Jun 20, 2016

இமாமின் வகிபங்கு

பள்ளிவாசல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இமாம் மிகச் சிறந்த ஒருவராக, நன்கு கற்றுத் தேர்ந்த, மார்க்க விவகாரங்களில் ஆழமான விளக்கமுடைய சமூகப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்த, பல கோணங்களிலும் சிந்தித்து செயலாற்றக்கூடிய செயற்திறனுடையவராக, சாணக்கியமிக்கவராகத் திகழ வேண்டும். மக்களால் புரிந்து கொள்ள முடியாத விடயங்களை இமாமினால் புரிந்து கொள்ள முடியுமாக இருக்க வேண்டும்.

எந்தவொரு விடயத்தையும் ஷரீஆ கண்னோட்டத்திலும் அறிவியல் பூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் நோக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். நல்ல மனப்பாங்கும் நுண்ணறியும் திறனும் அவரிடம் குடிகொண்டிருக்க வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு எட்ட முடியாத சந்தர்ப்பங்களில் அல்லது சிறந்த, பொருத்தமான தீர்வை முன்வைக்கும் நோக்கில் துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

குலபாஉர் ராஷீதீன்கள் காலப் பகுதியில் ஆட்சியாளரே (கலீபா) பள்ளிவாசல் இமாமாகவும் கடமையாற்றினார். உமைய்யா, அப்பாஸிய காலப் பகுதியில் ஆட்சியாளர் மார்க்கத்தின் தலைவராக, இமாமாக கடமையாற்ற வில்லை. இதன் விளைவாக மத்ஹப்கள் தோற்றம் பெற்றன. ஆட்சியாளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இன்று பள்ளிவாசல் நிர்வாகமே குறித்த பிரதேசத்தை அல்லது ஊரைக் கட்டுப்படுத்துகிறது. இந்நிலை மாறி இமாம் முழு ஊரையும் பகுதியையும் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்குமளவு ஆளுமை பெற்றவராகத் திகழ வேண்டும்.

பள்ளிவாசல் இமாம் ஷரீஆத் துறையில் முதமானி அல்லது முதுகலைமானிக் கற்கைகளை நிறைவு செய்தவராக அல்லது ஷரீஆத் துறை உட்பட்ட பல்வேறு துறைகளிலும் தேர்ச்சிமிக்கவராக நவீன தொழில்நுட் பங்களைக் கற்றறிந்தவராக திகழ்ந்தால் ஊர் மக்கள் இமாமைத் தேடி வருவார்கள். ஊரில் இடம்பெறும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆற்றல், ஆளுமை அல்லது பிரச்சினையை இனங்கண்டு எத்தகைய துறைசார்ந்தோரைக் கொண்டு இதற்குத் தீர்வு காணலாம் என்று வழிகாட்டக் கூடிய ஓர் இமாம் பள்ளிவாசலுக்கு தலைமை தாங்கினால் அந்த இமாமைத் தேடி மக்கள் பள்ளிவாசலுக்கு வருவார்கள். அப்போது அந்த இமாமினால் மக்களுக்கு கட்டளை பிறப்பித்து அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். அப்போதுதான் சமூக மாற்றம் சாத்தியப்படும்.

சமூகத்தை வழிநடத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகத்தின் பங்கை விட இமாமின் பங்கு மகத்தானது. உமைய்யா, அப்பாஸிய காலத்தில் இமாம்களே சமூகத்தை வழிநடத்தினார்கள். இமாம்கள் ஆட்சியாளரின் தீர்ப்புக்கு முரணாக நேர்மையான தீர்ப்புக்களை வழங்கினர்.

தொழுகை ஒரு முஸ்லிமின் தக்வாவை அதிகரிப்பது போல பள்ளிவாசல் சமூகத்தின் தக்வாவை அதிகரிக்க வேண்டும்.


அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத், பொறியியலாளர் ரீஸா யஹ்யா

No comments:

Post a Comment