Jul 19, 2014

நான் வேடன் அல்ல !!! (ஒரு கதைக்குள் உண்மை .)


அந்த தேன் சுவை என்னை அவர்களின் பக்கம் ஈர்க்க வைத்தது . ஆனால் யதார்த்தங்களை உணர்சிகளால் மட்டும் பார்க்கத் தெரிந்த அவர்களுக்கு எதிலும் ஒரு அர்த்தமற்ற அவசரம் தெரிந்தது . இருந்தும் அவர்கள் அவ்வப்போது 'சொளிட்டாக' எடுத்து வந்து தரும் அந்த தேன் சுவை ஒரு அதீத ஈடுபாட்டை அவர்கள் மீது வைத்தது . 

சில நல்லவைகளுக்காக சில தூர தரிசனமற்ற அவர்களின் போக்குகளை இப்போதைக்கு பொறுத்துப் போவது தவிர வேறு வழியில்லை என்ற முடிவோடு அவர்களோடும் உறவு கொண்டேன் .
இறைவன் நாடினால் அவர்களின் தவறுகளை அவர்கள் உணர்ந்து கொண்டால் ....... நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற ஒரு நம்பிக்கையோடு உண்மைகளை அவர்களுக்கு உணர்த்துவேன் .

* சிலபோது முறைப்போடு முரண்பாடு !
* சிலபோது மௌனமான புறக்கணிப்பு !
* சிலபோது அசாதாரண இணைவு !

இப்படி ஓடும் புளியம் பழமும் போல பட்டும் படாமல் அந்த உறவு தொடர்ந்தது . அந்த தேன் சுவை அவர்களோடு இன்னும் சற்று உறவுகொள்ள தூண்டியது . காடும் காடுசார் இடமுமாக மாற்றப்பட்ட சூழலை மனிதன் வசிக்க ஏற்றது போல் மாற்ற சிந்திக்கும் ஒருவனாக நான் இருக்க , அவர்களும் அதே பணியை செய்வதாக கூறிக்கொண்டு அதி தீவிரமாக ஆதிக்கத்தில் இருக்கும் கொடிய காட்டேரிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள் .

'கொல்வதால் வெற்றி கொள்ளலாம்' . என்பதே அவர்களின் ஒரே முடிவு ! காலத்தால் அந்த வேட்டை வாழ்க்கையே நாட்டை உருவாக்குவதாய் அவர்களுக்கு ஆகிப்போனது .காடே அவர்களுக்கும் நாடாகியது!

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நல்ல மனிதர்கள் தம்மை அறியாமல் சிலநேரம் அதி கொடிய காட்டேறிகளிடம் இலகுவாக சிக்கி விடுவார்கள் .அப்போது அவை தமது ஆதிக்க சாத்திரப்படி மனித இரத்தம் குடிக்க இவர்களை பயன்படுத்தி கொள்ளும் .

அந்த நேரங்களில் கட்டாடிகளின் தலையில் பேய் குடிகொண்டால் எப்படி இருக்கும் என காட்டி நிற்பார்கள் . அந்தப்பொழுதுகளில் சொந்த இரத்தத்தையே சுவைக்கும் அகோரிகளாக மாறி நிற்பார்கள் !!

இருந்தும் அவர்கள் நேற்று தந்த தேனின் சுவை அவர்களோடு இணையவே சொன்னது . சரி எது நடந்தாலும் பரவாயில்லை .இவர்களை இணைத்து நாடமைக்கும் பணியை செய்வோம் என ஆலோசிக்க அந்த வனாந்தர இராஜியத்தை நோக்கி சென்றேன் . அந்த தேனின் சுவை நாக்கில் எச்சில் ஊற வைத்தது. நாடமைக்கலாம் தேனும் கிடைக்கும் என சந்தோஷத்தில் இறைவனை புகழ்ந்தவனாக அவர்களின் உலகத்தை நோக்கி சென்றேன் .

அப்போதுதான் அந்த அதிர்ச்சி நடந்தது ! அதில் ஒருவர்
தானே இனி மனிதர்களின் தலைவன் என அறிவித்தார் .இந்த காடே இனி நம் நாடு என பிரகடனப் படுத்தினார் ! வேட்டை மட்டுமே இனி வாழ்க்கை என கூறினார்! உணர்ச்சி வசப்பட்ட ஒரு தொகை மனிதர்கள் அவர் பின்னால் அணி திரண்டார்கள் !

ஆடைகளை களைந்து இலை குலைகளை அணியச் சொன்னார்! இப்போது பச்சைத் தண்ணீரை பருகத் தந்து அதில் தேன் சுவை உள்ளதாக சொல்லச் சொன்னார் .தூரத்தில் காட்டேறிகளும்
கண்சிமிட்டி புன்சிரித்தன!!! காடுதான் இனி மாறப்போவதில்லையே !

நிலைமை எனக்கு புரிந்து விட்டது . இவர்கள் என்னையும் வேடனாக்க பணிக்கிறார்கள் !! நான் வேடன் அல்ல என்ற தெளிவோடு சலாம் கூறி அவர்களை விட்டும் சற்று பின் வாங்கினேன். மனிதர் வாழ தூய நாடமைக்கும் கனவுகள் மட்டும் என்னோடு எஞ்சி வந்தன .

No comments:

Post a Comment