May 3, 2016

தஃவா, களப்பணி, சிறை: ரிஷ்க் பற்றிய புரிதல்

     
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்று வந்த ஒரு நண்பர் எழுதிய, எமது சிந்தனையை தூண்டக்கூடிய ஓர் சிறிய ஆக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கிலாஃபத்தின் மீள்வருகைக்காக தீவிரமாகக் களப்பணிகளில் ஈடுபட்டு அடிக்கடி சிறைவாசம் அனுபவித்த சகோதரர்களை சந்தித்த அவரின் வார்த்தைகள் ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுபவை. நிச்சயம் அது உங்களையும் சிந்திக்கத் தூண்டும் என நம்புகிறோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
அண்மையில் பங்களாதேஸுக்கு சென்றிருந்த எனக்கு நீண்டகாலமாகத் அறிமுகமான ஒரு நண்பரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னை விட மிகவும் வயதில் குறைந்தவராய் இருந்தாலும் வாழ்வின் சோதனைகளை முகம் கொடுப்பதில் அவர் மிகவும் பக்குவப்பட்டவர். அவர் ஒரு அரசியல் செயற்பாட்டாளர். இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாக ஏற்று, அதன்படி வாழ்கின்ற, ஐக்கியப்பட்ட ஓர் உம்மத்தை உருவாக்குவதை நோக்கி அழைத்தல் என்ற அடிப்படையில் எங்களது செயற்பாடுகளுக்கு மத்தியில் பெரிய வேறுபாடு கிடையாது. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், அவர் அந்த அரசியல் கருத்துக்களைக் கொண்டிருப்பதால் முகம் கொடுத்த சோதனைகள்தான்.
 
அவர் பல முறை சிறைவாசம் அனுபவித்ததால் அவரது கல்வியிலும், தனிப்பட்ட வாழ்விலும் அது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியது. ஒருவருக்கு சிறை அனுபவத்தை வழங்க அவர் சிறைகளின் இழிவான வாழ்க்கைத் தரத்தையும், சித்திரவதையும் அனுபவிப்பது கட்டாயமானது என்பது முஸ்லிம் உலகின் சிறைகளின் யதார்த்தத்தை நீங்கள் அறிந்திருந்தால் தெரிந்திருக்கும்.
 
ஏன் அவர் அடிக்கடி சிறைக்குச் செல்ல வேண்டும்? அவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல மனிதர். வன்முறைகளை பரப்புரை செய்பவருமல்ல. எனினும் முஸ்லிம் உலகின் துரதிஷ்டமான நிலை என்னவென்றால் மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருப்பது மாத்திரம் அரச இயந்திரத்தினால் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட போதுமானது என்பதே.
 
இம்முறை அவரை சந்தித்த பொது பல மணிநேரங்கள் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். எனினும் விடைபெற முன்னர் அவர் எனக்கு ரிஷ்க் பற்றி புகட்டிய பாடத்தை, அத்தலைப்பில் பல கட்டுரைகளை வாசித்த பின்னரும், பல குத்பாக்களை நிகழ்த்திய பின்னரும் கூட அவர் விளக்கியது போல நான் புரிந்து கொண்டிருப்பேன் என்று நம்பவில்லை.
 
முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ரிஷ்க் அல்லாஹ்விடமிருந்துதான் வருகிறது என நாம் நம்புகிறோம். அந்த உறுதியான நம்பிக்கை எமது வாழ்வில் தொழிலை இழக்க நேரிடல், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படல் போன்ற சில பாதகமாக விடயங்கள் நடக்கின்றபோது எமது ஜீவனோபாயத்திற்கு என்ன செய்யப்போகிறோமோ தெரியவில்லை என்று அங்கலாய்ப்பதிலிருந்து எம்மை விடுவிக்க வேண்டும். மேலும் இந்த நம்பிக்கை வாழ்வாதாரம் பாதிப்படைந்து விடுமோ என அஞ்சி அல்லாஹ்(சுபு) எம் மீது சுமத்தியிருக்கின்ற கடமைகளை செய்வதில் சமரசம் செய்யாதிருக்க உதவ வேண்டும்.
 
ஒன்றை அறிந்து வைத்திருப்பது வேறு அதன்படி வாழ்வது என்பது வேறு
 
அந்த சகோதரர் வெளியேறிச் செல்லமுன் எனக்கு ஒரு கதை சொன்னார். அவர் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் அவரது குடும்பம் வேறொரு இடத்தில் சென்று வாழவேண்டியேற்பட்டதாம். அதனால் அதுவரை காலமும் படித்த பாடசாலையை விட்டு விலக வேண்டிய நிலை. அது அவரது பழைய நண்பர் வட்டத்திலிருந்து அவரைத் தூரமாக்கியதாம். பின்னர் புதிய நண்பர் வட்டம் ஒன்றை அவர் ஏற்படுத்திக் கொண்டாராம். அவருக்கு புதிய நண்பர்கள் கிடைந்த அதே சமயம் அவரது பழைய பாடசாலை நண்பர்கள் போதை பொருட்களுடனும், குற்றச்செயல்களுடனும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். அந்தத் தருணத்தில் தனக்கு நல்ல நண்பர்களை பெற்றுத்தந்தது அல்லாஹ்(சுபு) செய்த பேரருளாகும் என்று அவர் சொன்னார்.
 
பின்னர் அவரது பழைய நண்பர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது நண்பரும் ஏறத்தாழ அதே அனுபவத்தைதான் பெற்றிருக்கிறார். அவரும் சிறைக்கு சென்றிருக்கிறார். அவரது படிப்பும், தனிப்பட்ட வாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருபாலாரினதும் அனுபவமும் ஒன்றாக இருந்தாலும் அதனை  அவர்கள் அடைந்த பாதை முற்றிலும் வேறுபட்டது. அவரது நண்பர்கள் தமது சுய இச்சையை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டார்கள். எனது நண்பரோ அல்லாஹ்(சுபு)வை திருப்த்திப்படுத்தும் பாதையில் அதனை அடைந்து கொண்டிருக்கிறார்.
 
அவர் இறுதியாக ஒன்று சொன்னார், அதாவது அவரது ரிஷ்க் சிறைக்குள்தான் கிடைக்கும் என்று முன்பே எழுதப்பட்டிருந்தால் எந்த வகையிலோ நான் சிறைக்கு வந்து சேர்ந்துதான் இருப்பேன்;. ஆனால் அந்த ரிஷ்க்கை பெற்றுக் கொள்வதற்கு நாம் பாவிக்கும் வழியே கவனத்திற்குரியது என்று ரிஷ்க் பற்றிய புரிதலை மிக தத்ரூபமாகக் கூறி  முடித்தார்.
 
பின்னர் அவரை அழைத்துச் செல்ல வந்து விட்டார்கள். அவரும் விடைபெற்று சென்றுவிட்டார். அவரை திரும்ப எப்போது காணுவேனோ என சிந்தித்துக் கொண்டு எனது வீட்டுத்தொகுதிக்கு வந்துவிட்டேன். சில நிமிடங்கள் கழித்து எனது வீட்டு அழைப்பொலி கேட்டது. உள்ளே நுழைந்த எனது அன்னை  “பார், யாரை நான் திரும்ப அழைந்து வந்துள்ளேன்” என்று சொல்லி அந்த நண்பரைக் காட்டினார். அந்த நண்பர் எங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய போது அம்மா வீட்டில் இருக்கவில்லை, மாடிப்படியால் அவர் இறங்கிச் சென்று கொண்டிருந்தபோதுதான் வீடு திரும்பிக்கொண்டிருந்த அம்மா அவரைக் சந்தித்திருக்கிறார். அவர் வெளியேறிய போது இரவுச் சாப்பாட்டு நேரம் ஆகியிருந்தது. அவர் உணவருந்தாது சென்றதை அனுமதிக்காத எனது அம்மா அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் எங்களுடன் இராபோசனத்திற்காக மேசையில் அமர்ந்த அவர் பின்வருமாறு கூறினார், “இன்றிரவு எனது ரிஷ்க் இங்குதான் என எழுதப்பட்டிருக்கிறது” என்று.
 
sources:

No comments:

Post a Comment