் இந்த அல்குர்ஆன் வழிகாட்டும் என அல்லாஹ்(சுபு) கூறியதை மெய்ப்படுத்தும் விதமாக தக்வா இல்லாத நிலையில் அல்குர்ஆன் அணுகப்பட்டபோது உம்மத்தின் வழிகாட்டலுக்கும், வளர்ச்சிக்கும் அது வடிகாலாக அமையவில்லை. உம்மத் தக்வாவின் வீழ்ச்சியால் அல்குர்ஆன் வசனங்களுக்கு தனது ஆசாபாசங்களுக்கு ஏற்ப விளக்கம் அளிக்க முற்பட்டது. கிரேக்க தர்;க்கத்தின் அடிப்படையிலும், இந்திய தத்துவங்களின் அடிப்படையிலும் அதனை வியாக்கிஞானம் செய்தது. பிற்காலத்தில் அதிகளவில் மேற்குலக சிந்தனைகள் அவற்றின் இடத்தை பிடித்தன. சத்தியமும், அசத்தியமும் கலந்த, இஸ்லாமும், குப்ரும் குலைந்த ஒரு கலவையை நவீன கால இஜ்திஹாத், நடைமுறைக்கேற்ற இஸ்லாம் என்று அது பெருமிதத்துடன் அறிமுகம் செய்தது. இவ்வாறு உம்மத் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே அதனது வாழ்விலிருந்து அல்குர்ஆன்; பறிக்கப்பட்டது. அது வெறுமனவே மனனமிடுதலுக்குள்ளும், அழகான பாராயணத்துக்குள்ளும், அலங்காரமான பிரதிகளுக்குள்ளும் முடங்கிப்போனது. எதனால் இந்த உம்மத்திற்கு வெற்றியும், கண்ணியமும் கிட்டியதோ அந்த ஆற்றல் சக்தி அதனிடமிருந்து பறிபோனது.

அதனால் அன்று முஃமீன்களைக் கண்டால் குலைநடுங்கிய குஃப்பார்கள்; இன்று முஃமீன்களின் முதுகுகளில் ஏறி சவாரி செய்யும் நிலை தோன்றியிருக்கிறது. உம்மத்தின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதனது வளங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. சுயமரியாதையும், கண்ணியம் இழந்த நிலையை அது அடைந்து நிற்கிறது. அதனது பிரச்சனைகளுக்கு அந்நியர்கள் பஞ்சாயத்து சொல்கிறார்கள். அல்குர்ஆன் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் குஃப்ரிய சிந்தனைகள் அமர்ந்துள்ளன. மொத்தத்தில் இஸ்லாமிய வரலாற்றில் என்றும் வீழ்ந்திடாத அதலபாதாளத்தில் இன்றைய உம்மத் வீழ்ந்து கிடக்கிறது.

எனவே உம்மத் இந்த மாபெரும் வீழ்ச்சியிலிருந்து மீண்டு, மீள வரலாறு படைக்க வேண்டுமென்றால் இந்த  ரமழானில் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதிலும், அவனுக்கு கட்டுப்படுவதிலும் தனது உட்சாகத்தையும், விருப்பத்தையும் வெளிக்காட்டுகின்ற உம்மத் ரமழானுக்கு இந்தச் சிறப்பு எங்கிருந்து வந்தது என்பது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ரமழான் அல்குர்ஆன் அருளப்பட்டதால்தான் சிறப்பிக்கப்பட்டதென்றால் அந்த அல்குர்ஆன் இந்த உலகில் எந்த நோக்கத்தை நிறைவேற்ற வந்தது என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். அல்லாஹ்(சுபு)வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கான வழிகாட்டல் அல்குர்ஆனிலிருந்து மாத்திரம்தான் ஊற்றெடுக்க முடியும் என்பதை அது முழுமையாக நம்ப வேண்டும். தனது வாழ்விற்கான ஒரேயொரு அளவுகோல் அல்குர்ஆன் மாத்திரம்தான் என்பதில் அது உறுதியாக நிற்க வேண்டும். அத்தகைய ஒரு சூழல் உலகில் தோற்றம் பெறவேண்டுமென்றால் அது அல்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியால் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதையும் அது உறுதியாக நம்ப வேண்டும். எனவே இந்த ரமழான் அத்தகையதோர்; தூய இஸ்லாமிய அரசியற் தலைமையை நிலைநாட்ட உழைக்கின்ற உம்மத்தை தயார்படுத்துமானால் அது ரமழானின் நோக்கத்தையும், அதிலே அருளப்பட்ட அல்குர்ஆனின் நோக்கத்தையும் ஒருசேர நிறைவேற்றிய பெருமையைப் பெறும். இன்ஷா அல்லாஹ்!
 

Jul 6, 2014

ஆறு நோன்புகள்...!!!


அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...
இதைப் படித்து விட்டு அனைவருக்கும் பகிரவும்...
ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

2159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 
Book :13
நூல்: முஸ்லிம்
ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஆறு நாட்கள் என்று இந்த ஹதீஸில் கூறப்படுவதால் ஷவ்வால் மாதத் துவக்கத்திலேயே இந்த நோன்பை நோற்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
ரமளானைத் தொடர்ந்து என்பதற்கு இவர்கள் கூறுவது போன்று பொருள் கொண்டால் பெருநாள் தினத்திலிருந்து நோன்பு நோற்க வேண்டும். இது தான் ரமளானைத் தொடர்ந்து வரும் முதல் நாள். ஆனால் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே ரமளானுக்குப் பின் என்பது தான் இதற்குச் சரியான விளக்கமாக இருக்க முடியும். தொடர்ந்து என்று மொழியாக்கம் செய்த இடத்தில் அத்பஅ என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ரமளானுக்கு முன்னால் இல்லாமல் ரமளானுக்குப் பின்னால் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். ஷவ்வால் என்று குறிப்பிட்டிருப்பதால் அம்மாதத்தில் வசதியான நாட்களில் நோற்று விட வேண்டும்.

மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது ...!!!


அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...
இதைப் படித்து விட்டு அனைவருக்கும் பகிரவும்...

நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1927

நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்ட போது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 2039

இதில் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது தான் முக்கியமான அளவுகோலாகும். முத்தமிடுவதில் ஆரம்பித்து உடலுறவில் போய் முடிந்து விடும் என்று யார் தன்னைப் பற்றி அஞ்சுகிறாரோ அத்தகையவர்கள் பகல் காலங்களில் அதைத் தவிர்த்துக் கொள்வது அவசியம்.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது இல்லறத்தில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்வதற்காக எழக்கூடியவர்கள் குளித்து விட்டுத் தான் ஸஹர் செய்ய வேண்டுமா? இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டு விட்டுக் குளிக்காமல் நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காகக் குளிப்பார்கள் என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.

ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள்.
அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி)
நூல்: புகாரி 1926, 1930, 1932

தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காகக் குளிக்க வேண்டியதில்லை. குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்று விட்டு சுப்ஹு தொழுகைக்காகக் குளிக்கலாம்.

Jul 4, 2014

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்.


1. பத்ர் போர் :

இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள்
தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம்
செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் 
நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம்
ஆண்டு ரமலான் மாதம் பிறை 17இல்தான்.


2. மக்கா வெற்றி : 


குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீட்கபட்டு அங்குள்ள
சிலைகளை தகர்த்தெரிந்து உலக வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த
இம்மாபெரும் நிகழ்வு நடந்தும் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.


3. அன்-ஜாலித் போர்:


உலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய
கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள்
வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.


4. ஹைதீன் போர்:


உலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான்
சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல்
முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும்
இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான்.


இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 700 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற
ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்…


5. குவாடிலட் போர்: 


ஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக
மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க
நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.
இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை)
முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.


ரமழான் சிறப்பு



ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

அல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம்.
எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவுத், முஸ்லிம்

ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187

2. ஊசி போடலாமா ?
உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

3. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?
எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத்


4. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?
நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

5. நோன்பு எதை கொண்டு திறப்பது ?
நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

Sources From tamililquran