Nov 3, 2015

இஸ்லாம் ஆட்சிமுறையை பெற்றுள்ளதா? – பாகம் – 1


 


இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தெளிவான சாதகமாக இருக்கும் வகையில் இந்த தருணத்தில்  இஸ்லாத்தின் அரசியல் அம்சங்கள் குறித்து சிலர் சந்தேகங்களை எழுப்ப முயற்சிப்பது மிகவும் விந்தையாக இருக்கிறது! குறைவான அறிவு பெற்றிருப்பவர்களை குழப்புவதற்கு முயற்சிக்கும் வகையில் இவர்கள் அறிஞர்களின் கூற்றுகளில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களில் பூசல்களை ஏற்படுத்திவருவதோடு அவற்றிற்கு தவறான வியாக்ஞானம் அளித்து வருகிறார்கள்! சுதந்திர சிந்தனை என்ற பெயரில் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் ஆன்மீக செயல்பாடுகளுக்குள் இஸ்லாத்தை சுருக்க முயன்ற முஹம்மது அப்துஹ் மாணவரான எகிப்தின் நவீனகால எழுத்தாளர் அலீ அப்துர் ராஸிக் (கி.பி. 1888-1966) போன்ற நபர்களிடமிருந்து இரவல் வாங்கிய வாதங்களை முன்வைத்து இவர்கள் வாக்குவாதம் செய்துவருகிறார்கள். வரையறுக்கப்பட்ட ஆட்சியமைப்பு முறை எதையும் இஸ்லாம் முன்வைக்கவில்லை என்று கூறுவதின் மூலம் முஹம்மது அப்துஹ் கிலாஃபா தொடர்பான தெளிவான வாஜிபை மறுக்கிறார்.



     ‘அல்இஸ்லாம் வ உஸூல் அல்ஹுகும்’ (இஸ்லாம் மற்றும் ஆட்சியமைப்பு விதிமுறைகள்) என்ற தனது நூலில் அவர் கூறியிருப்பதாவது :
 
 

     ‘முஸ்லிம்கள் ‘கிலாஃபத்’ என்று பொதுவாக விளங்கியுள்ள இந்த கட்டமைப்பிற்கும் இஸ்லாத்திற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. மதத்திற்கும் குறிப்பிட்ட ஆட்சி அமைப்பை கொண்டுள்ள அரசாங்கத்திற்கும் எத்தகைய தொடர்புகளும் கிடையாது! முஸ்லிம்கள் தங்களுடைய பழய அரசியல் செயலாக்க அமைப்பை உடைத்தெறிந்துவிட்டு மானுட எழுச்சிகள் மற்றும் நவீன சமுதாயங்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் புதிய கருத்தாக்கங்கள் அடிப்படையில் புதியதோர் ஆட்சியமைப்பை உருவாக்கிக்கொள்வதை தடைசெய்யும் வகையில் எத்தகைய விஷயங்களும் இஸ்லாத்தில் இடம்பெறவில்லை!
 
 
 

     மேலும் அவர் கூறுவதாவது :
 
 

     ‘இஸ்லாம் என்பது ஒரு மதமாகும், அதன் பொதுவான விதிமுறைகள் தனிமனிதரின் ஒழுக்க மாண்புகளுடன் தொடர்புடையதாக மட்டும் இருக்கின்றன என்ற அடிப்படையில் அரசியல், அதிகாரம் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. ஆகவே மதமும் ஸியாஸா  என்ற அரசியலும் வெவ்வேறுபட்ட செயற்துறைகளை சார்ந்த விஷயங் களாகும். கிலாஃபாவின் கீழுள்ள முஸ்லிம்களின் அரசியல் வரலாறு இஸ்லாத்தின் போதனை களுக்கு முரண்பட்டதாக இருக்கிறது ஏனெனில் தனிமனித ஒழுக்க மாண்புகள் என்ற வரை யறைக்குள் இயங்குவதால் இஸ்லாம் தனிமனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதையே நோக்கமாக கொண்டுள்ளது. ‘கிலாஃபத் கோட்பாடு’ என்ற போர்வையில் மதத்தை அரசியல் ஆதிக்கத்தின் பால் விரிவுபடுத்துதல் என்பது சட்ட வல்லுநர்களும் இறையியல் அறிஞர்களும் ஏற்படுத்திய புதினமாகும்!’
 
 

     அலீ அப்துர் ராஸிக் போன்றவர்கள் எழுப்பும் இதுபோன்ற கூச்சல்கள் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒன்றுதான்!நீண்ட விவாதங்களை மேற்கொள்ளாமல் இந்த வாக்குவாதத்தில் காணப்படும் தவறான அம்சங்கள் சிலவற்றை எடுத்துக்காட்டுவதற்கு மட்டுமே நான் விழைகிறேன்.
 
 
 
தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தத்தில் பூசல்களை ஏற்படுத்துதல் :



     சில அறிஞர்கள் தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்கள் என்பதால் அதன் அர்த்தத்தை திரித்து கூறும் தர்க்கவாதத்தில் அலீ அப்துர் ராஸிக் ஈடுபட்டிருக்கிறார்! தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தம் திட்ட வட்டமானதல்ல (indefenite) என்பதால் இன்றைய நாட்களில் முஸ்லிம் நாடுகளின் ஆட்சி யாளர்களாக இருப்பவர்கள் குஃப்ரை கொண்டு ஆட்சிசெய்வதை அவர் ஞாயப்படுத்த முயற்சிக்கிறார்!
 
 

     தாருல் இஸ்லாம் என்ற வார்த்தையின் அர்த்தம் தொடர்பான கருத்துவேறுபாடு எத்தகையதாக இருந்தபோதும், இன்றைய முஸ்லிம் நாடுகளின் அரசுகள் அல்லாஹ்(சுபு) அருளவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்வது திட்டவட்டமாக தடை செய்யப் பட்ட விவகாரம் என்பதில் அறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செயல்பாட்டை மேற்கொள்ளும் ஆட்சியாளர் காஃபிராக ஆகிவிடுகிறாரா அல்லது ஃபாஸிக்காக (வெளிப்படையாக பாவம் செய்பவர்) இருக்கிறாரா அல்லது ழாளிமாக (அநீதம் செய்பவர்) இருக்கிறாரா என்பதில் உள்ளபடியே அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
 
 

     இப்னு அல்கய்யும்(ரஹ்) கூறுவதாவது :
 

     ‘இந்த விவகாரம் தொடர்பான சரியான அபிப்ராயம் என்னவென்றால், அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஒருவர் ஆட்சிசெய்யும்போது ஆட்சியாளரின் நிலைப்பாடு அடிப்படையில் அதில்ஹ பெரும்பாவம் மற்றும் சிறுபாவம் ஆகியவை அடங்கி யுள்ளன. அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்வது வாஜிபு என்று ஒருவர் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் அவர் அதற்கு கீழ்ப்படியாமல் இருந்தால், அவருடைய செயல் தண்டனைக்குரியது என்பதை அவர் ஒப்புக்கொண்டால் அப்போது அது சிறிய குஃப்ராகும். அல்லாஹ்(சுபு) அருளியவற்றை கொண்டு ஆட்சிசெய்வது வாஜிபு என்பது அல்லாஹ்(சுபு)வின்ஹ சட்டம் என்பதை உறுதியாக அறிந்திருந்தபோதும் அதை பின்பற்றுவது வாஜிபு அல்ல என்றும் இதில் அவர் தனது விருப்பப்படி செயல்படலாம் என்றும் ஒருவர் கருதினால் அப்போது அது பெரிய குஃப்ராகும்’  (அல்மதாரிஜ் அஸ்ஸாலிஹீன் பாகம் 1 பக்கம் 336-337)
 
 

     இப்னு அப்பாஸின்(ரளி) பிரபலமான அபிப்ராயத்தில் அறிவிக்கப்பட்டிருப்பதை போன்று சிறிய குஃப்ர் என்பது இந்த இடத்தில் பாவம் என்ற அர்த்தத்தை கொண்டுள்ளது.
 

     இது குறித்து இப்னு தைம்மிய்யா(ரஹ்) கூறுவதாவது :
 
 

     ‘அல்லாஹ்(சுபு) அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளியவற்றை கொண்டு ஆட்சி செய்வது வாஜிபு என்பதில் எவர் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர் சந்தேமற்ற முறையில் காஃபிர் ஆவார், அன்றியும் அல்லாஹ்(சுபு) அருளியவற்றை புறக்கணித்துவிட்டு மக்களை தனது சொந்த அபிப்ராயத்தின் அடிப்படையில் ஆட்சிசெய்வதற்கு அனுமதியுண்டு என்று எவரேனும் கருதினால் அவரும் நிச்சயமாக காஃபிராகவே இருக்கிறார். . . . எனவே ஒட்டுமொத்தமாக உம்மாவின் விவகாரங்களில் எவை பொதுவானவையாக இருக்கின்றனவோ அவற்றில் குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றை தவிர்த்து மற்றவற்றை கொண்டு ஆட்சிசெய்வதற்கு அல்லது தீர்ப்பு வழங்குவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அறிஞர், அமீர், ஷைக், அல்லது மன்னர் போன்றவர்களின் கூற்றுகளை பின்பற்றவேண்டும் என்று மக்களிடம் கூறுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. இதுபோன்றவற்றை கொண்டு மக்களை ஆட்சிசெய்யலாம் என்றும் குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சி செய்வது வாஜிபு அல்ல என்றும் எவரேனும் கருதினால் அவர் நிச்சயமாக காஃபிர் ஆவார்’  (மின்ஹாஜ் அஸ்ஸுன்னா பாகம் 5 பக்கம் 130-132)
 
 

     அஷ்ஷவ்கானி(ரஹ்) இதுபோன்ற அபிப்ராயத்தையே கொண்டுள்ளர், அவர் தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது :
 
 

           i) தாகூத்திடம் (ஷைத்தான், இஸ்லாம் அல்லாதவை) தீர்ப்பு கோருதல் என்பது பெரிய குஃப்ரில் உள்ளதாகும்.
 

           ii) தாகூத்திடம் தீர்ப்பு கோருதல் என்பது குஃப்ர் செயல்பாடுகளில் உள்ளதாகும், இத்தகைய செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளும் ஒருவரை காஃபிர் என்று கட்டணம் செய்வதற்கு அனுமதியுண்டு.
 

           iii) இத்தகைய குஃப்ர் செயல்பாடுகளுக்கு உதாரணம் : சொத்துக்களில் பெண்களின் வாரிசுரிமையை மறுத்தல் மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வதில் ஒருவருடன் ஓத்துழைத்தல் ஆகியவை பெரிய குஃப்ரில் அடங்கும்.  (அஷ்ஷவ்கானியின் அர்ரஸாயில் அஸ்ஸலஃபியா பக்கம் 33-34)
 
 

    
ஆகவே உண்மையில் செல்வழக்கு அடிப்படையில்தான் சொற்களின் அர்த்தங்களில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. எனவே அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சிசெய்தல் என்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
 
 
உஸ்மானிய (கிலாஃபா) அரசின்காலகட்டத்தில்முஃப்திகள்அளித்தஃபத்வாக்கள் :


 
இஸ்லாமிய ஆட்சிமுறை பற்றிய ஆதாரத்தை மறுக்கும் விவகாரத்துடன் அரிதாக தொடர்புடைய விஷயமாக இருக்கிறது என்ற வகையில் ஃபத்வாக்கள் தொடர்பான குற்றச்சாட்டு பலவீனமான ஒன்றாகவே இருக்கிறது. உஸ்மானிய அரசை கிலாஃபா என்று ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் மனதில் பூசல்களை ஏற்படுத்துவதற்காகவும் தனது இறுதி நாட்களில் அந்த அரசு சில இஸ்லாத்திற்கு அந்நியமான சட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்தியது என்பதை தெரியப் படுத்துவதற்காகவும் இந்த விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.
 

     
உலமாக்களின் அறியாமை காரணமாக உஸ்மானிய கிலாஃபா தனது இறுதி கால கட்டத்தில் இஸ்லாத்திற்கு அந்நியமான சில சட்டங்களை ஏற்று நடைமுறைப்படுத்தியது என்பது உண்மையே. ஹிஜ்ரி 1288ல் (கி. பி. 1870) நீதித்துறையை ஷரீஆ நீதிமன்றம் என்றும் நிழாம் நீதிமன்றம் (official law court) என்றும் இருபிரிவாக பிரித்தது.
 

    
முதலாவதாக, எந்த வகையிலும வரலாற்றை ஷரீஆவிற்கு ஆதாரமூலமாக கொள்ள முடியாது. எந்தவொரு காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளும் ஷரீஆவிற்கு ஆதாரமூலமாக இருக்கவில்லை என்பதால் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் இதை விவாதிக்கமுடியாது.
 
 

     இரண்டாவதாக, உஸ்மானிய கிலாஃபா கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி கால கட்டத்தில் குஃப்ர் சட்டங்களை ஏற்று அமல்படுத்திய பின்னர் அது கிலாஃபா அரசு என்ற அந்தஸ்த்தை இழந்துவிட்டது என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. வெளிப்படையான குஃப்ர் (குஃப்ர் புஃஆ) மற்றும் தெளிவான குஃப்ர் (குஃப்ர் ஸரீஹ்) ஹஆகியவை தொடர்பான ஹதீஸின் காரணமாக இந்த விவகாரத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருந்து வருகின்றன. உஸ்மானிய அரசின் இறுதி காலகட்டத்தில் இருந்துவந்த அறிஞர்கள் அறியாமையின் காரணமாக இதற்கு ஒப்புதல் அளித்தார்களா என்ற கோணத்தில் குஃப்ரை நடைமுறைப்படுத்துதல் மற்றும் வெளிப்படையான குஃப்ரை நடை முறைப்படுத்துதல் என்ற விவகாரம் தொடர்பான வரையறையை அவர்கள் அறிந்தவர்களாக இருந்தார்களா அல்லது அதில் அறியாமை உடையவர்களாக இருந்தார்களா என்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்கள்.
 
 

     குஃப்ர் சட்டங்களை கொண்டு ஆட்சிசெய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு அனுமதியுண்டு என்று இதற்கு எவ்வகையிலும் அர்த்தம் கொள்ளக்கூடாது ஏனெனில் இன்று சில முஃப்திகள் குஃப்ர் சட்டங்களை ஏற்றுக்கொள்வதை அங்கீகரிக்கிறார்கள். இதற்கு முன்பு குறிப்பிடப் பட்டுள்ளதை போல அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றை கொண்டு ஆட்சி செய்தல் என்பது திட்டவட்டமான விவகாரமாகவும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டு தடைசெய்யப் பட்ட விஷயமாகவும் இருக்கிறது.
 
 

     மூன்றாவதாக, உஸ்மானிய அரசின் இறுதி காலகட்டத்தில் இருந்துவந்த முஃப்திகள் சந்தேகத்திற்குரிய (ஷரீஆ)ஆதாரத்தின் ((ஷுப்ஹத் தலீல்) அடிப்படையில் இதற்கு ஒப்புதல் அளித்தார்கள் என்பதால் இது சட்டரீதியான அபிப்ராயமாக இருக்கிறது என்று சிலர் கூறுவதையும் சரியான அபிப்ராயம் என்று கருதமுடியாது. இது தொடர்பான விளக்கத்திற்கு ஷேக் அப்துல் கதீம் ஸலூம் எழுதியுள்ள ‘கிலாஃபா எவ்வாறு வீழ்த்தப்பட்டது’ என்ற நூலின் ‘மேற்கத்திய சட்டங்களை ஏற்று அமல்படுத்துதல்’ என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக் களை பார்க்கவும்.
 
Sources

No comments:

Post a Comment